Friday, June 30, 2017

திரௌபதி



அன்புள்ள ஜெ

ஷண்முகவேல் எப்போதுமே கொஞ்சம் பிந்தி வரைந்துகொண்டிருக்கிறார். ஆகவே வென்முரசின் தீவிர வாசகர்கள்கூட அவருடைய பல ஓவியங்களை தவறவிட்டிருக்கிறார்கள். இந்த ஓவியம் அவர் வென்முரசுக்காக வரைந்த ஓவியங்களில் மிகச்சிறந்த சிலவற்றில் ஒன்று. பீமனை எண்ணி கலங்கி முழுமையான பெண்ணாக உணரும் திரௌபதி

ஜெயராமன்


‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 35



வெண்முரசும் ஆரிய திராவிட பிரிவினையும்




இது பெரும்பாலும் மொழியியலாளர்களின் கூற்றாகவே வந்துள்ளது. முதன் முதலில் திருவிடம் என்பதன் மரூவு தான் திராவிடம் என்ற கருத்தை மூ.சி. பூரணலிங்கம்பிள்ளை (A Primer of Tamil Literature) சொன்னதாக இணையத்தில் உள்ளது. அதுவும் கூட மொழி சார்ந்த ஒரு மாற்றமே. ஜெ வும் கூட திராவிடம் என்பதன் தமிழாக்கமாகவே திருவிடம் எனப் பயன்படுத்தியிருக்கிறார். இனங்களும், மரபணுவும் கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.


வெண்முரசில் திருவிடம் என்று வருகின்ற நிலம் மேற்கூறிய வரையரைக்குள்ளாகவே வருகிறது. காஞ்சிக்குக் கீழ் அமைந்த நிலமே தமிழ் நிலம் என வெண்முரசில் குறிப்பிடப் படுகிறது. கிராதம் திருவிடம் என்பதை “அன்னையும் கன்னியும் என்றன்றி இங்கு நிலம் வேறுமுகம் கொள்வதில்லை. பொன்றா பெருந்திருவென அன்னை கோயில்கொண்டிருப்பதனால்தான் இந்நிலம் திருவிடம் என்று அழைக்கப்படுகிறது” என வரையறுக்கிறது. வண்ணக்கடலில் திரு வாழும் நிலம் என்ற பொருள் என்றால், இங்கே திரு – தெய்வம் இருக்கும் இடம், கோவில் என்ற சிற்ப சாஸ்திரப் பொருளில் வருகிறது.

திரு M. ஸ்ரீநிவாச ஐயங்கார் தனது 1914 ஆம் வருடத்திய “Tamil studies or Essays on the history of the Tamil people, language, religion and literature என்ற நூலில் ஜெ கூறிய வாதங்களுக்கு மூலம் உள்ளது. மேலும் இந்நூலில் மேலும் ஒரு ஆர்வமூட்டும் செய்தி உள்ளது. அது திராவிட பிராமணர்களைப் பற்றியது. மராத்திய, கன்னட, தெலுங்கு, குஜராத்தி, துளு பிராமணர்களில் தென்னகத்தைச் சார்ந்த ஒரு பிரிவினர் இவர்கள். (பஞ்ச கௌடா – பஞ்ச திராவிடர்கள் என்றும் இவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்!!) தங்கள் பெயரின் பின்னொட்டாக ‘திராவிடர்’ என்பதை இணைத்துக் கொள்வர். மிகப் புகழ்பெற்ற ஒரு திராவிடர் – ராகுல் டிராவிட். இன்றும் தொடரும் ஒரு வழக்கம் இது. வந்தேறிகள் ஆரியர்கள் என்றால், இவர்களை என்ன செய்வது என்று தெரியவில்லை!!

