Sunday, December 31, 2017

தன்னுரைகள்



அன்புள்ள ஜெ

வெண்முரசின் இந்நாவலில் மனவியல் அம்சங்கள் அதிகம். மனதையே நவீன இலக்கியம் எழுதமுயன்றிருக்கிறது. டோஸ்டெயெவ்ஸ்கி அதை டிரமாட்டிக் மனலாக் வழியாகச் சொன்னவர். பிறகு நிறைய முயற்சிகள் வந்தன. ஸ்டிரீம் ஆஃப் கான்ஷியஸ்நெஸ் போல. எல்லாமே இந்நாவலில் நீங்கள் மீண்டும் டோஸ்டெயெவ்ஸ்கியிடம் சென்றிருக்கிறீர்கள். குற்றமும் தண்டனையும், கரமசோவ் சகோதரர்களில் வருவதுபோல நீண்ட தன்னுரைகள். மறுவிளக்கங்கள். ஒரு கதாபாத்திரத்தை இன்னொன்று ஆழமாக ஆராய்வது. அந்த புனைவு உத்தி இது பழையபாணி கிளாசிக்கல் கதை என்பதனால் நன்றாகவே பொருந்துகிறது. ஒரு சபையில் அசலை பேசும்போது ஓக்கே என்று தோன்றுகிறது. அதையே ஒரு ஆபீஸில் ஒருவர் பேசினால் பொருந்தாமலிருக்கும் என நினைக்கிறேன். இங்கே வெளிப்படும் மனநாடகங்களும் நுட்பங்களும்தான் இதை சிறந்த இலக்கியப்படைப்பாக ஆக்குகின்றன


ராம்குமார்

உளவு



அன்புள்ள ஜெயமோகன்

இந்த நாவல் முழுக்கவே வார்த்தைகளால் மாறிமாறி உளவு பார்த்துக்கொள்வதாகவே இருக்கிறது. ஒருவரின் உள்ளத்தை இன்னொருவர் இழுத்து வெளியே போடுகிறார். போருக்கு முன்னால் என்னென்ன வகையான மனநாடகங்கள் நடந்தன என்று சொல்வதுதான் இந்த நாவலின் நோக்கம் என நினைக்கிறேன். ஒவ்வொருவருக்கும் சொல்வதற்கு சில உள்ளன. அதற்கு அப்பால் அனைவருக்கும் ஆழத்தில் வேறு ஒன்றும் உள்ளது. அந்த இரண்டையும் கலந்து கலந்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அசலை போல ஒரு கதாபாத்திரம் எழுந்துவந்து கிழித்து தூக்கி வெளியே போடும்போது இது கொஞம்தான் இன்னும் நிறைய உள்ளே இருக்கிறது என்று எண்ணசெய்வதே நாவலின் வெற்றி என நினைக்கிறேன்


மணி

மெய்



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

தப்புவதற்கு இடமே கொடாமல் எத்தனை கூர்மையுடன் பீஷ்மரை தாக்குகிறாள் அசலை? முந்தைய அத்தியாயத்தில் காந்தாரி பீஷ்மரிடம் பேசித் திரும்புகிறாள்.  அவரது கருத்துக்களின் தாக்கம் பெறுகிறாள்.  அவர் கூறுபவை மெய் என்கிறாள்.  அசலையோ மீண்டும் சென்று தொடுக்கும் தாக்குதலில் அவரைப் பதறச் செய்து தன்னைப் பற்றி அவள் கூறுபவையெல்லாம் உண்மைதானென்று அவர் கருதுமாறு செய்துவிடுகிறாள்.

"நான் அறிந்த அரசுசூழ் உரைகளில் இப்போது நீ நிகழ்த்தியதே மிகச் சிறந்தது."  ஒருவரைப் பற்றி அவர்  ஒருபோதும் கருதி இராதவற்றைக் கூறி, ஒருவேளை இதுதான் நம் நிஜமோ என்று அவரே எண்ணும்படியாக செய்துவிடுவது பெரும் திறம்தான் (பீஷ்மரைக் குறித்து அல்ல).  ஆனால் அவ்வாறு தம் குறித்தே அய்யம் கொண்டு தடுமாறி பதறுபவர்கள் ஒருவகையில் அப்பாவிகளே.  அசலை சொல்வது போல் "குருதியறத்தை மட்டுமே அறிந்தவர்கள், ஐயமின்றி தன் கடமையை ஆற்றுபவர்கள், ஊழ்கத்தில் அமர்ந்து உய்பவர்கள் தங்கள் மெய்யுருவிலேயே அமைகிறார்கள்."  மூடனாகவோ அல்லது மெய்ஞானியாகவோ அல்லாமல் இருப்போர்க்கு ஒவ்வொன்றிலும் அய்யத்தின் நிழல் பின்நிற்கும் போலும்.


அன்புடன்
விக்ரம்
கோவை

சிறுதாய்க்குருவி



இனிய ஜெயம் ,

அசலை பீஷ்மரை , எங்கே எந்த ஆயுதம் கொண்டு தாக்க வேண்டுமோ அதை சரியாக செய்கிறாள் .

// “தன் குஞ்சுகளைக் காக்க சிறுதாய்க்குருவி கருநாகத்தை கொத்தி துரத்துவதை தாங்கள் கண்டிருக்கலாம். இது அன்னையரில் தெய்வங்கள் எழுந்தளிக்கும் ஆற்றல்” //

ஆம் அசலை ஒரு தாய்க்குருவிதான் . ஆனால் அந்த தாய்க்குருவியின் குஞ்சுதான் ,  அங்குள்ள குஞ்சுகளிலேயே மிக பாவமானது .

