Wednesday, January 31, 2018

காடு





ஜெ இந்த வரியை மீண்டும் மீண்டும் வாசித்தேன். வேண்டுமென்றே ஒரு விளையாட்டுத்தன்மை தோன்ற வேறேதோநூலில் இருந்து போகிற போக்கிலே சொல்லப்படும் வரிபோல இது ஒலிக்கிறது. ஆனால் அஸ்தினபுரியின் அரசியரின் மனநிலையை இதைவிடக் கச்சிதமாகச் சொல்லிவிடமுடியாது. இன்றும் பெண்களின் மனநிலை இதுவே

எஸ்

வெள்ளி



ஜெ

மழைக்கு அப்பால் செல்லும் வெள்ளித்தேர் நீரலைக்கு அடியில் கிடக்கும் வெள்ளிநாணயம்போல தெரிந்தது என்றவரியை மிகவும் ரசித்தேன். தனியாக இப்படி ரசிக்கலாமா என்றால் காவியத்தின் அழகே அதுதானே? கோயில்களைப்போல. ஒட்டுமொத்தமாகவும் அழகு. தனித்தனியான சிற்பங்களாகவும் அலங்காரங்களாகவும் பார்க்கலாம்


ஜெயராமன்

பூடகத்தன்மை



அன்புள்ள ஜெ

பானுமதிக்கும் கிருஷ்ணனுக்குமான அந்தரங்க உறவு அந்தப்பூடகத்தன்மை விலகாமலேயே சொல்லப்படுகிறது. எதனால் அவள் கிருஷ்ணனை வரவேற்கப்போகத் தயங்கினாள். ஏன் அது சூழ்ச்சி என சந்தேகப்பட்டாள். ஏன் அவள் அவன் முன் அழுதாள்? அசலையும் தாரையும் பானுமதியும் எல்லாம் ஒரே மனநிலையில்தான் இருக்கிறார்கள். ஆனால் ஏதோ ஒன்று பானுமதியிடம் மிஞ்சியும் இருக்கிறது.

பலமுறை வாசித்தும்கூட அதற்குள் செல்லமுடியவில்லை. அந்த மர்மத்தைச் சுற்றியே அந்த அத்தியாயங்கள் செல்கின்றன. சொல்லாமலும் கொஞ்சம் சொல்லியும். அதுதான் முக்கியம். ஆகவே அதற்குள் நடக்கும் மற்ற உரையாடல்கள் எல்லாமே எளிதானதாக உள்ளன. அவர்கள் பேசிக்கொள்ள விரும்புவது அது அல்ல என தெரிகிறது. பானுமதியை அவ்வலவு அணுக்கமாக உணர்ந்ததே இல்லை


மனோ

கனவை சூடி கொண்டவள்



அன்புள்ள ஜெ ,


நேற்று உங்களின் வியாசர்  உரை கேட்டு கொண்டிருந்தேன் , அதில் கர்ணன்  ,அர்ஜுனன் ,பீமன் மூவரையும்  முக்கிய இடம் தந்து இருக்கிறார் வியாசர் , காரணம் அவர்கள் பெரும் வீரர்கள்  என , பெரும் வீரர்கள் வியாசனுக்கு  பொருட்படுத்த தக்கவர்கள்  என , அல்லது நான் அப்படி உங்கள் உரையை உள்வாங்கி கொண்டேன் . வெண்முரசு இந்த மனநிலைக்கு எதிராக அனைவருக்கும் வலு இல்லாதவர்களுக்கும்  கூட சம அளவில் முக்கியத்துவம் தருகிறது , இதுதான் இரண்டிற்குமான  பெரிய வித்யாசம் என தோன்றுகிறது ,  ஏனெனில் தாரை வந்த போது அவள் பிரமாதமான பாத்திர  படைப்பு என தோன்றியது, பிறகு துச்சளை வந்த போது அப்படி எண்ணினேன் ,இப்போது பானுமதியை  நோக்கவும்  அப்படிதான் தோன்றுகிறது :) இதைவிட  சேடிகள் கூட அப்படி எண்ண வைக்கிறார்கள் ,அபயை ஒரு வகை எனில் மாலதி இன்னொரு வகை , அந்தந்த இயல்பின் தீவிர வடிவமாக  இவர்கள் இருக்கிறார்கள் . 


வல்லபையிடம் பேசிகொண்டிருக்கும் போதே  மனதிற்க்குள் இன்னொரு மூலையில், தன் மனதில் தோன்றிய வரி(  அரசன் ஒரு கையில் நெருப்பும்  மறுகையில்  நீரும்.. )  எந்த நூலில் உள்ளது என தேடி கண்டுபிடிக்கும் இடம் பானுமதியின் தாவி செல்லும் மனநிலையை காட்டியது .


பானுமதி அம்பையின்  கனவை  சூடி  கொண்டவள் , அதை அவளில்  சூடிவிட்டது அவளது அத்தை  . எனக்கு புரியாத இடம் மயிற்பீலியில்  எப்படி அம்பையும்  கிருஷ்ணனும்  இணைகின்றனர்  என்பதுதான் , மயிற்பீலி எருமையின் விழி எனும்  வரி அம்பையின் கண் என எண்ணினேன் , மேலும் அவளது  கனவு ,விருப்பம் என . அந்த கனவை கிருஷ்ணன் எடுத்து தலையில் சூடி கொள்கிறாரோ  எனவும் அதை ஒவ்வொருவருக்கும்  கையளிக்கிறார்  எனவும் தோன்றியது .இன்னொரு பக்கம் கண்ணன் அம்பையின் (அழிவின் ) ஆசையை ,மயிற் பீலியால்  சமன் செய்கிறாரோ  என்றும் தோன்றியது .


பானுமதியின் அத்தை பாத்திரம் ,அம்மா பாத்திரம் இரண்டும் எதிரெதிர் எல்லைகள்  . அத்தையில் யட்சி  அம்சம் இருந்தது .

ராதாகிருஷ்ணன்

ஓநாய்களின் இறவாமை (குருதிச்சாரல் 42)



       ஒரு மனிதனைப்போல் மற்றொரு மனிதன் இல்லை. ஒரே வீட்டில் பிறந்த இருவருக்குமிடையே கூட பல வேற்றுமைகள் இருக்கின்றன.  இரு வேறு மனிதர்களை அவர்தான் இவர் என குழப்பிக்கொள்வது மிக அரிதாகவே நடக்கிறது.  முகம் உடல் வடிவு என்றுதானில்லாமல் அவர் நடை பேச்சு போன்ற பாவனைகளிலும் ஒருவருக்கொருவர் வேறுபடுகின்றனர். வெவ்வேறு விதமான உடைகள் வெவ்வேறு வண்ணங்கள்.  ஏன் மனிதசமூகம் ஒட்டுமொத்தமாக இதுதான் சிறந்த உடை,  இதுதான் அதற்கான சிறந்த வண்ணம் என்று குறிப்பிட்ட ஒன்றை தேர்தெடுக்க முடியவில்லை?  ஒவ்வொரு மனிதனுக்கும்   விருப்பு வெறுப்புகள் மாறுபடுகின்றன. இப்படி எந்த இரு மனிதர்களுக்கும் இடையிலான வேறுபாடு என்பது இப்போது உயிர் வாழும்  மனிதர்களுகிடையே மட்டுமல்ல, இதுவரை பிறந்திருந்த அனைத்து மனிதர்களுக்கிடையேயும் நாம் காண முடியும். இவ்வளவு ஏன்,  நேற்றிருந்த நானே இன்றிருக்கும் நான் என்று சொல்ல முடியாது. என் உடல் சிந்தை திறன் மாறிவிட்டிருக்கும்.  
     இதற்கு காரணமாக நான் கருதுவது மனிதனின் மனம். மற்ற விலங்குகளுக்கில்லாத அளவு மனிதனின் மனம் அதிக வளர்ச்சிகொண்டிருக்கிறது அவன் தனக்கு தேவையானதும் தேவையற்றதுமான எதைப்பற்றி வேண்டுமானால் சிந்தித்துப்பார்க்கிறான். மாறுபட்ட சிந்தனைகள் மனிதர்களுக்கிடையே மாறுபட்ட கருத்துக்களைத் தோற்றுவிக்கின்றன. மாறுபட்ட கருத்துக்கள் காரணமாக மாறுபட்ட விழைவுகள், மாறுபட்ட விருப்புவெறுப்புக்களை மனிதர்கள் கொள்கிறார்கள். ஒரே செயலுக்கு மாறுபட்ட எதிர்வினைகளை ஆற்றுகிறார்கள்.  இதுவே இரு மனிதர்கள் ஒன்றுபோல் இருப்பதை முற்றிலுமாக இல்லாமலாக்குகிறது  எனக் கருதுகிறேன். 
  ஆனால் விலங்குகளுக்கிடையே அவ்வளவு வேறுபாடுகள் இருப்பதில்லை. அவை ஒன்றுபோல் இருக்கின்றன ஒன்று போல் நடந்துகொள்கின்றன. சூழல் மாறாதிருக்கும் ஒரே கானகத்தில் நூறாண்டுகள் முன் வாழ்ந்த ஓநாய்க்கும் இப்போது வாழும்  ஓநாய்க்கும் குணத்தில்,  உணவு உறைவிடம் பொருட்டான விருப்பு வெறுப்புகளில் வேறுபாடுகள் ஏற்படுவதில்லை. அவைகளுக்குள் வேறுபாடு இல்லாது போவதற்கு காரணம் அவற்றின் சிந்தனை அவறின் உடல் பூர்வமான தேவைகளைத்தாண்டி பெருகி வளராதவை. ஆகவே அவற்றின் மனம் ஒன்று போல் இருக்கிறது.  ஒரு ஓநாயின் மனமும் அதன் மூதாதையின் மனமும் ஒன்றே தான் என்றால் அதுவும் அதன் மூதாதையும் ஒன்றே தான் என்று சொல்லலாம் அல்லவா?  ஆகவே  ஒரு ஒநாயின் உடல் இறப்பில் மறைந்தாலும் அதன் மனம் அதன் குட்டிகள் வழியே மீண்டும் மீண்டும் இருந்துகொண்டே இருக்கிறது.  ஒநாயின் மனம் எப்போதும் எதாவது ஒரு உடலில் வாழ்ந்துகொண்டே இருப்பதால் அது என்றும் இறவாதது என்று ஏன் நாம் சொல்லக்கூடாது.  வெண்முரசு ஒநாய்க்குட்டிகளின் சொற்களில் நமக்கு இந்த உண்மையை உணர்த்திச் செல்கிறது. 

