Thursday, October 31, 2019

கழுநீர்க் கரை – 11



அன்புள்ள ஜெ

உறைந்து போய் விட்டேன் இந்த இதழை படித்த பிறகு।

கண்ணில் நீர் வடிந்து கொண்டே இருந்தது।

அங்கிருந்த அனைவருக்குமே துக்கம் தான்। சோகம் தான்।

என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை।

புத்திர சோகமே அனைவருக்கும்।

கண்ணிழந்தவரை பற்றி என்ன சொல்ல?

நீங்கள் அவரின் உணர்வுகளை எழுதி இருந்தது அப்படியே உள்ளத்தை  தைத்து விட்டது।

ஆனாலும் அந்த அம்மையின் வாழ்த்துக்கள் என்னை ஒரு உத்தமி எப்படி இருந்திருப்பாள் என்று உணர்த்தியது।

எப்பேர்ப்பட்ட பெரியவள் அந்த அம்மை। தலை வணங்குகிறேன்।

அன்பே உலகில் உலகை காட்டிலும் பெரியது।

உணர்ச்சி வெள்ளமாகியது இன்று காலை।

எப்போதும் போல் அந்த கண்ணன் உங்களோடு எப்போதும் இருக்கட்டும்।

அன்புடன்
மாலா 

ஒரு கேள்வி





தீச்சுடர் மெதுவாகவே செல்கிறது,  போருக்கு பின் வாழ்க்கை இப்படித்தான் செல்லும். மிக மெதுவாக.  கனகரை முன்னரே அறிந்திருந்தோம். சுட்டியானவர்,  ஜயத்ரதனின் மைந்தன் நகர் புகும் போது எங்கு சென்றார்களோ என விதுரரை பயந்து கேட்கிறார்.  சுஜாதனை பாய்காட் பண்ணியதும் நினைவிலுள்ளது.  எண்ணி நோக்க வேண்டுமென.  



எமது கேள்வி : 

போர் முடிந்தவுடன்,  பாண்டவர்கள் அஸ்வத்தாமனை தேடிப் போக வேண்டுமல்லவா?  மைந்தர்களின் பழிக்காக?  பீமன் முதலில் சென்று வஞ்சம் தீர்க்க முயல்வானல்லவா?  அது தானே அவர்களின் இயல்பு.  ஏன் தள்ளிப் போடுகிறீர்கள். 

Regards 
Siva

பகுதி 2. வெண்முரசு - குருஷேத்திரப் போர் - தர்மனும் அறமும்.


தருமனுக்கு உரித்தானதா அஸ்தினாபுரம்
     
விசித்திர வீரியனின் முதல் மகன் திருதராஷ்டிரன், அவனுடைய முதல் மகன் துரியோதனன் அவனுக்குத்தான் அரியணைக்கான உரிமை இருப்பதாகத் தோன்றுகிறது. அரச குடும்பத்தினரில் மூத்தவர் அரசன் என இருக்க வேண்டும் என்பது வழக்கம் இல்லை. ஆகவே தருமன் துரியோதனனனிவிட மூத்தவன் என்பதால் தருமனுக்கு அரச உரிமை வந்துவிடாது.  
       
விசித்திரவீரியனுக்குப்பிறகு திருதராஷ்டிரனுக்கு மணிமுடி வந்திருக்க வேண்டும். ஆனால் அவனுக்கு அது மறுக்கப்படுகிறது.  குலத் தலைவர்கள் அவனைத் தவிர்த்து பாண்டுவிற்கு முடி சூட்டுகிறார்கள். பார்வை இழப்பு அதற்கு காரணமாகக் கூறப்பட்டு அது அரசவையில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.  அவன் மேல் பாசம் கொண்ட பீஷ்மர். மற்றும்  பேரரசி சத்தியவதியால் கூட அதை தவிர்க்கமுடியவில்லை. ஆகவே  திருதராஷ்டிரன் பின்னர் பேரரசர் என்று அழைக்கப்பட்டாலும் அவர் உண்மையில் அஸ்தினாபுரத்தின் அதிகாரபூர்வமான அரசர் என எப்போதும் இருந்ததில்லை. பாண்டு இல்லாத போது ஒரு பொறுப்பு (in charge)  அரசர் என இருந்தவர்தான் அவர்.  காந்தாரி  பட்டத்து ராணியென்று அரசவை சடங்குகளின்படி முடி சூடப்பட்டவள் இல்லை. ஆகவே அவர்கள்  மகன் துரியோதனன் அவ்வகையில் பட்டத்துக்கு உரியவன் இல்லை.  அதே நேரம் பீஷ்மர் சகுனிக்கு திருதராஷ்டிரனின் மகனுக்கு முடிசூட்டப்படும் என வாக்களித்திருந்தார். ஆனால் அது வெறும் அரச குடும்பத்தின் முடிவே தவிர அரசவையின் அதிகாரபூர்வமான முடிவல்ல.  அவர் அவ்வாறு வாக்களிக்க காரணம்பாண்டுவிற்கு அவன் உடல் நலமின்மை காரணமாக வாரிசுகள் உருவாகாது என்று  அவர் கொண்டிருந்த உறுதி. 