//மைந்தனை நினைக்கும்போது அவனை சிறுமகவாக கையிலேந்தி முலையூட்டிய நினைவுகளும், அவன் வந்து புன்னகைத்த கனவுகளும் கூடி எப்போதும் அவளை உளம் நெகிழச் செய்வதுண்டு. அவள் அந்நினைவுகளை தன்னைச் சூழ பரப்பி அதில் வாழ்ந்தாள். தன்னறையில் அவனுடைய இளமைக்கால ஆடைகளை வைத்திருந்தாள். அறைக்குள் அவற்றை வெவ்வேறு இடங்களில் பொருத்திவைத்து ஒவ்வொரு நாளும் அவனை ஒவ்வொரு அகவையில் உளம்பார்த்துக்கொண்டிருந்தாள். அவனைக் குறித்த தன் எண்ணங்களை ஒவ்வொரு நாளும் ஓலையில் எழுதி பேழையில் சேர்த்து வைப்பாள். பின்புலரியில் அவன் எப்போதும் அவள் கனவில் வந்தான்.
அவனுக்கு வெவ்வேறு மணங்கள் இருந்தன. கைக்குழந்தையாக இருக்கையில் அவன் வாயிலெழுந்த சற்றே புளித்த முலைப்பாலின் மணம். ஓடிவிளையாடுகையில் உலர்ந்த வியர்வையின் மணம். அவன் தலையிலெழும் எண்ணெயும் தாழம்பூவும் கலந்த நெடி. வளரும்போது அவன் உடல்மணம் மாறத்தொடங்கியது. உப்பு கலந்த மண் மணம். கசங்கிய தழை மணம். பின்னர் குருதியின் கிளர்ச்சியூட்டும் மணம். ஆண்புரவிகளிலும் களிறுகளிலும் அந்த மணத்தை அவள் அறிந்திருந்தாள். அன்று காலை எந்த மணத்தில் அவன் தன் கனவில் தோன்றுவான் என்பதை முந்தைய நாளிரவில் படபடப்புடன் எண்ணிக்கொள்வாள். அவள் எண்ணியதைக் கடந்து முற்றிலும் புதிய தோற்றத்திலேயே அவன் எப்போதும் இருந்தான்.//
அசலையின் நினைவில் எழும் துருமசேனன் இவன் .
//துருமசேனன் “அன்னையே, போர் வந்துகொண்டிருக்கிறது என்கிறார்களே. மெய்யாகவா?” என்றான். “எவர் சொன்னது?” என்றாள். “மூத்தவர் சொன்னார். ஆகவே நாங்களெல்லாம் முறையாக கதை பயிலவேண்டும் என்றார்.” அசலை “போர் வராது” என்றாள். துருமசேனன் “வரும்!” என்று உரக்க சொன்னான். “அதில் நாங்களெல்லாம் இறந்துபோவோம்.” அசலை நெஞ்சு உறைய சிலகணங்கள் நின்று பின் கடந்து “என்ன சொல்கிறாய், அறிவிலி?” என்றாள். “நிமித்திகர் பார்த்துவிட்டார்கள். எங்களிடம் செவிலி காந்திமதி வந்து சொன்னாள்” என்றான் துருமசேனன். “நான் போரில் இறப்பதற்கு முன் நூறுபேரை கொல்வேன்.” அசலை “அதெல்லாம் வெறும் செய்திகள். போர் நிகழப்போவதில்லை” என்றாள்.//
அசலையின் கண் முன் நிற்கும் துர்மசேனன் இவன் .
இந்த நாவலின் ரணவேதனை மிக்க பகுதியே இதுதான் . பிறக்க வேண்டும் ,வளரவேணும் ,அரசன் சொல்வான் ,அதன்படி ஆயுதம் பயில வேண்டும், போர் வருகிறது நீ செத்துப்போவாய் என ஒரு ஜோசியன் சொல்வான் ,செத்துப் போவதற்குள்  அவனுக்கு திருமணம் முடித்து ,எவள் வயிற்றிலேனும் அவனது வாரிசை உருவாக்கிவிடு என மூத்தோர் சொல்வர் .
நான் இறப்பதற்குள் நூறு பேரை கொல்வேன். துர்மசேனன்  அவனது குறுகிய வாழ்வுக்குள் அவனால் வகுத்துக்கொள்ள இயன்ற ஒரே இலக்கு .
நான் அசலையின் இடத்தில் இருந்தால் இவன் பொருட்டு நூறு முறை பீஷ்மரை கொல்வேன்.
அனைத்தையும் கடந்து விளக்க இயலா காதல்  ஒன்று கூடவே தொடருகிறது .
ஆம் துர்மசேனனுக்கு அசலை இடும் பெயர் கிருஷ்ணன்.

Saturday, December 30, 2017

பெண்கள்



ஜெ

மகாபாரதம் பலமுறை கேட்டிருந்தாலும்கூட திரௌபதி வஸ்திராபகரணம் பற்றி கௌரவர்வீட்டுப் பெண்களும் மற்ற பெண்களும் என்னதான் எண்ணினார்கள், அவர்களெல்லாம் எப்படி எதிர்வினையாற்றினார்கள் என்பதெல்லாம் நான் யோசிக்கவேஇல்லை. முதன்முதலாக பன்னிரு படைக்களத்தில் அந்த ஆடைகள் பெண்களால் அளிக்கப்பட்டவை என்று வாசித்ததும் மிகப்பெரிய மன எழுச்சியை அடைந்தேன். என் அம்மாவிடம் அந்த கேள்வியைக்கேட்டேன். பானுமதி காந்தாரி முதலான கற்பரசிகள் என்னதான் செய்தர்கள். அம்மா சொன்னார் அவர்கள் பதிவ்ருதைகள் அவர்கள் கணவர்களை எதிர்க்கமாட்டார்கள். ஆனால் நான் பன்னிருபடைக்களம் கதையைச் சொன்னதும் அம்மா ஆமாம் அப்படித்தான் நடந்திருக்கும் என்று சொன்னாள். இப்போது காந்தாரி, அசலை பானுமதியின் மனநிலைகளை, அவர்கள் கணவர்களைப்புறக்கணித்ததைச் சொன்னபோது ஆமாம் சரியாகத்தான் உள்ளது என்றுதான் அம்மா சொன்னார். இந்தக்கதை மகாபாரதத்திலே இல்லை என்று நான் சொன்னேன். இருந்திருந்தால் இப்படித்தான் இருந்திருக்கும் என்று அம்மா சொன்னாள். ஆச்சரியமாக இருந்தது


சித்ரா

கள்ளமற்ற தன்மை



பேரிழப்பு அணுகுவது அவருக்கே. எனவே அதன் கருத்துளியும் அவரிலிருந்தே எழுந்திருக்கும் – இது தாரை காந்தாரியைப்பற்றிச் சொல்லும் முதல் விமர்சனம். ஊழ் கொள்கையின்படி இதுவும் உண்மை. இதை மகாபாரதத்தில் இறுதியில் கண்ணனும் காந்தாரியிடம் சொல்கிறார் என நினைக்கிறேன். தாரை மகாபாரதத்தில் இல்லாத கதாபாத்திரம். அப்படி ஒருகதாபாத்திரத்தை விகர்ணனின் மனசாட்சியின்குரலாக உருவாக்கியிருக்கிறீர்கள். விகர்ணன் ஓர் அரசியல்சூழ்மதியன்போலப்பேசுகிறான். அவனுக்குள் இருப்பது தாரை உருவாக்கிய கள்ளமற்ற தன்மையின் அறச்சார்புதான்


மகாதேவன்

அன்னை ஓநாய்



அசலையின் சீற்றத்தை வாசித்துக்கொண்டிருந்தபோது அவளை ஒரு அன்னை ஓநாய் என்ரு எண்ணிக்கொண்டேன். அவள் குரூரமானவளாக இருக்கிறாள்.எதிரே நிற்பவர்களை எல்லாம் கடித்துக்குதறிவிடுகிறாள். அவளுக்கு எவர்மேலும் இரக்கமே கிடையாது. ஏனென்றால் அவள் தன் குட்டிகளைக் காப்பாற்ற நினைக்கும் அன்னை

அந்த இரக்கமற்ற தன்மையால்தான் அவளால் மிக மிக எளிதாக சில உண்மைகளைத் தொட்டுவிடமுடிகிறது. உண்மையைச் சென்று தொடுவதற்கு ஒருவகையான வேகம் தேவைப்படுகிறது. அந்த வேகம் இவ்வாறு குட்டிகள்மீதான பிரியமாக விலங்குபோல வெளிப்பட்டாகவேண்டியிருக்கிரது


மகேந்திரன்

முற்றுறுதியான தோல்வி



அன்புநிறை ஜெ,

இன்றைய குருதிச்சாரலில் காந்தாரி-பீஷ்மர் உரையாடல் வாசித்து நனைந்த கண்களோடு எழுதுகிறேன். இரக்கமேயில்லாத எழுத்துக்களை எழுதிய உங்களை 'அன்புநிறை' என்றன்றி வேறு எவ்வகையிலும் எண்ணவும் முடியாத முரண் நிலை. 