இந்த பஞ்ச திராவிடர்களை முன்வைத்தே கால்டுவெல் கண்டடைந்த ‘வேறு நிலம் நோக்கித் துரத்தப்பட்ட சிறுமைகொள் ஷத்ரியர்களே’ திராவிடர்கள் என்ற வாதத்தை மறுக்கிறார் அய்யங்கார் அவர்கள். சமஸ்கிரதத்தில் ‘திரா’ – துரத்தப்பட்ட, ‘விட்’ – துண்டு (நிலம்) என்ற இரு சொற்களின் இணைவே திராவிடம் என ஒரு சொல்லியல் ஆய்வு இருந்திருக்கிறது. ஆயினும் அது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்றே அவர் தெரிவிக்கிறார். திராவிடம் என்பது ஒரு பகுப்பு, ஒரு நிலம் சார் குடி அடையாளம் அவ்வளவு  மட்டுமே. சங்கரர் கூட திருஞானசம்பந்தரை 'திராவிட சிசு' என்றே அழைத்திருக்கிறார். மொத்தத்தில் திராவிடர்கள் என்பதற்கு இன ரீதியான ஒரு முக்கியத்துவம் இல்லை. அவையெல்லாம் பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் ‘ரூம்’ போட்டு யோசித்ததால் வந்தவையே.




அருணாச்சலம் மகராஜன்



ஆரியவர்த்தம் 4

 

ஆரியவர்த்தம் 2

 


Thursday, June 29, 2017

நகா்நுழைவு




நீா்க்கோலம் -  என்ன ஒரு கம்பீரமான நகா்நுழைவு.  சக்ரவர்த்தினி என்றால் இப்படிதான் இருப்பாா்கள் போல.... நெருப்பை எதன் பொருட்டும் மறைக்க முடியாது.  பேரரசி என்று எண்ணாத ஒரு கணமும் அவளுக்கும் அவளை பாா்ப்பவா்களுக்கும் வாய்க்காது போல். பட்டத்துயானையின் மேல் ஏறி உப்பாிகைக்கு இணையாக தோன்றும் அந்த காட்சியை மனம் மிக மிக துல்லியமாக கண்டுவிட்டது. இவள் அம்மையே தான்.

தேவி. க
ஆவடி

சமைத்தல்



அன்புள்ள ஜெ. வணக்கம். 

சுவையாக சமைக்கத்தெரியாதவன் இதயம் இனிமையானதாக இருக்கவாய்ப்பில்லை. ஆன்மீகத்தில் உயரநினைக்கும் உள்ளங்கள் தனது சமையலின் சுவைப்பக்குவத்தில் இருந்து தனது இதயத்தின் தூய்மையை அறிந்துக்கொள்ளமுடியும் என்கிறார் சுவாமி விவேகானந்தர். நளனையும் பீமனையும் கொண்டுதான் இதை புரிந்துக்கொள்ளமுடிகின்றது. 

சமைத்தல் என்பது புறம்வயமாக வெளிப்படும் ஒருதவம். இந்த தவத்தில் வென்ற இருவர் நளனும், பீமனும். வெற்வேறு காலத்தில் வாழ்ந்த இருவரும் ஒருவர் என்பதை நளபாகத்திலும் பீமபாகத்திலும் உணரவைக்கின்றீர்கள்.

தவத்தில் உயர்ந்த ஒருவர் வாழும் இடம் என்பது மானிட வெளிக்குக்கு அப்பால் உயரத்தில், அவர்களை உலகம் தனது சதாரண உலகத்திற்குள் இழுத்து வந்து நிறுத்துகின்றது. அவர்கள் எவ்வளவு இழுத்து வந்து கட்டிப்போட்டாலும் அப்பால் அப்பால் என்று சென்றுக்கொண்டே இருக்கிறார்கள். தனது தம்பி புஷ்கரனுக்காக சமைக்கத்தொடங்கும் நளன் அவனின் உயர்ந்த தவத்தில் உயர்ந்த உலகத்தில் இருக்கிறான். அவனை இந்த உலகத்தில் கொண்டுவருவதற்கு கருணாகரர் ஒவ்வொரு படியாக இறக்குகின்றார். நளன் ஒவ்வொருபடியிலும் கீழ்இறங்கும்போதும் தனது தவத்தின் எல்லையில்தான் நிற்கின்றான். அவனைவிட்டு சமையல் என்பது பிரிவதே இல்லை.  மானிடர்களின் ஆணவமும் காழ்ப்பும் கலந்த உலகத்தை தாண்டியது அந்த தவம் நளனை அங்கு நிறுத்துகிறது அது. நளனின் உலகத்தை வெளியை காட்டுகின்றீர்கள். அற்புத சித்திரம். மனதில் எழுதிப்பார்க்க முடிகின்றது. கலைத்தவம். 

