Wednesday, December 18, 2019

களிற்றியானை நிரை-05 உதி்ப்பும் உழைப்பும்



அன்புள்ள ஜெ வணக்கம்.
“மேதமை என்பது தொண்ணூறு விழுக்காடு உழைப்பு, பத்துவிழுக்காடு உதிப்பு” என்று ஐன்ஸ்டீன் சொல்கிறார்.
ஒரு விழுக்காடாவது உதிப்பு இல்லை என்றால் தொண்ணூற்று ஒன்பது விழுக்காடு உழைத்தும் ஒரு விழுக்காட்டையும் உருவாக்க முடியாது.
ராஜராஜபெரும்தச்சனில் உதித்ததுதான் ராஜராஜசோழன் உழைப்பால் இன்று தஞ்சையில் வான்தொடுகின்றது. தஞ்சைபெருஉடையார் கோயில்.
உதிப்பது எப்படி?
விண்ணிருந்து சொட்டுகிறது, நற்சிப்பிகள் அந்த துளியை ஏந்தி முத்தாக்கிவிடுகின்றன. ஆழத்திலிருந்து ஊறுகிறது. நல்லவிதைகள் அதை அதை கனிரசமாக்கிவிடுகிறது.  
“கடினமான கணிதத்திற்கு எப்படி இவ்வளவு சீக்கிரம் உங்களால் விடை சொல்லமுடிகிறது?” என்று கேட்கும்போது அன்னை ஸ்ரீநமகிரி தாயார் கொண்டு வந்து தருவதாக  கணிதமேதை ராமானுஜம் சொல்கிறார்.   
ரேடியம் கண்டுபிடிக்க முயன்ற மேடம் கியூரி,தனது கண்டுபிடிப்பு முழுவதும் தோற்று நிற்கதியாகி நிற்கும்போது, ஒரு நாள் இரவு தூக்கத்திலிருந்து எழுந்து ஆய்வகம் சென்று ஒரு சூத்திரத்தை எழுதிவைத்துவிட்டு வந்து படுத்துவிடுகிறார். வழக்கம்போல காலையில் மீண்டும் ஆய்வகம் சென்றவர் தான் எழுதிய அந்த சூத்திரத்தை பார்த்து ஆச்சர்யமும் பரவசமும் அடைகிறார். ரேடியம் கண்டுபிடிக்கிறார்.அவருக்கு தூக்கத்தில் உதித்தது அந்த அற்புதம். அந்த உதிப்பும் அவரின் உழைப்பும் அருக்கு அறிவியல் உலகத்தில் சிம்மாசனம் அமைத்தது. நோபல்பரிசை சிரத்திற்கு அணிவித்தது. 
தூங்குபவர்களுக்கு எல்லாம் உதித்துவிடுமா?  நூறு விழுக்காடு உழைக்க உரம் கொண்டவருக்கு உதிக்கிறது.   
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர் –என்கிறார் திருவள்ளுவர்.
ஹஸ்திபதன் தான் கற்ற கலைக்காக தேய்ந்து வௌவாலாகவும் மாறுகின்றான். புதைந்து நாகமாகவம் ஆகின்றான். அத்தனை ஆழமான கற்றல் உடையவருக்கு, தான் கற்றகலைக்காக அத்தனை பெரிய உழைப்பை போடுவற்கு தயாராக இருப்பருக்கு உதிப்பு வெளியில் இருந்தோ உள்ளிருந்தோ வருகிறது. சேக்கிழாருக்கு நடராஜர் கோயில் கருவறையில் இருந்துவருகிறது. மேடம்கியூரிக்கு கனவிலிருந்து வருகிறது. ஹஸ்திபதனுக்கு வானில் இருந்து அமராவதி நிழலாக விழுகிறது.
இளையராஜா “எனது இசைகளை எனது அறிவால் நோட்ஸ்களாக உருவாக்கி தந்தால் நன்றாகத்தான் இருக்கும், அதற்கு ஒரு எல்லை இருக்கம். அதற்கும்மேலே அதில் ஜீவன் இருப்பதற்கு காரணம், அது மேலே நாதசாகரத்தில் இருந்து வருகிறது. எனக்கு காட்டப்படுகிறது. அதை எடுத்து அப்படியே வழங்குகிறேன்” என்கிறார்.   
//கற்றல் நிகழும் கணங்களில் தான் மானுடன் என்னும் நிலையிலிருந்து ஒரு கணம் எழுந்து பிறிதொருவனாக ஆகி மீள்வதை கற்போன் அறிகிறான்//-களிற்றியானை நிரை-05.
வழக்கமாக முடிவெட்டிக்கொள்ளும் கடையில் கூட்டம் இல்லை, நல்லதாகிவிட்டது.  உள்ளே நுழைந்தால் வழக்கமாக முடிவெட்டுபவர் இல்லை. எழுபது வயது பெரியவர் பெஞ்சில் உட்கார்ந்து இருந்தவர் எழுந்து “உங்கள் ஆளு இன்னைக்கு இல்லை, நாளைக்கு வருகிங்களா தம்பி? இல்ல, என்னிடம் வெட்டிக்கிறீங்களா?” என்றார்.
திரும்பிவிடத்தான் நினைத்தேன். நாளைக்கு கல்லூரி, இன்றுவேறு கூட்டம் இல்லை. “சரி” என்று உட்கார்ந்துவிட்டேன்.
பெரியவர்களால் பேசாமல் இருக்கமுடிவதில்லை. பேச்சுதான் அவர்களை இளைய தலைமுறையுடன் இணைக்கிறது. இளமையாகவும் நினைக்க வைக்கிறது. அதற்கும்மேலாக அவர்கள் இளைய தலைமுறைக்கு ஒரு அனுபவத்தை கொடையாக கொடுக்க நினைக்கிறார்கள். அதுதான் அற்புதம். அதுதான் இளைய தலைமுறைக்கு புரியவில்லை. 
யாரு? பேரு? அப்பா? சொந்தஊர்? என்று சொல்சொல்லாய் என்னை அவருக்குள் சேர்த்துக்கொண்டே சென்றார்.
கைவிரல்கள் தலையில் விளையாடின. முடிவெட்டுவது தொழில் இல்லை கலையும்கூட என்று காட்டினார். இப்பொழுது தொழில் இருக்கிறது கலையில்லை என்றார்.  
அவருடன் பழகும்போதுதான் தெரிந்தது. நாதஸ்வர வித்வான் மற்றும் குஸ்தி பயில்வான். சந்தியாராகம் தாத்தா திரு.சொக்கலிங்க பாகவதர்போல இருப்பார். இவரா குஸ்திபயில்வான் என்று எண்ணிக்கொண்டேன்.  அவருடைய இணை நண்பர்களையும், அவரின் மாணவர்களையும் சொன்னார். நிஜம்.
ஆரம்ப காலகட்டத்தில் ஒரு திருவிழா கூட்டத்தில் குஸ்திவிளையாட்டு, ஒவ்வொரு இணைகளையும் தூக்கிப்போட்டு பந்தாடி இருக்கிறார். இணைகள் எல்லாம் முடிந்து இறுதியில் தனியாக நின்றவர் ஆர்வமிகுதியில் வலது இடது தொடைகளை தட்டி சலாவரிசை எடுத்து உட்கார்ந்து தரையை வலது கையால் அடித்து எழுந்து நின்று இருக்கிறார்.
கூட்டத்தில் குஸ்திப்பார்த்துக்கொண்டு இருந்த ஒருவர் சட்டையை கழட்டி கூட்டத்தில் எறிந்துவிட்டு, வேட்டியை மடக்கி லங்கோடாக கட்டிக்கொண்டு களத்தில் குதித்து சலாவரிசை எடுத்து குருவணக்கம் செலுத்தி நான் தயார் என்று நிற்கிறார். வாட்டசாட்டமான உருவம், கரளைகட்டை சுற்றிய உடம்பு.  
இவர் நினைத்துப்பார்க்கவே இல்லை இப்படி ஒரு எதிரி எதிரில் வந்து நிற்பான் என்று.
அப்பதான் அவருக்கு புரிந்து இருக்கிறது. தான் உற்சாகத்தில் தரையில் அடித்து எழுந்தது. ஒரு அறைகூவல் என்று.  அறைகூவல் விட்டப்பின்பு ஏற்றுதானே ஆகவேண்டும்.  அவரை இவரும், இவரை அவரும் புரட்டி எடுத்திருக்கிறார்கள். அவரிடமிருந்து இவரும் இவரிடமிருந்து அவரும் கற்று இருக்கிறார்கள். அன்று அவர் இவரை கட்டிப்பிடித்து பாராட்டி இருக்கிறார்.
மனிதர்கள் சும்மா இருக்க நினைத்தாலும் அவர்கள் கற்ற கல்வி அவர்களை சும்மா இருக்கவிடுவதில்லை. நாடோடி விட்டுவிடத்தான் சொல்கிறார். நாடோடி சொல் புலவரை தட்டி எழுப்பி அவைகளத்தில் நிறுத்திவிடுகிறது, புலவர் பெருங்கந்தரை எழுந்து களமாட வைத்துவிடுகிறது. மனுசன் புரட்டி புரட்டி எடுக்கிறார். பனி என்ற ஒரு சொல்லிருந்து காலம் புடவி பிர்மம் வரை சென்று விவர்த்தவாதம் பரிணாமவாதம் வரை சென்று ஆடி முடிக்கிறார். பெரும்கந்தர் பெயர் சிறப்பு.  அன்புள்ள ஜெ மயங்கவைத்து தெளியவைத்து அடித்ததுபோல் இருந்தது.
அப்படியென்றால் அரிசியும் சோறும் வேறுவேறு பொருட்கள்” என்று அழிசி சொன்னான் என்பதுதான் அற்புதம்.
இந்த உலக வாழ்க்கையின் சிறப்பே அவர் அவர் கையளவுக்கே அள்ளி ஆனந்தப்படும் நிலையில் இருப்பதுதான்.
அன்பும் நன்றியும்
ராமராஜன் மாணிக்கவேல்.  