வங்கிப் பணியிலிருந்து ஓய்வுக்குப் பின் 'குளுகோமா' என்ற மெதுவாகப் பார்வைத்திறனைப் பறிக்கும் நோயால் பாதிக்கப்பட்டு, ஏழெட்டு வருடங்களில் முற்றிலும் கண்பார்வையை இழந்த எனது தந்தையின் இறுதிக் காலகட்டம் கலங்கிய கண் முன் நிழலாடியது. அசலை வழியெங்கும் விவரித்துக் கொண்டே செல்வது போலத்தான் அம்மாவும் அவரது விழியென இறுதிப் பத்தாண்டுகளைக் கழித்தாள். தனது மகுடத்தை எங்கும் இறக்கி வைக்க இயலாத, வணங்காத ஆளுமையும் (ஆணவமும் என்றும் வாசிக்கலாம்) கொண்ட மனிதர் வயோதிகமும் உடற்குறையும் சேர, தன் இணையின் கைபற்றி சொல் கேட்டு நடந்த நாட்களில் மீண்டும் இன்று நின்றேன். கொஞ்சம் கொஞ்சமாக ஆளுமையைக் கரைத்து வேறொன்றாய் மாற்றியது முதுமை. கை கால் நடுக்கமோ புலன்கள் செயல் குன்றுவதோ அல்ல மெல்லச் சேகரித்த அனைத்தையும் திருடும் காலத்தின் முன் செய்வதறியாது பதைத்து நிற்பதே முதுமை. 

இரக்கமேயற்ற முதுமையின் முன் அனைவரும் அனைத்து ஆயுதங்களையும் இழந்து நிற்கும் நிலையை பீஷ்மரின் வார்த்தைகளாக வாசிக்கும்போது மானுடத்தின்பால் பெரும் கழிவிரக்கம் தோன்றுகிறது.

//முதியவர்களின் கெடுநரகம் என்பது இளையோரால் மறுக்கப்படுதல்.; நோயிற்கொடிது முதுமை. உளநிகரை, அறிவை, மெய்யுணர்தலை அழிக்கிறது. வெற்றுத்தசைக்குவியலென மானுடரை ஆக்குகிறது. அனைத்தையும் அழித்த பின்னரும் இருந்துகொண்டிருப்பதற்கான விழைவை மட்டும் எச்சம் வைக்கிறது//

எத்தகைய ஆயுதங்களைக் கைக்கொண்டிருந்தாலும் 
முற்றுறுதியான தோல்வியை நோக்கிச் செல்லும் மானுடப் பயணத்தில் எத்தனை ஆரவாரம்! எத்தனை ஆணவம்!! 
'சிற்றெறும்புகளின் களிக்களத்தில் பெருங்களிறு நுழையலாகாது' என்று பிரத்யும்னன் கூற்றாக வருவது போல இப்பேரியற்கை அற்ப மனிதனை வைத்து ஆடும் களிக்களத்தில் காணும் உவகைதான் என்ன. ஒரு இடைவிடாத லாரல் அன்ட் ஹார்டி அல்லது சாப்ளின் படத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறதோ பேரிறை. அபத்தங்களும் சோகங்களுமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் கோமாளிகள். திரை இறங்கியதும் நடிப்பென்று புரிந்து விடுமென்ற நம்பிக்கை மட்டுமே ஆறுதல்.

எனினும் வயோதிகத்தின் வெறுமையை வார்த்தைகளில்
முன்வைத்துவிட்டு வில் என உடல் துள்ள எழும் பிதாமகரின் உள்ளே உலராமல் இன்னும் மிச்சமிருக்கிறது களம் காண விழையும் ஒன்று.

மிக்க அன்புடன்,
சுபா

Friday, December 29, 2017

அன்பில்லாமை



ஜெ

தான் அன்பில்லாதவராக ஆகிவிட்டேன் என்றும் அது பெரிய விடுதலை என்றும் பீஷ்மர் சொல்வதும் ஒரு வகையில் அதை காந்தாரி புரிந்துகொள்வதும் எனக்கு பெரிய ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது. கொஞ்சம் வயதானவன் என்பதனால் நானே இதை உணர்ந்துகொண்டிருக்கிறேன். சுயநலம் சார்ந்த அன்புதான் கொஞ்சமாக மிச்சமிருக்கிறது. என்ன தோன்றுகிறதென்றால் என்னைச்சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி கெட்டசெய்திகள் என்னை வந்துசேரவேண்டாம் என்று தோன்றுகிறது. எனக்குத்தெரியாமலிருந்தால்போதும் என்னவேண்டுமென்றாலும் நடக்கட்டுமென்று நினைப்பேன். இது அன்பில்லாத மனம்தானே என்று நினைப்பேன். அதைத்தான் பீஷ்மரின் நிலையில் கண்டேன். அது இயல்புதான் என்று தோன்றியது


கல்யாணராமன்

அன்றாடநுட்பங்கள்



அன்புள்ள ஜெ

வெண்முரசின் நுட்பங்களில் முக்கியமானது அன்றாடவாழ்க்கையின் நுண்மைகளை அது தொட்டுத்தொட்டுச் செல்வது என நினைக்கிறேன். உதாரணமாக பீஷ்மரிடம் பேசும்போது காந்தாரி அவர் இருந்த சூழல் அவருடைய மனநிலையைத் தீர்மானிக்கிறது என்கிறாள். அவர் சோலையில் இருந்தமையால் தன்னை ஒரு முனிவராக பாவனைசெய்துகொண்டிருக்கிறார். அவர் மட்டும் ஆயுதப்பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தாரென்றால் வேறுமாதிரி இருந்திருப்பார். இதைப்போல பல விஷயங்கள் வந்தபடியே இருக்கின்றன. மையக்கதையை நாம் கவனித்தால் இந்த நுட்பங்களைத் தவறவிட்டுவிடுவோம் என நினைக்கிறேன்


ஆனந்த்

இரண்டு கோணங்கள்



ஜெ

வெண்முரசிலே எப்போதும் என்னைக்கவரும் அம்சம் ஒன்று உண்டு. பல நுட்பமான உளவியல் அம்சங்களைப்பற்றிப் பேசிக்கொண்டிருப்பவர்கள் இரண்டுவகையினர். ஒருவர் ஒரு கோணத்திலும் இன்னொருவர் இன்னொரு கோணத்திலும் அதைப்பார்ப்பார்கள். ஒரு நிகழ்ச்சிக்குப்பின்னரோ அல்லது ஒருவரை பற்றி விவாதிக்கும்போதோ ஓர் அத்தியாயம் முழுக்க இப்படி ஒரு உரையாடல் நீண்டுவளர்வதைக் கானலாம். அதை உரையாடலாகக் கொண்டு அப்படியே கடக்காமல் இரண்டு வெவ்வேறுபார்வைகள் என்று எடுத்துக்கொண்டால் அதிலுள்ள நுட்பங்கள் ஆச்சரியப்படுத்தும்தன்மைகொண்டிருக்கும். 

