Wednesday, January 15, 2020

வெண்முரசு- தேவை புதியவாசிப்பு- ஆர்.பாஸ்கர்

 

வெண்முரசை வாசிக்கும்போது ஒன்று தோன்றிக்கொண்டே இருந்தது, அதை வாசிக்க ஒரு குறிப்பிட்ட மனப்பயிற்சி தேவையாகிறது. எல்லா படைப்பையும் வாசிப்பதற்கு அதற்கான மனப்பயிற்சி தேவை. ஆனால் வெண்முரசு, கொற்றவை போன்றவற்றை வாசிப்பதற்கு தனிச்சிறப்பான ஒரு மனநிலையை உருவாக்கிக்கொள்ளவேண்டியிருக்கிறது.

நாம் நவீன இலக்கியத்தை ஒரு குறிப்பிட்டவகையிலே வாசிப்பதற்கான பழக்கத்தைக் கொண்டிருக்கிறோம்.அதை ஒருவகையான கிரிட்டிக்கல் ரீடிங் என்று சொல்லலாம். அதை நாம் ஒரு அடல்ட் ரீடிங் என்று சொல்லிக்கொள்ளலாம். அந்த வாசிப்புக்கு நாம் நம் வகையில் இதுவரையான இலக்கியப்படைப்புக்களால் பயிற்சியளிக்கப்பட்டிருக்கிறோம்.

நான் அந்தவகையான பயிற்சி கொண்ட வாசகன். ஆங்கிலம் வழியாக நிறைய வாசித்துக்கொண்டிருந்தவன் பிந்தித்தான் தமிழில் வாசிக்க ஆரம்பித்தேன். தமிழிலும் சமகால இலக்கியத்திலிருந்து பின்னால் சென்று புதுமைப்பித்தன் வாசித்தேன். கம்பராமாயணமெல்லாம் இப்போது வாசிக்கிறேன். எனக்கு என்ன சிக்கலிருந்தது என்று மட்டும் சொல்கிறேன்.

எனக்கிருந்தது மூன்று பிரச்சினைகள். முதல் பிரச்சினை படைப்பிலக்கியத்தின் அடிப்படை ஒரு ஹ்யூமன் கிரைஸிஸ் என்று நம்புவது. ஒரு படைப்பை வாசிக்க ஆரம்பிக்கும்போதே அந்த கிரைஸிஸ் என்ன என்று தேட ஆரம்பிப்பது, கூடியவிரைவில் அதைச் சென்று அடைவது. அதன்பிறகு அந்தப்படைப்பில் அந்த கிரைஸிஸை மட்டுமே வாசிப்பது. அந்த மையத்திலிருந்து விலகுவதெல்லாமே தேவையற்றது என்று பொறுமையிழப்பது

இரண்டாவதாக எனக்கிருந்த பிரச்சினையை நான் இப்போதுதான் கண்டுபிடித்தேன். நான் வாசிக்கும் படைப்புகளிலே உள்ள அந்த ஹ்யூமன் கிரைஸிஸ் தனிநபர்களில் நிகழ்வதைத்தான் நான் கற்பனைசெய்கிறேன். அதாவது அது தனிநபர் சார்ந்ததாகவே எனக்கு இருக்கிறது. அந்த பிரச்சினையை கலாச்சாரத்திலோ வரலாற்றிலோ வைத்து நான் பார்த்ததில்லை. அந்த தனிநபர் ஒரு individual ஆக நிர்ணயம் செய்யப்பட்டவர். அவர் ஒரு சரித்திரப்பின்னணியிலே இல்லை. ஒரு கலாச்சாரப் பின்னணியிலும் இல்லை

இது ஏன் என்று யோசித்தேன். நான் காலேஜில் படிக்கும்போது படித்த முதல் முக்கியமான நூல் அட்லஸ் ஷ்ரக்ட். அயன்ராண்ட் தான் என் தொடக்கம். அதன்பிறகு வாசித்த எல்லா நாவல்களுமே அமெரிக்கா, ஐரோப்பா பின்னணி கொண்டவை. அவற்றின் பண்பாட்டுச்சிக்கல்கள் எனக்கு அன்னியமானவை. சரித்திரம்மீதும் அக்கறையில்லை. நான் அந்நாவல்களின் கதாபாத்திரங்களை வெறும் தனிநபர்களாக நிறுத்தித்தான் வாசித்தேன். அந்த தனிநபர்களுடன் என்னை நான் இணைத்துக்கொண்டு வாசித்தேன்

இந்த வாசிப்புக்கு நான் பழகிப்போயிருந்தேன். என் தலைமுறையில் பெரும்பாலும் அத்தனை வாசகர்களும் அப்படித்தான். என் தலைமுறைவாசகர்களில் பழைய இலக்கியங்களிலோ மதத்திலோ வரலாற்றாய்விலோ ஈடுபாடு கொண்டவர்களை நான் பார்த்ததே இல்லை.ஆகவே நாங்கள் Contemporary crisis என்று நினைப்பது தனிநபரின் சிக்கலை மட்டுமே. இந்த வாசிப்புக்குப் பழகாத இன்றைய இளைஞர்கள் இருப்பார்களா என்று சந்தேகம்தான்
 
இந்த கிரைஸிஸ் என்னவாக இருக்கிறது என்பது ஆளுக்காள் மாறுபடுகிறது. சிலருக்கு இந்தக் கிரைஸிஸ் என்பது மனித உறவுகளைப் பற்றிய உணர்ச்சிபூர்வமான விஷயங்களாக உள்ளது. சிலருக்கு இது அடையாளச்சிக்கல் மாதிரி தத்துவார்த்தமானதாக உள்ளது. ஆனால் தனிநபர் சார்ந்த பிரச்சினைதான்.
 
மூன்றாவது பிரச்சினை ஒரு படைப்புடன் பேசிக்கொண்டே படிப்பது.
 argumentative reading என்று நான் அதை சொல்வேன். இந்த வாசிப்பு சமகாலத்தில் மிகவும் ஊக்குவிக்கப்படுகிறது. இது அறிவார்ந்த வாசிப்பு என சொல்லப்படுகிறது. போஸ்ட்மாட்ர்ன் காலகட்டத்தின் வாசிப்பு இது. இதில் ஒரு மறைமுக மகிழ்ச்சிதான் உள்ளது. நம்மை நாம் நூலின் ஆசிரியருக்குச் சமானமாக நிறுத்திக்கொள்கிறோம். அவரை விவாதத்திற்கு இழுத்தபடியே இருக்கிறோம்
 
இன்றைய நவீன இலக்கியத்திலுள்ள பெரும்பாலான நாவல்களுக்கு இந்தவாசிப்புதான் சரிவரும். இந்தவகையான வாசகர்களை எதிர்பார்த்து இன்றைய நாவலாசிரியர்கள் அவர்களின் டெக்ஸ்டை மிகவும் சிடுக்கானதாக ஆக்கிக்கொள்கிறார்கள். புதிர்போல மாற்றிக்கொள்கிறார்கள். வாசகன் வழிதவறிவிளையாட விடுகிறார்கள். நன்றாக மூளையை முட்டிக்கொண்டால் ஒரு நிறைவு ஏற்படுகிறது. இந்த சிடுக்கையே ஆழம் என்று நினைத்துக்கொள்கிறார்கள்
 
ஏராளமான கிராஸ் ரெஃபரன்ஸ்கள் வழியாகவும் சில ஆசிரியர்கள் டெக்ஸ்டை சிக்கலானதாக ஆக்கிக்கொள்கிறார்கள்.அவற்றை வாசிக்கவே முடியாமலாக்கிக்கொள்கிறார்கள். வாசகனுக்குச் சவால்விடும் படைப்புககள் அவை என்று சொல்லப்படுகின்றன. சமகால அமெரிக்க இலக்கியப்படைப்புக்களின் வழிமுறை இதுதான்
 
இந்த மூன்று அடிப்படைகளுமே வெண்முரசு போன்ற நாவல்களை வாசிப்பதற்குத் தடையாக அமைகின்றன. வெண்முரசை வாசிக்க கொஞ்சம் நவீன இலக்கியம் வாசித்தவர்களுக்கு தடைகள் இருப்பது இதனால்தான். எனக்கே அந்தச் சிக்கலிருந்தது.
 
உதாரணமாக வெண்முரசிலே விரிவான நிலக்காட்சிவர்ணனைகள் வருகின்றன. நான் முதலில் வாசிக்கும்போது அவற்றை வாசிக்க சலிப்பு ஏற்பட்டது. குறியீடோ அல்லது புதிரோ இல்லாமல் வெறும்நிலக்காட்சிகளை வாசிக்கமுடியவில்லை. அதேபோல கதாபாத்திரங்களின் சகஜமான உரையாடல்கள் வாசிக்கையிலும் சலிப்பு வந்தது.
 
மேலும், உணர்ச்சிகளை நேரடியாகச் சொல்லுமிடங்களில் பெரிய தடை இருந்தது எனக்கு. ஏன் சொல்லவேண்டும், அவற்றை அப்படியே விட்டுவிடலாமே என்ற எண்ணம் இருந்தது. அவை வாசகனால் அடையப்படவேண்டியவை என்று நினைத்தேன். நவீன்நாவல்களில் உணர்ச்சிகளைச் சொல்லும் வழக்கம் இல்லை.
 