06. லட்சிய பயணி. பயன்பயணி



ஆசை காமம் வஞ்சம் மனிதனை எல்லை கடக்க, நாடு கடக்க வைக்கிறது.  அதில் இருக்கும் சுக உணர்வு மனிதனை அந்த நிலைக்கு தள்ளுகிறது. அந்த உணர்வுகளை ஒழுங்குப்படுத்தி நெறிபடுத்தி நியதியில் நிற்கவைக்கும் அறிவு, ஒரு அங்குசம்போல் மனிதனுக்கு தேவைப்படுகிறது. அந்த   அங்குசத்தை செய்பவர்கள் மாமனிதர்கள்,  ஆனால் அறிவு ஆயுதம் கொல்லும் என்பதை அறிந்தும் அதனை கையகப்படுத்தியவர்கள் யானைமுகம் கொண்ட கடவுளர்கள்.

நாடுபிடிக்க சென்றவர்கள் அனைவரும் ஆசை காமம் வஞ்சத்தை சூடியவர்கள். கூட்டாக சென்று கூட்டாக செயல்பட்டவர்கள். ஒரு விதத்தில் கொள்ளையர்கள்தான்.

அறிவுபிடிக்க சென்றவர்கள் கூட்டாக சென்றாலும் இறுதியில் தனியனாகவே அலைந்தவர்கள்தான். தனியாக அலைந்து, தனியாக பெற்றாலும் அறிவுப்போல உலகம் முழுமைக்கும் பயன்படும் ஒரு விலைமதிப்பில்லா குன்றா தீரா பொருள் உலகில் இல்லை. தீபம்போல எத்தனை விளக்கை ஏற்றினாலும் அறிவு தீபம் குறைவதி்ல்லை.

அறிவு அழிவதில்லை என்பதால்,அதனை தேடும்  அழியும் உடல்கொண்ட மனிதனை அது அழிக்கவும் தயங்குவதில்லை.

குருதேவர் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணபரமஹம்சர்   “கயிறு தட்டுப்பட்டால்போதும், அதனை பிடித்துக்கொண்டே போனால் கடலின் ஆழத்தில் உள்ள பொருளை அடைந்துவிடலாம், கயிறுதான் பக்தி” என்பார்.

“அறிவின் நுனி தெரிந்துவிட்டால் முழுமை வெளியாகும் வரை அமைதிகொள்ளவும் இயலாது”- என்கிறது களிற்றியானை நிரை-06.

ஞானத்தைதேடி இந்தியாவிற்கு ஏழாம்நூற்றாண்டில்  வந்த சீனப்பயணி யுவான்சுவாங், கோபி பாலைவனத்தில் செத்துவிழுவேன் என்ற நிலை ஏற்படும்போது தான் வந்த குதிரையில் தன்னை வைத்து கட்டி நினைவற்றுப்போகின்றார். இரண்டுநாள் கழித்து குதிரை நின்ற இடம் ஒரு பாலைவனச்சோலை. அறிவைத்தேடி வந்தவர் வாழ்வில் நடந்த சிறுசம்பவம் இது. தடைகள், கொள்ளையர்கள், இயற்கை சீற்றம், நம்பிக்கை கொள்ளாத புதியமனிதர்கள். எதிரிகள் என்று பதினேழு ஆண்டுகள் பயணித்தவர் வாழ்வில் இது ஒரு சிறுசம்பவம்தான், ஆனால் இதைவிட பெரிய சம்பவம் எது இருக்கமுடியும்.

சௌதியில் பல கம்பெனி கேம்புகள் இருக்கும் காண்ட்ராக்டர் கேம் பார்க்கில் எனது கேம்ப் உள்ளது. ஒன்றுக்கு ஒன்று சதுரகிலோமீட்டர் உள்ள கேம்பார்க். சுற்றி பாலைவனம். கேம்ப் ஒரு பாலைவன  சோலை. ஒரு நாள் மாலை சிறுநடைபயணத்தின்முடிவில் கேம்பை அடைய நூறுமீட்டர் தொலைவில் உள்ளேன். மழைதுளி விழுகிறது, காற்று வருகிறது, கேம்பிற்கு ஓடிவிடலாம் என்று நினைக்கிறேன். பாலைவன மணல் வந்து அறைகிறது. கேம்ப் தெரியவில்லை.  பறந்துவிடுவேன் என்று நினைக்கிறேன். திறந்து இருந்த பக்கத்து கேம்பில் நண்பர் ருமில் நுழைந்து கண்ணாடிவழியாக பார்க்கிறேன். வெளியில் உலகம் என்று ஒன்று இல்லை.  விர்..விர். படீர்..படீர் மட்டும்தான். போர்ட்டபில் தகர கூரை பிய்ந்து போய்விழும் டங்.டிங் ஓசை.  ஒன்றரை மணிநேரம் கழித்துதான் உலகம் தெரிந்தது. இயற்கையின் முன் மனிதன் ஒரு மண்துகள்கூட இல்லை.  இது சிறுதுளியின் சிறுதுளி சம்பவம். யுவன்சுவாங்க் கடந்தது பெருங்கடல் பாலைப்பயணம். அதை நடத்தியது அறிவுத்தேடல்.  அதனால்தான் நாடே கூடி கொண்டாடிக்கொடுத்த  அமைச்சர்பதவியையும் துறந்து கற்கவும் கற்பிக்கும் தன்னை  ஆற்றுப்படுத்தினார்.