உதாரணமாக பீஷ்மரை சந்தித்துவிட்டு அசலை, காந்தாரி இருவரும் வருகிறார்கள். இருவரின் மனநிலையும் வேறுவேறு. காந்தாரி கொஞ்சம் எம்பதியோடு பீஷ்மரைப்புரிந்துகொள்ள முயற்சிசெய்கிறாள். அவரை அணுக்கமாக அணுகிச்சென்று தன்னைவைத்துப் புரிந்துகொள்கிறாள். ஆனால் அசலை எதிர்நிலை எடுத்து அறுவைசிகிச்சைக் கத்தியின் கூர்மையுடன் ஆராய்கிறாள். இரண்டுமே சமம்தான். இரண்டும் இரண்டு பீஷ்மர்களை நமக்குக் காட்டுகின்றன. இப்படி ஒவ்வொரு சிறுதருணமும் பலவாக ஆராய்ந்து பலகோணங்களில் பேசப்படுவதே வெண்முரசின் காப்பியத்தன்மையின் அடிப்படையாக உள்ளது


மனோகர் 

தனிமனிதம் சார்ந்த ஒரு அறவுணர்வு



ஜெ,

நீதி என்பது என்ன என்ற கேள்வி பலமுறை வெண்முரசிலே வருகிறது. அதையெல்லாம் தனித்தனியாகத் தொகுத்து பார்க்கவேண்டுமென நினைத்துக்கொண்டே இருக்கிறேன். நீதி என்பது தனிமனிதனின்பொருட்டு சமூகம் பழிவாங்குவதே என்பது ஒரு பார்வை. தனிமனிதனின் பொருட்டு சமூகம் செய்யும் தண்டிப்பு என்றும் சொல்வார்கள். ஆனால் தனிமனிதம் சார்ந்த ஒரு அறவுணர்வு ஈதரில் அப்படியே நின்றிருந்து தலைமுறைகளுக்குச் செல்வது என்றும் ஆகவே மன்னிப்பதற்கெல்லாம் தனிமனிதர்களுக்கு உரிமையில்லை என்றும் தனிமனிதர்கள் மன்னிப்பு செய்வது அவர்களுக்கு தனிப்பட்டமுறையிலே மட்டுமே உதவிகரமானது என்றும் வெண்முரசிலே வாசித்தபோது ஒரு மன எழுச்சி எழுந்தது. நண்பர்களிடம் அதை விரிவாக விவாதித்தேன்


ஜெயராஜ்

தாரையின் வார்த்தைகள்



அன்புள்ள ஜெ,

விகர்ணனின் துணைவி தாரையின் வார்த்தைகள் காந்தாரியை மட்டுமல்ல, வாசகர்களாகிய எங்களையும் தான் அசைத்து விட்டன. மழலை மொழியில் எத்தனை கூரிய கூற்று. சொற்களுக்கு 'கூற்று' எனப் பெயரிட்டவனை எண்ணி வியக்காமலிருக்க முடியவில்லை. 

மழைப்பாடலில், தன் தம்பியின் கனவுகளைப் பகிர்ந்து கொண்டதாகக் கூறிய வசுமதி, விழியிழந்த தன் கணவனின் உள்ளத்தோடு ஒத்திசைந்த தருணத்தில் கேட்ட தமிழ்ப் பண்ணால், தன் விழிகளை மூடிக் கொண்ட பின் காணாமல் போகிறாள். அப்படி சென்று விட முடியுமா என்ன? அவள் தான் சகுனியின் உருவில் கலந்து விட்டிருந்தாளே!! அதைத் தான் இன்று தாரை போட்டு உடைத்து விட்டாள். 

பன்னிரு படைக்களத்தில் விகர்ணனிடம் வந்த அற உணர்வின் ஊற்று எது என இன்று கண்டு கொண்டேன்.

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்

தேய்ந்து மறையும் வஞ்சம் (குருதிச்சாரல் - 6)



  ஒருவர் நமக்கு அநீதி இழைத்துவிடும்போது அவர் மீது நமக்கு கோபம்  ஏற்படுகிறது.   நாம் அவரைத் தண்டிக்க நினைக்கிறோம்.     அந்த அநீதியை நினைத்து மனம் குமுறுகிறது.  அநீதி இழைத்த நபரை பழிவாங்க இயலாத நிலையில் நாம் இன்னும்  கீழ்மைப்படுத்தப்பட்டதாக உணர்கிறோம்.  துயரம் கோபம் அவமானம் போன்ற உணர்வுகளால் மூழ்கடிக்கப்படுகிறோம். அவ்வுணர்வுகள் வஞ்சமெனத் திரண்டு  ஒரு பெரிய பாறையாக உள்ளத்தில் கனத்து நிற்கிறது. அது நம் இதயத்தை ஆக்கிரமிக்கிறது,   சொல்லில் வெளிப்படுகிறது,   அன்றாட செயல்களை பாதிக்கிறது.   அந்த அநீதியினால் நம் வாழ்வில் எற்பட்ட தீங்கான விளைவுகள்,   பொருள் ரீதியான பாதிப்புகள் ஆகியவற்றை சிலமயம் ஈடு செய்துகொள்கிறோம் அல்லது அந்த குறைகளோடு வாழப் பழகிக்கொள்கிறோம்.  ஆனால் அப்போது உருவாகிய வஞ்சம் நீண்ட நாட்களுக்கு நம் மனதில் இருந்துகொண்டே இருக்கிறது.
      

ஆனால் அந்த வஞ்சமும்  நாட்கள் செல்லச் செல்ல  மெல்லத்  தேய்கிறது.  வாழ்க்கை என்ற பெருங்கடலின்  பெருகி வரும் அலைகள்  பாறையென திரண்டிருக்கும் வஞ்சத்தை சிறிது சிறிதாக  கரைக்கின்றன.  சிலசமயம் அது முற்றிலுமாக கரைந்துபோவதும் உண்டு.  அப்படி கரைந்து போகையில்தான் ஒருவர் தனக்கிழைக்கப்பட்ட அந்த அநீதியில் இருந்து முற்றிலுமாக விடுபடுகிறார்.     இப்படி வஞ்சத்திலிருந்து வெளிவருவது ஒன்றும் அரிதான நிகழ்வல்ல.  தன் உறவினரைக் கொன்ற கொலையாளியை மன்னித்துவிட்டதாகச் சொல்லும் மனிதர்களை நாம் பார்த்திருக்கிறோம்.  


  திரௌபதி  பன்னிரு படைக்களத்தில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக கொண்டிருந்த  வஞ்சத்தை நாம் அறிவோம்.   மிகுந்த அறிவாற்றலும் உள்ள உறுதியும் கொண்ட திரௌபதியை  அந்த வஞ்சம் எவ்வளவு தீவிரமாக ஆட்கொண்டிருந்தது என்பதை கண்டிருக்கிறோம். மாயையின் வாயிலாக அவள் உரைத்த வஞ்சினம் இப்போதும் ஒருவருக்கு நடுக்கத்தைத் தருவது. தருமர் அவள் கொண்டிருந்த வஞ்சத்தையும் அதைப்போல் தான் கொண்டிருந்த வஞ்சத்தையும் பற்றி இவ்வாறு கூறுகிறார். 


