Wednesday, June 26, 2019

கர்ணன்





ஆசிரியருக்கு,

இன்றைய உங்களின் குறிப்பைப் படித்தேன். உங்களின் திசைகளின் நடுவே கதையை வாசித்த ஞாபகம் இன்னுமுள்ளது, அதுவே நான் வாசித்த உங்களின் முதல் கதை என்பது இப்போது தெரிகிறது. குருஷேத்ர யுத்தத்திற்கு பிறகு யுதிஷ்டிரர் இயற்றும் யாகம் ஒன்றில் யாசகம் பெற வரும் சார்வாகர் பற்றிய கதை என நினைவு. இந்த வரிகளைப் படித்து அதிர்ந்ததும் நினைவில் இருக்கிறது,

அடேய் பிராமணா, எதற்க்காகடா ஐந்து வேளை தின்கிறாய் என்றொரு வரி, என்ன இப்படியெல்லாம் கதை எழுதுகிறார்கள் என்று அதிர்ந்து விட்டேன் (சுஜாதாவிடம் மதி மயங்கியிருந்த நாட்கள்) இறுதியாக அந்த சார்வாகரை நெய்யினால் எரித்துக் கொன்று விடுவார்கள், பசுங்குருதியின் மணம் எழுவதாகக் கதையை முடித்திருப்பீர்கள்.

எங்கோ தொடங்கி இதோ இன்று வெண்முரசு வரை வந்துவிட்டேன். அமிஷ் த்ரிபாதியின் சிவா ட்ரையாலஜியை வாசித்திருக்கிறேன், வெண்முரசின் ஒரே ஒரு நாவலுக்கு உரை போடக் காணாது. எந்த ஒரு மெய்ப்பையும் உணர்வெழுச்சியையும் அளிக்காத படைப்பாகவே அது இருந்தது. அதற்கே கிறங்கிப் போன வாசகர் வட்டம் அவருக்குக் கிடைத்திருக்கிறது. என் அலுவலகத்தில் பணி புரியும் ஹிந்தி வாலாக்களிடம் வெண்முரசின் முக்கிய அத்தியாயங்களை ஆங்கிலத்தில் விளக்கிச் சொவதுண்டு. எத்துணை உணார்வு கூட்டிச் சொன்னாலும் சொற்கள் போதியிருக்கவில்லை. உதாரணமாக,

கர்ணன் முதன் முறையாக அவைக்களத்தில் பார்த்தனை அறைகூவும் பொழுது, தருமன் இவனெங்கே கற்றான் என முனகலாகக் கேட்பார். அதற்கு பீமன்,

இவனைப் போன்றவர்களுக்கு ஆசிரியர்கள் தேவையில்லை மூத்தவரே, தேவையென்றால் தெய்வங்கள் கீழிறங்கி வரும் என்பார். இதை எவ்வளவு மொழி பெயர்த்தாலும் மொழியின் அடர்த்தி எனக்கு கைகூடி வரவில்லை.

எவரெனும் மொழியின் வீச்சை நன்கு உணர்ந்தவர் இதை ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்க வேண்டும். இந்தக் காவிய இன்பம் தமிழ் வாசகர்களோடு நின்று விடக்கூடாது என்று அங்கரை வேண்டிக்கொண்டிருக்கிறேன்.

அது நிகழ்ந்தால் என் பூர்வீக நிலத்தில் அங்கருக்கு கல்லால் ஒரு ஆலயம் அமைப்பேன் என்பதும் எனது பிரார்த்தனை. நின்றிறுக்கும் அங்கரின் இடக்கையில் விஜயமும் வலக்கை வழங்குவது போலவும் தோற்றம் கொண்டிருக்கும். சூரிய மைந்தர் ஆலயம் என்று வெளியே பொறிக்கப் பட்டிருக்கும். எவரும் அங்கு பூசை செய்து வணங்கும் வண்ணம் அவ்வாலயம் திகழும். 

உங்கள் வாழ்வில் என்றேனும் அதைக் காண வருவீர்களெனில் அது என் பேறு என்றே கொள்கிறேன்.

நன்றி
சிவா.