நெய்யை முகர்ந்துகொண்டிருந்த லோமசன் “அன்னை இப்போது எங்கிருப்பாள்?” என்றான். “வேறெங்கோ அதே பெயரில் அதே வடிவில் இருப்பாள்” என்றான் அகாபிலன். “நாம் இறந்து மீண்டும் அவ்வண்ணமே பிறக்கிறோம். இதோ, இந்தப் பறவைகள், கழுதைப்புலிகள், செந்நாய்கள், கழுகுகள் அனைத்தும் அவ்வடிவில் அப்பெயரில் மீண்டும் நிகழ்கின்றன. உதிர்ந்த இலைகள் மீண்டு வருகின்றன. அலைகள் சென்று மடிந்தெழுகின்றன.” லோமசன் செவிகளை சொடுக்கியபடி கூர்ந்து நோக்கிவிட்டு திரும்பி கிருங்கனை நோக்கினான். “என்றுமிருப்போம் என்று உணர்ந்திருப்பதனால் நமக்கு இறப்பு அச்சமூட்டுவதில்லை. தெய்வங்களை நாம் வழிபடுவதுமில்லை” என்றான் அகாபிலன்.
ஆனால் இப்படி மனிதர்கள் மீண்டும் மீண்டும் அழியாமல் தோன்றுவார்கள் என்று சொல்லமுடியாமல் போவதற்கு காரணம் அவர்கள் தங்களின் பெருமையாகக் கருதிக்கொள்ளும் சிந்தனைப் பெருக்கும் அதன் காரணமாக அவர்கள் மனங்கள் ஒன்றுக்கொன்று மாறுபாடுகொண்டிருப்பதாலும் அல்லவா?  தன் மனம் இறப்பில் அழிந்துவிடும் என்று அச்சப்படுவதாலேயே மனிதர்கள் இறப்புக்கு அஞ்சுகிறார்கள்.  அப்படி இல்லாமல் இறப்புக்கு பின் நம் சிந்தை அழியாமல்    வேறு உடல்கொண்டு மீண்டும் புவியில் வாழும் நிலை இருந்தால்  அவர்கள் ஏன் இறப்புக்கு அஞ்சப்போகிறார்கள்?  அதே நேரத்தில்   ஞானிகள் தம் மனதை அழித்து,  தான் நானென்றறிவது அந்தப் பரப்பிரம்மத்தையே என உணர்கையில் அவர்கள் மனதைத் துறந்துவிடுகிறார்கள். அதன் காரணமாக இறப்பை அஞ்சுவதில்லை. அதை இறவாநிலை என்று நம் தத்துவங்கள் கூறுகின்றன.  'சாகாதெனையே சரணங்களிலே கா கா நமனார் கலகம் செயும் நாள்'  என்று அருணகிரிநாதர் இறைஞ்சுவது  தான் அந்த பிரம்மத்தில் கரைந்துபோவதன் மூலம்   இறப்பை வென்று நிற்கும் நிலையடைதலைக் குறித்தல்லவா?

தண்டபாணி துரைவேல்

Tuesday, January 30, 2018

பானுமதியின் கதை


அன்புள்ள ஜெ

பானுமதியின் கதை வரும்போதே எப்படியோ அம்பையின் கதையாக அது விரியும் என எதிர்பார்த்திருந்தேன். ஏனென்றால் போர் எழப்போகிறது முதற்கனல்தான் எழுந்தழல். ஆகவே அம்பை எப்படி எழுவாள் என்று பார்த்துக்கொண்டிருந்தேன். காசியிலிருந்து அவளுடைய குர்தி மரபிலிருந்து அம்பையின் கதை ஆரம்பிப்பது எதிர்பார்த்திருந்தாலும் பரபரப்பை ஏற்படுத்தியது

அம்பையின் வடிவமாக காசியில் எப்போதும் ஒரு பெண் இருந்துகொண்டிருக்கிறாள். பானுமதியின் அத்தை சியாமளையின் குணச்சித்திரம் அம்பையின் வடிவம்தான்

பானுமதியின் கதாபாத்திரம் ஆரம்பம் முதலே அன்பான, அதேசமயம் ஆழமான சிந்தனைகள் இல்லாத, குடும்பப்பெண் மாதிரித்தான் இருந்தது. எந்தக்குடும்பப்பெண்ணுக்கும் இத்தகையச் சந்தர்ப்பத்தில் வரும் பிளவுண்ட நிலையும் தடுமாற்றமும்தான் அவளிடமும் தெரிகிறது

ராஜசேகர்

பீலி



ஜெ,

அவ்வளவு இனிமையான சியாமளைக்கு எப்படி நீண்ட வளைந்த பற்கள் உருவாகி வந்தன? அத்தனை பலி கொடுத்து அவள் அம்பையிடம் வேண்டிக் கொண்டது என்ன? பீலியைத்தானா? அது கிடைக்காததனால்தான் அவள் தனிமையிலிருக்கிறாளா? பானுமதி முடிவெடுத்த உடன் அங்கு சென்று விட்டாள். அதனால்தான் நான் தனிமையிலிருந்தேன், நீ வந்து விட்டாய் என்கிறாள் என நினைக்கிறேன்.

நேற்றைய அத்தியாயத்தில் யோகத்தைப் பற்றி ஒரு பகுதி வருகிறது, அதைத் தொடர்ந்து அந்த உயரத்தை சமன் செய்கிறது ஒரு பீலி. அது ஆழத்தில் காத்திருந்திருக்கிறது. இன்று கிருஷ்ணனை வரவேற்கப் போவது காசி நாட்டு பானுமதியாகவா, அஸ்தினபுரியின் பானுமதியாகவா என்பதில் வந்து நிற்பது அதுவே.

பானுமதியின் முடிவு கௌரவ அரசியரின் முடிவும் கூட. கணிகர் கௌரவர்களுக்கும் அவர்கள் அரசியருக்கும் இருந்த இடைவெளியை இந்த தருணத்தைப் பயன்படுத்தியும், பானுமதியின் பீலியைப் பயன்படுத்தியும் இணைத்துவிட்டார். கணிகருக்குத் அச்சம் கிருஷ்ணனிடம் கூட இல்லை, அம்பைகளை எதிர் கொள்வதில்தான். அவர்கள் இந்தப் பக்கம் இருக்க வேண்டும் என எண்ணுகிறார். 