     
ஆக விசித்திர வீரியனுக்கு பின் அஸ்தினாபுரத்தின் மன்னனென ஆனவர்  பாண்டு. அடுத்து மன்னனாக இயல்பான தகுதியைக் கொண்டவர் அவருடைய மூத்த மகன் தருமர் ஆவார். முன்னர் யயாதி தன் மூத்த மகனான யதுவுக்கு  அரசை அளிக்காமல் தன் இளைய மகனான புருவுக்கு அளிக்கிறார். பின்னர் இயல்பான வாரிசாக ஆவது புருவின் மைந்தனே தவிர யதுவின் மைந்தனல்ல. ஆகவே தருமருக்கு உரியதே அஸ்தினாபுரத்தின் மணிமுடி. தருமன் அவனுக்கான அகவை வந்த பிறகு திருதராஷ்டிரர் இயல்பாக தான் காத்து வந்த மணிமுடியை தருமனுக்கு அளித்திருக்க வேண்டும்.  அதை குந்தி வாதாடித்தான் பெற்றுத்தர வேண்டியிருந்தது. அவள் வாதத்தை அன்று அரசவை எவ்வித எதிர்ச்சொல்லும் இல்லாமல் ஏற்றுக்கொண்டதற்கு காரணம் வெறும் குந்தியின் வாதத் திறமை மட்டுமல்லஅதன் பின்னால் இருந்த மணிமுடிக்கான உரிமை பற்றிய அரச நெறியே ஆகும்.
     

 5.   தருமனை பாண்டுவின் வாரிசு என ஏற்றுக்கொள்வதற்கு நெறியிருக்கிறதா 
      துரியோதனன் அரசவையில்  இந்த ஐயத்தை
எழுப்பிபாண்டவர்கள்  ஷத்திரியரே  அல்ல என கூறியிருக்கிறான்.  ஆம்தருமன் பாண்டுவின் குருதி மகனல்ல என்பது உண்மைதான்.    துரியோதனனோ திருதராஷ்டிரனின் நேரடிக்  குருதி. குருதியே மணிமுடியின் உரிமையை தீர்மாணிக்கும்போது தருமனுக்கு எப்படி மணிமுடி உரிமையானது  என ஆகும்?   குருதி என்பது உடலிலிருந்து உடலுக்கு தொடர்வது மட்டுமல்லாமல்  உள்ளத்திலிருந்து உள்ளத்திற்கு தொடர்வதும்தான். சில சமயம் இவன் என் மைந்தன் என ஒருவனுக்கு உலகம் கற்பிப்பதே குருதிஉறவென ஆகிறது. திருதராஷ்டிரனோ அல்லது பாண்டுவோ விசித்திர வீரியனின்  நேரடி மைந்தர்கள் இல்லை. விசித்திர வீரியனின் மறைவுக்குப்பிறகே அவர்கள் பிறக்கிறார்கள். அதாவது விசித்திவீரியன் தம் பிள்ளைகள் என இவர்களைக் கருத்தில்கூட கொண்டது இல்லை. ஆனாலும்  அவர்கள் அவனுடைய பிள்ளைகள்தான் எனக் கூறப்படுவதையும் அதன் காரணமாக அவர்கள் அரசுரிமைக்கு தகுதியானவர்களாக ஆவதையும்  வெண்முரசு விளக்கியிருக்கிறது. 

    பாண்டு தன் பிள்ளைகளென பாண்டவர் ஐவரையும் மனமொப்பி  ஏற்றுக்கொண்டவன். தன் ஆன்மாவின் குருதியை  தருமனுக்கு செலுத்தியவன். பாண்டுவின் உடல் மேல்  தவழ்ந்து வளர்ந்தவர்கள் இவர்கள்.   வேத நெறிப்படி முனிவர்களின் ஆசிகளுடன் தம் குழந்தைகள் என ஏற்று அவர்களுக்கு பெயர் சூட்டும் சடங்குகள் போன்றவற்றை பாண்டு செய்திருக்கிறான். இது அவ்வப்போது அஸ்தினாபுரத்திற்கு தூதுச் செய்திகளாகவும் ஒற்றுச் செய்திகளாகவும் தெரியப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. அதனால்தான் பாண்டுவின் இறப்புக்குப் பிறகு பாண்டவர்கள் அஸ்தினாபுரம் நகர் நுழைகையில் சிறு முணுமுணுப்புகூட அரண்மனையிலோ, அரசவையிலோ அல்லது மக்கள் நிரல்களிலோ எழவில்லை.  தருமனுக்கு இப்படி அஸ்தினாபுர அரியணையின் மேல் இருக்கும்  முழு உரிமையை அறிந்த சகுனி பாண்டவ குழவிகளை வனத்திலேயே கொல்லும் எண்ணம் கொள்கிறான். ஆனால் அது விதுரரின் மதி சூழ்கையால் தடுக்கப்படுகிறது.