Tuesday, June 25, 2019

அறச்சீற்றம்


ஜெ

அறப்பிழையால் நிலை நிறுத்தப்படுவதா உன் வேதம்?” என்றான் அஸ்வத்தாமன், “உன் குலத்திற்கு இழைக்கப்பட்ட சிறுமையை பிறருக்கு சிறுமையிழைத்தா நீ நிகர்செய்வாய்?  என்று அஸ்வத்தாமன் கேட்கும் இடம் முக்கியமானது. இந்த போர்க்களத்தில் இதுவரை எந்த அறப்பிழையும் செய்யாத மாவீரர் அவர்தான். அவர் கேட்கும் இந்த இரண்டு கேள்விகள் மிகமிகச் சுருக்கமாக இருந்தாலும் பாண்டவர் தரப்பினரின் எல்லா நியாயங்களையும் அடித்து நொறுக்கிவிடுகின்றன. பதிலே இல்லை. அஸ்வத்தாமனின் கடைசிநாள் சீற்றத்தின் அடிப்படை இந்த இரு வரிகளில் உள்ளது

மகேஷ்

எழுவது


ஜெ

திரும்பவும் கார்கடலில் இருந்து வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். ஒரே மூச்சில் பதினைந்து நாட்களுக்குள் நேராக இருட்கனியைக் கடந்து தீயின் எடைக்கு வந்துவிடுவேன். இது நான் எல்லா நாவல் இடைவெளிகளிலும் செய்துகொண்டிருப்பது


வரவிருக்கிறது பெருமழை என்று அஸ்வத்தாமன் எண்ணினான். அனைத்தையும் அள்ளிக்கூட்டிச்சென்று யமுனையில் கரைக்கும் மாமழை. புதுத்தளிர் எழச்செய்யும் வானருள். இடியோசை எழுந்து குருக்ஷேத்ரம் நடுங்கியது.

இந்த வரிகளை வாசித்தபோது உள்ளம் நடுங்கியது. மலைப்பகுதிகளில் மேமாதம் எல்லா செத்தை புல்லையும் எரித்துவிடுவார்கள். அதன்பின் புதிய விதைகளை வீசுவார்கள். இருட்கனியின் கடைசியில் நடைபெறுவது அதுதான்

மகாதேவன்

விளிம்புகள்




அன்புள்ள ஜெ,


வெண்முரசில் சில இடங்களில் சில edges உள்ளன. அதைப்பற்றி நான் நண்பர்களிடம் பேசுவதுண்டு. உதாரணமாக கர்ணனா துரியோதனனா எவர் அறத்தில் நின்றவர்கள்? பாண்டவர்கள் கூச்சமே இல்லாமல் கௌரவர்களைக் கொன்றனர். ஆனால் துரியோதனன் கர்ணன் இருவருமே மைந்தரைக் கொலைசெய்யவில்லை. அபிமன்யூவின் கொலை மட்டும்தான் விதிவிலக்கு. ஆனால் அந்தக்கொலையைக்கூட ஒரு சிறு வேறுபாட்டுடன்தான் வெண்முரசு எழுதிக்காட்டுகிறது.


துரியோதனனுக்கு அபிமன்யூவைக் கொல்வதில் இஷ்டமில்லை.

துரியோதனன் ஒருகணத்தில்நிறுத்துங்கள்! போதும் இப்போர்!” என்று கூவினான். “மூத்தவரே…” என்று துச்சாதனன் கூவினான். துரியோதனன் கைகளை வீசிபோதும்அவனை போகவிடுங்கள்வேண்டாம்!” என ஆணையிட்டான் பிறர் கொல்லச்செல்லும்போது துரியோதனன் தடுக்கிறான். அபிமன்யூ ஆயுதம் கொடுங்கள் என்று கெஞ்சும்போது அவன் அபிமன்யூவுக்காக இரக்கம் காட்டமுற்படுகிறான். துரியோதனன் மறுமொழி சொல்வதற்குள் துரோணர் தன் அம்பால் அவன் நெஞ்சை அறைந்தார். குருதி வழிய அவன் தெறித்து மண்ணில் விழுந்து உருண்டு எழுந்து நின்றான். “சொற்களை கேளாதீர்கள். அவனை கொல்லுங்கள்!” என்று துரோணர் கூவினார். “அவன் வில்லில் எழுந்தது தொல்லசுரர்களின் ஆற்றலென்பதை மறக்கவேண்டியதில்லை. கொல்லுங்கள் அவனைஎன்றார். 