ஆனால் வெண்முரசு ஒரு கிளாஸிக் படைப்பு. இந்திய கிளாஸிஸத்தை அது திரும்ப எழுதுகிறது. கிளாஸிஸத்தின் எல்லா அம்சங்களும் அதில் வந்துகொண்டுதான் இருக்கும் என்ற அறிதல் வர ஒருவருஷம் வெண்முரசை தொடர்ந்து படிக்க நேர்ந்தது.
 
அதைவிட முக்கியமான ஓர் அறிதல் உண்டு. ஓராண்டுக்குப்பின் நான் வெண்முரசை நினைவுகூர்ந்தபோது மழைப்பாடலில் வரும் நிலவர்ணனைகள்தான் நினைவில் நின்றன. மொத்த நாவலும் அந்த நிலங்களில் நிகழ்ந்தது என்று தெரிந்தது. அந்நிலங்கள் இல்லாமல் வெண்முரசின் மனிதக்கதையே இல்லை. அந்த நிலங்களிலிருந்து இன்றைக்குவரை வெளியே வரமுடிந்ததில்லை. 208ல் லீவு போட்டுவிட்டுவந்து அந்த நிலங்களில் பயணம்செய்தேன்.
 
அதைப்போல அந்நாவலிலுள்ள உரையாடல்கள். வெய்யோன் நாவலில் கர்ணன் தன் அம்மாவான ராதையிடமிருந்து விலகுமிடம் வெறும் உரையாடலாகவே உள்ளது. அதிலுள்ள நுட்பம் முழுக்க அந்த உரையாடலுக்கு பின்னாலுள்ள உணர்வுகள் ஊகத்துக்கு விடப்பட்டிருக்கிறது என்பதிலேதான். கர்ணன் அம்மாவிடமிருந்த உறவில் ஓர் உடைவு நடைபெறுகிறது. அது வெளியே தெரியாமலேயே நடைபெறுகிறது
 
அதை வாசித்தகாலத்தை விட பிறகுதான் அந்த இடம் பெரிதாகியது. எந்த மனிதரிடமும் நமக்கு ஓர் உள்ளே உடைவு நடைபெறும். அந்த இடம் மிகமுக்கியமானது. அந்த இடத்தை அப்படி உரையாடலிலேயே சொல்லமுடியும். பூரிசிரவஸ் தன் காதலிகளை மீண்டும் சந்திக்கும் இடத்திலுள்ள உரையாடலும் அப்படித்தான்
 
அதன்பிறகுதான் சப்டெக்ஸ்ட் என்பது புதிர்விளையாட்டு அல்ல என்று எனக்குத்தெரிந்தது. அது இந்த இடங்களில் சொல்லப்படாமல் வெளியே இருக்கும் வாழ்க்கையை உணர்ந்துகொள்வதுதான். பூரிசிரவஸின் காதலிகளுக்கு திருமணமானதுமே பூரிசிரவஸ் சிறியவனாக ஆகிறான். ஏன் அப்படி ஆகிறான் என்று உணர்வதுதான் சப்டெக்ஸ்ட் வாசிப்பு. எனக்கு அது தெரிந்தும்தெரியாமலும்தான் உள்ளது
 
உணர்ச்சிகளைச் சொல்லும் இடங்களும் சொல்லாத இடங்களும் வெண்முரசிலே உள்ளன. சொல்லாத இடங்களே மிகுதி. சொல்லும் இடங்களில்தான் மொழியின் அழகு நிகழ்கிறது. நவீனமொழியில் அந்த அழகு வராது. அது இமேஜரிகளானால ஒரு கிளாஸிக் அழகு. விதுரர் ‘சர்வ கல்வித’ மந்திரத்தை பைத்தியம்போல சொல்லும் இடத்தை இன்றைக்கு மீண்டும் வாசிக்கிறபோதும் அதே பரவசம் ஏற்படுகிறது
 
ஆனால் இதெல்லாம் சிறிய தடைகள். பெரிய தடை உண்மையான பண்பாட்டுப்பிரச்சினைகளை அடையாளம் கண்டு அதைக்கொண்டு நாவலை வாசிப்பது. ஒரு கடிதத்திலே நீங்கள் எழுதினீர்கள்.  தமிழகக்கோயில்களிலே ஆகமமுறை புகுந்ததைப் பற்றி ஒரு நாவல் எழுதப்பட்டால் அதை எப்படி வாசிக்கவேண்டும் என்று. அதுதான் என் திறப்பு. வெண்முரசை வாசிக்க எனக்கு பெரியதடையாக இருந்தது அந்தவகையான புரிதலே இல்லை என்பது. வெண்முரசு வேதம் என்றால் என்ன, அது அசுரர்களை ஏன் தேவர்களாக ஆக்கிக்கொண்டது, ஆதிவேதங்கள் என்ன என்றெல்லாம் பேசி வேதத்தில் வந்த மாபெரும் மாற்றத்தைப் பற்றி ஒரு தீஸிஸை முன்வைக்கிறது. பல ஆயிரம் பக்கங்களிலே இதைப்பற்றிப் பேசுகிறது.
 
இதற்கான வரலாற்றுப்பின்னணியையும் சமூகப்பின்னணியையும் பேசுகிறது. அதை மொத்தமாக புரிந்துகொள்ள பெரியதடையாக இருப்பது பெர்சனல் கிரைஸிஸை தேடுவதுதான். அதிலிருந்து வெளியே வந்து வாசிக்கும்போதுதான் உண்மையான நாவலையே அணுகமுடிகிறது. இந்திரநீலத்தில் எட்டு தேவியர் அந்த பின்னணியிலேதான் அர்த்தமாகிறார்கள். ஒரு கல்சுரல் கிரைஸிஸ் எப்படி நாவலாகும் என்று வெண்முரசு காட்டியது. அல்லது ஒரு ஹிஸ்டாரிக்கல் கிரைஸிஸ். அதற்கு வந்துசேர ஒரு நவீனநாவலின் வாசகன் கொஞ்சம் பயணம் செய்யவேண்டும்
 
கூடவே கொஞ்சம் பின்னணிவாசிப்பும் தேவை. உங்களுக்குப் பிடிக்காது, ஆனால் எனக்கு அந்த வாசிப்புக்கு மிக உதவியாக இருந்தது வெண்டி டேனிகரின் 
The Hindus: An Alternative History. சரசரவென்று வாசிக்கத்தக்க நூல் அது. மிகச்சிக்கலான நூல்களையெல்லாம் இதற்காக வாசிக்கமுடியாது. ஆனால் ஒரு பெரிய புரிதலை அது தந்தது. வருணன் அசுரனாக இருந்து தேவனாகியது, இந்திரனின் குணாதிசயங்கள், அவை அர்ஜுனனுடன் இணைந்தது எல்லாமே அதன்வழியாகவே புரிந்தன. கிருஷ்ணன் வருணனை வென்று துவாரகையை அமைக்கும் இடத்தின் சிம்பலிசத்தை அதன்பிறகுதான் புரிந்துகொள்ளமுடிந்தது
 
வழக்கமான நவீன வாசகன் அவனுடைய பழகிப்போன வாசிப்பை கொண்டுவந்து வெண்முரசு போன்ற ஒரு புதியநிகழ்வின்மேல் போட்டால் அவனுக்குத்தான் இழப்பு. நான் நவீனவாசகன் என்ரு சொல்லி நாலைந்து ஐரோப்பிய நாவல்களைச் சுட்டிக்காட்டிவிட்டு போகலாம். ஆனால் நல்ல வாசகன் ஒவ்வொரு நூலுக்காகவும் தன்னை உருவம் மாற்றிக்கொள்வான் என்று நான் நினைக்கிறேன்

 

வெண்முரசு போன்ற நாவல்களை வாசிக்கையில் நமக்கு இறுக்கமான வாசகநிபந்தனைகள் இருக்கக்கூடாது. படைப்பு இப்படி இருக்கவேண்டும் என்ற எண்ணங்களை நாம் தவிர்க்கவேண்டும். படைப்புக்கு நம்மை கொடுக்கமுடியவேண்டும். என் அனுபவம் என்னவென்றால் ஒரு இன்னொசெண்ட் ரீடிங் இந்த வகையான நாவல்களுக்கு தேவை. நம் அறிவால் அதை தடுத்துக்கொண்டு நிற்கக்கூடாது. அந்த வாசிப்பு நம்முடைய விர்ச்சுவல் ரியாலிட்டியாக ஆக அனுமதிக்கவேண்டும். அது நமக்குள் போய் பதியவும் நம் கனவில் ஊடுருவவும் இடமளிக்கவேண்டும்

 

