Saturday, November 29, 2014

சிட்டு



அன்புள்ள எழுத்தாளருக்கு...

பாண்டவர் அவையிலே தருமரை அலைக்கழித்த சிட்டுக்குருவியின் பன் தலைமுறைகள் தாண்டிய வாரிசு ஒன்றை 'கைதிகளில்' ஏற்கனவே பார்த்திருந்தோம். முறை தவறுகின்ற தருணங்களில் எல்லாம் ஒரு சிட்டுக்குருவி வந்து உங்கள் தோளில் அமர்ந்து விடுகின்றது..!

நன்றிகள்,
இரா.வசந்த குமார்.

அன்புள்ள வசந்தகுமார்,

சிட்டு மண்ணைச் சேர்ந்ததில்லை. மண்ணுக்கு வந்து செல்கிறது அவ்வளவுதான் ))

ஜெ

பிரயாகை-34-தேனீ கூடு


அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

உடல் நலமாக இருக்கும், வாழ்க்கை நலமாக இருக்கும், குடும்பம் நலமாக இருக்கும், காலம் நேரம் மற்றும் சுற்றமும் நட்பும் நலமாக இருக்கும் ஆனாலும் சிலர் சொல்வார்கள் ஏதோ ஒன்று நடந்துவிடடும்போல் உள்ளது என்பார்கள். கேட்பவர்களுக்கு அது கற்பனை என்று தோன்றும் இல்லை என்றால் அது வெறும் சொற்களாக மட்டும் உதிரும். அவர்களிடம் உள்ள அந்த ஏதோ நடக்கும் என்பது சொல்லாக முடியாத இருட்டாக மட்டும் இருக்கும்.

பிரயாகை பாத்திரங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் இந்த சொல்லாகாத ஏதோ ஒன்று உள்ளது. அது என்ன என்பது வாசகர்களாகிய நமக்கு தெரியும். ஆனால் அது அதுதான் என்பது பாத்திரங்களுக்கு தெரியாது. தெரியாத அதை தெரியாததாகவும், அதே நேரம் அது இல்லாமல் இல்லை என்பதாகவும் பாத்திரங்களை படைத்து வாசகர் உள்ளத்தை களிப்படை வைக்கின்றீர்கள் ஜெ. தேன் அடையில் உள்ள ஈக்கள் எல்லாம் ஒரு உடல்போல தெரியும்,பறக்கும்போதுதான் தனித்தனியாக இருக்கும். அஸ்திரனபுரியின் மன்றில் அனைவரின் எண்ணமும் ஒரே உடல்போலத்தான் இருக்கிறது ஆனால் அவை அனைத்து தனித்தனியாக பறக்க காத்திருக்கும் தேன் ஈக்கள்தான். 
//மனித அகத்தை கணித்தல் வெட்ட வெளியின் தீபம் எந்த திசையில் அசையும் அன்பதை கணிப்பது போன்றது ' –பிரயாகை-33// 

விதுரருக்கு இன்று இந்த வரிகளின் பொருள் பெருகிவருகின்றது.  விதுரர் எல்லா அகங்களையும் கணித்து வைத்து உள்ளார் என்பதும் தெரிகிறது. காலததை இடத்தை கணிக்க முடியாமலும் தவிக்கிறார். எல்லாமும் எழுதி வைத்து நிகழ்வதுபோல இருக்கிறது என்ற விதுரருக்கு, காத்திருக்க காலமோ, காத்திருக்க இடமோ கொடுக்கப்படவும் இல்லை அதனால் விளைவு எதனை நோக்கி செல்லும் என்பதை வாசக நெஞ்சம் ஊதித்து அறிய விடுகின்றீர். இல்லாத அந்த ஒன்று இருக்கு என்பதை மையம் கொண்டு தவிக்கவிடுகின்றீர்.