தன்னை அழிக்கும் அறிவையும் மானுடர் விரும்புவார்களா?” என்றான் அழிசி. “அறிவில் பெரும்பகுதி மானுடனை அழிப்பதே. அதை வேண்டி விரும்பி இல்லத்தில் கொண்டு வந்து சேர்க்கும் மானுடர்களே இப்புவியில் மிகுதி” என்று ஆதன் சொன்னான். “எனில் ஏன் அறிவை நாடுகிறான் மானுடன்?” என்று அழிசி கேட்டான். “அறிவில்லை என்றால் அவன் மானுடனாக உணரமாட்டான் என்பதனால்” என்று ஆதன் சொன்னான். அழிசி அவன் இளம்விழிகளில் திரண்ட துயருடன் நோக்கினான்.

சாவுக்கும் துணிந்து தன்னை ஒப்புக்கொடுக்கும் ஒருவனுக்குதான் அறிவுவாகனமாகிறது, அல்லாதவரை இல்லாதவராக விட்டுவேடிக்கைப்பார்க்கிறது.

இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்-என்கிறார் வள்ளுவர்.

யுவான்சுவாங் போன்ற ஆதனின் தொலைவை அழிசி போன்றவன் கண்களால் எப்படி காணமுடியும்?

நெடுந்தொலைவில் இருப்பது என்பது இல்லாமல் இருப்பதுதான். அதை அடைய லட்சியம் வேண்டும். அந்த லட்சியமே ஒரு பயன்தான். அதற்குமேல் பயன் என்பது அறிந்த அறிவுமட்டும்தான். அது பொருள் அல்ல கண்களுக்கு காட்ட, நெஞ்சம் மட்டுமே அறியும். பயனை கண்களால் காட்டவிரும்புவர்களுக்கு லட்சியம் இருப்பதில்லை ஆசை மட்டுமே இருக்கிறது.

ஆதன் லட்சிய பயணி, அவன் நெஞ்சால் நடக்கிறான். அழிசி பயன்பயணி. இவன் கண்களால் நடக்கிறான்.



அன்பும் நன்றியும்

ராமராஜன் மாணிக்கவேல்

களிற்றியானை நிரை-03 அமைதல் அலைதல் தொலைதல்

அன்புள்ள ஜெ வணக்கம்.

பாம்பன் குமரகுருதாசசுவாமிகள் பாம்பனில் இருந்து கிளம்பி தொலைவுக்கு செல்கிறார். அவர் சென்ற தொலைவு, தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத்தெய்வமணி  ஆகிய முருகபெருமான் வள்ளலாரைப்பாட வைத்த இன்றைய தள்ளரிய சென்னைக்குதான். இன்றைக்கு அது தொலைவே இல்லை.  அந்த தொலைவே அவருக்கு போதிய தொலைவாக இருந்தது  
சுவாமிகள் ஊரைவிட்டு நீங்குவதற்கு நீருக்குள் தோணியில் ஏறி உட்கார்ந்து இருக்கிறார். சுவாமிகளி்ன் துணைவியார் காளிமுத்தம்மாள் கையில் கடைசி மகனை பிடித்துக்கொண்டு சாமிகளை தடுத்துவிட பதைபதை்து ஓடி தவித்து வருகின்றார்.
பதைத்துவரும் மனைவியையும், குழந்தையையும் பார்க்கும் சாமிகள் தோணியில், மனைவியும் குழந்தையும் கரையில், கரைகு்க்கும் நீருக்கும் இடையி்ல் ஒரு ஊசல் ஆட்டம்.  சாமி தோணியில் இருந்து இறங்கிச்சென்று “இனி என்னை தேடிவரமாட்டேன் என்று சத்தியம் செய்” என்று கைநீட்டுகின்றார்.
அன்னை சத்தியம் செய்கின்றார். சாமிகள் தோணியில் ஏறி தொலைவுக்கு சென்றுவிட்டார்.  அதன் பின் அன்னையும் தேடிப் போகவில்லை. சாமியும் திரும்பி வரவில்லை. பாறை உடைந்ததுபோல் அப்படி ஒரு விடுபடல். 

கிருபானந்தவாரியார் சுவாமிகள் நகைச்சுவையாக துறவுப்பற்றி சொல்வார். துறவறம் போகிறேன் என்று திண்ணைவிட்டு இறங்கிய கணவன் தெருவை தொட்டதும் திரும்பி மனைவியை அழைத்து “திண்ணையில் இருக்கும் சுண்ணாம்பு டப்பாவை உள்ளே எடுத்துவை” என்பான். 
அப்பாவின் இளமைகாலத்திலேயே தொலைவு தொலைவு என்று ஊரைவிட்டு தொலைந்துபோகும் ஒருவரை இப்போதும் ஏப்பவாவது ஊரில் பார்ப்பேன். அவருடைய மனைவி குழந்தையுடன் அவரை விட்டு தொலைவுக்கு சென்றதுதான் மிச்சம். அவரால் தொலைவுக்கு செல்லமுடியவில்லை.
தொலைவு என்பது சாவுதான். சிலரால் மட்டுமே வாழ்வதற்காக சாகமுடிகிறது.
சதுரமோ செவ்வகமோ நீளம் அகலத்தோடு உயரம் இருந்தால்தான் அது வடிவமும் உருவமும் கொள்கிறது. வாழ்க்க்கையும் தொலைதல் இருத்தல் இடையில் ஊசாலட்டமும் இருக்கும்போதுதான் வாழ்க்கை வடிவமும் உருவமும் கொள்கிறது. ஆதன் ஊர் எல்லையையே தாண்டாத முதுசாத்தனிடமும் ஆசி வாங்குகின்றான். ஊரிலேயே இருக்காத ஊரையும் தாண்டாத மிளையனிடமும் ஆசி வாங்குகின்றான்.
முதுசாத்தன் சொல்லில் செயலில் உறவில் அமுதம் என்றால், மிளையன் சொல்லில் செயலில் உறவில் நஞ்சு. அமுதும் நஞ்சும் அருகருகே இருக்கிறது. இரண்டையும் அணையாமல் வாழ்தல் என்பது ஏது?   ஊஞ்சல் கிழக்கே செல்வது மேற்கே செல்வதற்கான சக்தியை பெறுவதற்கு. மேற்கே செல்வது கிழக்கே வருவதற்கான சக்தியை பெறுவதற்கு. ஆதன் அமையும் முதுசாத்தனிடமும், அலையும் மிளையனிடமும் செல்வது தொலைதலின் சக்தியை பெறுவதற்கு.
எனக்கு தெரிந்த பெரியவர் தனது தொன்னூறு வயது வரை வீடு காடு என்றே வாழ்ந்தார். அவருக்கு பக்கத்தில் ஊர் என்று ஒன்று இருக்கிறது என்று தெரியுமா? என்று நினைத்துக்கொள்வேன். மகன்களாலும், மகள்களாலும், பேரப்பிள்ளைகளாலும் நிறைந்த குடும்பம். அவரை புதைத்து தலைமாட்டில் வைத்த ஆலம்போத்து இன்று பெரிய ஆலமரமாகி மண்ணை ஆயிரம் கரங்களால் அனைத்து நிற்கிறது. இவர் ஒரு முதுசாத்தன். மிளைஞன் ஆகாயதாமரைபோல, இருப்பார்கள் ஆனால் இருந்த இடத்திலே இருக்கமாட்டார்கள்.    ஒரு ஊர் என்றால் இப்படிதான் இருக்கிறது. இந்த இரண்டும் இல்லாமல் சராசரியான ஊசலாட்டம் கொண்ட மனிதர்களும் இருக்கிறார்கள். அப்பொழுதுதான் ஊர் என்பது ஒரு வடிவமும் உருவமும் கொண்டு திகழ்கிறது.  இந்த மாதரியான ஊர் வாழ்க்கை சூழ்நிலையில் இருந்துதான் ஒரு உயிர் தனக்கான தொலைவுக்கு செல்லவேண்டும்.
நித்தியசைதன்ய யதி என்னும் ஆதன்கள் அப்படிதான் வந்துக்கொண்டு  இருக்கிறார்கள். வாழையடி வாழையாக வந்த திருக்கூட்ட மரபு.   
களிற்றியானை நிரை-03 அமைதல் அலைதல் தாண்டி தொலைதல் என்கிறது.

