Thursday, November 14, 2019

நீர்ச்சுடர் - அவல நகைச்சுவை



         இந்தக் கதை பெரும்பாலோனோருக்கு தெரிந்திருக்கும்  என்று  நினைக்கிறேன்.   ஒருவன் தன் வாழ்நாளை ஒரு நிமித்திகரிடம் கணிக்கும்போது நாளை அவன் இறக்கப்போவதாகத் தெரிவிப்பார்.  அவன் தன் ஊழை மாற்றி மரணத்தின் கையிலிருந்து தப்பிக்க எண்ணினான்.  தான் இதுவரை இருக்கும் இடத்திலேயே இல்லாமல் வேறு இடம் சென்றுவிட்டால் மரணத் தேவதை அவன் வீட்டில் வந்து ஏமாந்து போய்விடும் என  எண்ணி கடுமையாக முயற்சி செய்து, விரைவு வண்டியில் பிரயாணித்துவெகுதொலைவில் பலநூறு  மைல்கள்  தாண்டி   வேறு ஒரு ஊருக்கு இரவோடு இரவாக சென்று விட்டான்.  ஆனால், மறுநாள் அவனிருக்கும் இடதிற்கு வரும்  மரணதேவதை, "ஓ  வந்துவிட்டாயா? உன் உயிரை  இன்று இங்கு நான் கவர வேண்டும் என உள்ளது.  ஆனால் நீ வெகுதொலைவில் இருக்கிறாயே என்று  எண்ணினேன்"   என்று சொல்லி அவன் உயிரை கவர்ந்து சென்றது.
                
         நமக்கு ஒன்று கிடைக்கவேண்டும், நம் வாழ்வில் இந்த நிகழ்வு நடக்கவேன்டும் என விழைகிறோம். ஆனால் அதன் மூலம் நமக்கு நன்மைதான் வருமா என்பது  நமக்குத்  தெரியாது.  இருவர் மிகுந்த விழைவுடன் வங்கிப்பணியில் சேர்வதற்கான தேர்வை எழுதுகின்றனர்.  ஒருவருக்கு கிடைத்து அவர் பணியில் சேர்கிறார். மற்றொருவருக்கு கிடைக்காமல் வருத்தமடைகிறார்.  பின்னர்  அவர் மேலும் உயர்கல்வி படித்து பேராசிரியர் பணி சேர்ந்து  பணியில் நிறைவும்,  செல்வமும் புகழும் கொண்டவராக  இருக்கிறார்.   ஆனால் வங்கிப் பணியில் சேர்ந்தவர் தம் பணியில் நிறைவு இல்லாமல், சலிப்புடன் இருக்கிறார்.  விழைந்தவை நமக்கு நன்மை தரவேண்டுமென்பதில்லை.    நமக்கு என்ன வேண்டும் என்று நமக்கே தெரியாது என்பதுதான் உண்மை.  இப்படி இருக்கையில் நாம் அறிய முடியாத எதிர்காலத்தில் நிகழவிருக்கும் ஒன்றை மாற்ற நினைப்பது  எந்த அளவுக்கு நன்மைதருவதாக இருக்கும்?

          சுபத்திரை தன் மகனை பிறவிச் சுழலில் இருந்து விடுவிக்க, அவன் ஊழை மாற்ற  எண்ணுகிறாள். ஆனால் அவளே ஊழின் கைப்பாவையென ஆகி தன் மகனின் மறுபிறப்பின் வாழ்வை மீண்டும் வஞ்சச் சுழலில் சிக்க வைத்துவிடுகிறாள்.   சுபத்திரை கண்ணனின் தங்கை, திறனும் மதி சூழ்கையும் நிறைந்தவள்.   ஆனால். தன் அண்ணன் கண்ணனின் பேச்சைக் கேட்காமல் அவள் இவ்வாறு ஒரு முடிவு எடுத்ததற்குக் காரணம் அவளின் தாய்மையுணர்வு அவள் கண்ணை மறைந்த்துவிட்டது என்றுதான் நாம் கருத வேண்டியிருக்கிறது.  பல கண்ணிகள் கொண்டு நெய்யப்பட்டிருக்கும் ஊழினை ஒருவர் முன்னும் பின்னும் காண விழைவது எவ்விதத்திலும் சரியல்ல என்பதையே இது காட்டுகிறது. அல்லது அவ்வாறு காண்பவர் அந்த ஊழை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவராக இருக்கவேண்டும்.   