எதையும் சரியாக பார்க்கும் ஆயிரம் விழிக்கொண்ட  அர்ஜுனன் இதையும் பார்த்துவிடுகின்றான்.எழுதிவைத்து நடத்துபவர் காந்தார இளவரசர்….” என்றான் அர்ஜுனன்-பிரயாகை-33. பார்ப்பதோடு அர்ஜுனன்வேலை முடிந்துவிடுகின்றது. அதை சொல்லாக்க வேண்டியவன் அவன் இல்லை. அவன் சொல்லை நம்புபவன் இல்லை. வில்லை நம்புபவன். இங்கு சொல்லாக்கும் திறன்படைத்த தருமன் தாயின் அகத்தை சொல்லாகி மேலும் பெரும் சிக்கை உண்டாக்கி வைத்துவிட்டான்.  

சகுனி என்ன எழுதி என்ன நடத்துகின்றார் என்ற கேள்வி வருகின்றது. நமக்கே வரும் இந்த கேள்வி மகாஞானியான விதுரருக்கு வராமல் இருக்குமா? கணிகன் மன்றில் இருக்கக்கூடாது என்று அவர் நினைக்கிறார் ஆனால் அவன் அங்கு இருக்கிறான். அவன் அங்கு அவனுக்கு உரிய இடத்தில் அவனக்கு உரிய உடல்மொழியோடு இருக்கிறான். இருட்டில் இருக்கிறான். உடலை மடித்து வைத்ததுபோல் இருக்கிறான். பூநாகம் என்னும் தலைப்புக்கு உருவாமாகி வரும் நாகக்காட்சி.

சகுனி இயக்குனர் முகம் தெரியவேண்டியது இல்லை, ஒளியும் ஓலியும் ஒளிபரப்பட்டால்போதும்.  கண்ணில்லா திருதராஷ்டிரனிடம் உடல் அசைவு மூலம் எந்த சொற்களையும் விதுரர் பாண்டவர்களுக்கு அங்கு கடத்திவிடக்கூடாது என்பதாலும், விதுரரின் ஒவ்வொரு அசைவும் திருதராஷ்டிரனுக்கு எண்ணமாக வேண்டும் என்பதாலும், திருதராஷ்டிரன் எண்ணம் கணிகரின் உள்ளத்தில் சொல்லாகும் என்பதாலும் விதுரரின் இருக்கை திருதராஷ்டிரருக்கு முன்னால் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த  இருக்கை விதுரருக்கு இடராகவும், கணிகனுக்கு சாதகமாகவும் இருக்கும்படி அமைந்து உள்ளது. பொருந்தாத இடம் கொடுக்கப்பட்டு பாண்டவர்கள் அங்கு குழப்பமான உடல் அசைவுகளை காட்டும்படி வைக்கப்பட்டு உள்ளனர். இதுவரை விதுரனின் அருகில் நிற்கும்படி இருந்த பாண்டவர் இன்று வேறு இடத்தில் நிற்கின்றார்கள். 

திருதராஷ்டிரன் பாண்டவர்கள் அங்கு இருப்பதையே காட்டிக்கொள்ளவில்லை. //அறைக்குள் சுவர் ஓரமாகநின்றிருந்த பாண்டவர் மூவரும் குழப்பமான உடலசைவுகளைக் காட்டினர்அவர்களை திருதராஷ்டிரர்அறிந்ததாகவே காட்டிக்கொள்ளவில்லை// பெரும் கதை சொல்லும் துரியோதன் அஸ்தினாபுரியில் பாண்டவர்கள் என்ற ஐந்துபேர் இருப்பதாகவே சொல்லவில்லை. 
//“தனிப்போரில் வெல்லற்கரியவராகிய என் ஆசிரியர் உளம்கலங்கி கண்ணீர் விடுவதைக் கண்டேன்நான் அவரதுகால்களில் முட்களை எடுத்துக்கொண்டிருந்தேன்அப்போது அவர் “இவ்விழிவுடன் மாள்வதே என் விதியோ!” என்றுசொன்னபோது நான் அவர் கைகளைத் தொட்டு “நானிருக்கையில் அது நிகழாது குருநாதரேஅஸ்தினபுரிஇருக்கிறதுநூற்றுவர் தம்பியர் இருக்கிறார்கள்பாரதவர்ஷத்தின் முதல் வில்வீரனாகிய என் நண்பன் கர்ணன்இருக்கிறான் என்றேன்” என்றான் துரியோதனன்//