அன்பும் நன்றியும்
ராமராஜன் மாணிக்கவேல். 

Tuesday, December 17, 2019

களிற்றியானைநிரை-02 சொல்லா? பசியா?




அன்புள்ள ஜெ வணக்கம்.
சத்குரு ஜக்கிவாசுதேவின் சீடர் சுவாமி நிர்விச்சாரா தனது வாழ்க்கைப்பயணத்தில் கண்ட பசியின் கொடுமையை  காட்சிப்படுத்துகின்றார். அந்த காட்சியை கண்டபோது  வானமே தன் தலையில் இடிந்து விழுந்ததுபோல் இருந்தது என்கிறார். அந்த காட்சியை படித்த எனக்கு வானம் தீமழை பொழிந்ததுபோல் இருந்தது. 
துறவறம் பூண்ட நிர்விச்சாரா 1998ல் மௌனவிரதத்துடன் தேசாந்திரியாக நடந்து இந்தியா முழுவதும் திரிகிறார்.  ராஜஸ்தானில்  ஒரு நாள் ரோட்டோரத்தில் ஒருவர்  உணவு தேடிக்கொண்டு வருகிறார். 50மீட்டர் தொலைவில் உள்ள அவர் மண்போன்ற எதையோ எடுக்கிறார். சாப்பிட அதில் என்ன இருக்கும் என்று இவர் நினைக்கிறார். அவர் சாப்பிடுகின்றார். அருகில் சென்று பார்த்ததும் அதிர்ந்துவிடுகிறார் இவர். 
யாரோ எடுத்த வாந்தியை, காய்ந்து போனதை சாப்பிடுகின்றார் அவர். அப்போதுதான் அவர் தலையில் வானம் இடிந்துவிழுந்ததுபோல் இருந்தது என்கிறார். எப்படியோ சமாளித்துக்கொண்டு இவர் தன்னிடம் உள்ள பிஸ்கட்டை கொடுக்கிறார். அவர் அதை இரண்டு கைகளாலும் வாங்கி இரண்டு கைகளாலும் சாப்பிடுகின்றார். அந்த வருடத்தில் நானும் சிலநாள்    ரோட்டோரம் உணவை எடுத்திருக்கிறேன் என்கிறார். 
சில கொடுமைகள் சொற்களாக இருப்பதே பெரும் வலியை ஏற்படுத்துகின்றன. அவை அனுபவங்கள் ஆகமல் இருப்பதே பெரும் பாக்கியம். இந்த இடத்தில் பாக்கியம் என்பது ஒரு கோழைத்தனம் என்று உணர்கின்றேன். எது பாக்கியம்? ரோட்டோரத்தில் உணவு தேடி தின்கின்ற நிலையில் இருக்கும்போதும் ஆடுத்தவர் பசி அறியும்போது தன் கையில் இருப்பதை கொடுக்கின்றவர் பாக்கியவான். நிர்விச்சாரா அந்த நேரத்தில் பாக்கியவான்தான். எந்த சொற்களும் எங்கோ யாருக்கோ அனுபங்களாகத்தான் இருக்கின்றன அதனால்தான் அந்த அனுபவங்கள்  சொற்களாகி காலம் கடந்து உலகம் முழுவதும் உலவுகின்றன. அந்த சொற்கள் செவிநுழையும்போது உடலை உலுக்கிவிடுகின்றன.
நெருப்பென்றால் வாய் சுடுமா? என்பது ஒரு சொல். நெருப்பென்றால் வாய் சுடனும் என்று லா.ச.ரா சொல்வார்.
நிர்விச்சாரா பசி என்று சொன்னபோது சுட்டது. அந்த சொல் சுடுவதற்கு நிர்விச்சாரா எவ்வளவு தொலைவை கடந்திருக்கிறார் என்று நினைத்துப்பார்த்தேன். 
களிற்றியானை நிரை-02 பசியை காட்டும் பாலைவனக்காட்சியும் சுட்டது.
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்ற நான்கு நிலங்களில் பாலை என்று ஒன்று தனியாக இல்லை. மழையில்லாதபோது இந்த நிலங்களே திரிந்து பாலையாகிவிடுகின்றன என்பதை கதை காட்சிப்படுத்திக்கொண்டே செல்கிறது.
விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது-என்கிறார் வள்ளுவர்.

இரண்டுவிதமான பசிகள் இன்று கதையில் வந்துபோகிறது. ஒன்று கொண்ட லட்சியத்திற்காக காத்யர் அடையும் பசி. மற்றொன்று கைவிடப்படும் அன்னையின் பசி.  முதல் பசி தன் கையையே வெட்டி தன்குருதியையே குடிக்கிறது. தன் தசையே அறுத்து அவியாக்கி தானே உண்கிறது. தனக்காக, தான் விடுபட. இரண்டாம் பசி தன்னைத்தவிர அனைத்தையும் உண்கிறது.   
எது பெரும் பசி?
தன்னையே உண்ணும் பசிதான் பெரும்பசி. ஆனால் கதை அன்னையின் பசியைதான் பெரும்பசி, லட்சியத்தை வெல்லும் பசி என்று காட்டுகிறது.
ஏன்?
காத்யர் நிலத்திலிருந்து விடுபடுவதற்காக தன்குருதியையே பசியாறியவர். தனக்காக உண்டவர். மண்ணிலிருந்து தன் குருதியை உறிஞ்சிக்கொண்டவர், ருத்திரவடிவம்.
அன்னை நிலத்தில்  தன் குருதி பெருகுவதற்காக பசியாறியவள். தன் குழந்தைக்காக பசியாறியவள். அவள் கொற்றவை வடிவம்.
நிலத்தில் குருதியை பெருக்குபவள் அன்னை, நிலம் அவளுக்கே சொந்தம். அவள் எலும்பை பயன்படுத்திய துரியோதனனுக்கே நிலம் சொந்தம் ஆனது. குருதியினும் சொல்பெரிதென்று எண்ணிய காத்யரின் எலும்பை பயன்படுத்திய யுதிஸ்டிரனுக்கு நிலம் சொந்தமில்லை, காடே சொந்தம் என்று ஆனது.
நிலத்தில்  சொல் வலிதா? பசி வலிதா? என்றால் பசிதான் வலிது என்கிறது கதை. வாயா? வயிறா? வயிறே நிலம் அறியும் என்கிறது கதை.
அன்புள்ள ஜெ. மிளையன் ஆதனுக்கு சொல்லம் அஸ்தினபுரியின் மண்ணுரிமைபோர் கதை மிக மிக அற்புதம். சொல்வெல்லுமா? பசிவெல்லுமா? என்ற இருமுனை போராட்டத்தின் கபடியை அழகாக நடத்திக்காட்டுகிறது. பகடிபோல் இருந்தாலும், பகடியின் துள்ளல் கபடியாகி ஒன்றை ஒன்று தூக்கிப்போட்டு மிதித்து யுத்தகளமாக்குகிறது.
சொல் பெரிது என்று நிறுபிக்க வசிஸ்டர் வரை செல்கின்றார் யுதிஸ்டர். குழந்தையின் கையில் உள்ளதைகூட திருடிதின்றுவிடும் காக்கை, ஏழு அடுக்கு மண்ணுக்கு அடியில் கிடக்கும் அன்னையின் எலும்புக்கூட்டின் புனிதத்தால்  அதன்மீது இரந்துகிடக்கம் நாயை திங்கவில்லை என்பதை கதை காட்டும் இடத்தில் வயிறுபெரிது என்பது புவிமுழுதும் எதிரொலிக்கிறது.
ஆனாலும்..
வயிற்றின் முன் சொல் அடிபடும் இடங்களை நோக்கும்போது பாவம் இந்த சொற்கள் என்று நினைக்காமல் இருக்கமுடியவில்லை. “அப்படி என்றால் ஓடு. இனி சொல்லை தின்றே உயிர்வாழ்“ என்று சொல்வேந்தன் வசிஸ்டனும்.  
“நல்லவேளை, அவன் அரசனாகவில்லை. இல்லையேல் அஸ்தினபுரியின் மக்கள் புகையுண்டு உயிர்வாழ வேண்டியிருந்திருக்கும் என்றது அன்னைநரி. குழவிநரி வான்நோக்கி மூக்கை நீட்டி ஊளையிட்டுச் சிரித்தது. என்னும்போது நரிகூட்டமும் வயிற்றுப்பக்கம் திரும்பி நின்று சொல்லை அடிக்கும்போதும் மௌனமாகமல் என்ன செய்ய?
வயிறு முன் சொல் விழுந்து விழுந்து தடுமாறி கரைந்துபோவதை பார்க்கும்போது பரிதாபமாக இருந்தது. இவ்வளவு பலகீனமான சொற்களை பற்றிக்கொண்டு வெல்லவேண்டும் என்றால் எத்தனை ஆன்மபலம் வேண்டும். எத்தனை அடி எத்தனைபெரிய தோல்வி எத்தனை விதமான பரிகாசம். அத்தனைக்கும் அப்புறம்  யுதிஸ்திரன் போன்றவர்கள் மட்டும்தான் நிற்கமுடியும். எல்லா சொற்களும் வயிற்றை வென்று எழுந்து நின்றவைதானா? 
களிற்றியானை நிரை-02 சொல்லா? பசியா? என்கிறது.
அன்பும் நன்றியும்
ராமராஜன் மாணிக்கவேல்.   