நேற்றுதான் கிருஷ்ணா மேற்கத்திய உளவியலும், பெண்ணியமும் அம்பையையே முன்மாதிரி வடிவமாக வைக்கிறது, அதைத் தாண்டி ஊர்வரை வருவதில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தாள். சுவர்ணை, சோபை, விருஷ்டியைக் கடந்த பின்பு குருதியில் நடந்து பீலியை அடையாதவர்கள்தான் கோரைப் பற்களோடு அலைகிறார்கள். இப்போது யோசித்தால் அம்பைக்கு பீஷ்மரே ஒரு பொருட்டில்லை, பீலிக்காகத்தான் அத்தனை துயரடைந்தாள் எனத் தோன்றுகிறது. 

பானுமதியிடம் வேழத்தின் தந்தங்கள் இருக்கின்றன. பானுமதி பீலியாக சூடிக் கொள்ளப்போவது அதைத்தான். அம்பையின் பீலியாக ஊர்வரை இருந்ததைப் போல. அதனால்தான் அந்த ஆழி மலராக இருக்கப் போகிறது.

சரியா எனத் தெரியவில்லை...ஆனால் இப்படி வாசிக்கவும் இடமிருக்கிறது போலத் தோன்றுகிறது.

ஏ வி மணிகண்டன்

சூரியன்



அன்புள்ள ஜெ ,


ஒளி தந்து  இருளில் மறையும்  சூரியன் போல துச்சளை வந்து செல்வது இருந்தது , அவள் துரியோதனனை  காணும் முன்புவரை  பிரகாசமாக  இருந்தாள்.
கலிசுனை காகவிழி போல இருந்தது என படிக்கும் போதே ஜில்லிட்டது  , இன்றும்  அது தொடர்ந்தது  ,அதிலிருந்து வெளிவந்த காகங்களும்  கருநாகங்களும்  பலி  பெறாமல் திரும்ப செல்லாது என தோன்றியது .

இருட்டு நம் அசைவை  இன்னொருவருக்கு  காட்டாது  ,அந்த கட்டுப்பாடற்ற   சுதந்திரம்தான் கலி ஒருவருக்கு  தருகிறான்  என தோன்றுகிறது , மக்களிடம் இருந்த ஆர்வம் அதை காட்டியது என நினைத்தேன் .

கலிசுனை ஒரு நோக்கில் போர்க்களம்  என நினைத்தேன் , நரிகளை பாண்டவர்களாக  , அவர்கள் வாழிடத்தில் கலி கண் விழிப்பதாக  எண்ணினேன் 

ராதாகிருஷ்ணன்

பிரம்மாண்டம்



திருக்குறளில் இடம்பெறாத தமிழ்ச் சொற்கள் என்று ஒரு பட்டியல் இடுவது சாத்தியம். தாங்கள் பயன்படுத்தாதச் சொல் என்று தமிழில் இன்னும் ஏதேனும் மிச்சம் உள்ளதா என்ன!


விமர்சிக்க தகுதி இல்லை. தங்களின் பிரம்மாண்டம் காண்கையில் அதைக் கற்றுத் தேரவும் இந்த ஒரு பிறவி போதுமா, பிரம்மிக்கிறேன். உங்களின் வார்த்தை தூரிகை என் உள்ள  நிகண்டில் தீட்டிய மஹாபாரதம், வெண்முரசின்  நாதமாக அதிர்ந்து அதிர்ந்து ஆண்மாவில் அல்லவா கலந்துரைகிறது. நிகழ்வோ கற்பனையோ, வார்த்தைக் கொண்டு தாங்கள் வடித்த இந்த காவியம், வர்ணிக்கும் அளவிற்கு நான் இன்னும் வளரவில்லை. மாலைக்கும் மகுடங்களுக்கும் இடையில் இந்த ஒற்றை மலர் தங்களின் கவனம் பெறுமா?! நான் அறியேன்.


எந்தப் பிறவியிலோ பெண்ணாய்ப் பிறந்து வாழ்ந்ததை மறவாமல் இருக்கிறீரா?, இல்லை கூடு விட்டு கூடு பாய்ந்து பெண்உடலில் வசித்து வந்தீரா? மூச்செல்லாம் பேச்சாக்கி சொல்லி சொல்லி மாய்ந்தாலும், பெண்ணின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளும் யாரும் இங்கில்லை. இவ்வளவு நுணுக்கமாக அவள் எண்ணங்களையும் உணர்வுகளையும் எப்படி உணர்ந்தீர்.ஆண் உருவில் பெண்மையும் விழித்துக் கொண்ட தாயுமானவரா, இல்லை சக்தியும் சிவனும் சம்ப்பட்ட அர்த்தநாரியா?!.
சிந்தனை சிதறலோ, சேர்த்து தொகுத்த முத்தாரமோ இல்லை இது. வெண்முரசு ஒரு நிகழ்வு. நிலம் அணைத்தும் அனலின் ஆடையே என்றாலும், எரிமலை ஆவது உகந்த சில இடங்களே. வெண்முரசு தங்களுக்கு நிகழ்ந்தது. மேலும் மேலும் இவ்வண்ணம் நிகழ வேண்டுகிறேன்.

பிரம்மிப்போடும்
வணக்கத்தோடும்
கீதபிரசன்னா.

நிலை சேர்ந்துவிட்ட நெஞ்சம் (குருதிச்சாரல் - 40)