சகுனி எழுதிவைத்து நடத்துவது இதுதானோ? என்று நினைக்கையில், துரியோதனன் தெரிந்தோ தெரியாமலோ தூதுவந்து சொல்லும் கதையின் நாயகன் ஏகலைவன் பழிவாங்குவது நாடுகடத்தப்பட்ட அத்தைகளுக்காக. வில் எடுத்தது அத்தைகளுக்காக
//மெலிந்து சோர்ந்து கந்தலாடை அணிந்து பசித்து வந்த தன் அத்தையைக் கண்ட ஏகலவ்யன் உளம்கொதித்துஅங்கேயே வில்தூக்கி மதுராவை அழிப்பேன் என்று வஞ்சினம் உரைத்தான்//

‘’அத்தை’’ என்ற இடத்தில் உள்ளம் அசைவின்மையை அடைகின்றது. கண்ணனையும் குந்தியையும் நினைத்து. 

//அவர்களில் ஒருவருக்குக் கூட கம்சரின் கொலைநடத்துக்குத் துணைபோனதன் ஊழ்வினை அது என்றுதோன்றவில்லைதாங்கள் குற்றமற்ற எளியமக்கள் என்றே அவர்கள் உண்மையில் நம்பினார்கள்.”//-அசைவின்மையை அடைந்த அகம் இங்கு அசைகிறது குருசேத்திரத்தை நினைத்து.

கண்ணின் தாய் தேவகியின் அகத்தைப் பார்க்கும்போது மனித அகத்தின் இருட்டின் திண்மை உடைக்கமுடியாத பெரும்பாறையாகி நிற்பதை காணமுடிகின்றது. //'விளங்கமுடியா விருப்புகளாலும் புரிந்துகொள்ளவே முடியாத வெறுப்புகளாலும்நெய்யப்பட்டிருக்கிறது வாழ்க்கை'//

உண்மை எல்லா இடத்திலும் உண்மைதான்.

நன்றி
அன்புடன்
ராமராஜன்மாணிக்கவேல். 

Friday, November 28, 2014

அந்தச் சிட்டு




அன்புள்ள ஜெயமோகன்,

ஒவ்வொரு நாளும் அன்றாடப் பணிகள் காரணமாக‌ மதிய இடைவேளையில் வெண்முரசு
வாசிப்பதே என் வழக்கம். சிலசமயங்களில் மாலைக்குப் பிறகுகூட
வாசித்திருக்கிறேன். இன்றைய பகுதியைப் படித்தபிறகு உடனே உங்களுக்கு
எழுதவேண்டுமென்று கை பரபரத்தது. ஆனால் கிருஷ்ணன் வருகை குறித்து
விடியுமுன்பே படித்துவிட்டு சண்முகமும் கடலூர் சீனுவும் எழுதியதைப்
பார்த்தபிறகு சோர்ந்து உட்கார்ந்துவிட்டேன்.

நிற்க, இன்றைய அத்தியாயத்தில் "சிட்டுக்குருவியின் விரைவை யானையிடம்
எதிர்பார்க்கமுடியாது" என்கிறான் தருமன். யானையாக இருப்பதினாலேயே
சிட்டுக்குருவியின் தேவைகளைப் புரிந்துகொள்ள முடியாமல் அஸ்தினபுரி
திண்டாடுகிறது போலும். ஒரு சிறு குருவி போதும், அதை மன அழுத்தம்
கொள்ளச்செய்ய. பறவையின் ஒலிகள் அனைத்தையும் தவிர்த்துவிட்டு அரசுசூழவே
அது விரும்புகிறது. சில எளிய முறைமைகளாலும் வாதங்களாலும் அதை
நியாயப்படுத்தவும் முயல்கிறது.