அறியாமை ஆணவம் கீழ்மை என்று ஒரு கூட்டம், அரசு ஆட்சி அமைச்சு நெறி நீதி என்று ஒரு கூட்டம். இந்த இரண்டு கூட்டங்களுக்கும் அப்பால் நளன் தனது கலையின் தவத்தால் உயரத்திலேயே நிற்கின்றான். நளனின் பாத்திரப்படைப்பில் ஒவ்வொரு படியாக அவனை கலைதவத்தின் உயரத்தில் நிறுத்தி அமர்களம் செய்து உள்ளீர்கள்.

கீழ்மைகள் தொடாத தவ உள்ளம். மானிட ஆணவம் கீழ்மை நளனை ஒரு நொடியில் கொலைஞனாக செய்கின்றது. அவன் தவத்தில் அந்த தலைகொய்தல்கூட ஒருதவம்தான். அறம் அங்கு வாள்வீசுகின்றது. 

மானிட கீழ்மைகள் எப்போதும் மானிடன் இடம் மோதுவதாகத்தான் நினைக்கிறது ஆனால் அது அதுவும் அறியாமல் அறத்துடன்தான் மோதுகின்றது. அறம் தனது வான்வெளிபீடத்தில் இருந்து நொடியில் இறங்கி மண்மீது தனது நடனத்தை நடத்திவிட்டு மீண்டும் வானுக்கே செல்கின்றது. மானிடர்கள் இங்கு வெறும் கருவிகள் மட்டும்தான். நளனையும் சீர்ஷரையும் வைத்து அறமும் கீழ்மையும் விளையாட ஆடுகளம் அமைத்து உள்ளீர்கள். நன்றி. கீழ்மை எத்தன காலம் தம்கட்டி கபடி பாடவேண்டி உள்ளது. அறம் இறங்கிய வேகத்திலேயே தொட்டு மீள்கிறது.  . 

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.

பீமன்

 
அன்புள்ள ஆசிரியருக்கு,

வணக்கம். இன்றைய அத்தியாயத்தில் திரௌபதி அவர்கள் பீமசேனரைப் பற்றி சவிதையிடம் கூறுவதை படித்ததும் மனம் விம்மிவிட்டது. அத்தியாயத்தின் ஆரம்பத்தில் பீமசேனரைப் பற்றி நினைத்துக்கொள்வதும் சிறப்பாக உள்ளது.
நன்றி,
அன்புடன்,
சு.தீபப்பிரசாத்.

வெண்முரசு கலந்துரையாடல் சென்னை

 
 
மாமலர் குறித்து அருணாசலமும் பிறகு பானுமதி அவர்களும் பேசினார்கள். சிறப்பான கலந்துரையாடலாக இருந்தது.

சென்னை வந்திருந்த சித்தார்த் , முத்துராமன்சார்  மற்றும் அழிகியமணவாளன் ஆகியோரும் புதிய வாசகர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.
 
 
காளிப்பிரசாத்

வெண்முரசு புதுகைக்கூடுகை பதிவு

26 ஜூன் 2017 அன்று நிகழ்ந்த புதுவை வெண்முரசு கலந்துரையாடல் கூடுகைக்கு வந்திருந்த சிறப்பு அழைப்பாளர் . திரு.பாவண்ணன் அவர்களை வரவேற்று நான் பேசியதை இத்துடன் இணைத்துள்ளேன்


கிருபாநிதி அரிகிருஷ்ணன்




அன்புள்ள நண்பர்களே ,……வணக்கம் .