கான்வாழ்க்கையில் நீ இருந்த நிலையை நான் கண்டிருக்கிறேன். ஆண்டுக்கணக்கில் கந்தமாதனம்போல கனன்றுகொண்டிருந்தாய். எத்தனை இரவுகளில் துயில்நீத்திருப்பாய் என நான் சொல்லமுடியும். துயிலில்லாது உளம்வெந்து நான் எழுந்துவந்து உன் அறைக்கு வெளியே நின்றிருப்பேன். இரவெல்லாம் நீ புரண்டுபடுப்பதை, பெருமூச்சுவிட்டுக்கொண்டிப்பதை கேட்பேன். எத்தனையோ முறை உளமுருகி விழிநீர் சிந்தியிருக்கிறேன். நான் கற்றவற்றை எல்லாம் முற்றிலும் மறந்து பெருவஞ்சம் கொண்டு வானோக்கி சீறியிருக்கிறேன். எத்தனையோ முறை நெஞ்சிலறைந்து தீச்சொல்லும் இட்டிருக்கிறேன். அதையெல்லாம் கடந்துசெல்லமுடியுமா என்ன?”
  

ஆனால் காலம் என்ற காற்றில் கற்பூரம்போல் வஞ்சங்கள் கரைந்து போகின்றன.  வனத்தில் வாழும் விலங்குகளுக்கு கோபம் உண்டு அவற்றுக்கிடையில்  சண்டைகள் நடக்கும்.  ஒன்றை ஒன்று கொன்று தின்னும் . ஆனால் அங்கு காண முடியாத ஒன்று வஞ்சம்.  அந்தக் கானக வாழ்வில் பன்னிரண்டு ஆண்டுகளைக் கழித்த திரௌபதி தன் வஞ்சம் தன்னை விட்டு அகன்று போய்விட்டதாக கூறுகிறாள். வஞ்சம் தீர்ப்பது ஒன்றும் அவ்வளவு மனதுக்கு இனிமையான செயல் அல்ல என்பதை பீமன் ஜெயத்ரதனை துன்புறுத்தி காயப்படுத்தி அவள் காலடியில் வீழ்த்தியபோது   அவள் அறிந்தவளாக இருக்கிறாள்.     அவளை விட்டு முற்றாகவே அந்த வஞ்சம் போய்விட்டது என்று கூறுகிறாள். 



யுதிஷ்டிரர் தம்பியர் இருவரையும் நோக்கிவிட்டு “நீ எப்படி அவ்வஞ்சத்தை கடந்தாய்? என்னால் எண்ணிநோக்கவே இயலவில்லை” என்றார். திரௌபதி “நான் அகவை முதிர்ந்தேன், வேறேதும் செய்யவில்லை. வஞ்சத்தைக் கடப்பதைவிட கடினமாக இருந்தது மண்விழைவை கடப்பதுதான். அதற்கு நான் புற்குடில்களிலும் மலைக்குகைகளிலும் மரத்தடிகளிலும் துயிலவேண்டியிருந்தது. இன்று இளையவர் வந்து என்னிடம் பேசிமீண்டபின் நான் என்னை நோக்கி மீளமீள கேட்டுக்கொண்டேன். நான் கடந்துவிட்டேனா என்று. ஆம், கடந்துவிட்டேன் என்றே என் உள்ளம் உறுதிசொன்னது” என்றாள். 
“நான் வஞ்சத்தை தவிர்க்கவில்லை அரசே, மெய்யாகவே என்னுள்ளத்தில் இன்று வஞ்சம் இல்லை” என்றாள் திரௌபதி. “நான் இவையனைத்திலும் ஈடுபடாமல் முற்றிலும் விலகி ஏன் இருந்தேன் என்று கேட்டுக்கொண்டபோதுதான் அது எனக்குத் தெரிந்தது. வஞ்சம் இல்லை என்பதனால் வஞ்சமொழிவதன் நெகிழ்ச்சியும் மீண்டுவிட்டேன் என்னும் பெருமிதமும்கூட என்னில் இல்லை. வஞ்சமுரைத்து அவையில் நின்று கனன்ற அவள் இன்று என்னுள் இல்லை. எனக்கு அவை பிறர்வாழ்வென்றே தோன்றுகிறது.”
  

நமக்கு அநீதி இழைக்கப்படுகையில் நாம் பரு உலகில் பொருள் புகழ் போன்றவற்றை  இழப்பது ஒரு பக்கம் என்றால்  நாம் அந்த அநீதியின்  காரணமாக வஞ்சம் கொண்டு இழக்கும் மன அமைதி மற்றொன்று.   வஞ்சம் என்பது ஒரு கனல் சட்டியை  நம் இதயத்தில் வைத்து காப்பது போன்றது.   அது செயல் வடிவாகி நமக்கு எதிரானவரை சுடுவதற்கு நிகராக அல்லது அதற்கும் மேலாக நம்மைச் சுட்டுக் கொண்டிருக்கும்.  அதை எவ்வளவு விரைவில் தணிக்கிறோமோ அவ்வளவு விரைவில்  நம் மன அமைதியை மீட்டுக்கொள்ள  இயலும். ஆனால் எப்படி நம் வஞ்சத்தை தணித்துக்கொள்வது?  அநீதி இழைக்கப்படுவது சமூக அறத்திற்கு எதிரானது என்றால் நாம் அதை சமுக்கத்தின் பொறுப்பில் விட்டுவிட வேண்டும்.   

அந்த அநீதிக்கான தண்டனையை அளிக்கும் பொறுப்பை சமூகம் 
எற்றுக்கொள்ளவேண்டும்.  சிலசமயம் அப்படி நடக்காமல் போய்விடலாம்.  ஆனாலும் நம் உள்ளத்தின் வஞ்சத்தை எப்படியாவது தனித்துக்கொள்ளத்தான் வேண்டும்.  அது மிகக் கடினமானதுதான்.  ஆனால்  இப்படி தனிப்பட்ட வஞ்சத்தை நாம் சமூக நீதியிடம் விட்டுவிட வேண்டும்.  அது மிகவும் கடினமான செயல்தான். ஆனால்    நம் மனதை அதற்கு பயிற்றுவித்துக்கொள்ள வேண்டும்.   இருப்பதிலிலேயே மிகவும் உயரிய செயல் நமக்கு அநீதி இழைத்தவரை  மன்னித்துவிடுதல்தான். அதற்கு மனதில் மிகவும் தீரம் வேண்டும்.  அத்தகைய மனத்திண்மை பெற்றவரே உண்மையான  வீரத்தைக் கொண்டவர்.  அவரே மகாத்மா.  அந்த மகாத்மாவாக திரௌபதி இருக்கிறாள்.  தருமன் அர்ச்சுனன் பீமன் யாத்திரைகள் சென்று அடைந்ததை அவள் தம் உள்ளத்தில் இருந்து வஞ்சத்தை அகற்றியதன் மூலமே அடைந்துவிட்டாள் என்று வெண்முரசு காட்டுகிறது.