     வாரணாவத எரிப்புக்கு பின் பாண்டவர்கள் திரும்பி வரும்போது திருதராஷ்டிரர் அரச நெறிகளின் படி தருமனுக்கு அரசாட்சியை அளித்திருக்க வேண்டும். ஆனால் அவர் துரியோதனனுக்கு அஸ்தினாபுரத்தையும் பாண்டவர்களுக்கு வெற்று நிலமான இந்திரப் பிரஸ்தத்தையும் பகிர்ந்தளிக்கிறார்.  பாண்டவர்கள் அந்த வெற்று நிலத்தையும்  ஒரு அரசென தம்முடைய உழைப்பால், திறனால் துவாரகையின் துணைகொண்டு உருவாக்குகிறார்கள். அஸ்வமேத யாகம் செய்து தருமன் தன்னை ஒரு பேரரசன் என நிறுவிக்கொள்கிறான். அதற்கு பாரத வர்ஷத்தின் அனைத்து அரசர்களின் ஒப்புதல் கிடைக்கிறது. அவன் பாண்டுவின் மைந்தன் என்றும்  ஷத்திரியன் என்றும் பாரத வர்ஷம் முழுதும் ஐயமின்றி ஏற்றுக்கொள்ளப்படுகிறது.


 6.   சூதில் தோற்ற நாட்டை திரும்ப கோருதல் சரியானதா?
     
இதைப்போன்ற நிகழ்வு  நளன் வரலாற்றில் நடைபெற்றிருக்கிறது.  சூது ஒரு போர் எனக்  கொள்ளப்பட்டு அதன் வெற்றி போர் வெற்றிக்கு நிகராக கருதப்படுவதற்கு உதாரணம் அக்கதையில்  முன்னரே நடைபெற்றிருக்கிறது. தருமன் சூதில் தோற்று விடுகிறான் என்பது உண்மைதான்.  ஆனால் சூதுப்போர் எப்போது நடைபெறவேண்டும்? இரு அரசர்கள் நாட்டின் உரிமைக்காக போர் தொடுக்க எண்ணம் கொண்டபின் போரைத் தவிர்ப்பதற்கான ஒரு வழியாக சூது பயன்படுத்தப்படலாம்.  ஆனால் இங்கு துரியோதனனுக்கும் தருமனுக்கும் இடையே போர் அறிவிக்கப்படவில்லை.  போர் அறிவித்து இருவரும் ஒப்புக்கொள்ளும்பட்சத்தில் மட்டுமே சூதின் மூலம் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படவேண்டும்.  துரியோதனன் இந்திரப் பிரஸ்தத்தை வெல்ல நினைப்பது வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.   ஒரு விளையாட்டெனவே சூது துவங்கப்படுகிறது. இதன் வெற்றியின் மூலம் நாடு கவரப்பட்டு தருமன் நாட்டை இழப்பது நளன் நாட்டை சூதில் இழந்ததைவிட நெறி தவறியது என்று நாம் கூறலாம். மேலும் இச்சூதில் கள்ளம் நிகழ்ந்திருக்கிறது. (சகுனி கள்ளப்பகடையை பயன்படுத்தியது அவன் கொல்லப்படுவதற்கு முன்தான் நமக்கே தெரியவருக்கிறது).    

     பின்னர் சூதினால் நாடு  கவரப்பட்டதை நியாயப்படுத்த முடியாமல்  திருதராஷ்டிரரின் வாக்குப்படி பதிநான்கு  ஆண்டுகள் கழித்து வந்து தருமன்  நாட்டைக்கோரும்போதும் கொடுக்கப்படும் என்று முடிவாகிறது.  அதனால் தருமன் நாட்டைத் திரும்பக் கோருவதற்கான உரிமை முழுமையாக இருக்கிறது என்பதே உண்மையாகும். 


7.  தருமர் போரைத் தவிர்த்திருக்க முடியாதா?   நாட்டை மீட்க மேற்கொண்ட போரின்
பேரழிவுக்கு அவரின் நாட்டின் மீதான விழைவும் காரணம் அல்லவா?

  தருமர் தன்னுடைய தன்னறமாகக் கொண்டது நாடாள்வதையே.  அவர் நாடாள்வதற்கான உரிமை அவர் பாண்டுவின் மைந்தன் என்பதால் வருவது. அவருக்கு அஸ்தினாபுரத்திற்கான உரிமை அரச நெறிகளின் படியும் குந்தியின் எச்சரிக்கையோடு எடுத்த நடவடிக்கைகளின்படியும் கிடைத்தது. அதற்காக அவர்  யாரையுயும் தீயிட்டோ நஞ்சிட்டோ கொன்றொழிக்க முயன்றவர் இல்லை. கள்ளச்சூதினால் வென்று  பின்னர் பல ஆண்டுகள் கழித்து  திரும்ப அளிக்கிறேன் என்று கூறி வாக்கு தவறி நாட்டை அபகரித்தவர் இல்லை.  உண்மையில் அவர் நாட்டை அவர் அடைவதற்கு போர் ஒன்றே வழி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டவர். 