அவன் தயங்குகிறான். ஆனால் துரோணர் தயங்கவில்லை.

அதேசமயம் அந்த உச்சத்தில் கர்ணன் தயங்கவில்லை. அவன் தயங்கினாலும் உச்சத்தில் அவனுக்கு ஒரு மனநாடகம் தேவையாகிறது. அதன்வழியாக அவன் கடந்துசெல்கிறான். அவன் ஒருகணத்தில் அபிமன்யூவை அர்ஜுனனாகக் கண்டு அவன் மீதான சீற்றத்தை இவன் மேல் காட்டி தாக்கிவிடுகிறான். கர்ணனின் கையிலிருந்து விஜயம் தயங்கியது. அத்தருணம் தேர் திரும்ப உரக்க நகைத்தபடி ஒருகணம் அவனை நோக்கிய அபிமன்யுவில் இளைய அர்ஜுனன் தோன்றி மறைந்தான். சீற்றம்கொண்டு தன் நாணை இழுத்து அம்புகளால் அபிமன்யுவை அறைந்தான். மேலும் மேலுமென அறைந்து அபிமன்யுவின் தோள்கவசங்களை உடைத்தெறிந்தான்.

edgeல் கர்ணனைவிடவும் துரியோதனனே எஞ்சிநிற்கிறான்

சாரங்கன்

காவியம்



ஜெ


காவியத்தின் தன்மை பற்றிய விவாதத்தை இந்தத் தளத்திலே வாசித்தேன். நானும் நண்பர்களுடன் வாட்ஸப் குரூப்பில் இதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். காவியம் ஏன் மெல்லமெல்ல செல்கிறது என்றால் மிகவிரிவான வர்ணனைகளுக்காக. [அதேசமயம் சில இடங்களில் அது குதிரைபோல பாயும். சில இடங்களில் துப்பறியும் கதைபோலவும் ஆகும். சில இடங்களில் நாடகத்தன்மையையும் கொள்ளும்]

இந்த வர்ணனைகள் எதற்காக? வர்ணனைகள் இடத்தை கண்முன் காட்டுகின்றன. ஆனால் காவியத்தின் நோக்கம் அது மட்டும் அல்ல. காவியம் வர்ணனைகளை அப்படியே கவித்துவக்குறியீடுகளாக ஆக்கிக் காட்டுகிறது. உதாரணமாக குருஷேத்திரத்திற்குள் எப்படி பாதைகள் அமைக்கப்படுகின்றன என்பதை நாம் செந்நாவேங்கை முதல் பார்த்தோம். அந்தப்பாதைகள் எரிபரந்தெடுத்தலில் அப்படியே கருகி கரியாலான பாதையாக ஆகிவிட்டிருப்பதை இருட்கனியின் இறுதியில் பார்க்கிறோம். பாதைகள் இல்லாத இருள் என்ற அர்த்தம் அங்கேதான் வருகிறது. பாதை கருகுவது என்பதே அற்புதமான ஒரு போயட்டிக் இமேஜ் ஆக உள்ளது

வெண்முரசின் எல்லா வர்ணனைகளையும் இப்படி நம்மால் விரிவாகச் சொல்லிக்கொண்டே போகமுடியும். அவைஎல்லாமே வர்ணனைகள் அல்ல. கவித்துவ உருவகங்கள்


சாரதி.