Monday, December 16, 2019

Neerchudar



Dear Jeyamohan
Neerchudar has ended.  This episode leaves a feeling of calmness coming out of accepting the reality.  It was like when all the forces try to pull you apart, to break your mind and let you only to lament. A divine intervention pulls you out and you start looking inwards and introspect yourself.  Finally, the smoke clears, you breathe, and the equilibrium of your mind returns.
In chapter 57, Ma Kunti finally comes out and ask Yudhishtra to give the “havis” to Karna. That was the moment of truth.  The Pandavas feel the betrayal and the pain.  Sugothran makes that historic decision to renounce everything and move on.  What a beatific moment of freedom!  
You have written great details on closing process of a war where many people have died, in this case relatives. The rituals done for the departed souls and its significance are in amazing Tamil and the translation of the Vedic versus.
Best portrayal of Sugothran. He emerges as the hero in this episode. Makes one to long for that courage.
Thanks again for creating this master piece. Also looking forward to your “Thiruvizha log” on the temple festivals and experiences.   Waiting for the next Venn Murasu jewel.
Warm regards

Sobana Iyengar

களிற்றியானைநிரை-01 நீரா? நெருப்பா?




அன்புள்ள ஜெ வணக்கம்.

வெண்முரசு களிற்றியானை நிரை நாவல் கொடுக்க தொடங்கியமைக்கு வாழ்த்தும் நன்றியும்.
களிற்றியானை நிரை நதியோட்டம்போல மென்மையாக நகர்ந்து போகிறது.  ஆனால் அதிவேகமாய் இழுத்து உள்ளுக்குள் அழுத்தி புரட்டி மூச்சு முட்டவைக்கிறது.  தீபத்தின் ஒளிபோல எங்கும் பரவுகிறது, ஆனால் கண்ணில் காட்சியை விரியவைத்து விரியவைத்து உள்ளத்தின் இருளை தீயின்நா என விழுங்குகிறது. 
ஆதிசங்கரர், சைதன்ய மகாபிரபு.  ஸ்ரீராமகிருஷ்ணபரமஹம்சர், ஸ்ரீரமணர் இந்த  ஞானயானைகள்போல்    எத்தனையோ மகான்கள் அன்னை என்னும் சங்கிலியால் கட்டப்பட்டவர்கள். அவர்களுக்கு தொலைவு தெரிந்துவிட்டது. ஆனால் அந்த சங்கிலியை அறுக்காமல் மெல்ல மெல்ல அந்த சங்கிலிக்கு வலிக்காமல் கழட்டிவிட்டு தொலைவுக்கு சென்றுவிட்டார்கள். இவர்கள் நெருப்பு போன்றவர்கள்.
குருராகவேந்திரர், ஸ்ரீலாகிரிமகாசயர், அன்னை சாரதாதேவி, ஆத்மானந்தர் யோகிராம்சுரத்குமார் இ்ந்த ஞானசிம்மங்கள்போல்  எத்தனையோ மகான்கள் குடும்பம் என்னும் வனத்தை நீருற்றி வளர்த்தபடியே அலைகளுக்கு அப்பால் உள்ள தொலைவை கண்டவர்கள். இவர்கள் நீர் போன்றவர்கள்.  
தொலைவுக்கு  சென்றதாலேயே அவர்கள் இன்னும் இங்கு இருக்கிறார்கள். இங்கு மட்டும் இருந்தால் போதும் என்று இங்கு இருந்தவர்கள் இங்குகூட இல்லாமல் போய்விட்டவர்கள்தான். உலகம் எத்தனை அற்புதமானது.

அன்பு உள்ள ஜெ. ஆதன் வழியாக மானிட உள்ளத்தின் அலைதலை, தொலைதலை, தேடுதலை, நிலைபெறுதலை மிக அற்புதமாக விளக்கி உள்ளீர்கள். மாபெரும்  மெய்யியல் மெய்மை பூத்து ஒளிர்கிறது. கதை சொல்லவில்லை கதையின் வழியாக உள்ளமும் உணர்வும் ஞானமும் சொல்கிறீர்கள். கதைவழியாக வாழ்க்கை, வாழ்க்கைவழியாக பாடம்.
கதை என்ன? விழிநாகன் மகன் ஆதன். தந்தையில்லா பிள்ளை. தனிமனுசி வளர்க்கும் வாயில்லாபிள்ளை. ஊருக்கு முன்னால் ஒன்றுக்கும் உதவாத ஆகாத பிள்ளை. அவ்வளவுதான் கதை.
கதை அவ்வளவுதான் என்று இருந்துவிடக்கூடிய கதை இல்லை இது. மண்ணில் பிறக்கின்ற குழந்தைகள் ஒவ்வொன்றும் இந்த கதைபோல அவ்வளவுதான் என்று இருந்துவிடப்போகின்றார்களா? அல்லது கதையின் ஆழத்தில் ஒளிரும் வைரம்போல   ஆகபோகின்றார்களா?
ஒரு உயிர் மண்ணில் பிறந்ததும் ஊரோடு ஊராக ஒன்று கலந்து நீர்போல தங்களுக்குள்ளேயே கலக்கிக்கொண்டு இருக்கலாம். அதிகபடியான மானிடகூட்டம் அதைத்தான் செய்கிறது. அதனால் அவைகள் சரியாக வாழ்வதுபோல் தெரிகிறது.  ஆதன் பிறந்த ஊர் அவனை தங்களுக்குள் கலந்து கலக்கத்தான் முயற்சிக்கிறது. சரியாக வாழவைக்க முயற்சிக்கிது. ஆதன் கண் என்னும் ஒரு புலனை மட்டும் திறந்து வைத்து மற்ற நான்கு புலன்களையும் ஊருக்கு முன்னால் மூடிவைத்துவிடுகிறான். திரவமாக இருந்தாலும் நீரும் எண்ணெயும் ஒட்டுவது இல்லை என்பபோல அவன் ஊரில் ஒட்டாமல் ஆகிவிடுகிறான்.  ஊரின் மொழியில் சரியாக வாழ்வது என்பது சராசரியாக வாழ்வதுதான். ஆதன் வேறாக வாழ்கிறான் அதனால்வெறுமனே வாழ்கிறான் என்று ஊர்நினைக்கிறது. வேறாக வாழ்வது என்பது வேள்வியாக வாழ்வது என்பதாகும் என்பதை ஆதன் காட்டுகிறான்.