   தருமர் துரியோதனனிடம்  போர் செய்வதற்கான காரணங்கள் பல முன்னரே வந்திருக்கின்றன. அப்போது அவர் போர் புரிந்திருந்தால் அவர் எளிதாக வெற்றி பெற்றிருக்கலாம். திரௌபதியை மணமுடித்து வரும் வழியில்  துரியோதனன் பாண்டவர்கள் மேல் போர்தொடுத்து  வந்து தோல்வியுற்று தன் எதிரே தலைகுனிந்து நின்றபோது அவனை ஊறு செய்யாமல், ஏளனப்படுத்தாமல் திருப்பி அனுப்பியவர் அவர்.  துரியோதனன் சூதுக்கு தருமரை அழைத்த சமயம் அவர் பல மன்னர்களின் நட்புறவுகொண்டவராகதோல்வியே காணாத பலம் பெற்ற போர்ப் படையினைக் கொண்டிருந்தவராக இருந்தார்.   அப்போதே அவர் போரைத் தேர்ந்தெடுப்பதற்கான அத்தனை காரணங்கள் இருந்தும் அவர் சூதைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணம் போரின் பேரழிவை அவர் முன்கண்டதே ஆகும்.  சூதில் அடைந்த அனைத்து தோல்விகளுக்கும் தான் ஒருவராக பொறுப்பேற்றுக்கொண்டு  அவர் வனம் சென்றதின் வழியாக பல்லாயிரம் வீரகளுக்கு அவர் பதிநான்காண்டுகள் ஆயுள் நீட்டிப்பு தந்தார், பல்லாயிரம் பெண்களுக்கு மனைமங்கலத்தை அருளினார், பல்லாயிரம் குழந்தைகள் தம் தந்தையரின் அரவணைப்பில் வளர உதவினார் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.  வனவாசம் முடித்து திரும்ப நாடு கேட்க தூது அனுப்பியபோது போரைத் தவிர்க்க கண்ணனுக்கு முழு அதிகாரம் கொடுத்து அனுப்புகிறார். கண்ணன் ஐந்து ஊர்கள் அல்லது ஐந்து வீடுகளாவது கொடுங்கள் என்று வைத்த கோரிக்கைகூட நிராகரிக்கப்படுகிறது.  இடையில் திருதராஷ்டிரர் தருமருக்கு போரைத் தவிர்த்து மீண்டும் வனத்திற்கு செல்லுங்கள் என அளித்த ஆணையை மறுசொல் இல்லாமல் ஏற்றுக்கொள்கிறார்.  ஆனால் திருதராஷ்டிரர் அவர் சொல்லை திரும்பப் பெற்றுக்கொள்கிறார். அதன் மூலம் தருமரின் மேல்  குருஷேத்திரப்போர் திணிக்கப்படுகிறது.   அமைதிக்கான அத்தனை தூதுக்களும் தோல்வியில் முடிந்தன. அதன் பின்னரே அவர் போருக்கு ஒப்புதல் கொடுக்கிறார். 

தண்டபாணி துரைவேல்

Wednesday, October 30, 2019

நீர்சுடர் ஒளியில்



இனிய ஜெமோ சார் அவர்களுக்கு, 

அமெரிக்க பயணத்தில் இருந்து முழுமையாக உங்களை பிரித்து எடுத்து தங்களுக்காக காத்திருந்த பணிகள் உங்களை மூச்சு மூட்ட தழுவியிருக்கும். ஆனால் உங்கள் அண்மை கொடுத்த பொறி நன்றாக பற்றிக்கொண்டது உங்களோடு இங்கிருந்தவர்களை..