தண்டபாணி துரைவேல்

Thursday, December 28, 2017

பாலை



ஜெ

காந்தாரியின் பேச்சில் சாதாரணமாக வரும் ஒருவிஷயம் என்னைத் திகைக்கச் செய்தது. இதை நான் கருதியிருக்கவேயில்லை. அவள் பசுமையையே பார்த்ததில்லை. அவள் அங்கேயே கண்ணைக்கட்டிக்கொண்டுதான் வந்தாள். அவள் வாழ்வது பாலைநிலத்தில்தான். அற்புதமான படிமம் அது

செல்வராஜ்

அன்னை



ஜெ

காந்தாரியின் கதாபாத்திரம் மிக அழகாக இப்போதுதான் உருவாகி வருகிறதுபோல இருக்கிறது. ஆப்ரீக்காவின் பேரன்னை என்ற சிலைகளில் உள்ள வடிவம் ஞாபகம் வருகிறது. ஆயிரம் பிள்ளைகளைப்பெற்ற அன்னை. அப்படிப்பட்ட அன்னையின் மனநிலை என்னவாக இருக்கும். ஒரேசமயம் அன்னையகவும் இருக்கிறாள். அதேசமயம் அறச்செல்வியாகவும் இருக்கிறாள். இப்போது வாசிக்கும்போது ஆரம்பம் முதலே அவளுடைய கதாபாத்திரம் நுட்பமாக உருவாகிவந்திருக்கிறது என்று தெரிகிறது. தாலிப்பனையுடன் சம்பந்தப்படுத்தி அவளை நான் இப்போதுதான் பார்க்கிறேன். தன்னுடைய தாய்மையில் தன் பிழையை அவள் கண்டுகொள்ளும் இடம் உச்சமானது


மகேஷ்

தாலிப்பனை



அன்புள்ள ஜெ,

பானுமதி தவிர்த்த மருகியர் அனைவரும் காந்தாரியன்னையைக் காணும் அத்தியாயத்தில் கிட்டத்தட்ட அனைவரின் பெயர்களும், அவர்களின் தேசங்களும் மீண்டும் கொடுக்கப்படுகின்றன. அசலை தலைமையில் 95 மருகியரும் வந்தனர் என ஒரு வரியில் இதைக் கடந்திருக்கலாம். இருப்பினும் வெண்முரசு ஏன் வாசகருக்கு மீண்டும் இத்தகவல்களை அளிக்க வேண்டும்? இதன் பதில் அந்த அத்தியாயத்தின் இறுதியில், காந்தாரி தாலிப்பனையைப் பற்றிக் கூறும் இடத்தில் வந்துள்ளது. "தாலிப்பனை கங்கைச்சதுப்புக்கு வந்ததென்றால் அதற்கு இந்நிலம் போதுமா என்ன?" போதவில்லை தான். விந்தியத்திற்கு வடக்கே உள்ள அனைத்து தேசங்களின் மகளிரும் அன்னையின் முன் நின்று கொண்டிருக்கின்றனர். இதோ இன்னும் ஆயிரவர் தேவை. ஒட்டுமொத்த பாரத வர்ஷமே அங்கே வந்தாக வேண்டுமல்லவா?

மேலும் அவ்வரிகள் இன்னும் ஆழமானவை. ஒரு தாலிப்பனை ஒட்டு மொத்த பாலையையே நிறைக்கும் மகரந்தப் பொடி கொண்டிருக்கும். அதன் இணை அப்பாலையின் வேறோர் கோடியில், எங்கோ தனித்து நின்றிருக்கும். அத்தாலிப்பனையை தொட்டால் மலரும் கங்கை வண்டலுக்கு கொண்டு வந்தால் அத்தனை மகரந்தமும் முளைக்காமல் என்ன தான் செய்யும்? முளைப்பவை வேர் கொள்ள நிலம் வேண்டாமா? நிலமில்லையேல் அவை வாழ இயலாதே? துரியனின் நிலத்தின் மீதான பற்றின் ஊற்று இது தான். அதைத் தான் தாரை சொல்கிறாள். அது குற்றமல்ல, அதுவே இயல்பு என பதிலிறுக்கிறாள் அன்னை. அத்தகைய தாலிப்பனையை இந்நிலத்தின் தன்மை அறியாமல், தன் ஆணவ நிறைவிற்காகக் கொணர்ந்தவர் சத்தியவதி. அப்போதும் கூட பீஷ்மர் திருதாவுக்கு மகதத்திடம் மணக்கொடை கோரலாம் என்றே எண்ணுகிறார். ஊழ் என்பதைத் தவிர வேறு எது அவரை காந்தாரத்திற்கு செலுத்தியிருக்க இயலும்? இப்பெரும்போர் இன்று அஸ்தினபுரியை மையம் கொள்வதற்கு அவரும், சத்தியவதியுமே காரணம் இல்லையா?!

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்

Wednesday, December 27, 2017

பன்னிரு படைக்களம்--மதிப்புரை



அரசியல் ரீதியாக துரியோதனனின் படைப்புறப்பாடு ஜராசந்தன் மற்றும் சிசுபாலனின் கொலைகளின் காரணமாகவே நிகழ்கிறது. அதற்கு மாற்றாகவே நிகரிப்போரான சூதுக்களம் அமைகிறது. உண்மையில் துகிலுரிதல் நிகழ்வு மகாபாரத மூலத்தில் கிடையாது. ஆனால் நம் மரபிலக்கியங்களில் உச்ச தருணங்களில் ஒன்று அது. சீதையின் எரிபுகுதலும் கண்ணகியின் நகர் எரிப்பும் பிற உச்சங்கள். பன்னிரு படைக்களம் இந்த அக இயக்கத்தையே கணக்கில் கொள்கிறது. வெல்ல முடியாத நிமிர்வு கொண்டவளாகவே திரௌபதி வெண்முரசில் சித்தரிக்கப்படுகிறாள். அவளை அச்சபைக்கு இழுக்கும் வரை துரியனின் கர்ணணின் ஆணவம் நேர்நிலையென்றே பொருள் கொள்கிறது. அவர்கள் எல்லை மீறுவது அச்சம்பவத்தில் தான்

சுரேஷ் பிரதீப் மதிப்புரை

Tuesday, December 26, 2017

காட்சிகள்





இப்போது வந்துகொண்டிருக்கும் அத்தியயாங்களில் நுட்பமான உணர்வுகள் பேசப்படுகின்றன. ஆனால் அவையனைத்தையும் விட முக்கியமானதாக எனக்குப்படுவது வெறும்காட்சிகள். அத்தனை மருமகள்களும் சூழ இருக்கும் பெருந்தாய்போன்ற காந்தாரியின் காட்சி பதற வைக்கிறது. மைந்தர்கள் இறக்கக்கூடும் என்ற உள்ளுணர்வு அவளுக்கு இருக்கிறது. ஆனால் அவள் அன்றாடத்தால் அதை மூடிக்கொள்கிறாள். ஒருவகை மொண்ணைத்தனம் இது. ஆனால் இப்படி ஏதேனும் இல்லாமல் நம்மால் பெரிய விஷயங்களை எதிர்கொண்டு அன்றாடவாழ்க்கையை நடத்திச்செல்லமுடியாது


மாதவ்

எது?



ஜெ

போரைத்தவிர்ப்பதற்கான முயற்சியில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணம் கொண்டிருப்பதை வாசிக்கையில் ஆச்சரியமாக இருந்தது. நோக்கம் ஒன்றுதான். அணுகுமுறைகளில் அவ்வளவு வேறுபாடு. அத்தனை நோக்கங்களையும் ஒரே செயலாக ஆக்குவது எது?