ஆனால் கிருஷ்ணனோ அதைப் புரிந்துகொள்ள முயல்கிறான். வெளியேற்றுவதில்
பயனில்லை, அது மீண்டும் வழியறிந்து உள்ளே வரவே செய்யும் என்கிறான்.
சிட்டின் பெயர் வஜ்ரமுகி, அடடா! கிருஷ்ணனையே நினைத்துப் பெயரிட்டது
போலிருக்கிறது. நாடிழந்து துரத்தப்பட்ட சிட்டுக்களின் அரசி வஜ்ரமுகம்
கொண்டவளாக அல்லவா இருக்கவேண்டும்? கிருஷ்ணன் அந்தச் சிக்கலுக்களிக்கும்
தீர்வு சரியான சமரசம். அத்தகைய தீர்வை அளிக்குமளவுக்கு அஸ்தினபுர யானை
இன்னும் மேலெழவில்லை போல.

நினைக்க நினைக்க விரிந்துகொண்டே செல்கிறது. கிருஷ்ணனின் வருகை மீண்டும்
குருவி வழியாகவே நிகழ்ந்திருக்கிறது இல்லையா? இந்தச் சிறுகுருவியும்
காவியப்பாத்திரங்க‌ளுள் ஒன்றுதானோ?

அன்புடன்,
த.திருமூலநாதன்.


அன்புள்ள திருமூலநாதன்

அந்தச் சிட்டு மூலநூலில் இல்லை. அது ஒரு நவீன படிமம்.

அது வந்துகொண்டேதான் இருக்கிறது அர்ஜுனன் சதசிருங்கம் விட்டு வரும்போதே அவன் உணர்வது பறவைகளின் உலகை அல்லவா?

ஜெ



ஆம் ஜெ அதைத் தவறவிட்டுவிட்டேன். பாண்டவர் ஐவரும் ஐந்து வகையான பாதைகளில்நடந்தபோது தருமன் ஒலியாலான பாதையில் நடந்துவந்ததை இப்போது மீண்டும்பார்த்தேன். இன்றைய‌ அத்தியாயத்தை இப்போது இன்னும்
விரித்துக்கொள்ளமுடிகிறது.

சிட்டு படிமமாக வருவது எனக்குப் புரிந்தது. ஆனாலும் முன்பு நீலத்தில்
கிருஷ்ணன் கம்சனின் அரண்மனைக்குள் சிறுநீலக்குருவியாக வந்ததுபோலவே
இப்போதும் வருவதால் அந்தக் குருவியும் ஒரு பாத்திரமாக ஆகிவிட்டதோ என்று
எழுதியிருந்தேன்.
திருமூலநாதன்


குடாகாசன்



வலைக்கூடைக்குள் இருக்கும் வானம்,வலைக்குள்ளும் இருக்கிறது. அதேசமயம் வலைக்கு வெளியேயும் பரவியிருக்கிறது - [வெண்முரசு பிரயாகை 37]

ஒரேசமயம் விளையாட்டுப்பையனின் விதண்டாவாதமாகவும் யோசித்தால் ஆழமானதாகவும் இருக்கும் உவமை.

குடாகாசம் மடாகாசம் வேதாந்தத்தில் உண்டு [ஆனால் அதை ஆதிசங்கரர் சொன்னா என்று நினைவு. ] அதை இப்படி ஒடிக்கமுடியும் என்பதை நினைத்துச் சிரித்தேன்

அது கிருஷ்ணனின் குடாகாசம்தான். ஒரே சமயம் அவன் குடத்துக்குள்ளும் இருக்கிறான். ஆயிரக்கணக்கான வாசல்கள் வழியாக வானமாகவும் இருக்கிறான்

அதை எப்படி வேதாந்திகளால் புரிந்துகொள்ளமுடியு?

சீனிவாசன்


அன்புள்ல சீனிவாசன்

குடாகசம் மடாகாசம் வேதாந்தத்தின் தொன்மையான உவமையாக இருக்கலாம். ஏனென்றால் உவமைகளை மாற்றும் வழக்கம் இந்திய தத்துவ மரபில் இல்லை. கயிற்றரவு போன்ற உவமைகளை ஆயிரம் வருடமாக கையாள்கிறோம் அல்லவா?