    ஓடுகின்ற தேர் ஆடியும் குலுங்கியும் செல்லும். நிலை சேர்ந்து நிற்கும் தேரில் இந்த ஆட்டங்கள் இல்லை.   கோயில் கோபுரத்தைப்போல நிலையாக இருக்கும்.  அதைப்போன்றே நீரில் இருக்கும் படகு ஓயாது ஆடிக்கொண்டிருக்கும். தண்ணீரிலிருந்து இழுத்து கரை சேர்க்கப்பட்ட படகு இப்படியான அசைவுகளை  ஏற்படுவதில்லை.  மனிதனின் அகமும் இப்படி ஓடும் தேரைப்போல, படகைப்போல பல்வேறு விழைவுகளின் விசைகொண்டு அசைந்து அலைபாய்ந்துகொண்டு இருக்கிறது. பல்வேறு எறும்புகள் ஒரு பூச்சியின் உடலை இரையெனக் கொண்டு ஒவ்வொரு பக்கமும் இழுத்துச்  செல்ல முற்படுவதைப் போன்று மனிதனின் சிந்தையை பல்வேறு விழைவுகள் பல திசைகளிலும் இழுத்து அவனை தடுமாற வைக்கின்றன.    ஒருவன் கொள்ளும் விழைவுகள் என்பவை  சமூக அறத்திற்கு மாறானது என்பவைமட்டும் இல்லை.  நல்லவனாக  அறவோனாக இருக்க வேண்டும் என நினைப்பதுகூட ஒரு விழைவுதான். ஒரு விழைவு இன்னொரு விழைவில் முரண்படும்போது மனம் சஞ்சலமடைகிறது, அதன் ஒருமை பாதிக்கப்படுகிறது அமைதி கெட்டுபோகிறது,  ஐயங்கள் தோன்றுகின்றன. எது செய்வது என்று தெரியாமல் திகைத்து தடுமாறுகிறது அவன் நெஞ்சம்.  அறத்தின் படி நிற்பது ஒன்றே குறிக்கோள் என நின்றுவிடுதல் ஒன்றே இதற்கு சரியான  தீர்வு என்று தோன்றும்.  அப்போது மனதில் இவ்வளவு தடுமாற்றங்கள் ஏற்படாது என்று நினைப்போம்.  ஆனால் அறம் என்பது  காலத்திற்கு காலம் இடத்திற்கு இடம், சூழலுக்குச்  சூழல் மாறிக்கொண்டே இருப்பது.    நம்பொருட்டு பேணும் அறம், நம் குடும்பத்தின் பொருட்டு பேணும் அறம், நம் குலத்தின் பொருட்டு பேணும் அறம், போன்றவை ஒன்றுக்கொண்று முரண் படுகையில் எப்படி நடப்பது என்ற குழப்பத்தை தருவதாக இருக்கின்றன. இத்தனைக்கு நடுவில் ஒருவன் தடுமாறாமல் தன் நெஞ்சத்தை நிலைப்படுத்தி வைத்திருப்பது எளிதானதல்ல.  ஆகவே நல்லவனாக அறவானாக நடக்க முற்படும் ஒருவன் சஞ்சலங்கள் கொண்டவனாக இருப்பது இயல்பாகிறது. அவன் மனம் சிலசமயம் முடிவெடுப்பதில் தடுமாறுகிறது. தான் செய்யும் செயல் யாரோ ஒருவரை பாதித்துவிடுமோ என்ற ஐயம் அவர்களை எப்போதும் தயக்கத்தில் ஆழ்த்துகிறது.  ஆகவே   அறவோர்கள் உள்ளம் நிலைகொண்டது என்றோ அமைதியானது என்றோ சொல்லிவிடமுடியாது.
   ஆனால் அதற்கு மாறாக ஒரு பெரு விழைவை நிறைவேற்றிக்கொள்வதை மட்டுமே  நோக்கெனக்கொண்டு மற்ற விழைவுகளைத் துறந்து,  இதில அறம் என்ன,  மற்றவருக்கான பாதிப்பு என்ன,  என   எதைப்பற்றியும் சிந்திக்காமல் இருப்பவர்கள் மனம் தடுமாறுவதில்லை.  தன் நோக்கம் நிறைவேறுவதற்காக  எதை வேண்டுமானாலும் செய்வேன் என உறுதி பூண்டவன் நெஞ்சம் நிலைகொண்ட தேரைப்போல் எவ்வித சஞ்சலங்களும் அற்று  அசையாது இருக்கும்.  அப்போது எவ்விதத்திலும் அவன் தடுமாறுவதில்லை. அவனுக்கு  எவ்வித மனக் குழப்பங்களும் இல்லை. ஐயங்கள், கேள்விகள், சரியா தவறா என்ற குழப்பங்கள்  எல்லாம் அகன்றுபோய் அவன் நெஞ்சம் உறுதிகொண்டு நிற்கும்.   அத்தகைய நிலை எடுத்தவனின் நெஞ்சத்தை  தெய்வமும்    அசைக்கமுடியாது.   அது நிலை சேர்ந்த ஆழித்தேர்,  கரையேறிய படகு,  ஆழ்குழியில் உறுதியாக ஊன்றப்பட்ட கம்பம்.        
 ஆனால் இத்தகைய  ஒரே நோக்கைக்கொண்டவர்கள், ஒரே இலக்கை குறிவைத்து நடப்பவர்கள், மற்ற அனைத்து விழைவுகளைத் துறந்தவர்கள் அரிதினும் அரிது.  அவர்கள் சிலர் ஏதாவது அறிவுத்துறைசார்ந்த அல்லது ஆன்மீகம்சார்ந்த   ஞானத்தை இலக்காகக்கொண்டு செல்பவர்கள் இருக்கக்கூடும்.   ஆனால் பெரும்பாலும் இப்படி   நிலைகொண்ட நெஞ்சத்தினராக இருப்பவர்கள்  மக்கள் சமூகத்திற்கு விரோதமானவர்களாக, பெரும் அழிவுகளை ஏற்படுத்தியவர்களாக இருந்திருக்கின்றனர்.  இவர்கள் மக்கள் சமூகத்தின்  எதிர் நாயகர்கள். அவர்களால் இவ்வுலகு பெரும் அழிவுகளைச் சந்தித்து இருக்கிறது.
  துரியோதனன் மனதில்  மண்ணாசை அவன் சூழலினாலும், சகுனி போன்றவர்களின் வளர்ப்பினாலும் அவனுள் நிறைந்திருக்கிறது.  அதே நேரத்தில் அவன் உறவினர்களின் மேல் அன்பும் பெருந்தன்மையும் பூண்டவனாகவும் இருக்கிறான். தன் தந்தை சொற்படி ஒரு முறை முழுஅரசையும், இன்னொருமுறை பாதி அரசையும் விட்டுக்கொடுத்தவன்தான்அவன்.   ஆனால் அவனுள் பெருகி இருக்கும் மண்ணாசை அதன் காரணமாக அவன்கொண்ட வஞ்சம் அவன் உள்ளத்தை ஆக்கிரமிக்கிறது. அப்போது உள்ளத்தில் ஒருபக்கம் தந்தைவழி வந்த பேராளுமையும் கருணையும் மற்றொருபக்கம் அவன் மண்ணாசையும் வஞ்சமும் இரு வேறு திசைகளில் அவன் உள்ளத்தை இழுத்து தடுமாற வைக்கின்றன.  ஆனால் துரியோதனன்  இயல்பிலேயே  இந்தத் தடுமாற்றத்தை சற்றும் சகித்துக்கொள்ளாதவனாக இருக்கிறான்.  சிறுவயதில் பீமன் மேல் அதிக நேசம் கொண்டவனாக இருந்த அவன் ஒரு நிகழ்வில் தான் பீமனால் காப்பாற்றப்படும் சூழலில்  ஏற்பட்ட பொறாமை காரணமாக முற்றிலுமாக பீமனை வெறுப்பவனாக அவன் ஆகிவிடுகிறான். 
அது பீமனுக்கு நஞ்சூட்டலில் போய் முடிகிறது.  இப்படி அவன் ஒரு அதீத எல்லையில்  நெஞ்சத்தை நிறுத்திக்கொள்பவனாக சிறுவயதிலேயே அவன் இருந்திருக்கிறான்.  
    இப்போது அவன் தந்தை அவன் காலில் தலைவைத்து அவன் மண்ணாசையை விட்டுவிடும்படி கதறுகிறார். பிதாமகர் பீஷ்மர், ஆசிரியர்கள் அவன் முடிவை மாற்றூமப்டி கோருகின்றனர். அவன் தாய் அவன் மனைவி அவனை புறக்கணிக்கின்றனர். இத்தனைக்கும் நடுவில் அவன் நெஞ்சம் நிலைமாறாமல் இருக்கிறது. அந்த நிலையை அவன் பாண்டவர் சூதாட்டத்தின்போதே எடுத்துவிட்டான்.  இப்போது தன்னை கலித்தேவனுக்கு அர்ப்பணிக்கும் சடங்கு அவன் உறுதிகொண்ட நெஞ்சத்தை உலகுக்கு வெளிப்படையாக அறிவிக்கும் ஒரு குறியீடு மட்டுமே.  அவன் அவன் அகம் எடுத்த நிலைக்கு சகுனி அல்லது கணிகர் கூட காரணமில்லை. அவர்கள் அவன் எடுத்திருக்கும் நிலைக்கு சாதகமாக அரசியல் முடிவுகளை எடுப்பதற்கு மட்டுமே உதவுகிறார்கள்.  அவன் இப்படி உறுதி கொண்டதை பானுமதியும் கர்ணனும் முதலிலேயே அறிந்துவிட்டனர். பானுமதி தன் இயலாமையை அறிந்து செயல்துறந்து நின்றுவிடுகிறாள். கர்ணன் எந்நிலையிலும்  துரியோதனனுடன்  உடன் நிற்பவன் என்ற உறுதிபூண்டவன். இருப்பினும் அவன் உள்ளம் அதன் காரணமாக அவன் தன்னறத்திற்கு மாறாக செயல்படவேண்டியிருப்பதை தாள இயலாமல் தன்னை மதுவில் ஆழ்த்திக்கொள்கிறான்.  ஆனால் துரியோதனன் தன் செய்த செயல்கள் செய்யப்போகும்  செயல்கள் அதனால் ஏற்பட்ட                  விளைவுகள் எதைப்பற்றியும் சிந்தைகொள்ளாது ஒரே நோக்கில் தன் நெஞ்சத்தை நிலைநிறுத்தியவனாக இருக்கிறான். அவன்  தங்கை  துச்சளை வைக்கும் வாதமெல்லாம்  அவனுடைய  நெஞ்சம் என்ற  
நிலைசேர்ந்துவிட்ட  பெரும்தேரை பூவிதழ் ஒன்று மோதி நகர்த்த முயல்வதுபோல் இருக்கிறது. அவள் சொல்லுக்கு மறுப்பு என எதையும் அவன் சொல்ல முயலவில்லை. துரியோதனன் தொண்டையை இருமுறை கனைத்தான். பின்னர் தாழ்ந்த குரலில் “நன்று. உன் குரல் எனக்கு புதிதல்ல, சைந்தவி” என்றான். “என்னுள் எப்போதுமே அறச்சொற்கள் உன் குரலில்தான் எழுகின்றன என நீ அறியமாட்டாய். ஏனென்றால் அறமென்று இங்குள்ள அனைத்தையும் இளமையில் உன் நாவிலிருந்தே நான் கற்றிருக்கிறேன்” என்றான். அவன் சிறுபுன்னகை செய்தான். விழிகளில் அப்புன்னகை இல்லாமல் அவை இருளை வெறித்திருந்தன. “இதைவிட நூறுமடங்கு தெளிவுடனும் உணர்வுடனும் நீ என்னுள் இருந்து பேசிக்கொண்டே இருந்தாய். உன்னைக் கடந்துசென்றே இம்முடிவை நான் எடுத்தேன்.”
     அவன் தன்னை மண்விழைவுக்கு ஒப்புகொடுத்து விட்டதை அவன் உணர்ந்து இருக்கிறான். அதில் நிலைகொண்டு நிற்கிறது அவன் மனம்.  அவன் உள்ளம் மாறாத பாறையென மாறிவிட்டது. இனி யார் சொல்லியும் அது கரைக்கமுடியாது என்பதை அவனும் உணர்ந்து இருக்கிறான்.