அப்படி இடமளித்தால் பல இடங்கள் நமக்குள் மெரிய மெட்டஃபர்களாக மாறுவது என் அனுபவம். வாரணவதம் எரிப்பு, ஜராசந்தன் ஒரு மழையிலே கொல்லப்படுவது எல்லாமே ஆர்க்கிடைப்பல் அனுபவங்களாக மாறி ஒரு ஜ்வரம் போல உள்ளே சென்றுவிட்டன. சில இடங்களில் கொஞ்சம் சாகசநாவல். சில இடங்களில் ஒரு வகையான குழந்தைக்கதை. சில இடங்களில் விளையாட்டுத்தனமான கதை. சில இடங்களில் நேரடியாகவே தத்துவம். வெண்முரசை வாசிக்க வாசகன் தன்னை தகுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். எந்தப்பெரிய படைப்பும் அந்தப் பயிற்சியை வாசகனிடம் கேட்கிறது

 

Friday, January 3, 2020

வெண்முரசின் காவிய முறைமை-ஸ்ரீனிவாஸ்

 

வெண்முரசு நாவல்தொடரை நான் தொடர்ச்சியாகவும், அவ்வப்போது இடைவெளிவிட்டும் வாசித்து வருகிறேன். போர் முடிந்ததுமே ஒரு வைண்டிங் அப் மனநிலை வந்துவிட்டது. ஆகவே கொஞ்சம் சுணக்கம். மீண்டும் ஆரம்பிக்கவேண்டும். களிற்றியானைநிரை பாதியில் நிற்கிறது. வெவ்வேறு காலகட்டங்களில் இந்நாவல்தொடரைப் பற்றிய குறிப்புகளை எழுதிக்கொண்டிருந்தேன். இந்நாவல்களைப் பற்றிய என் எண்ணங்களை ஒருவாறாக தொகுத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்

பொதுவாக இலக்கியத்திலே எப்போதும் ஒருவகையான வடிவம் நிலைபெறும்போது அதை உடைக்கும் வடிவங்கள் வரும். அவ்வாறு சிலவடிவங்கள் வருவதற்குப் பலகாரணங்கள் உண்டு. அதிலொன்று, பழகிப்போயிருப்பது. உதாரணமாக பதினெட்டாம்நூற்றாண்டின் பெரிய கிளாஸிக் நாவல்களின் வடிவம் அப்படியே அமெரிக்க திரில்லர் வடிவங்களில் கையாளப்பட்டது. லியான் உரிஸ் எழுதும் நாவல்களெல்லாமே வார் ஆன் பீஸ் போன்ற வடிவம் கொண்டவைதான்

அதேபோல காம்யூ, ஹெமிங்வே முதலியவர்கள் எழுதிய அதே வடிவம் அப்படியே திரில்லர் நாவல்களுக்குப் போய்விட்டது. சொல்லப்போனால் மாடர்னிசத்தின் நடையின் உச்சத்தையே நாம் அந்த திரில்லர்நாவல்களிலேதான் காண்கிறோம். கூர்மையான கதைப்போக்கும் கச்சிதமான மிகையில்லாத அப்ஜெக்டிவான நடையும் அவற்றில்தான் உள்ளன. டெஸ்மண்ட் பேக்லி, லென் டைட்டன் போல எனக்கு பிடித்த சிலர் உண்டு.

ஆகவேதான் இலக்கியம் தடம் மாறியது. அது புதிர்வழிப்பாதை என்ற வடிவத்தை எடுத்துக்கொண்டது. எழுபதுகளுக்குப்பின்னால் வந்த மேலைநாட்டு நாவல்கள் எல்லாமே சிக்கலான புதிர்போடும் வடிவம்கொண்டவையாக இருந்தன. ஆனால் அந்தவடிவமும் உடனே கமர்ஷியல் ஃபிக்‌ஷனுக்கு போய்விட்டது. மிகச்சிறந்த உதாரணம் டாவின்சி கோட் நாவல். உம்பர்த்தோ ஈக்கோவின் நேம் ஆஃப்த ரோஸ் நாவலின் இன்னொருவடிவம்தான் அது.

புதிர்போடும் நாவல்களை இப்போதுதான் இங்கே படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் அந்த வடிவமும் பழகிவிட்டதனால் அடுத்தகட்ட நியோரியலிச நாவல்கள்தான் இன்றைக்கு வந்துகொண்டிருக்கின்றன. இன்றைக்கு உலக இலக்கியத்தில் புதியவிஷயங்கள் வருவது மூன்று தளங்களிலேதான். ஒன்று, அறிவியல்புனைகதைகள். அவற்றை சூடோ சயன்ஸ் – சூடோ லிட்டரேச்சர் என்று சொல்லிய காலம் இருந்தது. இன்றைக்கு அந்தக் காலகட்டம் கிடையாது. இன்றைக்கு அறிவியல்புனைகதைகளில் பலவகையான உச்சங்கள் நிகழ்ந்துவிட்டன.

இரண்டாவது டயஸ்போரா எழுத்து. ஐரோப்பாவுக்கு புலம்பெயர்ந்து வந்தவர்களின் எழுத்து. இதை வெறுமே சர்வைவலுக்கான போராட்டமாக காணும் பார்வை இன்று கிடையாது. இது இரண்டு பண்பாடுகளை ஒப்பிடுவதன் வழியாக இரண்டு பண்பாடுகளையும் புரிந்துகொண்டு மதிப்பிடுவதாக ஆகிறது. அதுதான் முக்கியமானவையாக ஆக்குகிறது

மூன்றாவது, மூன்றாமுலக நாடுகளின் எழுத்து. அறியப்படாத எழுத்துக்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அதில் இந்தியா இல்லை. இந்தியாவிலிருந்து தரமான எழுத்து மொழியாக்கம் செய்யப்படவில்லை. தரமான மொழியாக்கமும் கிடையாது. தரமான மொழியாக்கம் வரும் நாடுகளில் ஒரு பொதுத்தன்மை உண்டு. துருக்கி ஈரான் போன்ற நாடுகளிலிருந்து அரசாங்க உதவியுடன் பெரும்பணம் செலவழித்து நல்ல மொழிபெயர்ப்பாளர்களுடன் மொழியாக்கங்கள் கொண்டுவரப்படுகின்றன. இந்தியாவிலிருந்து அமெச்சூர் மொழியாக்கங்களும் கமர்ஷியல் ஃபிக்‌ஷன் மொழியாக்கங்களும்தான் வந்துகொண்டிருக்கின்றன

இந்தச்சூழலில் வெண்முரசு உலக இலக்கியத்திலேயே இல்லாத ஒரு விஷயமாக நடைபெற்றுள்ளது. பொதுவாக இங்கே தமிழில் ஏதாவது புதிசாக நடைபெற்றால் அதன் முன்வடிவம் ஐரோப்பாவில் இருக்கும். ஜே.ஜே.சிலகுறிப்புகள் முப்பதாண்டுகள் பழைய ஜான் அப்டைக்கின் வடிவத்தைத்தான் இங்கே புதிசாகக் கொண்டுவந்தது. அப்படி மேலைநாட்டிலிருந்து கொண்டுவந்தால் அது இங்கே மிகப்புதியதாக கருதப்படும். இங்கேயே அசலாக ஒரு புதியபாய்ச்சல் நடந்தால் நமக்கு அதைப்புரிந்துகொள்ள கருவிகள் கிடையாது.

வெண்முரசு ஒரு புதிய காவியத்தை தமிழில் கொண்டுவந்திருக்கிறது. விஷ்ணுபுரம் கொற்றவை எல்லாமே காவியமுயற்சிகள்தான். பின்நவீனத்துவம் சொல்லும் மெட்டா எபிக்குகள் இவை என்று சொல்லலாம். இங்கே உள்ள நவீன இலக்கியவாதிகளுக்குப் பெரிய வாசிப்பு கிடையாது. ஆகவே இவர்கள் மெட்டா எபிக்குக்கும் எப்பிக்குக்கும் உள்ள வேறுபாடு தெரியாதவர்கள். சிலப்பதிகாரம் வேறு கொற்றவை வேறு. சிலப்பதிகாரத்தை திரும்ப எழுதுவது கொற்றவை. திரும்ப எழுதுவது என்பது ஒரு பின்நவீனத்துவ இலக்கியமுறை. வரலாற்றையும் பண்பாட்டையும் திரும்பி எழுதுவது அது. ஏற்கனவே இருக்கும் வரலாறும் இலக்கியமுமே எழுதப்பட்ட பிரதிகள்தான் என்ற எண்ணத்திலிருந்தே இந்த திரும்பி எழுதும் முறை உருவாகிறது

வெண்முரசு ஒட்டுமொத்த பௌராணிகமரபையே திரும்ப எழுதும் ஒரு மிகப்பெரிய மெட்டா எபிக் முயற்சி.அப்படி ஒன்று ஐரோப்பாவில் செய்யப்பட்டதில்லை. ஓரளவுக்கு மார்கரட் அட்வுட் போன்றவர்களின் முயற்சி உண்டு, ஆனால் அதெல்லாமே எல்லைக்குட்பட்டவை. இன்று அங்கே இருக்கும் கடுமையான பிரசுரப்போட்டியில் எவரும் பிரம்மாண்டமான கனவுகளைக் காணமுடியாது. அப்படி கனவுகாணவும் எழுதவும் ஒரு சின்ன உலகம் தேவை. எவர் வாசிப்பார்கள் என்று கவலைப்படாமல் எழுதவேண்டும்

ஒரு மெட்டா எபிக் ஆக வெண்முரசை வாசிப்பவர்களால்தான் அதில் உள்ள விளையாட்டை புரிந்துகொள்ளமுடியும். அது பழைய மரபில் உள்ள ‘உண்மை’ இதுதான் என்று சொல்லவில்லை. அப்படி ஒரு உண்மை இல்லை, அது ஒரு புனைவு என்கிறது. அதை இன்னொருவகையிலே புனைகிறது. அது உண்மை இது இன்னொரு உண்மை என்று சொல்லவில்லை. மெட்டா எபிக் ஏன் முக்கியமென்றால் புனைவின் சாத்தியங்களைப் புரிந்துகொள்வதற்காகத்தான்.