ராஜன்

ஊழ்



அன்புள்ள ஜெ

மீண்டும் அஸ்தினபுரியின் மாபெரும் மன்றாட்டுகள். எப்படியாவது போரைத்தவிர்க்கவேண்டும் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் முயல்கிறார்கள். போர் நிகழ்ந்தேதீரும் என நாம் அறிந்திருக்கிறோம். ஆகவே அந்த முயற்சிகள் எல்லாமே வெறும் மனித யத்தனங்கள் என்றுதான் தோன்றுகிறது. அவர்கள் அனைவர்மேலும் ஆழ்மான அனுதாபத்தையே உருவாக்குகிறது. மனிதர்கள் என்ன செய்தாலும் இவை எல்லாம் நடந்தே தீரும். ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கிறது. ஒவ்வொரு உணர்ச்சி இருக்கிறது. ஆச்சரியம் என்னவென்றால் இப்படி வாசிக்கையில் இவர்கள் செய்வதெல்லாமே போரை விரைவுபடுத்துவதற்காகத்தான் என்ற எண்ணம் வலுவாக உருவாகிறது. தேவிகை அசலை பூரிசிரவஸ் அனைவரும் செய்வது போரைக்கொண்டுவரும் முயற்சியைத்தான் இல்லையா?


மகாதேவன்

காலத்தில் மறையாத கரவுகொண்ட காதல். (குருதிச்சாரல் 3,4)



    பொத்தி வைக்கப்பட்டிருக்கும் மலர்ச்சரம் தன் வாசத்தை நீண்ட நேரம் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. புதைத்து வைக்கப்பட்டிருந்த பொற்குவியல் தன் மதிப்பில் குறையாதிருக்கிறது. மண்ணில் புதைந்திருக்கும் சிற்பம் தன் பொலிவை இழக்காமல் இருக்கிறது.    ஆயிரம் இனிப்புகளை உண்டாலும் கையில் இருந்து தவறி விழுந்து சுவைக்கப்படாத  இனிப்பின் சுவை தனித்துவமானது என மனம் நினைக்கிறது.

         நிறைவேறாத காதல் என்பது   மேற்கொண்டு நிகழாமல் தடைபட்டு பாதியில் தொக்கி நிற்கும் வாழ்வின்  பகுதியாக  இருக்கிறது.   அது  நெஞ்சில் சுவைக்கத் தவறிய  இனிப்பாக  இருந்துகொண்டே உள்ளதுகால ஓட்டத்தில் அது கொஞ்ச கொஞ்சமாக நினைவுப்பொதிகளின்   அடியில் ஆழ்ந்துவிடுகிறதுஆனாலும் அது என்றென்றும் அவர் மனதின் ஆழத்தில் கரவுகொண்டிருக்கிறதுஅது தோன்றியபோது கொண்டிருந்த வாசத்தை கால ஓட்டத்தில்  இழந்துவிடுவதில்லைஏனென்றால் அந்நினைவு ஒரு  ஒரு காலப்பொறி.   அந்தக் காதலை நினைவுறுத்தும் ஏதோ ஒன்று எதிர்படும்போது அது  மேலெழும்பிவந்து  அன்றிருந்த அதே பரவச உணர்வைத் தருகிறது.       நிறைவேறிய காதல் தன் நிலை மாறலாம். அதில் கடமைகள் பொறுப்புகள் சேர்ந்து அதன் பரவசம் குன்றி  விடலாம்.   ஆனால் நிறைவேறாக் காதல் அவர் காதல் கொண்டிருந்த காலத்தின் அதே இனிமையை எப்போதும்  கொண்டிருக்கிறது


      வெண்முரசு ஒரு புராண காவியமாக இருந்தாலும் அது மனிதர்களின் பல்வேறு உளவியல் கூறுகளை சொல்லிச் செல்கிறது.    நிறைவேறாக் காதல் பொருட்டான  உளவியலை இன்றைய அத்தியாயத்தில் வெகு சிறப்பாக  காட்சிபடுத்துகிறது.   பூரிசிரவஸ் தேவிகை இடையில் காதல் அரும்பி ஆனால்  முதிராது போய்கால ஓட்டத்தில் இருவருக்குமிடையே  நீண்ட இடைவெளி தோன்றிவிட்டிருக்கிறதுஇப்போது அவர்களின் நேசம்கொண்டவரின்  இருப்பும் தோற்றமும்  அக்காலத்திய மனநிலைக்கு அவர்களை கொண்டு செல்கிறதுஇன்றைய காலத்தின் சூழலில் அது வெளிப்படுத்த முடியாத ஒன்று  எனினும் அவர்களின் அந்தக்  காதல் அவர்கள் போட்டுக்கொண்டிருக்கும் கட்டுப்பாடுகளை மீறி அவர்கள் சொற்களில் பாவனைகளில் ததும்பி  வெளிப்படுகிறது


   இதில் தேவிகையின் உள்ளம் செயல்படும் விதத்தை அவர்களின் சேடிகள்  பூரணை சுரபி ஆகியோரின்  சொற்களினூடாக நாம் அறிய முடிகிறது.   பூரணை பேசுவதெல்லாம தேவிகையின் சிந்தனையோட்டத்தின்  வெளிப்பாடாகவும் சுரபி பேசுவது அவளுடைய ஆழ்மனதின் வெளிப்பாடாகவும்  இருக்கிறது.   நாம் நல்லவைகெட்டவைகளை விருப்பு வெறுப்புகளை காரணமாகக்கொண்டு உருவாகும் எண்ணங்கள் ஒருவகை. மற்றொன்று நம் ஆழ்மனதின் உள்ளிருந்து எழுபவைஅவை  சிலசமயம் நாம் எதிர்  பார்க்காத எண்ண ஓட்டங்களை எற்படுத்தும்நாம் சிந்திக்க விரும்பாதவற்றை  சிந்திக்க வைக்கும்இதை வெண்முரசுவிவாதஅரங்கில் சரவணன் (http://venmurasudiscussions.blogspot.in/2017/12/blog-post_66.html ) என்ற வாசகர் குறிப்பிட்டிருந்தார். அது மிகச் சிறப்பான அவதானிப்புபின்னர் சுரபி பேசுவதை மட்டும் தனித்துப் படித்துப்பர்த்தேன். மிகச் சரியாக பொருந்திவருகிறது.  

பூர்ணைவருக, அரசிஎன கூடையுடன் முன்னால் செல்ல சுரபி பின்னால் வந்தாள்.  

நாம் அறிவினால் சிந்தித்தாலும்  பின்னின்று நடத்துவது ஆழ்மனமாக இருக்கிறது.

அவர்கள் பேசிக்கொள்வதை கேட்காத சுரபிஅரசி, இளைய பால்ஹிகரின் இலச்சினை கொண்ட புரவி அதுஎன்றாள்.  

தேவிகையின் புறமனம் பூரிசிரவஸ் இருப்பதை கவனிக்காமல்  தவிர்க்கப்பார்க்கிறது. ஆனால அவள் ஆழ்மனம் அவன் இருப்பை அவளுக்கு வெளிப்படுத்துகிறது.  