வீட்டுக்கும் அலுவலகத்திற்கும் சுமார் 10 மைல் தூரம் இருக்கும். போய் வர மூன்று வழிகள் இருந்தாலும், விரைவு கருதி எப்போதும் தேர்வுசெய்வது ஒரே பாதை தான்.  விழியிழந்தவன் தன் உடலறிவால் வழியடைவது போல் பலமுறை காலையில் ஒரு குருட்டு பயணம்.  அதிராத, சமநிலையோடு சமர் செய்யாத  பாடல்கள் இல்லையென்றால்  அலைபேசியில் இருந்தே மெய்நிகர் அலுவலக வேலைகள். அந்த நாளின் அலைக்கழிப்புகள் எந்த முனையில் இருந்தாலும் பல நேரங்களில் மாலையில் வீடு திரும்பும் போது  இருக்கும் மனநிலை அலாதியானது. இப்போதும் பாடல்கள் ஒலித்திருக்கும் ஆனால் சாய்ந்து நிற்கும் மரங்கள், அதில் இளமை பசுமை ஊறிய இலைகள், காற்றில் ஆடியபடி கீழே விழும் முதிர் இலைகள், சுருக்கங்கள் விழுந்த கைகளை விரலால் பிணைந்தபடி ஆழந்த அமைதியில்  வார்த்து எடுத்த முகங்களை கொண்ட நடைபயணம் செய்யும் முதியவர்கள், பிள்ளையின் கைப்பிடித்து நடந்து வரும் தந்தை, பின்னால் பொறுமையாக வரும் அன்னை, பதைபதைப்புடன் கடைக்கும் செல்லும் யுவதிகள் என ஒவ்வொரு காட்சியும் கவனமாய் கவனித்தபடி. அதே போல் விண்ணில் சூரியன் அடங்கும் அபாரமான அழகு அமைந்திருக்கும் வேளையில் இன்றலர்ந்த மலரென அப்போது மேகங்கள் பல உருவம், பல நிறம் மாறியபடி உடன் வரும். நிகழ்கணத்தில் வாழ்வது என்பது அது தான் என்பதை சற்றே தாமதமாகவே அறிவேன். அப்போது நான் எண்ணுவது ஒன்றே "இதை விட ஒரு சிறப்பான நிலை எதுவாக இருக்க முடியும்?  எத்தனை சலிப்பு தட்டினாலும், எப்படியெல்லாம் புலம்பினாலும், எவ்வளவு முறை சிலுவையில் அறையப்பட்டாலும், இதோ ஒரு காரணம் இருக்கிறது நாம் நிறைவுக் கொள்ள, மகிழ்ச்சியின் கணங்களில் திளைக்க, மானுட நிரையில் மற்றுமொருமுறை வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்ற.."  

சற்றே பின்தங்கிய வெண்முரசு நீர்ச்சுடர் அத்தியங்களை இன்று தொடர்ச்சியாக படிக்க வாய்ப்பு கிடைத்தது என் நல்லூழ் :-) வாசித்தவைகளை தன் அனுபவங்களை  கொண்டு மீட்டுவதே / மீள் நிகழ்த்துவதே இலக்கிய வாசிப்பு என்ற உங்கள் வரிகளை நினைவுறுகிறேன். "மானுடர் எத்தனை உயர்ந்த நிலைக்கு செல்ல இயல்கிறது! எத்தனை படிகளை மானுடருக்கு தெய்வங்கள் திறந்து வைத்திருக்கின்றன! தெய்வங்களின் அருகே சென்று அமரும் வரை விண் விரிந்திருக்கிறது. துயர் மானுட உயிருக்கு இயல்பான ஒன்று அல்ல. உவகையே உயிரின் நிறைநிலை.  " - இந்த வரிகள் திறந்து வைத்த ஒரு கதவு தான் மேற்சொன்னது. இனி இது திறக்க போகும் கதவுகளை நான் அறியேன்.. ஆனால் இதையொட்டி அமைந்த பல வரிகள் அள்ளி தெளித்து இருந்தது 30 வது  அத்தியாயம். நம் உள்ளுறைந்த ஆணவமும், வன்மமும் அதிகம் காயப்படுத்துவது நம் இதயத்திற்கு அணுக்கமானவர்களை தான். அந்த கீழ்மை செய்யும் வரை இருக்கும் திமிரும், பெருமையும் செய்து முடித்த அடுத்த கணம் சோர்வாகவும், சுய அனுதாபமுமாய் மாறிவிடும் விந்தையை வியந்து வியந்து பார்க்கிறேன் ஒவ்வொரு முறையும் முதல் முறையென. அப்படி தொடங்கிய இந்த அத்தியாயம் ஒரு மிக பெரிய உச்சக்கட்ட உணர்வு நிலையில் நிற்கும் போதே அடுத்த அத்தியங்களை படிப்பதை தவிர்த்து விடவே எண்ணினேன். இந்த நிலையிலே இன்னும் சற்று நேரம் நீண்டிருக்க விழைந்து மீண்டும் மீண்டும் இதே அத்தியாத்தை படித்தேன். உறங்காது இருந்தால் பொழுது விடியாமல் போய்விடுமா என்ன?  ஒவ்வொரு முறை மகிழ்வோடு இருந்த போதெல்லாம் நான் எண்ணுவது இது எவ்வளவு நேரம் நீடித்திருக்கும் என்பதே.. எழும்பிய அலை இறங்கித்தான் ஆக  வேண்டும் அது மீண்டும் எழும். எஞ்சும் அனல் திறந்துகொண்டது அதில் என் மனநிலை யுயுத்ஸு வழியாக சீண்டப்பட்டதை பெரு மகிழ்வோடு படித்தேன்

"அந்த உவகைத் தருணம் கலையும்போது எழும் சீற்றம் மட்டுமல்ல அது. உவகைக்கு அடியில் ஓர் ஐயம் இருந்திருக்கும். எதையோ எண்ணி ஒரு பதற்றம் இருந்திருக்கும். அந்த உவகை எவ்வண்ணமோ கலையும் என்றே எண்ணியிருந்திருப்பார்கள். அதை கலைக்கும் பொருட்டு எழும் முதல் துளி என்பது அவர்கள் அஞ்சுவதும், வெறுப்பதும், அகல முயல்வதுமான அனைத்திற்கும் அடையாளமாக எழுவது. அதன் வடிவென வருபவர் எவரென்றாலும் அவர் மீது பெருஞ்சினம் கொள்வது இயல்பு."