ஆகவே வெண்முரசு ஒருநாளும் ஒரு மதநூல் இல்லை. மதத்திலுள்ள உண்மைகள் என்னென்ன என்று அறிவதற்காக அதைப் படிக்கக்கூடாது. அதற்கு மகபாரதத்தையே படிக்கவேண்டும். மதநூல்கள் சொல்லும் உண்மைகள் எப்படி உருவாகியிருக்கலாம் என்றும் அவை எப்படியெல்லாம் பொருள்கொள்ளப்படலாம் என்றும் சொல்வதுதான் வெண்முரசு. இந்த நாவலில் பொருள்கொள்ள பழகியவர்கள் மகாபாரதத்தையும் பொருள்கொள்ள ஆரம்பிப்பார்கள். மகாபாரதத்தை தெரிந்துகொள்ள மகாபாரதத்தையே படிக்கவேண்டும், மகாபாரதம் உட்பட நம்முடைய பழைய மர்பின் டைனமிக்ஸை தெரிந்துகொள்ளத்தான் வெண்முரசு தேவையாகிறது

அந்த பழைய மகாபாரதத்தின் மனநிலைகளை இந்நாவல் எப்படி மாற்றியிருக்கிறது என்பதைக்கொண்டே இதை அறியமுடியும். மூலமகாபாரதத்தில் எல்லா கதாபாத்திரங்களுக்கும் ஒரு எளிமையான பழங்குடித்தன்மையான மனநிலை உள்ளது. உதாரணமாக பீமனையும் திரௌபதியையும் எடுத்துக்கொள்ளலாம். பீமன் ஒரு மூர்க்கமான ஆளாகவே மகாபாரதத்தில் வருகிறான். எல்லா இடங்களிலும் முரட்டடிநியாயமே பேசுகிறான். திரௌபதி தான் அவமதிக்கப்பட்டதையும் காட்டில் அலைவதையும் சொல்லிச் சொல்லி அழுபவளாகவும் வருகிறாள்.

ஆனால் வெண்முரசிலே பீமன் அங்கதமும் பகடியும் கசப்புமாக உரையாடும் ஒருவனாக வருகிறான். ஒரு அவுட்சைடர். ஒரு காட்டுமனிதன். அவனுடைய விமர்சனங்கள் அரசு மீதும் நாகரீகம் மீதும் எப்போதும் எழுகின்றன. பீமன் அந்தக்கசப்பை கங்கையில் மூழ்கி நாகர்களிடமிருந்து பெற்றுக்கொள்கிறான். அதேபோல திரௌபதியின் கனவு அவள் சின்னக்குழந்தையாக இருக்கும்போதே வருகிறது. அவள் அந்தக்கனவிலிருந்து விடுபடுவதே இல்லை.அவள் எதற்கும் நிலைகுலையாத அரசியாக கொற்றவைபோல வருகிறாள். இதெல்லாம் மூலத்திலிருந்து நுட்பமாக மாற்றி எழுதப்படுகின்றன

இந்த மாற்றம் ஏன் நிகழ்கிறது? திரௌபதி அதற்குமேல் சரித்திரத்தில் நிகழ்ந்த பல்வேறு பேரரசிகளின் சாயல்கள் ஏற்றப்பட்டு இன்றைய ஆளுமையாக மாற்றப்பட்டிருக்கிறாள். பீமன் இன்றைய மனிதனின் குரலைத்தான் ஒலிக்கிறான். அவ்வாறு மொத்த மகாபாரதமும் இன்றைய கதையாக மாற்றப்பட்டிருக்கிறது. இப்படி மாற்றித்தான் இந்த மோதலும் பிரச்சினைகளும் எப்படி உருவாகின்றன என்பது விளக்கப்பட்டிருக்கிறது. இதுதான் மெட்டா எபிக்கின் இயல்பு என்று சொல்லலாம்.

இவ்வாறு இதை ஒரு மெட்டா எபிக் என்று சொல்லும்போது இன்னொரு கேள்வி எழுகிறது. இதை ஒரு கிராண்ட் நேரேஷன் என்று சொல்லலாமா? சொல்லலாம். ஆனால் முன்புள்ள கிரான்ட் நெரேஷன்களைப் போல இது எதையும் கட்டி நிறுத்தவில்லை. இதெல்லாம் எப்படி உருவாகிவந்திருக்கும் என்று ஆராய்ந்து சொல்கிறது. இப்படி நடந்திருக்குமோ என்று சொல்கிறது. இந்த வேறுபாடு முக்கியம். அத்துடன் இந்த நாவல்தொடர் ஒரு ஹிஸ்டாரிசிசத்தை உருவாக்குகிறது. அதை நியூஹிஸ்டாரிசிசம் என்று சொல்லலாம். அது போஸ்ட்மாடர்ன் பார்வையை கடந்து வந்த அடுத்தகட்ட பார்வை. வரலாறே ஒரு ஹிஸ்டாரிசிசம், அதற்கு எல்லா கதைகளும் ஒரு வகை ஹிஸ்டாரிசிசத்தையே உருவாக்குகின்றன. இந்தியமரபு என்ற பெரிய புனைவுக்குள் மகாபாரதம் என்ற புனைவு உள்ளது. அந்த புனைவுக்குள் இன்னொரு புனைவு இது. இது போஸ்ட்மாடன் எழுத்திலிருந்து இன்னொரு முன்னகர்வு

ஆனால் இங்கே இலக்கியச்சூழலில் வாசிப்பவர்களுக்கு இன்னமும் இத்தகைய ஒரு புதிய படைப்பைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லை. ஆகவே அவர்கள் இது ஒரு பழைய எழுத்து என நினைத்து வாசிக்காமலிருக்கிறார்கள். வாசித்தவர்களுக்கு இந்நாவலே அந்தப்புரிதலையெல்லாம் அளித்துவிடும். அவர்களுக்கு இதெல்லாம் தெரியும். மகாபாரதத்திற்கும் வெண்முரசுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன என்று கேட்டால் அவர்களால் சொல்லிவிட முடியும்.

வெண்முரசு மகாபாரதத்தை ஏன் திருப்பி எழுதவேண்டும். சுருக்கமாகச் சொன்னால் ஒரு உணவுப்பண்டத்தின் ரெசிப்பியைத் தெரிந்துகொள்வதுபோலத்தான். நமக்கு கிளாஸிக்குகளாக இலக்கியங்கள் கிடைக்கின்றன. அவற்றை அவை உருவாகிவந்த நீண்டபாதையாக பார்ப்பதுதான். அதற்கு ஆராய்ச்சியை விடச் சிறந்தவழி அவற்றை இன்று நடித்துப்பார்ப்பதுதான். ஆராய்ச்சியில் வரலாறும் தத்துவமும் தெரியலாம். உணர்ச்சிகளும் வாழ்க்கைநுட்பங்களும் தெரியாது. அதை இன்றைய வாழ்க்கையில் நடிக்கும்போது நாம் அவை உருவானவழியையே முழுதாக அமைத்துப்பார்க்கிறோம்.