ஏனென்றால் உவமை என்பது ஒரு பிரமாணம். ஆகவே சங்கரரருக்கு முன்னரே வேதாந்தப் பள்ளிகளில் இருந்த உவமை அது என எடுத்துக்கொண்டேன்

ஜெ

வெண்முரசின் ஆன்மீக தருணங்கள்



ஜெயமோகன் ஒரு வாசகருக்கு எழுதிய இந்த பதிலை படித்தேன். வாசகர்களுக்கு எழுதிய பதில்களில் இது மிகவும் முக்கியமான ஒன்றாகப்பட்டது. கதைகளில் பலரும் பலவிதமான பகுதிகளை கவனிப்பார்கள். ஆனால் அவர்களுக்கு எழுச்சி தரும் பகுதிகள் படிப்பவரின் குணாதிசயத்தை பொருத்தே அமைகிறது - அகவயமானது. அந்த வகையில் பொருளியல் உலகு சார்ந்து எழுச்சி தரும் பகுதிகளை தவிர்த்து ஆன்மிக தளத்தில் எழுச்சி தரும் பகுதிகளை இங்கு பகிரலாமா?

அதாவது நான் நேற்று இங்கு எழுதிய 'மழைப்பாடல் முக மொழி' என்னும் பதிவு லௌகீக உலகின் நுட்பம் என்று தோன்றுகிறது. ஆனால் மழைப்பாடலின் இறுதியில் சத்யவதி, அம்பிகை, அம்பாலிகை ஆகிய மூவரும் கைகோர்த்து காடேகும் போது ஒரு பெரிய கேள்வி உருவாகிறது. தன் நாட்டுக்கும் அரசாட்சிக்கும் முதல் முக்கியத்துவம் கொடுத்த சதயவதி, அம்பை சகோதரிகளை இரக்கமின்றி(நாட்டுக்காக) தூக்கி வர சொன்ன சத்யவதி, வாழ்க்கை முழுதும் பேரரசியாக இருந்தவள் ஒரு இடத்தில் அனைத்தையும் உதறிவிட்டு வனம் புகுகிறாள்.

அம்பிகை, அம்பாலிகை சகோதரிகள், இரத்த உறவு. ஆனால் அவர்களின் பாதி வாழ்வை வன்மத்திலேயே கழிகிறது. யார் மகனை அரசனாக்குவது என்ற போட்டி. ஒருவனுக்கு சிம்மாசனம் அருகில் வந்து அமரும் போது நகர்ந்து விடுகிறது, ஒருவன் அரசனாகி அற்ப காலத்தில் இறந்து விடுகிறான். அந்த இருவரும் ஆசை, பகை அனைத்தும் உதறி, உதிற்க்கப்பட்டு, வனம் புகுகிறார்கள். அவர்கள் செய்ய வேறென்ன இருக்கிறது? மானுட அகந்தையை 'புல்லடா நீ, அடங்கு' என்று ஏதோ ஒன்று சொல்லும் தருணம்.

வாழ்க்கையின் உச்சத்திற்கு சென்றவன் அங்கு ஒரு கதவிருப்பதை பார்க்கிறான் அதற்க்குள் நுழைகிறான், ஒரு புது வெளி திறக்கிறது. வாழ்க்கையில் தோற்று தோற்று கடை நிலைக்கு சென்றவன் அங்கு ஒரு கதவை பார்க்கிறான், அதற்க்குள் நுழைகிறான், ஒரு புது வெளி. வென்றவனும் தோற்றவனும் அங்கு கைகோர்த்து நடக்கிறார்கள். இது ஒரு ஆன்மீக எழுச்சி தரும் தருனம் என்று எனக்குப்படுகிறது.

நண்பர்களே, நீங்கள் வெண்முரசின் மூலம் அடைந்த ஆன்மிக அனுபவத்தை இங்கு பகிருமாறு கேட்டு கொள்கிறேன். தேர்ந்த வாசகர்களுக்கு இங்கு எழுத அதிகமிருக்கும் என்று நினைக்கிறேன்.

ஹரீஷ்


வெண்முரசு விவாதக்குழுமத்தில் 

பிரயாகை-32-எண்ணங்கள்


அன்புள்ள திரு.ஜெக்கு வணக்கம். 


எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்-என்கின்றார் வள்ளுவர். எண்ணம்தான் பொக்கிஷ அறை, திண்மை அதன் கதவு. 