“ஏனென்றால் என் திசை இது. என் நினைவறிந்த நாள் முதலே கண்முன் கண்ட ஊழ் இது. என்னை அள்ளிச்செல்லும் பேராற்றுப்பெருக்கு. இதைத் தவிர்க்கவும் உன்னருகே வந்தமையவுமே வாழ்நாளெல்லாம் முயன்றேன். இப்போது அறிகிறேன், வேறுவழி இல்லை. தெய்வங்களுக்கு மானுடன் தலைகொடுத்தே ஆகவேண்டும். போரிடுவதனால் அவன் தன் அகத்தை சிதைத்துக்கொள்வதன்றி எப்பயனும் இல்லை. முற்றளிக்கவேண்டும், மிச்சமின்றி ஆகவேண்டும். அதுவே நிறைவு. அது அழிவென்றாலும் பெரும்பழி என்றாலும் மற்றுலகின் மீளா இருளென்றாலும் மாற்றுச்செலவென ஏதுமில்லை. ஆகவே இதை தேர்ந்தேன்.”

   இனி அவனிடம் சொல்வதற்கு யாருக்கும் சொல்லில்லை.  வெண்முரசின் இப்போதைய அனைத்து கதை மாந்தர்களில் மிகத் தெளிவாக குழ்ப்பங்கள் ஏதுமற்ற மனநிலையோடு இருக்கும் ஒரே மனிதனாக அவன் இருக்கிறான்.      


தண்டபாணி துரைவேல்

Monday, January 29, 2018

அருவருப்பும் பீதியும்


அன்புள்ள ஜெ

துரியோதனன் தன்னை அர்ப்பணிக்கும் காட்சியின் வரிவரியாகச் செல்லும் நுட்பங்களை கண்டு அருவருப்பும் பீதியும் அடைந்தாலும் வாசித்து முடிக்காமலும் இருக்கமுடியவில்லை. சொல்லப்போனால் மீண்டும் ஒருமுறை வாசித்தேன். எத்தனைமுறை வாசித்தாலும் ஏதோ ஒன்று இருக்கிறது. முதலில் உறவைத்துறக்கிறான். அதற்கு குல இலச்சினை. அதன்பின் உடல். உடலில் அத்தனை விலங்குகள் இருக்கின்றன. நாகங்கள் காகங்கள் குரங்குகள் அட்டைகள் எல்லாமே உள்ளன. அதன்பிறகு ஆன்மா. ஆன்மாவில் எருமையும் கழுதையும் பன்றியும். பன்றிக்கழுத்தை வெட்டமுடியாதென்பதைக்கூட நாவலில் இருந்து தெரிந்துகொண்டேன். அந்தபலி ஒரு கருக்குழி. அதிலிருந்து அவர் மேலெழுந்து வருகிறது குழந்தை பிறப்பதுபோல


சுந்தரராஜன்

அழியாத தொடர்ச்சி



ஜெமோ சார்,

வெண்முரசின் இப்பகுதி பதற்றத்துடன் வாசிக்க வைக்கிறது. அதோடு பழைய கதைகளின் தொடர்ச்சிகள் வந்துகொண்டே இருந்தன. கலிதேவனின் ஆலயத்தில் இருக்கும் அந்த நரிகள் எப்போதும் அங்கேயே இருந்துகொண்டிருப்பவை. அவற்றுக்கு சாவே இல்லை. அதே பெயர்கள். அதே தோற்றம். அவற்றில் மூத்தவன் சிறிய தம்பிக்குச் சொல்லும் வாழ்க்கைத்தத்துவம் அருமையான கவிதை. என்றுமிருப்போம் என்று உணர்ந்திருப்பதனால் நமக்கு இறப்பு அச்சமூட்டுவதில்லை. தெய்வங்களை நாம் வழிபடுவதுமில்லை என்று அவன் சொல்லுமிடத்தில் புனைவு கவிதையாக ஆகிவிட்டது. அவை முன்னால் வந்த இடத்தை தேடிச்சென்று வாசித்தேன். அந்த அழியாத தொடர்ச்சி பிரமிப்பூட்டியது.



ராம்குமார்

மகாபாரதகால மனநிலை



அன்புள்ள ஜெ,

துரியோதனன் தன்னை அளிக்கும் பலிச்சடங்குகள் கொடூரக்கலை என்பதன் அடையாளமாக இருந்தன. குமட்டலும் அருவருப்பும் ஏற்படுத்துபவை. ஆனால் இவையெல்லாம் இன்றுகூட ஏதேனும் வடிவில் நீடிக்கின்றன. காசுவெட்டிப்போடுதல் முடிசிரைத்து நெருப்பில் போடுதல் நீரில் மூழ்கி தலைமுழுகுதல் போன்றவை. மாசாணியம்மன் கோயிலில் மிளகாய் அரைத்துப்பூசுதலும் இப்படிப்பட்ட சடங்குதான். மகாபாரதகால மனநிலையில் இருந்து நம் சமூகம் இன்னமும்கூட வெளியே வரவேயில்லை என நினைக்கிறேன்


சங்கரராமன்

துரியோதனனின் முகங்கள்


அன்புள்ள ஜெ

துரியோதனன் குருதியில் மூழ்கி தன்னை முற்றாக ஒப்புக்கொடுக்கும் காட்சி இதற்கு முன்னர் வந்திருந்தது. கர்க்கரின் மாணவரான தீப்தர் காகதீத்ததின் நீர்கொண்டுவந்து அந்தச்சுனையில் ஊற்றி அதில் துரியோதனனை மூழ்கவைத்து அவனை ஆட்கொண்டிருந்த கலியை அகற்றுகிறார். அன்றைக்கு நகரில் நிறைந்திருந்த காகங்கள் கூட்டம் கூட்டமாக வந்து அந்த நீருக்குள் விழுந்து மூழ்கி மறைந்தன. இன்று அதே காகங்கள்தான் கூட்டம் கூட்டமாக உள்ளிருந்து எழுந்து வருகின்றன

ஆனால் அன்றைக்கு நகரமே நோயுற்றிருந்தது. துரியோதனனும் நோயில் இருந்தான். அவனை நீராட்டியபோது நகரம் மீண்டுவந்தது. இப்போது இந்தக் கலிநஞ்சு மூடியபோது நகரம் உற்சாகமாக துள்ளிக்கொண்டிருக்கிறது. துரியோதனன் மாபெரும் ஆற்றல்கொண்டவனாக இருக்கிறான்


ஜெயராமன்

செதுக்க படாத மலை



அன்புள்ள ஜெ , 

செதுக்க படாத மலைகற்களால் உருவாக்க பட்ட ஆலயம் என்பது அந்த ஆலயத்தின் பழமையை சொல்லியது , கூடவே அதர்வ வேதமும் அப்படியானது என நினைத்தேன் .நேரெதிர் சிற்றாடிகளும் யோசிக்க சுவாரஸ்யமாக இருந்தது , இரண்டும் ஒன்றையொன்று பிரதிபலிப்பவை என நினைத்தேன் .

இன்னும் எல்லாவற்றையும் இப்படிச்  சொல்ல தோன்றுகிறது , ஆனால் இதெல்லாம் மீறி இதில் ஈர்ப்பது மனம் திரும்பும் திசைகளை நீங்கள் அனாசயமாக நீங்கள் காட்டுவதுதான் , அந்த தருணம் முடிந்ததும் துச்சாதனனை நேசமுடன் இருளில் வருவாரா என பார்த்த துச்சளையின் மனம் என.