வெண்முரசு மகாபாரதத்திற்கு இந்தியா சென்ற வழியை மீண்டும் உருவாக்கிக் காட்டுகிறது என்று எனக்கு எப்போதுமே தோன்றுவதுண்டு. மொத்த மகாபாரதப்போரையே அது நான்கு கோணங்களில் பார்க்கிறது. பாலைநிலத்துக்கும் புல்வெளிக்குமான போர். ஷத்ரியர்களுக்கும் பிற சாதிக்குமானபோர், புதிய ராஜ்ஜியங்களுக்கும் பழைய ராஜ்ஜியங்களுக்குமான போர். பழையவேதங்களுக்கும் வேதாந்தத்துக்குமான போர். நான்கும் உண்மையாக இருக்கலாம். இந்த நான்கு வழிகளின் வழியாக குருசேத்திரப்போர் நோக்கி நாவல் செல்கிறது.  அது உருவாக்கியது குருசேத்திரப்போர் மட்டுமல்ல. அது இந்தியாவை இன்றைக்கும் ஆட்டிப்படைக்கும் முரண்பாடுகளை உருவாக்கியிருக்கிறது. இன்றைய இந்தியாவின் அடித்தளத்தை புரிந்துகொள்ள அது முக்கியமானது

ஒரு உவமையாக நான் நினைத்துப்பார்ப்பது உண்டு. மிகப்பழைய காலத்தில் நடந்த ஒரு போரை இப்போது புரிந்துகொள்ள அந்தப்போரை இப்போது செயற்கையாக திரும்ப நடித்துப்பார்த்தால் எப்படி இருக்கும்?அந்த உணர்ச்சிகள் வரும். ஆனால் நமக்கே தெரிந்திருக்கும், இது நாம் திரும்பசெய்வது என்று. மெட்டா எபிக் என்றால் அதுதான். நாம் கூர்ந்து பார்த்தபடி அதைச் செய்வதனால் நமக்கு கூடுதல் புரிதல்கள் உருவாகின்றன

ஏன் மகாபாரதத்தை எழுதவேண்டும்? அது இன்றைக்கும் ஒரு லிவிங் டெக்ஸ்ட் என்பதுதான் முக்கியமான காரணம். அது இங்கே இன்றைக்கும் அரசியலையும் வாழ்க்கையையும் தீர்மானிக்கும் நூலாக இருக்கிறது. அதில் எல்லா புராணங்களும் உள்ளன. வரலாறும் தத்துவமும் உள்ளது. அதில் ஆர்க்கிடைப்புகள் உள்ளன. ஆகவே அதைப் புரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது. திரும்பச்செய்தாலன்றி முழுசாகப்புரிந்துகொள்ளமுடியாது

இலக்கியம் என்பதே வாழ்க்கையை திரும்பச் செய்து பார்ப்பதுதான். எல்லா எழுத்தும் அதைத்தான் செய்கிறது. அப்படியிருக்க ஒரு மொத்த கடந்தகாலத்தையே திரும்பச் செய்துபார்ப்பதென்பது மிகப்பெரிய கனவு. அந்தக்கனவு வெண்முரசிலே சாத்தியமாகியிருக்கிறது. திரும்பச் செய்யும்போது என்ன ஆகிறதென்றால் நாம் நடந்ததை அறிவதோடு நடந்ததை மாற்றியும்விடுகிறோம்.ராஜராஜசோழன் பற்றிய ஒரு வலிமையான கதை ராஜராஜனின் வரலாற்றை மாற்றிவிடுகிறது. நம்மையறியாமலேயே வெண்முரசு மகாபாரதத்தை மாற்றியமைக்கிறது. மகாபாரதம் பேசும் நம் பண்பாட்டையே மாற்றியமைக்கிறது

இந்தப்பிரம்மாண்டமான படைப்பைப் பற்றிப் பேச இங்கே உள்ள இலக்கியவிமர்சகர்கள் எவரும் தகுதியானவர்களாக நான் நினைக்கவில்லை. அவர்களெல்லாம் ஏற்கனவே புழங்கிக்கொண்டிருக்கும் அளவுகோல்களை வைத்திருப்பவர்கள். தங்களுக்கு புரிந்ததையும் தங்களுக்குத் தெரிந்ததையும்தான் அவர்கள் சொல்லமுடியும். ஆகவே அவர்களில் பெரும்பாலானவர்கள் படிக்காமல் கருத்துச்சொல்லாமல் இருப்பது நல்லதுதான்.புதிய அளவுகோல்களை உருவாக்கும் சக்தி கொண்ட விமர்சகர்கள் வரவேண்டும். அவர்கள் வரும்வரை ஒரு தலைமுறைக்காலம் வெண்முரசு காத்திருக்கலாம்

Thursday, January 2, 2020

புழுக்களின் பாடல்- சரவணக்குமார்



அன்புள்ள ஜெ,

வெண்முரசின் ஒட்டுமொத்தமும் சரளமான கதையோட்டமாகவே அமைந்துள்ளது. வெவ்வேறு கதாபாத்திரங்கள் வழியாக அந்தந்த சந்தர்ப்பங்களின் நாடகீயமான தருணங்கள் வழியாக செல்வது அதன் வடிவச்சிறப்பாக இருந்தது. அந்த கதாபாத்திரம் வழியாக மற்ற கதாபாத்திரங்களின் மனம், அந்தக் கதை நடக்கும் சூழல் ஆகியவை விரிவாகச் சொல்லப்பட்டன.

அந்த ஓட்டத்தில் அவ்வப்போது ஊடறுக்கும் துணைக்கதைகளும் கவிதைப்பகுதிகளும் இருந்தன. அந்த குறுக்குச்சரடுகள்தான் வெண்முரசை மேலும் சிக்கலான பிரதியாக ஆக்கின அவ்வாறு வந்த பல கவிதைப்பகுதிகளை என் நண்பர்கள் பலர் வாசிக்கவில்லை. அந்த வேகத்தில் அப்பகுதிகளை வாசிக்கும் மனநிலை அவர்களுக்கு அமையவில்லை. பின்னர் வாசிக்கலாம் என்று நினைத்து எடுத்துவைத்து வாசிக்காமல் விட்டதுமுண்டு.

நான் அந்தக்கவிதைப் பகுதிகளை வாசித்தேன். ஆனால் அந்த வாசிப்பின் முக்கியமான சிக்கலென்னவென்றால் அந்தக்கதைப்பகுதியுடன் இணைத்தே அந்தக்கவிதைப்பகுதிகளையும் வாசித்தேன். ஆகவே அந்தவகையிலேயே அவை எனக்கு அர்த்தம் அளித்தன அத்துடன் அந்தப் பகுதிகள் உரைநடைவடிவில் பத்திபத்தியாக இருந்தன. அந்த வடிவிலிருந்தாலே அவை ஒரே ஒழுக்காக ஆகிவிடுகின்றன.அவற்றை நாம் வார்த்தை வார்த்தையாக நிறுத்தி வாசிப்பதில்லை. அவை கவிதை என்பது நம் மனதில் உறைப்பதுமில்லை.

அப்படி நான் பல கவிதைகளை விட்டுவிட்டேன். அவற்றையெல்லாம் திரும்ப வாசிக்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன். வெண்முரசில் உள்ள நேரடியான கவிதைப்பகுதிகள் சிதறிக்கிடக்கின்றன. அவற்றை நான் வாசித்து மறந்துவிட்டேன் என்று நினைத்தேன். ஆனால் அவைதான் அடிக்கடி நினைவுக்கு வந்துகொண்டும் இருந்தன. அவற்றிலிருந்து ஏதேனும் ஒருவரி என்னை தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது.

 வெண்முரசில் புல்பற்றியும் வேர்கள் பற்றியும் வந்த கவிதைகள் உண்டு. அம்புகள் பற்றியும் பொன்பற்றியும் வந்தபகுதிகளையும் கவிதையாகவே எடுக்கலாம். அவற்றை வெண்முரசின் கதையோட்டத்திலிருந்து விலக்கி தனியான கவிதைகளாகவே வாசிக்கலாம். அவற்றை தேடிக்கண்டடைவது ஒரு நல்ல விஷயம். அவற்றை தேடுவது வழியாக வெண்முரசுக்குள் மீண்டும் செல்லமுடிகிறது. ஒரேசமயம் புதுக்கவிதையாகவும் அதேசமயம் பழையவைபோலவும் இருக்கும் வரிகள் அவை. வெண்முரசில் அவை ஏதோ சூதன் பாடுவதாக வருகின்றன. ஆனால் அவற்றின் அமைப்பும் குறியீட்டுத்தன்மையும் நவீனக்கவிதையாகவும் உள்ளன.


புழுக்களின் பாடல்


நீந்தும் நெளியும் வளையும் துடிக்கும்

பல்லாயிரம் கோடிப் புழுக்களே,

இப்புவியின் வலியனைத்தையும் அறிபவர்கள் நீங்கள்.

வலியறியும் அக்கணமே வாழ்வென்றானவர்கள்.

மிதித்து மிதித்துச் செல்லும் உயிர்க்குலங்களுக்குக் கீழே

நெளிந்து நெளிந்து வாழ்ந்து

இறந்து பிறந்து இறந்து

நீங்கள் அறிந்ததென்ன?

 

சொல்லாத நாக்கு. உணர்வறியா நரம்பு.

அறையாத சாட்டை. சுடாத தழலாட்டம்.

ஒழுகாத நீர்நெளிவு. முளைக்காத கொடித்தளிர்.

கவ்வாத வேர்நுனி. சுட்டாத சிறுவிரல்.

எழாத நாகபடம். கொல்லாத விஷம்.

புழுவாகி வந்ததுதான் என்ன?

 

நீந்தி நெளிந்து வளைந்து துடிக்கும்

பல்லாயிரம்கோடிப் புழுக்களே,

இப்புவியின் உயிரானவர்கள் நீங்கள்.

விழியின்மையில், செவியின்மையில்,

சிந்தையின்மையில்,

இன்மையில்

திளைத்துத் திளைத்து நீங்களறியும்

முடிவின்மையும் நெளிந்துகொண்டிருக்கிறது.

 

ஆழத்தில் காத்திருக்கிறீர்கள்.