அனைத்தையும் படித்து முடித்து மாலையில் என் கார் நோக்கி நடக்கும் போது  இயல்பாக எனக்குள் நானே பேசிக்கொண்டிருந்தேன்   - ஒரு பாதைக்குள் உறங்கி இருக்கும் ஓராயிரம் பயணங்கள். ஒரு கால்கள் அறிந்த ஒன்றை இன்னொரு கால்கள் அறிவதில்லை. அதே கால்கள் அடுத்த முறை அதே அனுபவத்தை அடைவதில்லை. காலற்ற மனம் கணக்கற்ற பயணங்களை ஒரே சமயத்தில் நிகழ்த்தியப்படி இருக்கிறது காலமற்ற காலத்தில்.

நன்றி 

வி.வெங்கட பிரசாத் 

வெண்முரசு - குருஷேத்திரப் போர் - தர்மனும் அறமும்.




அறம் யார் பக்கம்?

    ஒரு செவ்வியல் நாவலின் நோக்கம்  வாசகனை மகிழ்விப்பது  அல்ல. அவன் மனதை கலைத்து அடுக்குவது. நல்லதை மட்டுமே காட்டுவதும் தீமை நன்மை, தீயவர் நல்லவர் என இரு தரப்பாக பிரித்து கதை சொல்வது எல்லாம் குழந்தைக் கதைகள், அல்லது வெகுஜனக் கதைகள். ஆனால் செவ்விலக்கியத்தின் உயர்  கதைகளில்  இந்தப் பிரிவினை மழுங்கிபோய் விடுகிறது. ஒருவன் செய்வது அறமா அதற்கு மாறானதா என்பதின் தெளிவின்மையை வாசகனின் மனதில் தோற்றுவிக்கிறது. இக்குழப்பத்தில் உள்ளாடும் கதா பாத்திரங்களை உருவாக்கி கண் முன் காட்டுவதே செவ்விலக்கியங்கள் செய்கின்றன.

   அதே நேரத்தில் கதையில் இரு தரப்புக்கள் மாறுபட்டு நிற்கும் போது வாசகன் ஏதோ ஒரு தரப்பின் வழி நின்று கதையை வாசிப்பது இயல்பானது. ஆனால் அத்தரப்பு அறம் தவறுகையில் அவன் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது.  தானே அறம் தவறியதாக அவன் உணர்கிறான். அதைப் போன்ற சமயங்களில் சிலர் அக்கதையை வாசிப்பதைக்கூட  நிறுத்திவிடுவதுண்டு.

    மேலும் வெண்முரசு அனைவரும் அறிந்த வியாச பாரதத்தின் கதையை விரித்தும்  நவீனப்படுத்தியும் எழுதுகிறது.  ஆகவே பெரும்பாண்மை  வாசகர்கள் படிப்பதற்கு முன்பாகவே ஒரு தரப்பின் வழி நிற்பவர்களாக  இருப்பார்கள்.  அவர்கள் அனைவரையும்  வெண்முரசு  பல இடங்களில் அதிர்ச்சியூட்டுவதாக இருக்கும் என்பது ஐயமில்லை. தான் பெரிதென நினைக்கும் தரப்பு அறத்திற்கு மாறாக நடக்கையில் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆட்பட நேரிடுகிறது.

   வெண்முரசு  குருஷேத்திரப்போர் ஆரம்பித்த நாளிலிருந்து துரியோதனன் தரப்பில் நின்று பேசுவதாக உள்ளது.   கௌரவர்களுக்காக போரிடும் வீரர்களின் மேன்மை அதிகம் சொல்லப்படுகிறது. அவர்களின் ஒவ்வொருவர் கொல்லப்படுவதற்கு  பாண்டவர் பக்கத்து வீரர்கள் நெறி மீறல்கள் காரணமாகக் காட்டப்படுகின்றன.  வெண்முரசின் குருஷேத்திரப் போரைப்பற்றிய நிகழ்வுகளை  படிப்பவர்கள் அறிவது:  பாண்டவர்களை ஒற்றுமையற்ற சகோதரர்கள், ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொள்பவர்கள்போர் நெறியை மீறுபவர்கள்.   தம் பிள்ளைகளிடம் இருந்து கூட இந்த நெறிமீறல்களுக்காக நிந்திக்கப்படுபவர்களாக இருக்கிறார்கள்.  வெற்றி பெற  தகுதியற்றவர்கள்   மற்றும்  கிருஷ்ணன் வேறு ஏதோ ஒரு நோக்கத்திற்காக நடத்தும் போரில் தம்மை பகடைக்காய்களாக ஆக்கிக்கொண்டவர்கள் எனவும் அவர்கள்  தோன்றுகிறார்கள்.