இலக்கிய கூட்டங்கள் பல ஆண்டுகளாக நடந்து வருவது , பழைய ,நவீனத்துவம் ,பின்நவீனத்துவம்  என பலதலைப்புகளில் அவை தொடர்ந்து பேசப்பட்டு வந்திருக்கின்றன . அவை பெரும் மக்கள் திரளை நோக்கி பேசியபடியே உள்ளது . மனித மேம்பாட்டிற்கானது இலக்கியம் . இலக்கியம் பல்வேறு கூறுமுறையில்  புனைவிலக்கியமாக பல்வேறு ஆக்கங்கள் வெளிவந்திருக்கின்றன . இந்திய வரலாற்றையும் ,புராண , இதிகாசங்களை ஒட்டிய புனைவுகளும் இங்கு ஏராளமாக வாசிக்க கிடைக்கின்றன . அவை இதிகாச அடிப்படையான புணைவிலக்கியமாக உருவெடுக்கும் தொரும் வாசகர்களாலால் மிக அனுக்கமாக உணரப்படுகின்றன. அவை அவ்வப்போது மேடைகளில் எதிரும் புதிருமான கருத்து மோதல்களாக எதிரொலித்தபடியே இருந்திருக்கிறது . அதை போன்ற ஒரு இலக்கிய கூடுகையா இது என்றால் . அல்ல. இது மாறுபட்டது.

இதிகாசங்களை மறுஆக்கம் செய்யவேண்டியது அவசியமா என்றுதான் இந்த கூடுகையும் தொடங்கியது . திரு.பாவண்ணன் அவர்கள் சுதந்திர காலத்தில் இதிகாசங்கள் மறுவாக்கம் செய்யப்பட்டன என்றார். இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தை அவ்வாறு புணைவிலக்கியமாக இயற்றுவது சாத்தியமில்லை என்றார். ஆம் . அது சாத்தியமில்லைதான் . ஆனால் மஹாபாரதம் என்னறிந்த புணைவாக வெளிவந்தபடியேயிருப்பதற்கு அதன் பல கூறுகள் மக்களின் இன்றைய வாழுமுறைக்கோ அல்லது மனோதர்மத்திற்கோ மிக அனுக்கமாக இருப்பதே காரணம்

என்னை பொறுத்தவரை பெரும்திரளாமக்களை மக்களை நோக்கிய பேச்சே பின்நவீனத்துவ இலக்கிய காலகட்டத்தில்தான் . யாரை நோக்கி அது பேசப்படுகிறதோ அவர்கள் அதை படிக்கிறார்களா அல்லது அவர்களை சென்று சேர்கிறதா என பார்க்க வேண்டியது ஒரு படைப்பாளிக்கு தேவையற்றதுதான் . சொல்ல வேண்டியவை சொல்லிற்றாயிற்று . காலம் அதை உரியவரிடத்தே உரிய காலத்தில் கொண்டு சேர்க்கும்

இந்த போக்கு இன்றைய தேடல் மிகுந்த மனித பெருக்கின் செவிகூர துவங்குவதற்கு முன்பு சொல்லப்பட்டதாக இருக்கலாம் . எப்போதும் அதையே அடிப்படை எனக்கொள்ள முடியாது .சமூகத்தில் எண்ண மாற்றங்கள் ஏற்பட்டவாறே அது காலத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது . சமூகத்தின் மீது நம்பிக்கையிழந்தவர்களின் வருத்தம். எல்லா காலத்திற்குமான பொது விதி என ஒன்றில்லை .

நிகழ் காவியமான வெண்முரசு அது ஏழுதப்படுகிற காலத்தே அதை விமர்சிக்கிற அல்லது ரசிக்கிற அமைப்பாக இன்று சில  உருவாகி வருகிறது . அதில் இந்த அமைப்பும் ஒன்று . வெகுஜன கவனிப்பு கிடைத்திருக்கிறது . அதற்கு பல காரணம் இருக்கலாம் , உதாரணத்திற்கு ஊடகம் . திரு. ஜெயமோகனின் திரைப்படத்துறைத் தொடர்பு அல்லது அவர் வலைத்தளம் கையாளும்முறை எனக்கூறலாம் . நான் நினைப்பது வேறு ஒரு காரணம் . மக்களிடையே புழங்குகிற இலக்கியம் இரண்டு .பக்தி இலக்கியம், மற்றும் மொழி இலக்கியம்