சுரபிஇளைய பால்ஹிகர் பெண்களுக்கு மிகவும் இனியவர்என்றாள். தேவிகை திரும்பி நோக்கிஎவ்வாறு சொல்கிறாய்?” என்றாள்.
அவருடைய மாறா இளமையால்என்றாள் சுரபி.


தேவிகைக்கு பூரிசிரவஸ் மீதிருந்த கவர்ச்சி அவள் ஆழ்மனதில் புதைந்திருப்பதுஆகவே இது  சுரபியின் கூற்றாக வருகிறது.  

சுரபிஅக்கணத்தில் எவ்வுணர்வு எழுமென்று முன்னரே வகுக்கமுடியாது, அரசி. எதுவாயினும் அது அக்கணத்தை ஆளும் தெய்வங்களுக்குரியதென்று கொள்ளுங்கள். நாம் எதற்கும் பொறுப்பல்லஎன்றாள். தேவிகை அவளை ஒருகணம் நோக்கி இமைக்காமல் அமைந்து மீண்டுநம்மை மீறியா?” என்றாள். “ஆம், நாம் என்ன, பெருக்கில் துகள்கள் மட்டும்தானே?” தேவிகை பெருமூச்சுடன்ஆம்என்றாள்.

  மற்றவர் முன் நாம்  சிந்தித்து நம் பேச்சு செயல்களை மேற்கொள்ள வேண்டும்.   ஒருவர் ஒரு இடத்தில் சிந்தித்து நடந்துகொள்வது ஒரு வகையான நடிப்புஆகையால் அதில் தடுமாற்றங்கள்  பிழைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.   ஆனால் தேவிகை மீது பூரிசிரவஸ் கொண்டிருந்த நேசத்தின் காரணமாக அவள் தன்னுள்  நிகழ்வதை வெளிக்காட்டிக்கொள்வதே அவனை தன்பால் ஈர்க்கும் என்பதை சுரபி சொல்கிறாள்ஒரு ஆணின் முன்  எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பது ஒரு பெண்ணின் மரபணுவில் இருப்பதுயாரையும் நோக்காத பாவனையிலான அலட்சியமும் அதே நேரத்தில் தன்னிருப்பை  வெளிப்படுத்தும் தோரணையும்  பெண்ணிற்கு இயல்பானது. அது அத்தனை பெண் விலங்குகளுக்கும் என இயற்கை வகுத்திருக்கும் வழிமுறைஅது  இயல்பாக  இருப்பதால்  ஒரு பெண் அவ்வாறு செய்வது எப்போதும் செயற்கையாகத் தெரிவதில்லை.  


சுரபிமுகம் கழுவிக்கொள்ளலாம், அரசிஎன்றாள். அதை தேவிகை மிக விரும்பினாள். “ஆம்என்றபடி பக்கவாட்டில் சென்று அங்கிருந்த நீர்த்தொட்டியை அணுகி குனிந்து அதில் தன் முகத்தை பார்த்தாள். அந்தமுகம் அவளை திடுக்கிடச்செய்தது. படபடப்புடன் உதடுகளை மடித்து அழுத்திக்கொண்டாள். பின்னர் முகத்தின் மேல் நீரள்ளிவிட்டு கழுவினாள், அந்த முகத்தை நீர்ப்பாவையை என கலைக்க விழைபவள் போல. சுரபி அளித்த மரவுரியால் முகத்தை துடைத்தாள்.சுரபி பேழையிலிருந்து கொம்புச்சீப்பை எடுத்து அளித்தாள். அவள் விழிகளை ஒருகணம் சந்தித்துவிட்டு தேவிகை அதை வாங்கி தன் தலையை சீவிக்கொண்டாள். சுரபி அவள் கழுத்திலணிந்திருந்த நகைகளை சீரமைத்தாள். தேவிகை அதை முரண்கொண்ட உடலசைவால் தவிர்த்து தானே சீரமைத்துக்கொண்டாள். ஆனால் அவள் எடுத்தளித்த நறுஞ்சுண்ணச்செப்பை மறுக்க முடியவில்லை. அவளை நோக்காமல் அதை வாங்கி சுண்ணத்தை சிறுதுணியில் சிறிது உதிர்த்து அதைக்கொண்டு முகத்தை அழுத்தி துடைத்தாள். “அகவைகளுக்கு அவற்றுக்குரிய அழகுகள், அரசிஎன்றாள் சுரபி. அந்த மீறல் அவளை எரிச்சல்கொள்ளச்செய்ய ஒன்றும் பேசாமல் திரும்பினாள்.


 இந்த ஒப்பனையை செய்யத்தூண்டுபவளாக ஆழ்மனமென இருக்கும்  சுரபி இருக்கிறாள். தேவிகை தன் அனைத்து பந்தங்கள் கடமைகளை மறந்து வெறும் பெண்ணென ஆகிச் செய்யும் செயல் தன்னை ஒப்பனை செய்துகொள்வதுஇதையெல்லாம ஒரு பெண் சிந்தித்து செய்தால் முறையற்று தோன்றும். ஆனால் இது அவள் பெண்ணெண்ற இயல்பினால்  செய்வது. அதை நாம் சரியாக புரிந்துகொள்ளவேண்டுமென நினைக்கிறேன்ஒரு பெண் தன்னை நேசிப்பவன் என கருதும் ஒருவரிடம் தன்னை வெளிப்படுத்துவதில் கவனம் கொள்வது அவள் ஆழ்மனம் சம்பந்தப்பட்டது.  
   


  சுரபிஇங்குதானிருக்கிறாரா? என் எண்ணம் நீங்கள் அவரைச் சந்தித்து அப்பொறுப்பை அளிக்கலாம் என்பதுதான்என்றாள்.
இப்படி நேசம்  கொண்ட ஒருவரிடம்  ஒரு பெண்  உதவிகள் கேட்பதை அவள் அகங்காரம் தடுப்பதில்லைஇதுவே ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் உதவி கேட்க அவன் அகங்காரம் தடுப்பதைப் பார்க்கிறோம்அத்துடன் தன்னிடம் ஒரு உதவி கேட்கப்பட்டால் எப்பாடு பட்டாவது அதை முடிக்க வேண்டும் என முயல்வது  நேசம் கொண்ட ஆணின்  இயல்பாக இருக்கிறதுஇயற்கையில் ஆண் பெண்னென உடல்கொண்டிருக்கும் அனைத்து விலங்கினங்களிலும் இதுவே இயல்பானதாக இருப்பதைக் காண்கிறோம்.   
        

ஒருவர் தன்  காதல் ஒன்று  நிறைவேறாமல் போய் பின்னர் வேறு உறவுகளைக்கொண்டு வாழ்ந்துவந்திருந்தாலும், அவர்  அறிந்தும் அறியாமலும் உள்ளத்தின் ஆழத்தில்  ஒளிந்திருக்கும் அக்காதலின்  விளைவுகளால் அவர் பாதிக்கப்படாமல் இருக்கமுடியாது என்பதையே தேவிகை பூரிசிரவஸ் இடையே நடக்கும் இந்த சிறு உளத் தடுமாற்றங்களில்  நாம் அறிந்துகொள்கிறோம்.

தண்டபாணி துரைவேல்