Monday, June 24, 2019

மங்கலங்கள்




ஜெ

வெண்முரசு தொடங்கும்போது எனக்கு அரசமுறைமைகள், வாழ்த்தொலிகள், மங்கலச்செயல்பாடுகள் எல்லாம் பெரிய ஆர்வத்தை அளித்தன. அதன்பின் திரும்பத்திரும்ப வந்துகொண்டே இருக்கின்றன என்ற சலிப்பு ஏற்பட்டது. நீங்களும் ஒவ்வொருமுறையும் அதை எழுதச் சலிப்பதில்லை. ஒருமுறை நேரில் கேட்டேன். நம் கோயில்களிலுள்ள அலங்காரச்செதுக்குகள் போன்றுதான் அவை என்று சொன்னீர்கள். அவை திரும்பத்திரும்ப வந்துகொண்டுதான் இருக்கும் என்று சொன்னீர்கள். அது எனக்கு ஏற்புடையதாகவும் இருந்தது. ஆனால் இப்போது போரில் எல்லா முறைமைகளும் அழிந்து எல்லா மங்கலங்களும் அழிந்து எல்லாமே சிதைந்து கிடப்பதைப் பார்க்கையில் அதெல்லாம் பெரிய கனவுபோல தோன்றுகிறது. இந்த அழிவை இவ்வளவு ஊன்றிக்காட்டுவதற்காகத்தான் நீங்கள் அந்த மங்கலங்களை அவ்வளவு ஊன்றிக்காட்டினீர்கள் என்று புரிகிறது

ஆர்.எஸ்.கணேஷ்

ஓசைகள்



ஜெ,


வெண்முரசில் வரும் வர்ணனைகளை பெரும்பாலும் அவசரமாக வாசித்துக்கடந்துசெல்வதுதான் என் வழக்கம். ஆனால் கொஞ்சநாள் கழித்து அவ்வப்போது எடுத்து வாசித்துப் பார்ப்பேன். பலவரிகள் என்னை கொந்தளிக்க வைத்துள்ளன. வெறும் வர்ணனைகள் அவை. ஆனால் அவற்றை நான் பல கோணங்களில் புரிந்துகொள்வேன்

வெண்முரசின் ஒவ்வொரு நாவல் முடிந்தபின்னரும் ராண்டமாக பழைய நாவல்களின் அத்தியாயங்களை வாசிப்பது என் வழக்கம். அவ்வாறு நான் வாசித்த பகுதி இது

“ஓசைகளில் உள்ளது பருப்பொருட்களின் ஆன்மாவாக அமைந்துள்ள தெய்வம் என்பது யவனச்சிற்பிகளின் எண்ணம். ஆகவே ஓசைகளை முற்றிலும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். அங்கு பேசும் ஒலி எதுவும் இடைநாழிக்கு வராது. அவை மேலே குவைமாடத்தில் முட்டி அங்குள்ள சிறு துளைகள் வழியாக வெளியே அனுப்பப்பட்டுவிடும். இந்த மாளிகைகளில் குவைமாடங்களுக்கு விளக்கிடும்பொருட்டு ஏறுபவர்கள் அங்கு பெருமுரசின் ஓசை போல் முழக்கம் நிறைந்திருப்பதை கேட்பார்கள். ஆனால் அவைக்கூடத்தில் ஒவ்வொருவரும் பிறிதொருவரிடம் பேசுவது தெளிவாக கேட்கும்” 


இதிலுள்ள அர்த்தம் அன்று ஒன்று . இன்றைக்கு இன்னொன்று. அன்று அந்த மண்டபம் எவ்வளவு ஆன்மா இல்லாதது என்பதையே நான் புரிந்துகொண்டேன். ஆன்மாவை உறிஞ்சி வெளியேதள்ளும் மண்டபம் அது. இன்றைக்கு குருசேத்திரத்தில் எல்லா பொருட்களும் ஓசையை இழந்துவிட்டிருக்கின்றன. திரும்பத்திரும்ப ஓசையே இல்லை என்ற வர்ணனை வந்துகொண்டே இருக்கிறது


பாஸ்கர் 



குண்டாசியின் கதாபாத்திரம்



குண்டாசியின் கதாபாத்திரம் ஒரு தனித்தன்மை கொண்டது. ஆரம்பத்திலேயே ஒரு வாக்குமூலமாக அவனுடைய குணச்சித்திரத்தை அவனே சொல்லிவிட்டான். 