இன்னொன்று துச்சளை மருத மரத்தடியில் நின்றது , அந்த மருதமரம் ஏதோ குறிப்புணர்த்துகிறது என நினைத்தேன் , அவளை ஒரு நல்லதெய்வம் குடையாக காத்தது என , ஏனெனில் திரும்ப அவள் பாம்புகளுக்கு பயந்து மருதமரம் கீழ்தான் வந்து நிற்கிறாள் , அதனால்தான் அவ்வாறு எண்ணினேன் :)

ராதாகிருஷ்ணன்

Sunday, January 28, 2018

பலி



அன்புள்ள ஜெ,


சித்தம் அப்படியே தடைபட்டு  நின்று நிகழ்வுகளை மட்டும் வெறித்து  பார்க்கும் மனநிலையில்  வாசித்தேன் :)


விவரிப்புகள் அசரடித்தது , ஊர்வரின்  சுண்டுவிரலில் இருந்த நீலமணியாழி முதல் எரியும்  விறகு  கட்டையை  பயந்து அதையே அணைக்கும்  கருங்குரங்கு  வரை .
உங்களுக்கு தெரிந்த தகவல்களுக்கு  எல்லையே  இல்லை போல :)  பாம்பை எடுத்து போடும் காட்சி ,   வாலை தட்டி தலையை  தூக்க வைப்பதன் வழியாக கழுத்தை பிடித்து தூக்குவது என

அது போல துல்லியமும் , எருமைகள்  ,கழுதைகள்  வெட்ட படுவதும்  , பன்றி கிழிக்க  ( அறுக்க )  படுவது.மந்திர  ஒலிகளுக்கேற்ப  தழல் நடனமாடுகிறது  , கூட காடும்  சேர்ந்து ஆடுகிறது  எனும் இடம் மனதை நடுங்க  வைக்கிறது .
துரியோதனன் சீர்நடையில்  நடந்தது அவனின் தெளிவான மன நிலையை சொல்லியது .

மரப்பட்டை  முதலையை  தோல்  போல எனும் உவமையை  மிக ரசித்தேன் .
இன்றய அத்தியாயத்தை  பற்றி இன்னொரு கடிதமும் கொஞ்சம் நேரம்கழித்து அனுப்புவேன்  :)

ராதாகிருஷ்ணன்

தம்மதென்று



ஜெ,

துச்சளையினால் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டிருந்தன இதுவரை, அவள்தான் அஸ்தினபுரியின் வராஹி. இன்று நிகழ்பவை அனைத்தும் கர்கர் நீங்கிய போதே துவங்கி காத்திருந்தவை. அவள் நீங்கிய பின்பு எல்லாமும் குரூரமாகி விடுகிறது. போருக்குப் பிந்தைய குருஷேத்ரத்திற்கு ஒரு prelude போல. அப்பால் இருந்து கலி காத்துக் கொண்டு இருந்திருக்கின்றான். 

எரிச்சலுடன் தன் உடலில் மொய்த்த ஈக்களை விரட்டியபின் “நம் இடத்துக்கு ஏன் இந்த மானுடர் வருகிறார்கள்?” என்றான் கிருங்கன். “அவர்கள் வந்தமையால் அல்லவா இந்த உணவு? என கிருங்கனும் லோமசனும் பேசிக் கொண்ட போது சிறு வயதில் படித்த இந்த வரிகள் நினைவுக்கு வந்தன.





"பருத்ததொந்தி
நம்மதென்று நாமிருப்ப நாய்நரிகள் பேய்கழுகு
தம்மதென்று தாமிருக்கும் தான் !” 


ஏ.வி.மணிகண்டன்

விசையுறு பந்து



குருதிச்சாரலில் வரும் துரியனின் சித்திரம் முக்கியமானது. கொந்தளிக்கும் அவையிலும், நிகர் நிலை கொண்டவனாக, தெய்வச்சிலை போன்ற நிலையானவனாக, தெய்வங்களுக்கே உரிய முழுமையுடல் கொண்டவனாக. அவன் சித்திரம் முழுமையாவது துச்சளை வாயிலாக. குருதிச்சாரல் 38 ல் துச்சளை கூறுவது போல அவன் தன்னுள் நிறைந்தவன். தன் நிறைவுக்காக யாரையும் நாடாதாவன். அசைவறு மதியன்.

வெண்முரசில் துரியனின் குணச்சித்திரம் இரு எல்லைகள் கொண்டவையாக வந்து கொண்டிருக்கும். அவன் பீமனைக் காணும் வரை இறுகியவனாக, பாறைகளைக் கையால் அடித்து உடைப்பவனாக இருப்பான். பீமனுடன் பழகும் சில காலங்களில் அவன் நெகிழ்ந்தவனாக, அவன் பெருந்தன்மையை தயங்காமல் வெளிப்படுத்துபவனாக இருப்பான். பின்பு புண்பட்டு பீமனுடனும், யாரென்றறியா ஒன்றோடும் வஞ்சமடைந்து ஸ்தூனகர்ணன் முன் தன் மென்மையைத் துறந்த பிறகு நிகர்நிலை கூடிய முழுமையுடல் கொண்டவனாக, ஆழமானவனாக, தன்னுள் நிறைந்தவனாக, பேரழகுடையவனாக இருப்பான். அப்போதும் துச்சளை தான் அவனது இந்த மாற்றத்தைச் சரியாக உணர்ந்திருப்பாள். வாரணவத நிகழ்வுக்குப் பின் மதுவுக்கு அடிமையாக, தன்னிலை அழிந்து வாழும் அவன் மீண்டும் கர்ணனின் வருகைக்குப் பின்னர் தான் மீள்வான். அப்படி மீளும் ஒருவன் இனியன். நெகிழ்வானவன், பெருந்தன்மையே உருவானவன். இன்று அவனுடன் ஒட்டி நின்றிருக்கும் பூரிசிரவஸ் உட்பட பலர் அவனால் அந்த சமயத்தில் தோள் தழுவப்பட்டவர்களே!!

வெய்யோனில் வரும் துரியன் மற்றும் கர்ணனின் சித்திரம் மிக முக்கியமான ஒன்று. அதில் துரியன் மதுவைத் துய்ப்பவனாக இருப்பான். தன் சொற்கள் மீது கட்டுப்பாடு என்பது இல்லாத ஒருவன். பானுமதிக்கு தன்னை முற்றளித்த ஒருவன். வெய்யோன் முழுவதிலுமே அவனது மதுவருந்திய காட்சிகளும், ஏப்பங்களும் மீள மீள வந்து கொண்டே இருக்கும். மாறாக கர்ணன் அவனை நிரப்புபவனாக, அவனது குறைகளைச் சரி செய்பவனாக, மதுவை மன அழுத்தத்தில் மட்டுமே நாடும் ஒருவனாக, மற்ற சமயங்களில் சமநிலை குன்றாதவனாக இருப்பான். பன்னிரு படைக்களத்திற்குப் பிறகு இரண்டுமே தலைகீழ்.

ராஜசூய யாகத்திற்குப் பிறகு, அந்த மயனீர்மாளிகை நிகழ்வுக்குப் பின் துரியன் மீண்டும் ஸ்தூனகர்ணனின் ஆளுகைக்கு உட்படுகிறான். மீண்டும் நிகர்நிலை கொண்ட முழுமையுடலும், பேரழகும், ஆழமும், கார்வையும் நிறைந்த கூற்றுகளைக் கொண்டவனாக மாறுகிறான். முழுமை என்பது அவனது உடல் மட்டுமல்ல, அவனது உள்ளமும் கூடத் தான். அதன் பிறகே அவன் தன் ஆட்சியில் கவனம் செலுத்தத் துவங்கி இருக்கக் கூடும். தான் ஆற்ற வேண்டியவற்றைப் பற்றிய ஒரு தெளிவு அவனுக்கு வந்திருக்கக் கூடும். ஒரு நல்லாட்சியாளனாக அவன் மாறியிருப்பான். அவ்வாறு தான் அவன் நிகழ்ந்திருக்கிறான் என்பதற்கு பாஞ்சாலியின் பெண்ணிழிவு நிகழ்வை அஸ்தினபுரி எதிர்கொண்ட விதமே சான்று.