எண்ணம்தான் செயலாக விளைகிறது. “நீ எதுவாக ஆக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்” என்கின்றார் சுவாமி விவேகானந்தர்.

திருதராஷ்டிரன் திண்மை உடையவன், பெரும் வல்லமை கொண்ட பாரவர்ஷத்தின் பெரும்களிறு. அவன் வலிமையால் நிறைந்து இருக்கிறான். கருணையால் நிறைந்து இருக்கிறான். தந்தைமையால் நிறைந்திருக்கிறான். பாசத்தால் பிணைந்து உறவால் நிறைந்திருக்கிறான்.  மகன்களால் நிறைந்திருக்கிறான். மகிழ்ச்சியால் நிறைந்திருக்கிறான். இசையால் நிறைந்து இருக்கிறான். அணிமணிகாளல் நிறைந்திருக்கிறான். உணவால் நிறைந்து இருக்கிறான். நகைச்சுவையால் நிறைந்திருக்கிறான். புன்னகையால் நிறைந்திருக்கிறான். நாம் கைவிடப்பட்டுவிடுவோமோ என்ற பயத்தால்கூட நிறைந்து இருக்கிறான். ஆனால் அவன் எண்ணங்களால் நிறைந்து இருக்கவில்லை.

எண்ணங்கள் எதுவும் அவனிடம் இல்லை. அவனிடம் உள்ள எண்ணங்கள் மழைபோல விழும்போது தெரியும், விழுந்தபின்பு இருப்பதில்லை. எண்ணங்களை உருவாக்கும் சொற்கள்கூட அவனுக்கு பிடிப்பதில்லை ஆகவே சொற்கள் அற்ற இசையில் நீந்தி செல்கிறான்.  சொற்கள் பூமிபோல பொருள்களால் ஆனவை, இசை வானம்போல இருக்கு ஆனால் இல்லை. அந்த வானவெளியில் வாழும் திருதராஷ்டிரன் காந்தாரியை மணம்முடிக்க செல்லும்போது தனது அகம் திறந்து விதுரனுக்கு காட்டுகின்றான்.

//நான் பாரதவர்ஷத்தின் தலைமையான தேசத்தின் அரசன்ஆனால் இன்றுகூட எனக்கு உணவுகிடைக்காமலாகிவிடும் என்ற அச்சம் என்னுள் எப்போதும் உள்ளதுஒரு தட்டில் உணவுண்ணும்போது அருகேகையெட்டும் தொலைவில் மேலும் உணவு இருந்தாகவேண்டும் என்று எண்ணுவேன்இல்லை என்றால் அந்தஅச்சம் என் அகத்தில் முட்டும்அது கடும்சினமாக வெளிப்படும்சேவகர்களைத் தாக்கியிருக்கிறேன்இளமையில்பலமுறை அன்னையையே தாக்கியிருக்கிறேன்” திருதராஷ்டிரன் சொன்னான்//-மழைப்பாடல்-19.

திருதராஷ்டிரன் அகத்தில் இருக்கும் அச்சம் என்னும்  எண்ணவிதை முளைக்க நீறு உற்றப்படவில்லை. அதை உறுவாக்கும் யாரும் அஸ்தினபுரியில் இல்லை. சகுனியால்கூட அந்த எண்ணவிதையை முளைக்க வைக்கமுடியாது. மண் மண்ணோடு சேர்ந்து மலையாவதுபோல எண்ணங்கள் எண்ணங்களோடு சேர்ந்து எண்ணத்தின் மலையாக, அச்சம் அச்சத்தோடு சேர்ந்து
அச்சத்தின் மலையாக திருதராஷ்டிரன் ஆகவேண்டும் என்றால் எண்ணங்களை உருவாக்கும், எண்ணங்கள் வழியாக அச்சததை உருவாக்கும் ஒருவன் தேவை என்பதை சகுனி எண்ணுகின்றான். அந்த எண்ணம் அந்த நேரத்தில் அதற்கு உரிய எண்ணத்தோடு சேர்கிறது. அப்படிக்கிடைத்தவன் கணிகன்.
//கணிகர் “நான் யாஜரையும் உபயாஜரையும் அறியமாட்டேன்அவர்கள் என் குருகுலத்தைச் சேர்ந்தவர்களும் அல்லநான் பாஞ்சாலத்துக்குச் செல்லவுமில்லைநான் அதர்வவேதம் பற்றிச் சொன்னதுமே நீங்கள் யாஜரைப்பற்றி எண்ணினீர்கள். அவர்களை துருபதன் தேடிச்சென்ற செய்திதான் நீங்கள் இறுதியாக அறிந்ததுஅந்த எண்ணத்தை நான் தொட்டேன்அதை என் கையில் எடுத்துக்கொண்டேன்நான் கேள்விப்பட்ட கதையைச் சொன்னேன்” என்றார். “இப்போது நீங்கள் எண்ணிக்கொண்டிருக்கும் அனைத்து எண்ணங்களும் ன்னால் உருவாக்கப்பட்டவை.”