பக்தி இலக்கியம் பல்வேறு காரணங்களால் இலக்கிய பெரும்பாண்மை எழுத்தாளர்களால் எள்ளல் செய்தே எழுதப்பட்டன , அவை பெறும்பாலும் பெரியாரிகள் அல்லது மார்க்சியர்களால் பேசப்படுபவைகள் . அவை எப்பவுமே மக்கள் திரளின் நம்பிக்கைகளின் மேல் கல்லெறிபவை . ஒரு தலைகீழ் மாற்றத்திற்கு அறைகூவுபவை . சொல்லபவர்கள் யார் என மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் . அத்தகைய இலக்கிய எழுத்தாளர்கள் திராவிட அரசியல் தலைவர்களை மேடையில் தென்படுவதாலேயே அவை அதன் மதிப்பை ஒருகாலமும் பெறப்போவதில்லை . அவர்கள் பேசுவது ஆகப்பெரும் உண்மையாக இருந்தாலும்கூட. ஆகவே இலக்கியம் பொதுமக்களுக்கானதல்ல நுண்கூர்மதியாளருக்கு எனக் கூறுவது இன்று பொருந்தாது.

பக்தி இலக்கியத்திற்கு இன்றும் மக்கள் திரள் கூடுவதாலேயே அவர்கள் சொல்வதையும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதும் உண்மையல்ல . அங்கும் பக்தியும், பக்திஇலக்கியமும் வேறுவேறாகத்தான் பார்க்கப்படுகிறது . மூட பக்தியிலிருந்து வெளிவரக்கூடிய புதிய தலைமுறை உருவாகிவருகிறது. என்பதற்கு நவீன குருநிலைகளின் எழுச்சியே சிறந்த உதாரணம் . ஆச்சாரமும் அதை இன்று அனுஷ்டிக்கப்படுகிற முறைமையும்  பெரும் மாற்றத்திற்குள்ளாகிவருவதை புரிந்து கொள்ளாது ,வழமையான தாக்குதல் தொடுப்பதாலேயே பேற்பசுபவர்களும் பேசப்படுபவைகளும் பொருளிழந்து விடுகின்றன . சமயப் பெரியவர்களிடம் கூட இந்த மக்கள் திரளுக்கு சொல்லக்கூடுவது தெரிந்திருந்தும் , பேசுதலால் நிகழக்கூடிய பெரும் அடையாளச்சிக்கல் உருவாக்கக்கூடும் அதலால் அவர்களும் செய்வதறியாது திகைக்கிறார்கள்.

கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் , இந்துத்துவாக்கள் சொல்லும் இந்துக்களின்  அக்கால விஞ்ஞான பெருமைகள் எவையும் இன்று எடுபடும் நிலையில் இல்லை . அதற்கான ஆதாரமாக வேத காலத்தை காட்டிக்கொண்டிருக்க முடியாது . அதுபற்றி ஆதரித்தும் எதிர்த்தும் செய்யப்படுகிற பிரச்சாரம் மக்கள் திரளை சென்று தொடவேயில்லை என்பதே நடைமுறை உண்மைமக்களின் நம்பிக்கையை மட்டம்தட்டி பேசுபவர்களினால் இதுவரை  ஆவேசமடைந்தவர்கள் மத்தியில் இன்று அதை ஆதரித்து பேசுபவர்களால் ஆசுவாசமடைந்திருக்கிறார்கள்

அதை தங்களுக்கான ஆதரவாக அவர்கள் பார்ப்பதும் எடுபடாது என்பதும் உண்மை . உலக லட்சியவாத தோல்விக்கு பிறகு பெரும் உபதேசங்களால் எதையும் மாற்றியமைக்க முடியாது என்பது இந்தியாவில் மட்டுமல்லாது உலக போக்கும் அதையே அறிவிக்கிறது . இந்த காலகட்டத்தில் வெண்முரசு என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது அல்லது வருங்காலத்தில் ஏற்படுத்தும் என்று என்னை கேட்டுக்கொள்கிறேன்