         ஊழ்தான் அனைத்தையும் தீர்மாணிக்கிறது என்றால் மனிதன் செயலினால் என்ன பயன் என்ற கேள்வி எழுகிறது.  செயல்கள் ஊழை மாற்றுவதில்லை  ஆனால் நம் வினைப் பயனை மாற்றுகின்றன. நாம் இயற்றும்  வினைகளின்  வழி   நாம்  காலத்தில்  நெய்யப்படும் ஊழில்  எவ்விடத்தில் எவ்வாறு கையாளப்படுகிறோம் என்பது அமைகிறது என்று கருதுகிறேன்.  நெய்யப்படும் பட்டுப்புடவையில் பூச்சித்திரத்தின் அமைப்பும் நேர்த்தியும் அது எங்கு  எப்படி அமையவேண்டும் என்பதை தீர்மாணிக்கப்படுகிறதோ, அதைப்போன்றது அது. வெண்முரசில் நான் அறிந்ததற்கேற்ப  தொகுத்துச் சொல்வதானால்,   நாம் நம் செயல்களைச் செய்யும்போது ஊழ் என ஒன்று இருப்பதை மறந்து செயலாற்றவேண்டும். ஆனால் அதற்கான பலன்களை அடையும்போது, அவற்றை  ஊழின் வழி கிடைத்ததாக எண்ணி அவற்றை முழுமையாக ஏற்றுக்கொண்டு  நிறைவடையவேண்டும்.   அப்படியல்லாமல் ஊழை மறுதலித்து முட்டி மோதி அதை மாற்றுவதற்கான முயற்சியில் அவர்களே  ஊழின் கைப்பாவைகளென ஆகிவிடுவது  ஒரு அவல நகைச்சுவையாகும்.


தண்டபாணி துரைவேல்

Wednesday, November 13, 2019

நீர்க்கடன் காட்சிகள்



அன்புள்ள ஜெ

நீர்க்கடன் காட்சிகள் நெஞ்சை பிசைகின்றன. ஊழை இத்தனை கோணங்களில் இத்தை நுட்பங்களில் வாசித்ததில்லை. ஊழ் என்பதும் விண்புகுதல் என்பதும் வெறும் சொற்கள் அல்ல என்று இந்த அத்தியாயம்தான் காட்டுகிறது. எத்தனை வகையான கேள்விகள். ஒவ்வொன்றுக்குமாக பதில்சொல்லிக்கொண்டே செல்கிறது வெண்முரசு.

ஆனால் அத்தனை சித்தரிப்புகளையும் விட சூட்சுமமனானது மனிதர்கள் சாவின்முன் அடையும் விதவிதமான நடிப்புகள்தான். நடிப்பதே தெரியாமல் நடிக்கிறார்கள். ஒருவருக்கொருவர் ஏமாற்றிக்கொள்கிறார்கள். தங்களையே தாங்கள் ஏமாற்றிக்கொள்கிறார்கள்.

மனிதர்களை நினைத்து பெரும் பரிதாபம்தான் ஏற்படுகிறது.

ஜெயராமன்

நீர்ச்சுடர் - 49 காமம் என்ற தளிர்



    ஒரு பூச்செடியை பிடுங்கி வேறு இடத்தில் நட்டால் கண்டிப்பாக அது பிழைத்துவிடும் என்று சொல்ல முடியாது. தினமும் அதற்கு நீ ஊற்றி கவனமாக பார்த்துக்கொள்வோம், ஆனால் அதன் இலைகள் தம் பசுமையை இழக்க ஆரம்பிக்கும். பின்னர்  இலைகள் ஒவ்வொன்றாக உதிரும்.  நாம் அச்செடி பிழைக்கும் என்ற நம்பிக்கையை இழக்கும் தருவாயில் அதன் கிளை ஒன்றில் மிகச்சிறிதாக ஒரு பச்சையான மொக்கு தோன்றி சிறு தளிரென  விரிவதைப் பார்த்தபிறகு நமக்கு முழு  நம்பிக்கை வந்துவிடும்.  இனி செடி பிழைத்துவிடும் என்பது உறுதியாகிவிடும்.  வனம் முழுக்க தீக்கிறையான பின் சில நாட்கள் கழித்து ஒரு புல் முளைத்தெழும்.  அந்த வனம் மீண்டும் வளந்தெழுவதை அந்தச் சிறு புல்லின் தளிர் நமக்கு உறுதிப்படுத்தும். 
    