அதன் மொத்த பொறுப்பையும் அது கர்ணன் மீது சுமத்துகிறது. தங்கள் அரசன் மீது அவர்களுக்கு குறை இல்லை. அந்த நிகழ்வுக்காக அவர்கள் வெட்குகிறார்கள், துயரடைகிறார்கள், வருந்துகிறார்கள். ஆனால் தங்கள் அரசனை அவர்கள் விட்டுக் கொடுக்கவில்லை. ஆம், அவர்களுக்குள்ளும் இந்திரப்பிரஸ்தம் ஒரு அழுக்காறைத் தூவியிருக்கும் அல்லவா!! குந்தி பிரயாகையில் கேட்கும் “கணவன் கொள்ளையடித்துக் கொண்டு வரும் நகையை வேண்டாம் என்று கூறும் எத்தனை மனைவியரைக் கண்டிருக்கிறாய்?” என்ற கூற்று தான் நினைவுக்கு வருகிறது. காலம் காலமாக அரசாங்கங்கள், மன்னர்கள் அப்படித் தான் இருந்திருக்கிறார்கள். அடுத்த அரசைக் கொள்ளையடித்து தன் நாட்டை வளப்படுத்தவே அவர்கள் முயன்றிருக்கிறார்கள். நமக்கெல்லாம் தெரிந்த உதாரணம் கோரியும், தைமூரும். எனவே தான் நிலத்திற்காக என்றால் அதில் தான் எந்த அறப் பிழையையும் காணவில்லை என கிருஷ்ணன் கூறுகிறான். இருந்தாலும் அதில் நிகழ்ந்த பெண்ணிழிவு என்பது ஆன்றோர் அவையில் நிகழ்த்தப்பட்டது என்ற குறைக்கு யாராவது பொறுப்பேற்றாக வேண்டும் அல்லவா. எனவே அது கர்ணன் மீது ஏற்றப்பட்டது. அவன் மதுவில் மூழ்குகிறான்.

மாறாக துரியன் மிகச் சிறந்த ஆட்சியாளனாக மலர்கிறான். சலிப்பூட்டும் அவை நிகழ்வுகளில் கூட (இவை பெருஞ்சலிப்பைத் தருவதாக வெய்யோனில் கூறுபவன் தான் அவன்) மிகந்த பொறுப்புடன் செயல்படுகிறான். தன்னை வெறுக்கும் மக்களைக் கூட மனதின் ஓரத்தால் கூட வெறுப்பதில்லை அவன். ஒரு கண்டிப்பான தந்தை போல, மிக மிகச் சிறந்த ஆட்சியை அவர்களுக்கு வழங்குகிறான். மொத்தத்தில் கர்ணனும், கிருஷ்ணனும் செயலின்மைக்கு ஆட்பட்டிருந்த காலகட்டத்தில் விழைவொழிந்த, தன்முனைப்பு கூடிய, முன்னுதாரணமான ஷத்ரிய நெறிக்குட்பட்ட ஆட்சியாளனாக, செயல் புரிபவனாக இருக்கிறான் துரியன். செயல் வீரனைப் போல, பேரழகுடைய, நிகர் நிலை கொண்ட மன்னன் இயல்பாகவே மக்களை அவனை நோக்கி ஈர்க்கிறான். அவனது ஒவ்வொரு சொல்லும் அவர்களுக்கு வேத வாக்கே. இங்கே துரியன் ஒரு பெருங்காந்தமாக அவனது குடிகளை ஈர்க்கிறான். அது அவனது இயல்பு தான். இளமையில் தம்பியரை, பிறகு இரு மனைவியரை, கர்ணனை, தோழர்களை அவ்வாறு ஈர்த்தவன் தான் அவன். துச்சளை கூறுவது போல பெருஞ்சிலந்தி அவன். வரலாறு தோறும் அத்தகைய ஈர்ப்புடைய ஆளுமைகள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள். அவர்களை முன்வைத்தே பெரும்கனவுகளும், பேரழிவுகளும் நிகழ்ந்திருக்கின்றன. இன்று பாரத வர்ஷத்தில் அப்படிப்பட்ட இருவராக கிருஷ்ணனும், துரியனும் வந்து நிற்கின்றனர். விசையுறு பந்து போன்ற உடலும், அசைவறு மதியும் அருளப்பட்டவர்கள். உண்மையில் கிருஷ்ணனும், கணிகரும் தான் நாற்களத்தில் எதிர் நிற்கின்றனர். ஆனால், கணிகர் தன் முகமாக முன்னிறுத்துவது துரியனை.

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்

தாரையின் விலகல்



அன்புள்ள ஜெ,

ஒரு இறுக்கமான சூழலில், அதனை விட்டு விலகி நிற்பவர்களால் சூழலை நன்றாகப் புரிந்து கொள்ள முடிவதோடு எளிதாக முடிவுகளை எடுக்க முடிகிறது. இந்த விலக்கம் தாரைக்கு, சிறு பிள்ளைகளுக்குரிய விளையாட்டு மனோபாவத்தால் இயல்பாக வருகிறது. கால்களால் காடறியும் மானாகவே எப்போதும் துள்ளுகிறாள். இனிப்பை ஆடையில் மறைத்து அவைக்கு எடுத்துச் செல்கிறாள். துச்சளை தன் வாழ்வின் எடை மிக்க ஒரு கணத்தைச் சந்திக்க, ஒரு சாகசப் பயணத்தின் வழியே அவளை அழைத்துச் செல்கிறாள். 

இந்தச் சுரங்கப்பாதைப் பயணத்தைப் படிக்கும்போது ஆலிஸின் அற்புத உலக சாகசங்கள் நினைவுக்கு வந்தது. சலிப்பூட்டும் அரண்மனை அன்றாட வாழ்வில் இருந்து சுரங்கத்தின் வழியே தனக்கான காட்டில் எழும் பெண்.

அன்புடன்,
S பாலகிருஷ்ணன், சென்னை

இனிமை



அன்புள்ள ஆசிரியருக்கு

குருதிச் சாரல்-38

இனிமை என்பது பற்றிய துச்சளையின் கூற்று திகைக்க வைத்தது.
இனிமையைத் தேடி வளர்கிறோம்.
ஆனால் இனிமையை அடைவதென்பது நாம் சிறிதாவது அழியும் போதுதான்.
காதலோ, பணியோ, சேவையோ எதன் மூலம் கிடைக்கும் இனிமையும் நாம் நம்மை
சிறிதாவது அழித்துக் கொள்ளாமல் கிடைக்காது.அதிலும் இனிமையின் உச்சத்தை நாம் முற்றழிந்துதான் பெற முடியும்என்ற மெய்மையை சாதரணமாக உரைவிட்டாள்.
அதை எல்லோராலும் உணர முடியாது இழந்து பெற்றவர்களால் மட்டுமே உணர முடியும்.

உணர்த்தியதற்கு நன்றி.

கா.சிவா

Saturday, January 27, 2018

தாரையும் துச்சலையும்



அன்புள்ள ஜெ ,

ஒரு கதாபாத்திரத்திற்கு அதன் உடல் மொழியில் ஒரு விலங்கின்  இயல்பையும் சேர்த்து விடுகிறீர்கள்  , துச்சளை யானை என்றால் , தாரை  மான் ,அவள் ஓடி வருவது எனக்கு துள்ளி  வருவது போல தோன்றும் :)

பெண்கள் திருமணமான  உடனேயே  வேறொரு பெண்ணாக ,முதிர்ந்தவளாக   மாறிவிடுவதை  கவனித்திருக்கிறேன்  , அப்படி என் அக்கா சட்டென மாறியதை ஆச்சிரியதுடன் பார்த்தேன் . உலகறியாத  ஆனால் அறிந்ததாய் எண்ணி கொள்கிற ஒரு திசையறியா ஆட்டுகுட்டியை மேய்க்கிற  பொறுப்பு வந்துவிடுவதால்  உருவாகும் மாற்றம் இது என  விகர்ணன் வழியாக அறிந்தேன் !  இருட்டில்  தாரகையின் விழியில் வெளிவந்த புன்னகை அதை சொல்லியது  :)


சுரங்கவழி காட்சியை ரசித்தேன் , சறுக்கு நீர்வழி விளையாட்டு போல !
39 பகுதி அத்யாய முடிவில் துச்சளையை எதுவோ சீண்டியதாக  நினைத்தேன் , அது கருநாகமோ  என எண்ணி கொண்டேன் , அதன் இயல்பு அல்லது அது விரும்பிய  ஒன்றை துச்சளையில் படர செய்தது என எண்ணி கொண்டேன் .

துச்சாதனன் நிலை வலி கொண்டது , தன் தங்கை தொடாதே  என்பது அன்னை தன்னை தொடாதே என்பதை போல , அது வலியின் உச்சம் .

துரியோதனனின் நிதாத்தம்  கசாப்பு  கடைக்காரன் விலங்கின்  கழுத்தறுக்கும் போது கொள்ளும் நிதானம் போல இருந்தது , தவறு தொடர்ந்து செய்வதன் வழியாக கிடைக்கும் நிதான தியான நிலை அது  என எண்ணிகொண்டேன் , அனுபவதிருடன்  அனுபவகொலைகாரன்  இப்படியான நிதானத்துடன்தான் இயங்குவான்  என நினைத்தேன் .