ஆதன் ஒரு அழகான படிமம், உலகில் உள்ள அனைத்து உயிருக்குமான படிமம்.  அது பொருள் உலகில் பொருளாக இருக்கிறது. இருக்கிறது என்பதை தவிர அதன் இருப்பு பெரியதில்லை. பொருளாக இருப்பதாலேயே களவாடப்படக்கூடியது. பொருளாக இருப்பதாலேயே காணடியக்கூடியது. களவாடப்பட்டால் தேடி கண்டுபிடிக்கவேண்டியதாக உள்ளது. காணடிந்துவிட்டாலும் அலையவைக்கக்கூடியது.  தேடி கண்டபிடித்தல் அன்றி அதுவாக பேசி தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாதது.   
மண்ணில் பிறக்கும் ஒரு உயிர் ஒரு பொருள் மட்டும்தானா? அதை பொருளாக்கத்தான் உலகம் இத்தனை பேச்சும், சிரிப்பும், நடிப்பும், மணமும், குணமும் கொள்ளப் பழக்குகின்றதா? 
ஒரு உயிர் தன்னை பொருள் என்று ஆக்கிக்கொள்ளமல் உயிரென்று ஆக்கிக்கொள்ள தன் புலன்களை உலகம் பயன்படுத்தும் வகையில் பயன்படுத்தாமல் வேறு வகையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். ஆதன் அதைத்தான் செய்கிறான்.
பொருள் உலகை கடந்து அந்த உயிர் அருள் உலகை அடைய, அருள் உலகில் அது நீராகவும் ஆகலாம், நெருப்பாகவும் ஆகலாம். இரண்டு வழிகளில் அது தனது வாழ்க்கையை அமைத்துக்கொள்ள இங்கு சுதம்திரம் உள்ளது. அது என்னவாகபோகின்றது என்பது அதன் சுயதர்மத்தை சேர்ந்தது. நெருப்புபோல எல்லாவற்றையும் உண்டு, மேலே எழுந்து அருள்மழை பொழிந்து, விண்ணென்று ஆகலாம் அல்லது நீரென்று ஆகி மண்ணில் கலந்து வேர்விட்டு கிளைவிட்டு பூவிட்டு மணம்விட்டு கனிவிட்டு வனமென்றாகி வான்தொடலாம் அல்லது அலையும் கடலும் என்பதெல்லாம் நீரன்றி வேறல்ல என்று அலைகளுக்கு அப்பால் அலைதல் அற்ற நீராகலாம்.
உயிர்கள் நீரால் ஆனவை. நீராலான உயிர்கள் அனைத்தும், ஒரு உயிர் நெருப்பாவதை வெறுகின்றன. அல்லது அலைகள் இல்லாத படிகமாவதை துறக்கின்றன.
இந்த கதை ஏன் சொல்லப்படுகிறது? ஆதன் வாழ்க்கையை சொல்வதற்காக, வாழ்க்கையில் ஆதன் மனம்படும் பாட்டை சொல்வதற்காக, மனம்படும்பாட்டால் ஆதன் உணர்வுபெறும் நிலையை விளக்க, உணர்வால் ஆதன் உணரும் உண்மையை அடைய.
ஒரு உயிர் மண்ணில் பிறந்ததும் அது ஒன்றுபட்டு வாழபோகிறதா? அல்லது தனித்துவாழ போகிறதா? என்ற கேள்வி அதற்கு முன் வைக்கப்படுகிறது. ஒன்று பட்டு வாழ்ந்தால் நீ இங்கு இருப்பாய். நீர் மண்ணில் கலந்து இருப்பதுபோல நீயும் மனிதரில் கலந்து இருப்பாய். நீர்போல் இருப்பதாலேயே நீயும் ஐம்புலன்களுக்கும் ஆகக்கூடிய அரும்பொருளாய் இருப்பாய், தனித்து வாழ்ந்தால் இருந்தும் இல்லாமல் இருப்பாய். எனவே ஒன்று பட்டு வாழப்போகிறாயா? தனித்து வாழப்போகிறாயா? என்று கேள்வியை கதைமூலம் வாழ்க்கை கேட்டுக்கொண்டே இருக்கிறது.  
இந்த கேள்வியின் சத்தம் சிலருக்கு கேட்காமல் இருக்கலாம். சிலருக்கு கேட்டாலும் புரியாமல் இருக்கலாம். சிலரை எழுப்பும் வரை அது ஓயாமல் ஒலிக்கும் படுக்கையறை அலாரம்போல, சிலர் அதை அனைத்துவிட்டு தூங்கலாம். சிலர் மட்டுமே அது ஒலிப்பதற்குமுன்பே எழுந்து உலவ தொடங்கிவிடுகிறார்கள். ஆதன் அலாரம் ஒலிப்பதற்கு முன்பே உலாவ தொடங்கியவன். 
கதைக்குள் ஆதனுக்கு என்று ஒரு மனம், அந்த மனம் மலர்த்தும் எண்ணம், அந்த எண்ணம் கொண்டுவரும் சொற்கள், அந்த சொற்கள் கொண்டு வரும் உணர்வு, அந்த உணர்வு தரும் அறிவு, அந்த அறிவு நிலைகொள்ளும் தொலைவு.
ஆதன் போன்று ஒரு உயிர் மண்ணில் பிறக்கும்போது அந்த உயிர் ஊரை கடக்கவேண்டும், அன்னையை கடக்கவேண்டும், மிளையனை கடக்கவேண்டும், சித்தன்மேட்டில் உள்ள சித்தனையும் கடக்கவேண்டும். இத்தனைக்கு பின்புதான் அந்த உயிர் தனக்குள் முட்டும் எண்ணங்கள் கனிந்து சிந்தனையாவதையும், அந்த சிந்தனை தரும் சொல்லை அறியமுடியும் என்பதையும் காட்டுகிறது. 
அன்புள்ள ஜெ. கதையில் சில குழந்தைகள் தாயிடம் இருந்தும், சில குழந்தைகள் தந்தையிடமிருந்தும் சொற்களை பெறுகின்றன என்ற குழந்தைகள் உளவியல் உண்மையை எளிதாக வெளிப்படுத்துகிறீர்கள். இந்த உண்மையை அறிந்துக்கொண்டு குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் அருளார்கள் அந்த குழந்தைகள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.
ஊர் ஒரு ரகம் அது ஊரைதாண்டி எங்கேயும் போகாது அதன் வண்ணமும் வடிவமும் ஊருக்காகவே ஆக்கப்பட்டது, சித்தனமேடு நோக்கி வந்துகொண்டே இருக்கும் சித்தர்கள் ஒரு ரகம், அவர்களுக்காக சித்தன்மேடு காத்திருக்கும் அவர்கள் சித்தன்மேட்டுக்காக காத்திருப்பவர்கள். அவர்கள் பேரற்றவர்கள் அவர்களுக்கு ஊர் பேர்கொடுக்கும் அந்த பேரும் ஊர் பயன்படுத்தி தூக்கி எறியும் பொருள் பெயர்தான்.  அவர்கள் ஊருக்குள் வருவார்கள் ஆனால் அவர்களுக்குள் ஊர் வருவதில்லை. மிளையன் வேறு ஒரு ரகம். அவர்கள் ஊரிலும் இருப்பார்கள், சித்தன் மேட்டிலும் இருப்பார்கள் ஆனால் அவர்கள் தீமையின் துணையோடு  இருப்பார்கள். எத்தனை பெரிய ஆழமான உண்மை. மரமாகவும் இல்லாமல் வைரமாகவும் ஆகமுடியாமல் கரியாக இருக்கும் காலம் அது.
ஆதன் போன்ற ஒரு உயிர் அதன் தொலைவை ஊரைத்தாண்டி, அன்னையைதாண்டி, தந்தையின் தொழிலைத்தாண்டி, மிளையனைத்தாண்டி, சித்தன் துணையோடு சித்தனையும் தாண்டிதான் அதன் தொலைவை அடையமுடியும்.
களிற்றியானை நிரை-01 நீரா? நெருப்பா? என்கின்றது.