     அஸ்தினாபுரம் பேரழிவைச் சந்தித்து இருக்கிறது.  ஆண்களில்   அதன் இளையோர்கள் எல்லோரையும் இழந்து முதியவர்கள் மட்டுமே எஞ்சி இருக்கின்றனர்.   இறந்தவர்களைக் குறித்து  துயரம் அனைவரையும் கவ்விப்பிடித்திருக்கிறது.  வீட்டை புரப்பவர்கள் எல்லாம களம் பட்டுவிட்டதால்,  எதிர்காலம் மிக இருண்டு காணப்படுகிறது.  இனி இந்நாட்டிற்கு விடிவு  உண்டா எனத்  தெரியாத காரிருள் சூழ்ந்திருக்கிறது. மக்கள் துயரம் இறந்தவ்ர்களை எண்ணி பெருக்கிகொண்டு இருக்கிறது.   தன் பசுமைகளை இழந்து பட்டுப்போகும் நிலையில் இருக்குமொர் தாவரத்தைப்போல அஸ்தினாபுரம் இருக்கிறது.

   அத்தகைய தருணத்தில்  காமம் ஒரு சூதப் பெண்வழி ஒரு தளிரென துளிர்க்கிறது. அதை பூர்ணை உடன் கண்டுகொள்கிறாள்.  (வெண்முரசில் செவிலியரின் பங்கு மிகவும் பெரிது.  இப்பொது நாம் காணும் பூர்ணையின் பாத்திரம் மிகவும் அருமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.  செவிலியர் அரசகுடும்பத்தினருடனே தம் வாழ்நாளை கழிப்பவர்கள்.  அதனால் அரச குடும்பத்தினர் அடையும் அனுபவங்களை, உணர்வுகளை தாமும் அடையப்பெற்றவர்கள்.  அரசக் குடும்பத்தினர் அந்த உணர்வுகளுக்கு உள்ளிருக்கிறார்கள். ஆனால் செவிலியர்  அவற்றை  வெளியில் இருந்து அறிகிறார்கள்.  உணர்வுகளுக்குள் உள்ளிருப்பவரை வ்ட அதை வெளியில் இருந்து உணர்பவர்கள் தெளிவாக அவற்றை சிந்தித்து உணரமுடிகிறது. ஆகவே    பூர்ணை அடைந்திருக்கும் மன முதிர்ச்சி,  தெளிந்த அறிவு வியப்பாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.  )

அவள் முகத்திலிருந்த பொலிவை, கைவிரல்கள் பதற்றத்துடன் ஒன்றையொன்று தொட்டு நிலையழிவதை பூர்ணை கண்டாள். ஒருகணம் சீற்றம் எழுந்தாலும் மறுகணம் புன்னகை வந்தது. அத்தனை துயரிலும் மானுடர் தங்கள் விழைவுகளை தொடர்கிறார்கள். இடுகாட்டில் பூக்கள் மலர்கின்றன என்ற சூதர் பாடல் நினைவு வந்தது. 