சகுனி சிலகணங்கள் கழித்து “நாளை நீர் என்னுடன் வாரும்” என்றார்.என்னுடன் இரும்உமது பணி எனக்குத்தேவை” கணிகர் சிட்டுக்குருவி ஒலி போல மெல்ல நகைத்து “நான் விழைந்ததும் அதுவே” என்றார்// 

ஒருவன் எண்ணங்களோடு ஒருவன் எண்ணங்களை சேர்க்கும் அந்த வித்தையை முதன் முதலில் கணிகன் இடம் காணும் சகுனி அந்த இடத்தில் இவன்தான் தனக்கு வேண்டியவன் என்று அறிகின்றான். நதிக்கு பாதை தேவை இல்லை அதுபோகும் பாதையே நதியாகி விடுகின்றது. சகுனி திட்டம் தீட்டி ஒருவனை உருவாக்க வில்லை. அவன் எண்ணம் பயணக்கும் திசையில் அவன் கண்டது அது. விதியும் மானிடர்வாழ்வில் இணைந்து பிணைந்து செல்கிறது என்பதை இதன் மூலமாக அறிய முடிகின்றது.

ஒருவனுக்குள் உள்ள எண்ணம் இன்னொரு ஒத்த எண்ணத்தை ஈர்த்துவிடுகின்றது. பாண்டர்வகளை ஒழிக்கவேண்டும் என்று எண்ணுவதற்கு முன் சகுனியின் எண்ணத்தில் திருதராஷ்டிரன் அகத்தில் எண்ணங்களை விளைவிக்கவேண்டும் என்ற எண்ணம்தான் இருந்து இருக்கிறது. அந்த எண்ணம்தான் எண்ணங்களை விளைவிக்கும் கணிகரின் தேவையை அவனுக்கு தருகின்றது. திருதராஷ்டிரன் என்னும் பூவுக்குள் எண்ணம் என்னும் நாகத்தை ஏற்றி வைக்க முடிந்தவன் இவன் என்னும் கணிப்பை சகுனி அடைகிறான்.   