இது தவிர்க்கவியலாத ஒரு படைப்பு பலவித கோணங்களில் பார்க்கப்படவேண்டியது அதில் சொல்லப்படுபவைகளை மிக நுட்பமாக, நிதானமாக இந்த கூடுகைகளில் மாதம்தோரும் முன்வைத்து வருகிறோம்  . ஆகவே அதை பற்றிய கருத்தல்ல நான் இந்தக் கூறுகையில்  சொல்ல விழைவது . எந்த முறையில் எப்படிப்பட்ட சூழலில் இது வெளிவருவதால் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை இங்கு முன்வைக்க விரும்புகிறேன்


ஜெயமோகனுடைய ஆழமான இந்து ஞான மரபு பற்றிய தகவல்கள் நுட்பங்கள்  ஒரு மைய சரடாக , தொகுப்பாக அவரின் பெரும்பாலான ஆக்கங்களில் பார்க்கிறேன் . எந்த ஒரு முயற்சிக்கும் ஒருங்கிணைப்பு தன்முனைப்பு தொடர்முன்வைப்பு போன்றவை இன்றியமையாதது . அவரின் தத்துவபோக்கு கூறுமுறை , இளைஞர்களால் ஏற்கப்படல் போன்றவையும் ,பெரியாரிகளையும் ,மாக்சியர்களையும். அணுகாது தனியான முன்வைப்பாக அவரின் கருத்துக்களை பார்க்கிறேன் . அதுவே அவரின் தனி அடையாளமாக வெண்முரசில் வெளிப்பட்டவண்ணம் இருக்கிறது.

உலகப்போக்குடன் ஒத்துப்போகாத எதையும் அவர் முன்வைக்கவில்லை என நினைக்கிறேன் . அதனாலேயே அவை முக்கிய தரவுகளாக வெளிப்படுகின்றன. அவரின் எழுத்துமுறை ,சொல்வளம் , தனியானதாக பார்க்கப்படுகிறது . அவர் சொல்வதை முழுவதும் நீ ஏற்றுக்கொள்கிறாயா என்றால் ,இல்லை . நானும் பெரிதாக முரண்படுகிறேன் ஆனால் அத்துடன் எனக்கு ஆத்மார்த்தமான உரையாடல் நிகழ்வதாக நான் உணர்கிறேன் . அவற்றிலிருந்து எனக்கு கிடைக்கும் திறப்புகள் அளப்பரியவை . எனக்கான கருத்தையும் நம்பிக்கையும் நான் இழந்து அவரை பின்பற்றவேண்டிய தேவை இல்லாமல் அவரின் எழுத்துக்களில் இருந்தே என்னையும் என் எனக்கான நம்பிக்கைகளை அடையாளங்களையும் என்னால் கண்டடையமுடிகிறது . அவை என்னை நான் கலைக்காமல் தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது

என்னால் பார்க்கக்கூடிய புரிந்துகொள்ள கூடிய நம்பிக்கைகளின் தொகுப்பாக அவரின் எழுத்துக்களை நான் பார்க்கிறேன் . நிச்சயமாக என் போன்றவர்களுக்கு இவை அறிய நுட்பாங்களை விளங்குபவை . ஸம்ஸ்கிரத மூலத்திலிருந்து என்னால் கிரஹிக்க இயலாதவைகளை இங்கு கண்டடையமுடிகிறது. ஒரு அறுபது வருட தடையை இது உடைத்து வீசுகிறது . நவீன சிந்தனையாளர்கள் தனியர்கள். ஆன்மீக சிந்தனையாளர்கள் வெவ்வேறானவர்கள் என்கிற கூற்றையும் அது தகர்க்கிறது .