         ஆண்களின்  காமம் அள்ளித் தெளிப்பது, அசட்டுதனம் கொண்டது. ஒரு பெண்ணின் அழைப்பு, அது கூட தேவையில்லை அவள் இணங்கிய போக்கு, அதைவிடச் சிறிதாக அவளிடமிருந்து வரும் ஒரு பாவனை, ஏன் அவள் பெண் என்ற காரணம் மட்டும்கூட  ஒரு ஆணின் உள்ளத்தில் காமத்தை எழுப்புகிறது. ஆகவே ஆணின் காமம் அளிக்கும் பொருள் மிகச்சிறிது. ஆனால் பெண்ணின் காமம்,  பெற்று நிறைவது.  பெண்ணுள் காமம் எழ ஒரு ஆணின்  தோற்றமோ அழைப்போ  போதுமானதல்ல. அதற்கு தகுந்த ஆடவன், தகுந்த இயற்கைச் சூழல், சமூகச் சூழல், போன்ற   காரணிகள் பல  இருக்கின்றன.  ஆகவே ஒரு பெண்ணில் காமம் தோன்றுவது நுண்ணிய   பொருள்கொண்டதாக உள்ளது. ஆகவே அச்சூதப்பெண்ணில் காமம் மலர்வது,  மக்கள் துயர் விட்டு வெளிவந்துவிடுவார்கள் என்பதற்கான நம்பிக்கை,  அஸ்தினாபுரம் மீண்டும் மக்களால் நிறையும் என்பதற்கான  நிமித்தக் குறி,  நாட்டில் நலம் திகழ்ந்து மங்கலங்கள் வளரும் என்பதற்கான  முன்னறிவிப்பு என ஆகிறது. எந்தப் பேரழிவையும் தாண்டி  பெருந்துயரையும் கடந்து  இயற்கை தன்னை  காமத்தின் வழி உயிர்பித்துக்கொள்கிறது.
 
        காமமே உயிர்குலத்தை வாழவைக்கிறது.  உயிர்குலத்தின் மூச்சுக்காற்று காமம். காமம் நிகழாத களம் உயிர்கள் இல்லாத வெற்றுப்பாலை என ஆகிவிடுகிறது.  காமம் வடிவமைத்தவையே  விலங்குகளின் பிடறி, கொம்புகள்,  தாடி,  தோல் மினுமினுப்பு, தோல் ரோமங்களின் சித்திர வடிவங்கள்.  அதுவே  பறவைகளுக்கு விதவிதமான தோகைகள், சிறகுகளைத் தந்து, பல வண்ணக்கலவைகளை  பூசியிருக்கிறது, பல இனிய ஓசைகளை  குரல்களுக்கு தந்திருக்கிறது.  காமமே தாவரங்களில் மலர்களென மலர்கிறது.   மலர்களில் பலவண்ணங்களாக, அவற்றின் பல்வேறு மணங்களாக புன்னகைப்பது காமமே.

மலர்கள் புன்னகையின் தூய வடிவங்கள். ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் புன்னகைகளால் தேவர்கள் இம்மண்ணை பொலிவுறச் செய்கிறார்கள் என்ற சூதர் வரியை நினைவுகூர்ந்தாள்.
    
தண்ட்பாணி துரைவேல்

Tuesday, November 12, 2019

கடவுளும் மனிதனும்



அன்புள்ள ஜெ

அர்ஜுனனுக்கும் அஸ்வத்தாமனுக்குமான போரை ஆர்வத்துடன் வாசித்தேன். அவ்வளவு போரை எழுதியபின்னரும் போர் பற்றி என்னதான் எழுதமுடியும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. ஆனால் முழுக்க முழுக்க குறியிடாகவே அந்தபோர் நடந்து முடிந்தது. ஒரு நீள்கவிதையைப்போல

அஸ்வத்தாமன் சிவன். அதாவது யோகேஸ்வரன். காமம் அறுத்தவன் . முக்கண்ணன் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். முக்கண்ணனே வேடனாக வந்து அவனிடம் பேசியிருக்கிறான். நேரில் எழுந்து அவனுக்கு ஞானமும் அருளியிருக்கிறான்

அர்ஜுனன் காமத்தின் தெய்வமான இந்திரனின் மகன். அங்கே அவன் மன்மதனாக எழுந்து மலரம்பை தொடுக்கிறான். அதை ஏற்று அஸ்வத்தாமன் தலையில் குளிர்நிலா எழுகிறது. உடலில் பாதி பெண்ணாகிறது. ஆனால் அர்ஜுனன் எரிந்து யோகேஸ்வரனாகி காமத்தை கடந்துவிடுகிறான்

தவம் செய்பவன் தெய்வத்தை மனிதனாக்கி அதனிடம் வரம் கேட்டு தான் தெய்வமாகிவிடுகிறான் என்பது யுயுத்சு எழுத எண்ணும் நூலின் முதல் வரி. அந்த வரியின் காவிய சித்திரம் இது.

வெண்முரசில் வந்த கவித்துவமான இடங்களிலேயே இதுதான் அழகானது

மகாதேவன்

நீர்ச்சுடர் - 48 ஊழிற் பெருவலி யாதுள?