எண்ணங்கள் நல்லவை, தீயதை என்று இரண்டாக இருந்தாலும், நல்ல எண்ணங்களைவிட தீய எண்ணங்களை எளிதில் வளர்க்க முடிகின்றது ஏன்? நல்ல எண்ணங்கள் திங்கும் கரும்புபோல் வாயை கிழிக்கிறது. தீய எண்ணங்கள் நொதிக்க வைத்த கருப்பம் சக்கைச்சாறு, யாரோ உருவாக்க யார  மூலமாகவோ வந்து கிடைக்கிறது. எச்சில் ஊறுகிறது.  அடிப்படையில் கண்ணில்லாமையால் அச்சத்தால் பிடிக்கப்பட்டு இருக்கும் திருதராஷ்டிரன் இடம் கரும்பைக்கொடுத்தால் எப்படி தின்பான். கணிகனுக்குள் நொதித்த புளித்த சறக்கு அவனுக்கு இதமாக இருக்கிறது. அச்சப்படும் திருதராஷ்டிரனை அச்சப்படுத்தும் கதைகள். பலகீனமானவன் சாரயம் குடித்து இன்னும் பலிகீனமாகி இருப்பதையே பலமாக இருப்பதாக நினைக்கும் வேதனை நிகழ்வு. விதைகளை தூவிவிட்டால்போதும் மண் பின்பு விதைகளை காடாக்கிவிடும். காட்டுமரங்களின் வேர்கள் கோட்டையை பிளந்துவிடும். சகுனி தனது சூழ்ச்சிப்போரின் பகடையாய் கணிகனைப்பயன்படுத்துவது அற்புதம். 
வீரம் கருணையில் மகிழ்கின்றது குந்தியின் அந்தபுரத்தில் அள்ளிக்கொடுத்து. அது ஒரு முரண்.  அறிவு கலையில் மகிழ்கிறது கவிதைநூல் படித்து. அது ஒரு முரண். இந்த இரண்டு முரண்களும் காலத்தால் உண்டானவை. நேற்று பாண்டவர்கள் நகர் நுழைந்தபோது திருதராஷ்டிரன் அங்கு இருக்கையில் அவர்கள் அன்னையிடம் நேராக சென்றது இடத்தால் நிகழ்ந்த முரண்.   சூழ்ச்சி எப்போதும் சூழ்ச்சியிலே மகிழ்கிறது. எந்த நேரமும், எந்த காலமும் அதற்கு இல்லை. அதனால் சூழ்ச்சி முரணை முரணாக முகம் காட்டுவதில்லை. 
நேற்றுவரை இருந்த முரண்படா திருதராஷ்டிரன் இன்று முரண்படுகின்றான். ஆனால் அவனுக்குள் உள்ள முரண் அவனுக்கு தெரிவதில்லை. அவன் கொண்ட முரண் குந்தி உண்டாக்கிய முரண், குந்தியால் பாண்டவர்கள் உண்டாக்கிய முரண். திரு.ஜெ சொல்வதுபோல //பெரிய முரண்பாடுகள் மிகமிக மென்மையாகவேவெளிப்படும்நடத்தைகளில்சொற்களில்பலசமயம் எளிய உடலசைவுகளில்ஏனென்றால் பெரியமுரண்பாடுகளை முரண்படுபவர்களே அஞ்சுகிறார்கள்அவற்றை முழுமையாக மறைத்துக்கொள்ளமுயல்வார்கள்நாம் காண்பது அனைத்து திரைகளையும் கடந்து வரும் மெல்லிய அசைவை மட்டுமே.”திருதராஷ்டிரர் பெருமூச்சுடன் தன் பெரிய கைகளை மெல்ல உரசிக்கொண்டு அசைந்து அமர்ந்தார்//

ஒரு மனிதன் முரண்பட்டு இருக்கிறான் என்பதை அவனால் உணரவே முடியவில்லை என்பதுதான் மாறாத நிஜம். பெரிய முரண்பாடுகளை முரண்படுபவர்களே அஞ்சுகிறார்கள் என்பது நிஜமாக இருப்பதால்தான், முரண்படுபவர்களுக்கு முரண்படுவது தெரிவதே இல்லை.

விதி முரண்பாட்டையே தனது ஆடல்களமாக ஆக்கி விளையாண்டு வீழ்த்துகிறது. வெற்றிடத்தில் நிறையும்நீர்போல எண்ணம் இல்லாத திருதராஷ்டிரனுக்குள் எண்ணம் நிறைகிறது, எண்ணம்தான் முரணாகிறது. எண்ணத்திற்கு தகுந்த முரண். 
தந்தைப்பேச்சை தட்டாத ராமனும் முரண்பட்டவன்தான். தந்தைப்பேச்சை கேட்காத பிரகலாதனும் முரண்பட்டவன்தான்.இவர்களின் முரண் விண்ணை நோக்கி.
மனைவிப்பேச்சை தட்டாத தசரதன் முரண்பட்டவன்தான். மனைவிப்பேச்சை தட்டிய வாலியும் முரண்பட்டவன்தான். இவர்களின் முரண் மண்ணை நோக்கி. 
அஸ்தினபுரியில் இன்று உருவாகும் முரண் மண்ணுக்காகவா? விண்ணுக்காகவா? காத்திருப்போம். 
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி யில்லை நுஞ் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே-திருமந்திரம்


நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.