குடல்மட்டுமேயான பெரும்பசியாக.

பறப்பவையும் நடப்பவையும் நீந்துபவையும் 

னைத்தும் வந்துவிழும் 

உதரத்தின் ஆழ்நெருப்பு.

எரியும் ஈரம். நிலைத்த பயணம்.

பருவடிவக் கிரணம்.

தன்னைத் தான் தழுவி நெளியும்

உங்களால் உண்ணப்படுகின்றன அனைத்தும்.

உங்களையே நீங்கள் உண்கிறீர்கள்.

வளைந்து சுழிக்கும் கோடுகளால்

பசியெனும் ஒற்றைச் சொல்லை

 எழுதி எழுதி அழிக்கிறீர்கள்.

 

வைஸ்வாநரனே,

உன் விராடவடிவுக்குமேல்

குமிழிகளாக வெடித்தழிகின்றன நகரங்கள்,

நாடுகள், ஜனபதங்கள்.

வந்து, நிகழ்ந்து, சென்று,

சொல்லாகின்றன மானுடக்கோடிகள்.

சொல் நெளிந்துகொண்டிருக்கிறது.

தன்னைத் தான் சுழித்து.

சுழி நீட்டி கோடாக்கி.

ஒன்று கோடியாகி கோடி ஒன்றாகி

எஞ்சுவது இருப்பதுவேயாகி.

ஈரத்தில் நெளிகிறது

சொற்புழுவெளியின் பெருங்கனல்.

 

வண்ணக்கடல் நாவலில் ஒரு சூதன் பாடும் வரிகள் இவை. இந்த வரிகளை நான் இன்று ஒரு பெரிய கொந்தளிப்புடன் வாசித்தேன். இந்த கவிதை தமிழில் புழுக்களைப்பற்றி எழுதப்பட்ட ஒரே கவிதை என நினைக்கிறேன். யானை டாக்டரில் புழுக்களைப் பற்றி ஒரு பகுதி வரும். அதன்பின் இந்தப்பகுதி மேலும் கவித்துவமானது

புழு என்ற படிமம் உருமாறிக்கொண்டே இருக்கிறது இக்கவிதையில். முதலில் அது வலியின் நெளிவாகவும், அனைவரும் மிதிக்கும் மண்ணின் ஆழத்திலுள்ள ரகசியமாகவும் உள்ளது. எழாத நாகபடம், கொல்லாத விஷம் என்று முடியும்போது பலமுறை புழு என்பதன் அர்த்தம் மாறிவிடுகிறது.

புழு பற்றிய எல்லாமே சொல்லி கடந்துசெல்லப்படுகின்றன. சுழித்துச் சுழித்து பசியென்ற சொல்லையே எழுதிக்கொண்டிருப்பவை. எழுதுகோலும் எழுத்துமாக ஆகிவிடுபவை. பசி என்ற வைஸ்வாநரனின் வடிவங்கள். தன்னைத்தானே தழுவிக்கொள்பவை.

கடைசிவரியில் புழு சொல்லாகிவிடுகிறது. ஆழத்தில் நெளியும் சொல்லாக. இந்தக்கவிதை வெண்முரசில் இருந்து தனியாக பிரிந்துவிட்டது இப்போது. ஆனால் சொல்பெருவெளியின் ஆழத்து நெளிவு என்னும்போது வெண்முரசாகவும் உள்ளது


எஸ்.சரவணக்குமார்.

Wednesday, December 18, 2019

களிற்றியானை நிரை-05 உதி்ப்பும் உழைப்பும்



அன்புள்ள ஜெ வணக்கம்.
“மேதமை என்பது தொண்ணூறு விழுக்காடு உழைப்பு, பத்துவிழுக்காடு உதிப்பு” என்று ஐன்ஸ்டீன் சொல்கிறார்.
ஒரு விழுக்காடாவது உதிப்பு இல்லை என்றால் தொண்ணூற்று ஒன்பது விழுக்காடு உழைத்தும் ஒரு விழுக்காட்டையும் உருவாக்க முடியாது.
ராஜராஜபெரும்தச்சனில் உதித்ததுதான் ராஜராஜசோழன் உழைப்பால் இன்று தஞ்சையில் வான்தொடுகின்றது. தஞ்சைபெருஉடையார் கோயில்.
உதிப்பது எப்படி?
விண்ணிருந்து சொட்டுகிறது, நற்சிப்பிகள் அந்த துளியை ஏந்தி முத்தாக்கிவிடுகின்றன. ஆழத்திலிருந்து ஊறுகிறது. நல்லவிதைகள் அதை அதை கனிரசமாக்கிவிடுகிறது.  
“கடினமான கணிதத்திற்கு எப்படி இவ்வளவு சீக்கிரம் உங்களால் விடை சொல்லமுடிகிறது?” என்று கேட்கும்போது அன்னை ஸ்ரீநமகிரி தாயார் கொண்டு வந்து தருவதாக  கணிதமேதை ராமானுஜம் சொல்கிறார்.   
ரேடியம் கண்டுபிடிக்க முயன்ற மேடம் கியூரி,தனது கண்டுபிடிப்பு முழுவதும் தோற்று நிற்கதியாகி நிற்கும்போது, ஒரு நாள் இரவு தூக்கத்திலிருந்து எழுந்து ஆய்வகம் சென்று ஒரு சூத்திரத்தை எழுதிவைத்துவிட்டு வந்து படுத்துவிடுகிறார். வழக்கம்போல காலையில் மீண்டும் ஆய்வகம் சென்றவர் தான் எழுதிய அந்த சூத்திரத்தை பார்த்து ஆச்சர்யமும் பரவசமும் அடைகிறார். ரேடியம் கண்டுபிடிக்கிறார்.அவருக்கு தூக்கத்தில் உதித்தது அந்த அற்புதம். அந்த உதிப்பும் அவரின் உழைப்பும் அருக்கு அறிவியல் உலகத்தில் சிம்மாசனம் அமைத்தது. நோபல்பரிசை சிரத்திற்கு அணிவித்தது. 
தூங்குபவர்களுக்கு எல்லாம் உதித்துவிடுமா?  நூறு விழுக்காடு உழைக்க உரம் கொண்டவருக்கு உதிக்கிறது.   
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர் –என்கிறார் திருவள்ளுவர்.
ஹஸ்திபதன் தான் கற்ற கலைக்காக தேய்ந்து வௌவாலாகவும் மாறுகின்றான். புதைந்து நாகமாகவம் ஆகின்றான். அத்தனை ஆழமான கற்றல் உடையவருக்கு, தான் கற்றகலைக்காக அத்தனை பெரிய உழைப்பை போடுவற்கு தயாராக இருப்பருக்கு உதிப்பு வெளியில் இருந்தோ உள்ளிருந்தோ வருகிறது. சேக்கிழாருக்கு நடராஜர் கோயில் கருவறையில் இருந்துவருகிறது. மேடம்கியூரிக்கு கனவிலிருந்து வருகிறது. ஹஸ்திபதனுக்கு வானில் இருந்து அமராவதி நிழலாக விழுகிறது.
இளையராஜா “எனது இசைகளை எனது அறிவால் நோட்ஸ்களாக உருவாக்கி தந்தால் நன்றாகத்தான் இருக்கும், அதற்கு ஒரு எல்லை இருக்கம். அதற்கும்மேலே அதில் ஜீவன் இருப்பதற்கு காரணம், அது மேலே நாதசாகரத்தில் இருந்து வருகிறது. எனக்கு காட்டப்படுகிறது. அதை எடுத்து அப்படியே வழங்குகிறேன்” என்கிறார்.   
//கற்றல் நிகழும் கணங்களில் தான் மானுடன் என்னும் நிலையிலிருந்து ஒரு கணம் எழுந்து பிறிதொருவனாக ஆகி மீள்வதை கற்போன் அறிகிறான்//-களிற்றியானை நிரை-05.
வழக்கமாக முடிவெட்டிக்கொள்ளும் கடையில் கூட்டம் இல்லை, நல்லதாகிவிட்டது.  உள்ளே நுழைந்தால் வழக்கமாக முடிவெட்டுபவர் இல்லை. எழுபது வயது பெரியவர் பெஞ்சில் உட்கார்ந்து இருந்தவர் எழுந்து “உங்கள் ஆளு இன்னைக்கு இல்லை, நாளைக்கு வருகிங்களா தம்பி? இல்ல, என்னிடம் வெட்டிக்கிறீங்களா?” என்றார்.
திரும்பிவிடத்தான் நினைத்தேன். நாளைக்கு கல்லூரி, இன்றுவேறு கூட்டம் இல்லை. “சரி” என்று உட்கார்ந்துவிட்டேன்.
பெரியவர்களால் பேசாமல் இருக்கமுடிவதில்லை. பேச்சுதான் அவர்களை இளைய தலைமுறையுடன் இணைக்கிறது. இளமையாகவும் நினைக்க வைக்கிறது. அதற்கும்மேலாக அவர்கள் இளைய தலைமுறைக்கு ஒரு அனுபவத்தை கொடையாக கொடுக்க நினைக்கிறார்கள். அதுதான் அற்புதம். அதுதான் இளைய தலைமுறைக்கு புரியவில்லை. 
யாரு? பேரு? அப்பா? சொந்தஊர்? என்று சொல்சொல்லாய் என்னை அவருக்குள் சேர்த்துக்கொண்டே சென்றார்.
கைவிரல்கள் தலையில் விளையாடின. முடிவெட்டுவது தொழில் இல்லை கலையும்கூட என்று காட்டினார். இப்பொழுது தொழில் இருக்கிறது கலையில்லை என்றார்.  
அவருடன் பழகும்போதுதான் தெரிந்தது. நாதஸ்வர வித்வான் மற்றும் குஸ்தி பயில்வான். சந்தியாராகம் தாத்தா திரு.சொக்கலிங்க பாகவதர்போல இருப்பார். இவரா குஸ்திபயில்வான் என்று எண்ணிக்கொண்டேன்.  அவருடைய இணை நண்பர்களையும், அவரின் மாணவர்களையும் சொன்னார். நிஜம்.
ஆரம்ப காலகட்டத்தில் ஒரு திருவிழா கூட்டத்தில் குஸ்திவிளையாட்டு, ஒவ்வொரு இணைகளையும் தூக்கிப்போட்டு பந்தாடி இருக்கிறார். இணைகள் எல்லாம் முடிந்து இறுதியில் தனியாக நின்றவர் ஆர்வமிகுதியில் வலது இடது தொடைகளை தட்டி சலாவரிசை எடுத்து உட்கார்ந்து தரையை வலது கையால் அடித்து எழுந்து நின்று இருக்கிறார்.
கூட்டத்தில் குஸ்திப்பார்த்துக்கொண்டு இருந்த ஒருவர் சட்டையை கழட்டி கூட்டத்தில் எறிந்துவிட்டு, வேட்டியை மடக்கி லங்கோடாக கட்டிக்கொண்டு களத்தில் குதித்து சலாவரிசை எடுத்து குருவணக்கம் செலுத்தி நான் தயார் என்று நிற்கிறார். வாட்டசாட்டமான உருவம், கரளைகட்டை சுற்றிய உடம்பு.  
இவர் நினைத்துப்பார்க்கவே இல்லை இப்படி ஒரு எதிரி எதிரில் வந்து நிற்பான் என்று.
அப்பதான் அவருக்கு புரிந்து இருக்கிறது. தான் உற்சாகத்தில் தரையில் அடித்து எழுந்தது. ஒரு அறைகூவல் என்று.  அறைகூவல் விட்டப்பின்பு ஏற்றுதானே ஆகவேண்டும்.  அவரை இவரும், இவரை அவரும் புரட்டி எடுத்திருக்கிறார்கள். அவரிடமிருந்து இவரும் இவரிடமிருந்து அவரும் கற்று இருக்கிறார்கள். அன்று அவர் இவரை கட்டிப்பிடித்து பாராட்டி இருக்கிறார்.
மனிதர்கள் சும்மா இருக்க நினைத்தாலும் அவர்கள் கற்ற கல்வி அவர்களை சும்மா இருக்கவிடுவதில்லை. நாடோடி விட்டுவிடத்தான் சொல்கிறார். நாடோடி சொல் புலவரை தட்டி எழுப்பி அவைகளத்தில் நிறுத்திவிடுகிறது, புலவர் பெருங்கந்தரை எழுந்து களமாட வைத்துவிடுகிறது. மனுசன் புரட்டி புரட்டி எடுக்கிறார். பனி என்ற ஒரு சொல்லிருந்து காலம் புடவி பிர்மம் வரை சென்று விவர்த்தவாதம் பரிணாமவாதம் வரை சென்று ஆடி முடிக்கிறார். பெரும்கந்தர் பெயர் சிறப்பு.  அன்புள்ள ஜெ மயங்கவைத்து தெளியவைத்து அடித்ததுபோல் இருந்தது.
அப்படியென்றால் அரிசியும் சோறும் வேறுவேறு பொருட்கள்” என்று அழிசி சொன்னான் என்பதுதான் அற்புதம்.
இந்த உலக வாழ்க்கையின் சிறப்பே அவர் அவர் கையளவுக்கே அள்ளி ஆனந்தப்படும் நிலையில் இருப்பதுதான்.
அன்பும் நன்றியும்
ராமராஜன் மாணிக்கவேல்.  