இதிலும் முரண்படுகள் இல்லையா என்றால் , இருக்கிறது. ஆனால் அந்த முரண்பாடுகளுடன் உரையாடும் வாய்ப்பையும் அதுவே ஏற்படுத்தித் தருகிறது . நான் கடந்த இருபதாண்டுகாலம் இயங்கிக்கொண்டிருந்த தளத்தில் நின்றபடியே நிச்சயம் இது தன்னுடைய உரையாடலை என்னுள்  நிகழ்த்தமுடியும் . இந்து சானாதன மதம்  தர்க்கத்திற்கு இடமளிப்பதைப்போல் பிறிதொரு மதம் அளிப்பதில்லை . அதைப்போன்ற இடைவெளிகளினூடே என் ஆழ்மனப் படிமங்களுடன் அது தொடர்ந்து தர்கித்த படியே என்னை மீட்டெடுப்பதாக உணர்கிறேன்.

மதம் “ .அது கெட்டவார்தையல்ல . அது ஜெயமோகன் சொல்வதைப்போல மதத்தை ஒதுக்குவதால் மொழி ,தத்துவம் பண்பாடு அனைத்தயும் இழக்கவேண்டிவரும் , அதன் வழியாகத்தான் இந்த சமூகத்திற்கு அதை சொல்லி நிறுவி வந்திருக்கிறது . இன்று இன்னும் மிச்சமாக காணப்படுகிற அறம் ஒழுக்க நிலைகள் மற்றும் பண்பாடுகள் ,இந்திய தண்டனைச் சட்டத்திற்கும் , பல சதுர கிலோமீட்டருக்கு ஒன்று என இருக்கும் காவல்நிலையத்திற்கு பயந்தோ அது நிலைநிற்ககவில்லை. அது தன் ஸ்வாதயாயத்தில் நிற்கிறது. இன்றைய தேவை அதை நவீன உலகப்போக்குடன் எப்படிப் பொறுத்திப்பார்ப்பது என்பதுதான் . அதைத்தான் சரியாக மற்ற புணைவுகளில் சொல்லப்படவில்லை. அல்லது சொல்லபட்டவை பொதுவெளியில் கவனிக்கப்படவில்லை .
வெண்முரசு அதற்கான தேவை உணரப்படுகிற காலத்தில் எழுதப்படுவதால் மற்ற புணைவு இலக்கியங்கிங்கள் தொடாத எல்லைகளை இது தொடக்கூடும்.அத்தகைய நுட்பங்களுக்கு பெருமளவில் விடையளிக்கிறது வெண்முரசு

இதிகாசங்களை சாமர்த்தியமாக பயன்படுத்திக்கொள்கிறார் என குற்றம் சாட்டப்பட்டலாம். இது ஒரு யுக்தி எனச்சொல்லலாம் . மூலத்துடன் வேறுபடுகிறது என்கிற கூப்பாடுகளும் எழலாம் அனைத்தும் புறம்தள்ளபடவேண்டியவைகளே . இது இதிகாசங்களில் காணப்படுகிற இடைவெளியை நிரப்புகிறது. என்போன்ற வாசகர்களுக்கு அவரின் வெண்முரசு சொல்லுவதைப்போலபெருவெளியின் வெறுமையை நிறைத்துள்ளது 

சொல்லப்படாத சொல். அச்சொல்லில் ஒரு துளியை அள்ளி 
பொருளும் உயிருமாக்கி அளிக்கின்றார்” அவை என்னை என் இருப்பில் நிறுத்தி, சொல்ல முடியாத பரவசத்தை கொடுக்கிறது. 

வெண்முரசு குறித்த என் நம்பிக்கை இரண்டு. விஷயம் அபாவத்திலில்லாது பாவத்தில் வராது . திரு.ஜெயமோகன் தன் வெண்முரசு புணைவிலக்கியத்திற்கு  தன்னை ஒப்புக்கொடுத்துவிட்டதையும் அது   தன்னை தானே வடிவமைத்துக்கொள்வதை வரிசையாக வெளிவரும் நாவலுக்கு நாவல் வாசிக்கும் போது , தனக்கான பாதையை அது நிகழ்த்திக்கொள்கிறது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன் . இது என்போன்றவர்களுக்கானது .இந்த நூல் வரவேற்கத்தக்கது.மற்ற புணைவுகளுடன் இதை ஒப்புநோக்குவது பிழை.