2. தருமர் கொள்ளும் தாழ்வு

         குருஷேத்த்திரத்தில் அனைவரின் வெறுப்புக்கும் ஏளனத்திற்கும் ஆளாகுபவராக தருமர் உள்ளார்.  அவரை பெரிதும் மதிக்கும் அவருடய தம்பிகளே அவர்பால் கடுமை காட்டுகின்றனர். இடித்துரைக்கின்றனர். பீமன் தருமரை மதிப்பதே இல்லை. அர்ச்சுனன் முகம் கொடுத்து பேசுவதில்லை.  கண்ணன் நேர்கொண்டு தருமரிடம் பேசுவது மிகக் குறைவு.   சகாதேவன் தருமனை அறிவுரை சொல்லி திருத்தி வழிநடத்தவேண்டிய சிறுவனாக கருதுவதாகத் தெரிகிறது.  எதிர்  நின்று  போரிடுபவர்கள் அவர் இருப்பையே உணராதவர்களாக இருக்கிறார்கள்.

   ஆனால் பாருங்கள்இந்தப் போரே தருமருக்காகத்தான் நடப்பதாக அனைவரும் கருதுகிறார்கள்.  தருமருக்கு அரசை பெற்றுதரவேண்டியதற்கான போர் இது என்று அவன் தரப்பினர் உள்ளனர். அவன் எதிர் தரப்பினர் அந்த அரசுக்குரியவன் இவன் இல்லை என்ற நிலையெடுத்தவர்கள்.    ஆகவே  போர் தருமர் பொருட்டே நடக்கிறது. ஆனால் வெண்முரசின் தருமர் போர் செய்யத் தெரியாத ஒருவராகபதட்டத்தில் தவறுகள் பல செய்பவராக, செய்வதறியாது திகைத்து நிற்கும் ஒரு அறிவிலியாக, ஒவ்வொரு கணமும் மற்றவர் பாதுகாப்பை வேண்டி நிற்கும் ஒருவராக இருக்கிறார்.  இந்தப் போரில் பெயர்கொண்டு சுட்டப்படும் ஒவ்வொருவரும் எதோ  ஒரு விதத்தில் அதீத திறன்கொண்டவர்கள். அந்தத் திறனை வெளிப்படுத்தும் வாய்ப்பு ஒவ்வொருவருக்கும் கிடைக்கிறது. அவர்கள் இறந்துபோவது வருத்தமளிப்பதாக  இருக்கிறது. ஆனால் தருமர்  எவ்விதத்  திறனிலும் தேர்ந்தவர்  இல்லை. அவரால் போரில் ஒரு சிறு சலனத்தைக்கூட ஏற்படுத்த முடியவில்லை.  அவர்  இருப்பை யாரும் பெரிதாக பொருட்படுத்துவதில்லை. 

    மேலும் போரில் தன் தரப்பினரோ அல்லது எதிர் தரப்பில் மிகப் பெரிய ஆளுமை உடையவரோ வீழ்ந்து மற்றவர்கள் பெரிதும் கலங்கி நிற்கும் போது அப்படியொன்றும் அதற்காக கலங்குபவராகத் தெரியவில்லை.  போரில் ஈடுபட்டு இறக்கும்  இள மைந்தர்களுக்காக  பெரிதாக அவர் கலங்கி நின்றதில்லை.  சிலசமயம் அவர் பாசம் அற்றவராக, மற்றவரின் இறப்பை அலட்சியப்படுத்துபவராக எப்படியாவது போரில் வெற்றி கிட்டினால் போதும் என நினைப்பவராகத் தெரிகிறார்.  தம்முடைய அல்லது எதிர் தரப்பைச் சார்ந்தவர்களில் பெரு வல்லமையை பற்றி ஒரு சொல்லும் சொல்பவராக அவர் இல்லை.  ஏன் இன்னும் போர் முடிந்து வெற்றி கிட்டவில்லை என சிடுசிடுத்தவண்ணம் இருக்கிறார். மேலும் தன் படையினரின் அற மீறல்களை காணாது  விடுகிறார். அல்லது பேருக்கு வருந்துவதாகத் தெரிகிறார். அவரே அறமீறல்களைச் செய்கிறார். அவருடைய தெய்வமான அறம் அவரை கைவிட்டு அவர் தேரின் கால்கள் மண்ணில் பதிகின்றன.வெறும் நூல்கள் வழி அறத்தை அறிந்து அதை சொல்லில் மட்டுமே நிகழ்த்துபவராக தருமர் இருக்கிறாரா

    பீமன் தன்னை விலங்கெனவே காட்டிக்கொள்கிறான். போர் நெறிகளை சற்றும் மதிக்காதவனாக, எவ்வித உணர்ச்சியுமற்று ஒரு கொலை விலங்கினைப்போல  கௌரவ மைந்தர்களையும் , நூறு கௌரவர்களையும் கொல்பவனாக காட்டப்படுகிறான். மனிதத் தன்மையை முற்றிலும் இழந்து போர் புரிபவனாக இருக்கிறான்.