06. லட்சிய பயணி. பயன்பயணி



ஆசை காமம் வஞ்சம் மனிதனை எல்லை கடக்க, நாடு கடக்க வைக்கிறது.  அதில் இருக்கும் சுக உணர்வு மனிதனை அந்த நிலைக்கு தள்ளுகிறது. அந்த உணர்வுகளை ஒழுங்குப்படுத்தி நெறிபடுத்தி நியதியில் நிற்கவைக்கும் அறிவு, ஒரு அங்குசம்போல் மனிதனுக்கு தேவைப்படுகிறது. அந்த   அங்குசத்தை செய்பவர்கள் மாமனிதர்கள்,  ஆனால் அறிவு ஆயுதம் கொல்லும் என்பதை அறிந்தும் அதனை கையகப்படுத்தியவர்கள் யானைமுகம் கொண்ட கடவுளர்கள்.

நாடுபிடிக்க சென்றவர்கள் அனைவரும் ஆசை காமம் வஞ்சத்தை சூடியவர்கள். கூட்டாக சென்று கூட்டாக செயல்பட்டவர்கள். ஒரு விதத்தில் கொள்ளையர்கள்தான்.

அறிவுபிடிக்க சென்றவர்கள் கூட்டாக சென்றாலும் இறுதியில் தனியனாகவே அலைந்தவர்கள்தான். தனியாக அலைந்து, தனியாக பெற்றாலும் அறிவுப்போல உலகம் முழுமைக்கும் பயன்படும் ஒரு விலைமதிப்பில்லா குன்றா தீரா பொருள் உலகில் இல்லை. தீபம்போல எத்தனை விளக்கை ஏற்றினாலும் அறிவு தீபம் குறைவதி்ல்லை.

அறிவு அழிவதில்லை என்பதால்,அதனை தேடும்  அழியும் உடல்கொண்ட மனிதனை அது அழிக்கவும் தயங்குவதில்லை.

குருதேவர் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணபரமஹம்சர்   “கயிறு தட்டுப்பட்டால்போதும், அதனை பிடித்துக்கொண்டே போனால் கடலின் ஆழத்தில் உள்ள பொருளை அடைந்துவிடலாம், கயிறுதான் பக்தி” என்பார்.

“அறிவின் நுனி தெரிந்துவிட்டால் முழுமை வெளியாகும் வரை அமைதிகொள்ளவும் இயலாது”- என்கிறது களிற்றியானை நிரை-06.

ஞானத்தைதேடி இந்தியாவிற்கு ஏழாம்நூற்றாண்டில்  வந்த சீனப்பயணி யுவான்சுவாங், கோபி பாலைவனத்தில் செத்துவிழுவேன் என்ற நிலை ஏற்படும்போது தான் வந்த குதிரையில் தன்னை வைத்து கட்டி நினைவற்றுப்போகின்றார். இரண்டுநாள் கழித்து குதிரை நின்ற இடம் ஒரு பாலைவனச்சோலை. அறிவைத்தேடி வந்தவர் வாழ்வில் நடந்த சிறுசம்பவம் இது. தடைகள், கொள்ளையர்கள், இயற்கை சீற்றம், நம்பிக்கை கொள்ளாத புதியமனிதர்கள். எதிரிகள் என்று பதினேழு ஆண்டுகள் பயணித்தவர் வாழ்வில் இது ஒரு சிறுசம்பவம்தான், ஆனால் இதைவிட பெரிய சம்பவம் எது இருக்கமுடியும்.

சௌதியில் பல கம்பெனி கேம்புகள் இருக்கும் காண்ட்ராக்டர் கேம் பார்க்கில் எனது கேம்ப் உள்ளது. ஒன்றுக்கு ஒன்று சதுரகிலோமீட்டர் உள்ள கேம்பார்க். சுற்றி பாலைவனம். கேம்ப் ஒரு பாலைவன  சோலை. ஒரு நாள் மாலை சிறுநடைபயணத்தின்முடிவில் கேம்பை அடைய நூறுமீட்டர் தொலைவில் உள்ளேன். மழைதுளி விழுகிறது, காற்று வருகிறது, கேம்பிற்கு ஓடிவிடலாம் என்று நினைக்கிறேன். பாலைவன மணல் வந்து அறைகிறது. கேம்ப் தெரியவில்லை.  பறந்துவிடுவேன் என்று நினைக்கிறேன். திறந்து இருந்த பக்கத்து கேம்பில் நண்பர் ருமில் நுழைந்து கண்ணாடிவழியாக பார்க்கிறேன். வெளியில் உலகம் என்று ஒன்று இல்லை.  விர்..விர். படீர்..படீர் மட்டும்தான். போர்ட்டபில் தகர கூரை பிய்ந்து போய்விழும் டங்.டிங் ஓசை.  ஒன்றரை மணிநேரம் கழித்துதான் உலகம் தெரிந்தது. இயற்கையின் முன் மனிதன் ஒரு மண்துகள்கூட இல்லை.  இது சிறுதுளியின் சிறுதுளி சம்பவம். யுவன்சுவாங்க் கடந்தது பெருங்கடல் பாலைப்பயணம். அதை நடத்தியது அறிவுத்தேடல்.  அதனால்தான் நாடே கூடி கொண்டாடிக்கொடுத்த  அமைச்சர்பதவியையும் துறந்து கற்கவும் கற்பிக்கும் தன்னை  ஆற்றுப்படுத்தினார்.