அந்த மனநிலைக்குள் துச்சளையின் வார்த்தை உள் செல்லாது ,அவன் வாழ்வது  வேறுஉலகம் என நினைத்தேன் ,

தன் முன்பு  வாழ்ந்த உலகை துச்சளை வழியாக காண்கிறான்  அல்லது அவள் வழியாக செல்ல விழைகிறான் என எண்ணினேன் ,நாம்  சிறுவயது  கடந்த காலத்தை எண்ணி மீண்டும் அங்கு செல்ல முடியுமா , அந்த வாழ்வு திரும்ப அமையுமா என ஏங்குவோமே அதை போல .

துச்சளையுடன் காந்தாரி  மற்றும் சகோதிரிகள்  இயல்பாக உரையாட முடியாததற்கு  நான் வேறு காரணம் நினைத்தேன் . அதாவது உள்ளூர இவர்கள் துரியோதரனின்  விருப்பதிற்கு துணையாகவே  இருக்க விரும்புகின்றனர்    , அதற்கு தடையாக இருக்கும் கணவனின் சார்பாக துச்சளை இருப்பதால்தான் அவள் மீது இவர்கள் விலக்கம் கொள்கின்றனர் என நினைத்தேன் , ஆனால் துரியோதனனிடம்  துச்சளை பேசும்போது அம்மாவின் வார்த்தையாக  தன்னை முன் வைக்கிறாள்  , ஒரு வேளை தந்தையின் சார்பாக மட்டும் நின்றிருந்தால் துரியனின்  மனதை அசைக்க  முடியாது ,அல்லது தந்தையின் சார்பு என்பதால் இயல்பாகவே  எதிர்நிலைக்கு  சென்று விடுவார் என்பதை யூகித்து  செய்திருக்கலாம்  என நினைத்தேன் .
நான் எண்ணி கொண்டது துச்சளை திருதராஷ்டிரனின் பெண் உருவம்  என .

ராதாகிருஷ்ணன்

அஞ்சுதலின் சுவை.



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

பருத்த உடலை கொண்ட துச்சளை சுரங்கத்தின் வழியே எவ்வாறு செல்வாள் ? அதற்கும் வழி இருந்தது தாரை கண்டு சொன்னாள். என்றாலும் ஒரு அச்சம்.  அவளை கடைசியாக வரச் சொல்லாதே விகர்ணன் முன்னால் செல்ல அவளை அனுப்பிவிட்டு நீ அவள் பின் செல்.  ஆம் தாரை அவ்வாறே செய்கிறாள்.  ஒரு கணம் மூச்சு நின்று தொடர்ந்தது.  தாரை செல்கிறபோது வழியில் நீர்த்துளிகள் அவள் மேல் விழுகிறது, மேலே ஏரியாமே? நடுவழியில் இது வேறா ? 

சருகில் கால் வைக்க வேண்டாம் கட்டுவிரியன் மணக்கிறது.  அச்சம் புலன்களை விழிப்பில்......... சாகசம், அஞ்சுதலின் சுவை. பாலமலை காட்டுக்குள் நண்பருடன் திரிந்து மீண்டது நினைவுக்கு வருகிறது.  . 

அன்புடன்
விக்ரம்
கோவை

வெண்முரசு இசை



இனிய ஜெயம் 

வெண்முரசு வாசிப்பதில் உள்ள மகிழ்வுகளில் ஒன்று , அது திறந்து விடும் வெவ்வேறு கலைவெளியை  சென்று அறிமுகம் செய்து கொள்வது .

வெண்முரசு வழியே தான் கதகளியை அணுகினேன் .  வெண்முரசு கீசகவதம் சித்திரத்தை முற்றிலும் மௌனமாக விட்டிருந்தது .அதை கதகளி கீசக வதம் வழியே நிரப்பிக்கொண்டது ,வெண்முரசு அளித்த அனுபவங்களில் மகத்தானது என்று சொல்வேன் .

அடுத்தது வெண்முரசு திறந்து விட்ட இசைக்கான வாசல் .குறிப்பாக மேலை இசை .அதிலும் குறிப்பாக வேகனர் ஒபேரா .   வேகனர் இசை கோலத்தை அணுகி உணர ஒரே வழிதான் உண்டு . அந்த இசை கோலத்தை வேகனர் அரங்கேற்றப் பின்புலமாக அமைத்த நாடக கதைகளின் அறிமுகத்தை அடைவதே அது .

மூகாம்பிகை கோவிலை சுற்றிய அதிகாலை நடையில் அஜிதன் , வேகனரின்  ட்ரிஸ்டன் அன் ஐசோல் கதையை முழுமையாக சொல்லி , அந்த நாடகத்தின் ஒவ்வொரு அங்கத்திலும் வரும் முக்கியமான நாடகீய தருணங்களை விளக்கினான் .

பின்னர் வந்த இரவுகளில் இணையத்தில் அந்த நாடகத்தில் ,அந்தந்த தருணங்களுக்கு வேகனர் அமைத்திருந்த இசை சித்திரங்களை பத்து பத்து நிமிடங்களாக கேட்பேன்  . ஒரு மூன்று மாதம் இரவுகளில் வேகனரின் வெவ்வேறு இசை  துணுக்குளை கேட்டுக்கொண்டிருந்தேன் . அப்போது ஒரு அதிசயம் உணர்ந்தேன் .  

வேகனர்  தனது ரிங் ஒபேரா வில் அமைத்திருந்த இசை கோர்வை ஒன்று ,காந்தாரி அஸ்தினாபுரி நுழையும்  பருவகால சித்தரிப்பின் கற்பனையுடன் கச்சிதமாக முயங்கி என் உள்ள அமைந்த அந்த சித்திரத்துக்கு வேறு ஆழம் அளித்தது .

அங்கே துவங்கி வெண் முரசின் ஒவ்வொரு நாடகீய தருணங்களும் அதற்கான பின்னணி இசையை வேகனர் இசையில் தேடி அடைந்து ,அந்த நாடகீயம் உருவாக்கும் உணர்வுகளுடன் கலந்து கொள்வது எனது ,  [பிரதி தரும் இன்பம் ] வாசிப்பின்பத்தை உயர்த்திக்கொள்ளும் ஒன்றாக மாறியது .

பின்னர் உங்களது உரை காணொளி ஒன்றில் கண்டேன் ,நீங்கள் வெண்முரசுக்கு இணை வைக்கும் மற்றொன்றாக வேகனர் இசை கோலங்கள்  இருந்தது .

அங்கே துவங்கி கேட்கும் ஒவ்வொரு இசை துணுக்கையும் ,வெண்முரசின் எந்த தருணத்தில் வைக்கலாம் ,அல்லது வெண்முரசின்  இந்த தருணத்துக்கு  ஏற்ற இசை கோலம் எது என தேடுவது எனது அன்றாடங்களின் ஒன்றாகிப் போனது .

அப்படி கண்டடைந்ததுதான் பண்டிட் ஜஸ்ராஜ் அவர்களின் குரல் .



இதோ இது ஜஸ்ராஜ் அவர்கள் பாடிய மதுராஷ்டகம் .    இதுதான்  வெண்முரசு   நீலனுக்கான குரல் . மதுராஷ்டகம் என்றாலே அது எம் எஸ் சுப்பு லட்சுமி குரலில்தான் கேட்கப்படவேண்டும் எனும் ஒரு தேக்க நிலை இங்கே நிகழ்வது போல தெரிகிறது .

எம் எஸ் குரலில் அழகு நளினம் எல்லாம் இருக்கிறது . வண்டு முரளும்  அழகு அதில் இருக்கிறது .

ஜஸ்ராஜ் சிம்ம கர்ஜனை .   இன்னும் சொல்லப்போனால் பற்றி எரியும் உயிரோட்டம் இவரது  குரலில்
 எழும் மதுராஷ்டகத்தினுள்தான்  தழல்கிறது .

தம்பி அவ்ளோ பெரிய இசை விமர்சகரா நீ ,என நீங்கள் மனதுக்குள் கேட்பது இங்கே கேட்கிறது .  ஆம் எனக்கு இசை தெரியாது .ஆனால் என்னை வெண்முரசு அழைத்து செல்லும் பாதை மேல் நின்று இதை என்னால் திட்டவட்டமாகவே சொல்ல முடியும் .

ஜஸ்ராஜ் குரல்தான் நீலனுக்கான குரல் .

கடலூர் சீனு