உச்சகட்ட வெறுப்பும் சினமும் மூண்டு எழுகையிலேயே முற்றிலும் இயலாமையையும் அறியும் ஒருவனைப்போல இரக்கத்திற்குரியவன் யார்?” அவன் தொடர்ந்தான். “அவன் தன்னை கோமாளியாக்கிக் கொள்கிறான். அல்லது ஆணவம் மிக்கவனாக காட்டுகிறான். தன்னந்தனித்து நின்று உலகின் முன் அறமுரைப்பவனாகவும், ஊழால் பழிவாங்கப்பட்டவனாகவும், அநீதியாகப் புறக்கணிக்கப்பட்டவனாகவும் சித்தரித்துக்கொள்கிறான். தீமையே உருக்கொண்டவனாக தோற்றம் தருகிறான். அன்பு கொண்டு உருகி அழுகிறான். உலகை நோக்கி இறைஞ்சுகிறான். ஒவ்வொரு நாளும் ஒரு வேடம். ஒவ்வொன்றும் கடும் தன்னிரக்கத்திலேயே சென்று முடியும் 

தீர்க்கமுடியாத வன்மம். ஆகவே கடைசியில் ஒவ்வொரு கௌரவர்களாக அவனே தன் கையால் சிதையில் எரிப்பதை அப்படித்தான் புரிந்துகொள்ளவேண்டும். அது ஒருவகை வஞ்சம் நிறைவேற்றல். கடைசியாக தானும் சாகிறான். அவனுடைய கதாபாத்திரத்தை வாரணவதம் எரிப்பு முதல் குருக்ஷேத்திரம் வரை ஒரு நீண்ட தனிநாவலாகவே எழுதிவிடமுடியும் என தோன்றுகிறது


சத்யமூர்த்தி

காவியம்




அன்புள்ள ஜெ

ஒரு வாசகர் செந்நாவேங்கை முதல் குருஷேத்திரம் மிக நிதானமாக ஒருங்குகூடுவதை பற்றிச் சொல்லியிருந்தார். இந்த அளவுக்கு டீடெயில் எதற்கு என்ற கேள்வியை என் நண்பர்கள் பலரும் கேட்டுக்கொள்வது உண்டு. உண்மையில் எபிக் என்பதே டீடெயில்தான். ஆகவே எந்த எபிக்கும் மிகமிக மெல்லத்தான் செல்லும். எபிக் வாசிப்புக்கு அவசியமானது பொறுமைதான். ஒட்டுமொத்தமாக அனைத்தையும் பார்ப்பதற்காகவே நாம் எபிக்கை வாசிக்கிறோம். முழுமையான பார்வைக்கு அவசியமானது பொறுமையான சீரான அணுகுமுறை. இது ஏதாவது ஒரு காவியத்தை வாசித்தால் புரியும்.

பொதுவாக நவீனநாவல்கள் வணிகநாவல்கள் மட்டுமே வாசித்தவர்களுக்கு இந்த வகையான பொறுமை இருப்பதில்லை. அவர்கள் எல்லாம் சுருக்கமாகவும் வேகமாகவும் சொல்லப்படவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இந்தச் சுருக்கம் என்பது ஏன் எபிக்கில் சாத்தியமில்லை? சுருக்கமாகச் சொல்லப்படும் கதைகள் எல்லாம் நாம் அறிந்த சூழலில் நிகழ்பவை. மௌண்ட்ரோட்டில் ஒரு விஷயம் நடைபெறுகிறது என்றால் மௌண்ட்ரோட்டில் எந்த இடம் என்று சொன்னால் மட்டும் போதும். ஆனால் குருக்ஷேத்திரத்தை குருக்ஷேத்திரம் என்று மட்டும் சொல்லிவிட்டால் போதாது. நுணுக்கமாகக் கண்ணில் காட்டியாகவேண்டும். அதைத்தான் வெண்முரசிலே காண்கிறோம்

சாரங்கன்

Sunday, June 23, 2019

வெண்முரசில் சில சந்தேகங்கள்:




அன்பின் ஆசிரியருக்கு,

வெண்முரசில் சில சந்தேகங்கள்:

1. மூத்தவர் என்றழைப்பது வயதால் தரப்படுவதென்றே புரிந்து கொண்டிருக்கிறேன், ஆனால் அங்கரின் புதல்வன் விருஷஷேனரை :பிரதிவிந்தியனும், யௌதேயனும் மட்டுமில்லாமல் உப கௌரவன் லக்ஷ்மணனும் அவரை மூத்தவரென்றே அழைக்கிறாரே  (கிருஷ்ணையின் மண நிகழ்வில்) ஏன்? கர்ணனின் துணைவிகள் கருவுற்றிருக்கும் போதே இளம் பாலகன் அல்லவா லக்ஷ்மணன்.