தன்னை அழிக்கும் அறிவையும் மானுடர் விரும்புவார்களா?” என்றான் அழிசி. “அறிவில் பெரும்பகுதி மானுடனை அழிப்பதே. அதை வேண்டி விரும்பி இல்லத்தில் கொண்டு வந்து சேர்க்கும் மானுடர்களே இப்புவியில் மிகுதி” என்று ஆதன் சொன்னான். “எனில் ஏன் அறிவை நாடுகிறான் மானுடன்?” என்று அழிசி கேட்டான். “அறிவில்லை என்றால் அவன் மானுடனாக உணரமாட்டான் என்பதனால்” என்று ஆதன் சொன்னான். அழிசி அவன் இளம்விழிகளில் திரண்ட துயருடன் நோக்கினான்.

சாவுக்கும் துணிந்து தன்னை ஒப்புக்கொடுக்கும் ஒருவனுக்குதான் அறிவுவாகனமாகிறது, அல்லாதவரை இல்லாதவராக விட்டுவேடிக்கைப்பார்க்கிறது.

இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்-என்கிறார் வள்ளுவர்.

யுவான்சுவாங் போன்ற ஆதனின் தொலைவை அழிசி போன்றவன் கண்களால் எப்படி காணமுடியும்?

நெடுந்தொலைவில் இருப்பது என்பது இல்லாமல் இருப்பதுதான். அதை அடைய லட்சியம் வேண்டும். அந்த லட்சியமே ஒரு பயன்தான். அதற்குமேல் பயன் என்பது அறிந்த அறிவுமட்டும்தான். அது பொருள் அல்ல கண்களுக்கு காட்ட, நெஞ்சம் மட்டுமே அறியும். பயனை கண்களால் காட்டவிரும்புவர்களுக்கு லட்சியம் இருப்பதில்லை ஆசை மட்டுமே இருக்கிறது.

ஆதன் லட்சிய பயணி, அவன் நெஞ்சால் நடக்கிறான். அழிசி பயன்பயணி. இவன் கண்களால் நடக்கிறான்.



அன்பும் நன்றியும்

ராமராஜன் மாணிக்கவேல்

களிற்றியானை நிரை-03 அமைதல் அலைதல் தொலைதல்

அன்புள்ள ஜெ வணக்கம்.

பாம்பன் குமரகுருதாசசுவாமிகள் பாம்பனில் இருந்து கிளம்பி தொலைவுக்கு செல்கிறார். அவர் சென்ற தொலைவு, தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத்தெய்வமணி  ஆகிய முருகபெருமான் வள்ளலாரைப்பாட வைத்த இன்றைய தள்ளரிய சென்னைக்குதான். இன்றைக்கு அது தொலைவே இல்லை.  அந்த தொலைவே அவருக்கு போதிய தொலைவாக இருந்தது  
சுவாமிகள் ஊரைவிட்டு நீங்குவதற்கு நீருக்குள் தோணியில் ஏறி உட்கார்ந்து இருக்கிறார். சுவாமிகளி்ன் துணைவியார் காளிமுத்தம்மாள் கையில் கடைசி மகனை பிடித்துக்கொண்டு சாமிகளை தடுத்துவிட பதைபதை்து ஓடி தவித்து வருகின்றார்.
பதைத்துவரும் மனைவியையும், குழந்தையையும் பார்க்கும் சாமிகள் தோணியில், மனைவியும் குழந்தையும் கரையில், கரைகு்க்கும் நீருக்கும் இடையி்ல் ஒரு ஊசல் ஆட்டம்.  சாமி தோணியில் இருந்து இறங்கிச்சென்று “இனி என்னை தேடிவரமாட்டேன் என்று சத்தியம் செய்” என்று கைநீட்டுகின்றார்.
அன்னை சத்தியம் செய்கின்றார். சாமிகள் தோணியில் ஏறி தொலைவுக்கு சென்றுவிட்டார்.  அதன் பின் அன்னையும் தேடிப் போகவில்லை. சாமியும் திரும்பி வரவில்லை. பாறை உடைந்ததுபோல் அப்படி ஒரு விடுபடல். 

கிருபானந்தவாரியார் சுவாமிகள் நகைச்சுவையாக துறவுப்பற்றி சொல்வார். துறவறம் போகிறேன் என்று திண்ணைவிட்டு இறங்கிய கணவன் தெருவை தொட்டதும் திரும்பி மனைவியை அழைத்து “திண்ணையில் இருக்கும் சுண்ணாம்பு டப்பாவை உள்ளே எடுத்துவை” என்பான். 
அப்பாவின் இளமைகாலத்திலேயே தொலைவு தொலைவு என்று ஊரைவிட்டு தொலைந்துபோகும் ஒருவரை இப்போதும் ஏப்பவாவது ஊரில் பார்ப்பேன். அவருடைய மனைவி குழந்தையுடன் அவரை விட்டு தொலைவுக்கு சென்றதுதான் மிச்சம். அவரால் தொலைவுக்கு செல்லமுடியவில்லை.
தொலைவு என்பது சாவுதான். சிலரால் மட்டுமே வாழ்வதற்காக சாகமுடிகிறது.
சதுரமோ செவ்வகமோ நீளம் அகலத்தோடு உயரம் இருந்தால்தான் அது வடிவமும் உருவமும் கொள்கிறது. வாழ்க்க்கையும் தொலைதல் இருத்தல் இடையில் ஊசாலட்டமும் இருக்கும்போதுதான் வாழ்க்கை வடிவமும் உருவமும் கொள்கிறது. ஆதன் ஊர் எல்லையையே தாண்டாத முதுசாத்தனிடமும் ஆசி வாங்குகின்றான். ஊரிலேயே இருக்காத ஊரையும் தாண்டாத மிளையனிடமும் ஆசி வாங்குகின்றான்.
முதுசாத்தன் சொல்லில் செயலில் உறவில் அமுதம் என்றால், மிளையன் சொல்லில் செயலில் உறவில் நஞ்சு. அமுதும் நஞ்சும் அருகருகே இருக்கிறது. இரண்டையும் அணையாமல் வாழ்தல் என்பது ஏது?   ஊஞ்சல் கிழக்கே செல்வது மேற்கே செல்வதற்கான சக்தியை பெறுவதற்கு. மேற்கே செல்வது கிழக்கே வருவதற்கான சக்தியை பெறுவதற்கு. ஆதன் அமையும் முதுசாத்தனிடமும், அலையும் மிளையனிடமும் செல்வது தொலைதலின் சக்தியை பெறுவதற்கு.
எனக்கு தெரிந்த பெரியவர் தனது தொன்னூறு வயது வரை வீடு காடு என்றே வாழ்ந்தார். அவருக்கு பக்கத்தில் ஊர் என்று ஒன்று இருக்கிறது என்று தெரியுமா? என்று நினைத்துக்கொள்வேன். மகன்களாலும், மகள்களாலும், பேரப்பிள்ளைகளாலும் நிறைந்த குடும்பம். அவரை புதைத்து தலைமாட்டில் வைத்த ஆலம்போத்து இன்று பெரிய ஆலமரமாகி மண்ணை ஆயிரம் கரங்களால் அனைத்து நிற்கிறது. இவர் ஒரு முதுசாத்தன். மிளைஞன் ஆகாயதாமரைபோல, இருப்பார்கள் ஆனால் இருந்த இடத்திலே இருக்கமாட்டார்கள்.    ஒரு ஊர் என்றால் இப்படிதான் இருக்கிறது. இந்த இரண்டும் இல்லாமல் சராசரியான ஊசலாட்டம் கொண்ட மனிதர்களும் இருக்கிறார்கள். அப்பொழுதுதான் ஊர் என்பது ஒரு வடிவமும் உருவமும் கொண்டு திகழ்கிறது.  இந்த மாதரியான ஊர் வாழ்க்கை சூழ்நிலையில் இருந்துதான் ஒரு உயிர் தனக்கான தொலைவுக்கு செல்லவேண்டும்.
நித்தியசைதன்ய யதி என்னும் ஆதன்கள் அப்படிதான் வந்துக்கொண்டு  இருக்கிறார்கள். வாழையடி வாழையாக வந்த திருக்கூட்ட மரபு.   
களிற்றியானை நிரை-03 அமைதல் அலைதல் தாண்டி தொலைதல் என்கிறது.

அன்பும் நன்றியும்
ராமராஜன் மாணிக்கவேல்.