அன்பும் நன்றியும்
ராமராஜன் மாணிக்கவேல்.  

Monday, December 2, 2019

களிற்றியானை நிரை (நூல் வணக்கம்)


வெண்முரசு என்னும் யானைகளின் நிரை

சொற்பெருவனத்தில் விளைந்த சொற்கள் பலகோடி. 
இன்னும் விளையாது கருக்கொண்டிருப்பவை எண்ணற்றவை.
விளைந்தவற்றில் பொருள் பூத்திருப்பவை பல்லாயிரம்.

அங்கு சிறு  பாறை ஒன்றில் தென்திசை நொக்கி இடக்கால் மடித்து வலக்கால் நிலம் தொட ஊழ்கத்தில் ஆழ்ந்துள்ளான் ஆசான்.
அவன் ஊழ்கத்தில் கருக்கொண்டு வனத்தில் உடல் வளர்த்து உருவாகி  வருகின்றது ஒரு களிற்று நிரை.

முன்னிரு கால்களென தத்துவத்தையும் உளவியலையும்    பின்னிரு கால்களென சமூகவியலையும்  இந்திய புராண மரபையும் கொண்டு   அமைந்துள்ளன அக்களிறுகள்.
தர்க்கம்  ஒளிவீசும் இரு வெண் தந்தங்கள் என  ஆக,  சொற்திறன்  தும்பிக்கையென அமைய,  கவித்துவங்களை  தன்னிரு காதுகளென அசைத்து,  நகைச்சுவை என்ற வால் பின்னாட  ஆன்மீகத்தை ஆன்மாவெனக்கொண்டு அசைந்தாடி வருகின்றன அவை. 

அக்களிறுகள்  ஒவ்வொன்றையும் வாசகர்கள்  தம் வாசிப்பு என்ற  கைகளால் தடவி முழுதறிய முயற்சிக்கின்றனர்.
இப்போது தோன்றி எழும் அக்களிற்று நிரையின்  இருபத்து நான்காவது யானையை,  
இளைய சிறுவனாக உடல் சிலிர்த்து,   உளம் குவித்து,  வணங்கி நிற்கின்றேன் நான்.

நீர்ச்சுடர் - 57 நாணயத்தைச் சுண்டி முடிவெடுத்தல்



       நாம் இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கட்டாயம் வரும்போது மிகவும் குழம்பிப்போகிறோம்.  எந்த உடையை இன்று  அணிந்துகொள்வது என்ற எளிய ஒன்றிலிருந்து எந்த வகைக் கல்வியை படிப்பது, எந்த வேலைக்கு போவது,  யாரை வாழ்க்கைத்துணையாகத் தேர்ந்தெடுப்பது என்பது வரை எல்லாமும் சிக்கலாக இருக்கிறது.  இயல்பாக, இரண்டில் எது சிறந்ததோ அதையே நாம் தேர்ந்தெடுக்க விழைகிறோம். ஆனால் அந்த இரண்டில் எது சிறந்தது என்பதை எப்படிக்காண்பது?   அதைக் கணிப்பதில் நம் அறிவைப் பயன்படுத்துகிறோம். அதே நேரத்தில் நம் அறிவின்மீது எப்போதும் நமக்கு ஐயமிருக்கிறது.  அதன் எல்லை குறுகியது. மேலும் அது நம் விருப்பு வெறுப்புகளால்,  முன்முடிவுகளால், பழுதுபட்டதாக உள்ளது.  இதில் மற்றொருவர் ஆலோசனையைக் கேட்டால், அவரின் சொல்லை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பது இன்னொரு சிக்கலான தேர்வாக ஆகிவிடுகிறது. 

     நம் அறிவால் பிறர் ஆலோசனையால் பல முன்மாதிரிகளை பரிசீலித்து எடுக்கும் முடிவு நமக்கு உகந்ததாக இருக்கும் என்பது நிச்சயமில்லை.  காலம் நமக்காக பின்னர் சமைத்துவைத்திருக்கும் சூழல் என்னவென்பது நமக்குத் தெரியாது. அந்தச் சூழலுக்கு இப்போது எடுத்திருக்கும் முடிவு சரியானதாக இருக்குமா என்பது நமக்குத் தெரியாது. எது நன்மை பயக்கும் எது தீமையை விளைவிக்கும் என்பதை காலம் நம் கண்களுக்கு காட்டுவதில்லை.  நிச்சயமின்மை என்ற புகையால் சூழ்ந்திருக்கும்  எதிர்காலத்தை ஊடுருவி பார்த்து ஊகிக்கும் திறன் நமக்கு இருப்பதில்லை.       ஆகவே ஒன்றை தேர்ந்தெடுப்பது என்பது பெரும்பாலும்  கடினமான ஒன்றாக இருக்கிறது.

  சுகோத்ரன் இரு வழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவேண்டும் பாண்டவர்களின் வாரிசென ஆகி அஸ்தினாபுரத்தை அரசாளவேண்டும்.  அல்லது இனியும் ஒரு நிமித்திகனாக தன் வாழ்வை நடத்திச்செல்ல வேண்டும்.   சிறு வயதிலேயே அவன் தன் வாழ்வை நிமித்ததிகம் பயில்வதற்கு என்று அர்ப்பணித்துக்கொண்டவன். அவன் தந்தை அந்த முடிவை எடுத்து அவனை இளம் வயதிலேயே கல்விச் சாலைக்கு அனுப்பிவிட்டார்.  அவனுடைய தன்னறம் நிமித்திகத்தின் வழியாக நிகழ்வது என்றிருப்பதாக கருதி வந்திருக்கிறான்.  ஆனால் காலம் சூழலை வெகுவாக கலைத்துப்போட்டு விட்டது,  பாண்டவர்களின் ஒரே மைந்தனென அவன் எஞ்சி இருக்கிறான்.  வாரிசுவரிசை அவன் மூலம் தொடர வேண்டும். உத்தரைக்கு இன்னும்  மகன் பிறக்கவில்லை.  ஆகவே அவன் திரும்பவும் அஸ்தினாபுரத்தின் இளவரசனென ஆகி பின்னர் மணிமுடி சூழ வேண்டிய தேவை எழுந்துள்ளது.  அவன் நிமித்திகனாக தன் வாழ்வை தொடரவேண்டும் என்று சகதேவன் கூறுகிறான். அவன் அன்னையோ மீண்டும் அரச வாழ்வுக்கு வந்து இளவரசனாகி அஸ்தினாபுரத்தின் அரியணைக்கு உரியவனாக ஆகுக என்று பணிக்கிறாள்.  அதையே தருமரும் கூறுகிறார்.    இப்போது அவன் முன் இரு வழிகள் உள்ளன. எதைத்  தேர்ந்தெடுப்பது என்ற சிக்கல் இப்போது அவனுக்கு எழுந்துள்ளது.  இது அவன் இனி வாழும் முறையைத்  தீர்மாணிப்பது.  அவன் முன் இருக்கும் இருவழிகளுக்குமான தர்க்கம் சமமாக இருக்கிறது. அவனுக்கு ஆணையிட வேண்டிய இருவரான தந்தையும் தாயும் இரு வெவ்வேறு வழிகளைக் கூறுகிறார்கள். எப்படி அவன் தன் முடிவை எடுப்பது?