2. அஸ்வத்தாமர் ஏன் மணம் புரியவில்லை? பதினெட்டாம் நாள் போருக்குப் பின் இரவில் அவர் நிகழ்த்தப் போகும் நெறி மீறல்களுக்கு முன் அவரைப் பற்றிய தனி அத்தியாயங்களை நீங்கள் பகிரக்கூடும், அதில் அதற்கான விடையும் இருக்கலாம் என்றாலும், துரோணர் அவர் மேல் கொண்ட அன்பை அறிந்திருந்தோம். தன் பெயர் மைந்தரை, தன் குலமகளையும் காண அவர் விழைந்திருப்பார் அல்லவா? அதை அரிய ஆவல்.

3. மஹாபாரதத்தின் பிற மூலங்களில் எஞ்சியிருக்கும் கர்ணனின் புதல்வனாக விருஷகேதுவைச் சொல்கிறார்கள், ஆனால் வெண்முரசில் பிரசேனன் இருக்கிறார். ஆனால் வெண்முரசையே முதன்மைப் பிரதியாக நான் கொள்வதால் இது சிக்கலாகத் தோன்றவில்லை.

வெண்முரசை விஷுவலாகவும் அவ்வப்பொழுது எனக்குள் நிகழ்த்திக் கொள்வதுண்டு

குந்தி தேவி - சோனியா காந்தி
இளைய யாதவர் - மாதவன் (அந்த புன்னகை ததும்பும் முகம்)
பிதாமகர் (வயதான) - சத்யராஜ்

இவ்வாறாக. விரைவில் தீயின் எடையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.

நன்றி
சிவா

மூத்தவர் என வயதின் அடிப்படையிலேயே அழைக்கப்படுகிறது. ஆனால் குலமுறைப்படி மூத்தவரின் மைந்தரும் மூத்தவர் என அழைக்கப்படுவதுண்டு

அஸ்வத்தாமனின் மனைவி பற்றி மகாபாரதம் எதையும் சொல்லவில்லை. அவன் பிரம்மசாரி என்றும் சொல்லவில்லை. அவனுக்கு மனைவியும் மைந்தரும் இருந்தனர் என்பது நாட்டார் மகாபாரதக் கதை

மகாபாரத வடிவங்களில் ஏதேனும் ஒன்றில் உள்ளதே இங்கே பின்பற்றப்படுகிறது. சிலசமயம் இன்னொரு வடிவில் உள்ளது வேறு ஒருவகையில் சொல்லப்பட்டிருக்கும்

ஜெ

அனலோன்


ஜெ,

நான் இப்போதுதான் பன்னிரு படைக்களம் படித்துக்கொண்டிருக்கிறேன் அதை நிறுத்தி நிறுத்தித்தான் என்னால் வாசிக்க முடிகிறது. அதன் உள்ளர்த்தங்கள் பல பிடிகிடைக்கவில்லை. ஆனால் கூடவே கார்கடலில் தொடங்கி இப்போது வந்துகொண்டிருக்கும் வெண்முரசையும் வாசிக்கிறேன். அது பழைய அத்தியாயங்களில் பல புதிய அர்த்தங்களை எனக்கு அளிக்கிறது

உதாரணமாக பன்னிரு படைக்களம் அமைந்த களத்தின்மேல் பாலாழி கடையும் ஓவியம் உள்ளது. அதை இப்படி வெண்முரசு வர்ணிக்கிறது.