   அர்ச்சுனன் சுய புத்தியற்று கிருஷ்ணனின் சொற்படி மட்டுமே நடப்பவனாக காட்டப்படுகிறான்.  அவன் கர்ணனுக்கு நிகரற்றவனாக மட்டுமல்லாமல் அஸ்வத்தாமனுக்குகூட நிகரானவன் தானா என ஐயம் எழும்படி அவன் போர்த்திறன் உள்ளது. நகுலனும் சகாதேவனும்  போரில் முதிராத சிறுவர்களைப்போல நமக்கு தோன்றுகிறார்கள்.  திருஷ்டத்துய்மனும் சாத்யகியும் பெறிய  நெறி மீறல்களைச் செய்து போர்க்களத்தில் அனைவரின்  தூற்றுதலுக்கு உள்ளானவர்களாக இருக்கிறார்கள். 
 இப்படி இருக்கும் பாண்டவர் தரப்பு போரில் வெல்வதற்கு தகுதியானதுதானா என்ற கேள்வி ஒரு வாசகன் மனதில் எழுகிறது.

  3. துரியோதனனின் மேன்மை  
    
 அதே நேரத்தில் துரியோதனன் தன் பிள்ளைகளின் இறப்புக்காக வருந்துவதைவிட பாண்டவ மைந்தன் அபிமன்யுவின்  இறப்புக்கு  வருந்துகிறான். அவன் போரிடுவதே தன் பிள்ளைகளின் தம்பிகளின் இறப்புக்கு ஈடு செய்யத்தான் என்று  கருதுபவனாகத்  தெரிகிறான்.   .துரியோதனன் தன் தம்பிகளை ஒவ்வொருவராக இழந்து வந்திருக்கின்றான். அவன் பிள்ளைகள் ஒவ்வொரு நாளும் கொல்லப்படுகின்றனர். அப்படியிருந்தும் அவன் பாண்டவர்களின் பிள்ளைகளைக்கொல்ல மிகவும் தயங்குகிறான். அவன் தம்பிகள் அவனுக்கெதிராக ஒரு சொல்கூட எழுப்புவதில்லை.  அவர்கள் எண்ணத்தில்கூட எதிர் சொல் எழுவதில்லை.  சகோதரர்களின்  அத்தகைய அன்பைப் பெற்றவனாக துரியோதனன் இருக்கிறான்.  அவனுக்காக துணை நிற்பவர்களாக பிதாமகர் பீஷ்மர், குரு துரோணர், மற்றும் பெரும் வீரர்கள் பலர் இருக்கின்றனர்.  அவனிடம் உயிரிலும் மேலாக நட்பு பாராட்டுபவர்களாக பெரு வீரர்களான கர்ணன் , அஸ்வத்தாமன், கிருதவர்மன் ஜெயத்ரதன், பூர்வசிரஸ்  போன்றோர் இருக்கின்றனர்.
    
   அத்தகைய துரியோதனனை வீழ்த்தி   இப்போரில் தருமன் வெற்றி பெற்று அஸ்தினாபுரத்தின் அரியணையில் அமர்வதற்கான தகுதி இருக்கிறதா?. பாண்டவர் தரப்பு இப்போரை முறையற்ற வழியில் வெற்றிகொண்டார்களாஅப்படியென்றால கண்ணன் ஏன் அவர்களுக்கு துணை நிற்கின்றான்? போர்க்களத்தில் தருமனின் சிறுமை வெளிப்படுகிறதா? அவன் தம்பிகள் அவன் மேல் கொண்டிருந்த மதிப்பை இழந்து விட்டார்களா?    .  இந்தப் பேரழிவுப் பெரும்போரில் வெற்றி பெறுவதற்கு  சற்றேனும் தகுதியானவனா தருமன்?

 வெண்முரசின் குருஷேத்திர போர்க்கள காட்சிகளைப் படிசக்கும் வாசகனுக்கு இக்கேள்விகள் எழுவது வியப்பில்லை. 
  
இக்கேள்விகளுக்கு  வெண்முரசின் எல்லைகளுக்குள்ளிருந்து விடை ஏதாவது இருக்கிறதா எனக் காண்போம். தருமனுக்கு உண்மையில் இப்போரை நடத்துவதற்கான நியாயம்  இருக்கிறதா என முதலில் பார்ப்போம்.

தண்டபாணி துரைவேல்