        இறைவன்  எப்போதும் நம்மை பகடி செய்யும் வழக்கமுடையவன். சில சமயம் நாம் கேட்டதையே கொடுத்து அதன்மூலமே நம்மை சிக்கலில் ஆழ்த்தி சிரித்து விளையாடும் குறும்பன்.   ஆகவேதான் நான் கடவுளிடம் எதையும் வேண்டிக்கொள்வது இல்லை. ஐயா நீயே பார்த்து எதையாவது செய்துகொள் என்று அவனிடமே விட்டுவிடவேண்டும்.  இல்லையென்றால் பின்னர் நம்மிடம் நீதானே இதைக்கேட்டாய் என சொல்லிச் சிரிப்பான்.   இதைப்போன்ற முடிவெடுக்கும் வேளையில்,   எது சரியென்று தர்க்க பூர்வமாக அறிய முடியாத நிலையில், அதை அவனிடமே விட்டுவிடுவது நல்லது. அதை அவன் நேரடியாகச் சொல்ல மாட்டான்.  இது போன்ற சமயங்களில்  நாம் என்ன செய்கிறோம் என எண்ணிப்பார்க்கிறேன்.  முடிந்தவரை முடிவெடுப்பதை தள்ளிப்போடப்பார்க்கிறோம்.  முடிவெடுத்தே ஆகவேண்டிய நிலைவரும்போது  வீட்டுப் பெரியவர் அல்லது நாம் மதிப்பு வைத்திருக்கும் யாராவது ஒருவர் சொல்லை தர்க்கம் ஏதுமின்றி  ஏற்றுக்கொள்கிறோம்.    அல்லது கடவுளின் முன் திருவுளச்சீட்டு போட்டுப்பார்க்கிறோம்.  இவை அனைத்தும் ஒரு நாணயத்தை சுண்டி பூவா தலையா பார்த்து முடிவெடுப்பதற்கு சமமானதாகும்.  இப்படியாக முடிவெடுக்கும் வேலையை கடவுளிடம் தள்ளிவிடுகிறோம்.  இரு வழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் சிக்கலிலிருந்து நாம் இவ்வாறு விடுபட்டு விட ஒரு வழி இருக்கிறது.  

    சுகோத்ரன் சுண்டுவது இயற்கை என்ற நாணயத்தை.  விழுவது  பூவா தலையா என்பதை இயற்கையின் குறியின் மூலம் அறிய நினைக்கிறான்.  அவன் நிமித்திக இயல் படித்தவன்.  இயற்கை அளிக்கும் ஏதாவது நிமித்தத்தை தனக்கான பதிலாக கொள்ளலாம் என்று நினைக்கிறான்.    அதற்காக அவன் காத்திருக்கிறான்.  தருமர் பக்கத்தில் வந்து அமரும்படி அழைக்கிறார். இயற்கை வேறு குறியெதுவும் அதுவரை காட்டவில்லை. தருமரின் அழைப்பை இளவரசனாவதற்கான  குறியெனக் கொண்டு அவன் அமரநினைக்கிறான். 
சுகோத்ரன் யுதிஷ்டிரன் அருகே சென்று நின்றான். அவர் அவனிடம் அமரும்படி கைகாட்டினார். அவன் கைகூப்பியபடி நின்றான். அவர் அமர்க என மீண்டும் கைகாட்டினார். சகதேவன் அவனை வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தான். அவன் அமரப்போகிறவன்போல கால்களை சற்றே மடித்தான்.
அக்கணத்தில் வாளை உரசி உருவும் ஓசையுடன் ஒரு சிறு பறவை ஊடாகச் சீறிப்பறந்தது. திடுக்கிட்டு சுகோத்ரன் திரும்பி நோக்கினான். அப்பறவையை நோக்க முடியவில்லை. அவன் திரும்பி நோக்கியபோது கரையில் ஒரு கலைவைக் கண்டான். அங்கே மீண்டும் ஒரு கொம்பின் ஒலி எழுந்தது. அனைவரும் திகைப்புடன் திரும்பி நோக்க ஒற்றைக்குதிரை பூட்டப்பட்ட தேர் வந்து நின்றது.

அச்சமயத்தில்  இயற்கை தன் தேர்வை அவனுக்கு ஒரு  பறவையின் ஓசையின் மூலம் உணர்த்துகிறது. குந்தியின் வருகையால் அவன் அமர்வதற்கு தடங்கல் நிகழ்கிறது. சுகோத்ரன் இதை ஒரு நிமித்தக்குறியெனக் கொண்டு  தான் தேர்ந்தெடுக்க வேண்டிய வாழ்வுமுறை ஒரு  நிமித்திகனாக இருப்பதே என்பதை முடிவு செய்கிறான்.  
சுகோத்ரனிடம் அமர்க என்று கைகாட்டினார். சுகோத்ரன் “இல்லை, தந்தையே” என்றான். “நான் நீர்க்கடன்கள் செய்யப்போவதில்லை” என்றான். யுதிஷ்டிரன் திகைப்புடன் “நீ அதற்காகவே வந்தாய்” என்றார். “ஆம், ஆனால் இப்போது வேண்டாம் என முடிவெடுத்தேன். எனக்கான ஆணை இப்போது வந்தது.

     ஆனால் அதற்காக ஏன்அவன் நீர்க்கடன்கள் செய்யாதிருக்க வேண்டும்?  ஏனென்றால் அவ்வாறு செய்தால் அவன் பாண்டவ்ர்களின் வாரிசு என்று  நிலைத்துவிடுவான்.   பாண்டவர்களின் வாரிசாக இருந்துகொண்டே இளவரசப் பட்டத்தை துறந்து  அவன் ஒரு வேளை இருக்கலாம்.  ஆனால் அவன் குருதியினால் அஸ்தினாபுரத்தின் இளவரசன் என ஆனவன்.  அவனைவிட இளையவனுக்கு அரசுரிமை போவது என்பது பின்னாட்களில் எத்தகைய சிக்கல்களை உருவாக்கும் என்பதை  நாம் அறிவோம்.   குரு வம்சம் சந்தித்திருக்கும்  குருஷேத்திரப்போர்  என்ற பேரழிவுக்கு காரணமாக நின்றது இந்தவகையான சிக்கல்தான் அல்லவா?  ஆகவே   அவன் பிறப்புரிமையை விட்டுக்கொடுக்க அவன் தன் பெற்றோரை குடும்பத்தை முற்றாக துறந்து செல்வது ஒன்றே வழி.    அதற்கு பாண்டவர்களை இணங்க வைக்க அவன் சொல்லும் வெறும் வார்த்தைகள் தான் இவை.
 இந்தப் பொறுப்பை நான் எடுத்துக்கொண்டால் இப்பழிக்கும் இத்துயருக்கும் நான் பொறுப்பாகிறேன். இவற்றை நான் துளியும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இவை எவையும் என்னுடையவை அல்ல” என்றான்.

    இப்படி முற்றாக தன் நாடு மக்கள் சுற்றம் பெற்றோர் ஆகியோரை   துறந்து ஊழின் ஆளுகைக்கு முற்றாக ஒப்புக்கொடுப்பவன் அல்லவா ஒரு உண்மையான நிமித்திகனாக இருப்பான்.  அவன் சகதேவனை  குற்ற உணர்விலிருந்து விடுவிக்கிறான்.  பாண்டவ குடும்பத்திற்கு பின்னாளில் எவ்வித வாரிசுரிமை  சிக்கல்கள்  எழாது போகச் செய்கிறான்.  வெண்முரசில்  சில பக்கங்களே வந்தாலும்  அதன் உன்னத கதா பாத்திரங்களில் ஒன்றாக சுகோத்ரன் மிளிர்கிறான்.

தண்டபாணி துரைவேல்