வாசுகியின் செவ்விழிகள் எரிந்த பெருந்தலை முக்கண்ணன் அருகே வாய்திறந்திருந்தது.  அவனருகே சற்று அஞ்சியவனாக அவன் துணை நின்றிருந்தான். வாசுகியின் உடலின் முதல்வளைவை இந்திரன் பற்றியிருந்தான். முடிவுச்சுருளை அனலோன் பிடித்திருந்தான்.  உச்சகட்ட விசையுடன் உடல் திமிறிய தேவர்கள் பெரும்பரப்பென அவ்வரைவட்டத்தை நிறைத்திருந்தனர். அவர்களுக்கு நடுவே கருவண்ணக் கோல நெளிவுபோல வாசுகியின் உடல் புகுந்து வளைந்து வந்தது. மறுபக்கம் கருநீலநிற உடல் கொண்ட அசுரர்கள் வளைந்து தங்களுக்குள் புகுந்து கரந்து எழுந்து நிறைந்த வாசுகியின் வாலை பற்றியிருந்தனர். குவைக்கூரை முகடின் மையக்குமிழி மேரு மலையெனத் தெரிந்தது.

இந்த காட்சியை அப்படியே குருஷேத்திரத்துடன் நான் ஒப்பிட்டுக்கொண்டேன். குருஷேத்திரத்தைத்தான் ஸிம்பாலிக்காக அந்த ஓவியம் காட்டுகிறது. முடிவுச்சுருளை அனலோன் பிடித்திருந்தான் என்ற வரி எனக்கு 17 ஆம் நாள் போரில் கடைசி அழிவை நெருப்பு நிகழ்த்துவதைத்தான் குறிப்பிடுவது போல் இருந்தது

இதையெல்லாம் கணக்கிட்டு நீங்கள் எழுதமுடியாது. ஆனால் இதெல்லாம் உங்கள் மனதுக்குள் இருந்துகொண்டிருக்கின்றன என நினைக்கிறேன்

ஜெயராஜ்

கிருதவர்மன்




ஜெ,

கிருதவர்மன் இறந்த மனிதனாக சென்று சிதையில் எரியூட்டி வெறிநடனம் ஆடும் இடம் குரூரமானது. ஆனால் கிருதவர்மன் எங்கிருந்து எப்படி அங்கே வந்தான் என்று பார்க்கையில் ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு சின்ன வன்மம் வளர்ந்து வளர்ந்து அவனை ஒரு கொடுந்தெய்வம்போல ஆக்கிவிட்டது. அவனிடம் வஞ்சம் தேவையில்லை செல்க என்று சிகண்டி சொல்கிறார். வஞ்சத்தின் விளைவு ஒன்றுமே இல்லை என அவர் உணர்ந்துவிட்டிருக்கிறார். ஆனால் ஒன்றும் செய்வதற்கு இல்லை. வஞ்சம் கொண்டவர் அந்த இலக்கு நோக்கிச் சென்றுகொண்டேதான் இருப்பார்

ராஜ்

களம்




செந்நாவேங்கை முதல் போர்க்களக்காட்சிகள் மெல்லமெல்ல உருவாகி வருவதை இப்போது ஒட்டுமொத்தமாக வாசிக்கிறேன். செந்நாவேங்கையில் எதற்காக இந்தப்போர்க்களத்தை இந்த அளவுக்கு விவரிக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அணுவணுவாக, துளித்துளியாக குருஷேத்திரம் உருவாகி வந்தது காட்டப்பட்டது. எப்படி குடில்கள் அமைக்கப்பட்டன. எப்படி கொட்டகைகள் போடப்பட்டன. எப்படி பாதைகள் அமைக்கப்பட்டன. மருத்துவநிலைகள், கொல்லன் உலைகள், சிதைகள் எல்லாமே துல்லியமாகக் காட்டப்பட்டன. இன்று தான் அது ஏன் என்று புரிகிறது. இப்போது துளித்துளியாக அப்படியே அவை ஒட்டுமொத்தமாகப் பிரிக்கப்படுகின்றன. ஒவ்வொன்றாக அழிகின்றன. எப்படி ஒன்றாகத்திரண்டதோ அப்படியே அழிகிறது. குழந்தை வளர்ந்து இளமையை அடைந்து முதுமையை அடைந்து செத்துவிடுவதுபோல தோன்றுகிறது. அந்த நிதானமான திரண்டுவரும் காட்சியும் இப்போது நிதானமாக அழிந்துபோகும் காட்சியும் ஒரு பெரிய காவியத்தன்மையுடன் உள்ளன

ஜெயராமன்