            அறிவது நன்று  என்றுதான் நமக்கு எப்போதும் தோன்றி  வந்திருக்கிறது.  அறிவதே நிகழும் செயல்களின் பொருளை விளக்குகிறது.   அறிவது நம்முள்ளத்திற்கு இன்பம் தருகிறது. உலக வாழ்வின் வெற்றிக்கு உதவுகிறது.    குழந்தையாய் இருக்கும்போதே அறிதலின் இன்பத்தை உணரத் தொடங்கிவிடுகிறோம்.  அறிதலின் பல்வேறு  வடிவங்களாக நம் கல்வி அமைப்பு இருக்கிறது. மனிதனின் அறிதலின்பத்திற்காகவே  பல்வேறு ஊடகங்கள் உருவாகி இருக்கின்றன. அறிதலின்பத்தைப் பெருக்கிகொள்ளவே இலக்கியங்கள் கலைகள் உதவுகின்றன.  நாம் பிறந்து வாழ்வின் பொருளை அறிவதன் முயற்சியே ஆன்மீகமென ஆகிறது. 

        ஆனால் அறிதல் எப்போதும் ஆனந்தத்தை தருவதில்லை. உண்மையில் பார்த்தால் சில அறியாமைகளே வாழ்வை பொருளடையதாக மாற்றுகிறது. சில உறவுகள நீடித்து இருக்க வைக்கிறது.     ஒருவர் நினைப்பதையெல்லாம் நாம் அறிவோம் என்றால் அந்த ஒருவரை நம்மால் நேசிக்கவே முடியாது.  நம் அறிதலை  விலக்கி வைத்து அனுபவிக்கும்போதுதான்  சில இன்பங்களை நம்மால் உணரமுடிகிறது. ஒரு ஓவியத்தை, திரையில்  இருக்கும் வண்ணதீற்றல்கள் என்று அறிவதைத் தவிர்த்து,  அதில்  பொருள்கொண்ட காட்சியை கற்பித்துக்கொள்வதால்தான் அது ஓவியம் என்று ஆகிறது.  மனிதர்கள் சிலர் வேடமிட்டு, ஒரு  புனையப்பட்ட கதையில்,  யாரோ எழுதிய வார்த்தைகளைப் பேசுகிறார்கள் என்ற அறிதலைத் தவிர்த்து  அதை உண்மை என்று நம்மை நாமே அறியாமையில் ஆழ்த்திக்கொண்டால்தான் நாடகத்தை ரசிக்க முடிகிறது.   

        உயிர்க்குலம் முழுதும் நடிகர்களென இருந்து,  எழுதப்படாத கதைகொண்டு,   நடத்துகொண்டிருக்கும் நாடகம்தான் வாழ்க்கை. அதில் நடிப்பவர்கள் அதற்கான கதையை அவர்களே உருவாக்கிக்கொள்கிறார்கள். காலம் என்ற மேடையில் அது நடக்கிறது.  அந்த நாடகமே  ஊழ்.   எந்த நேரத்தில் எந்தக் கதாப்பாத்திரத்தை எங்கு வைக்கவேண்டும் என்பதை அது முடிவு செய்கிறது.  அப்போது செயல்களின் தன்மைக்கு ஒருவன் ஒப்பு கொடுப்பதும் அல்லது அதை ஒத்துக்கொள்ளாமல் மனம் வெதும்புவதும் அந்நடிகனின் பொறுப்பில் விடப்படுகிறது.   ஊழில்  அடுத்து என்ன நிகழும் என்று  அறிதலில் மனிதனுக்கு எப்போதும் ஆவல் இருக்கிறது.    அப்படி ஒருவன் ஊழை அறிவதால் ஒருவன் என்னதான் செய்ய முடியும்?   அவனுக்கு உவக்காத ஒர் நிகழ்வை மாற்ற முயற்சி செய்வான். அப்படி மாற்றக்கூடியது அல்ல ஊழ். ஏனென்றால்  எது நடக்கிறதோ அதுவே ஊழ். 

        ஒரு  பட்டுப்புடைவை தன்னுள்ளே  பல சித்திர வடிவங்களைக் கொண்டிருக்கிறது. அவை  பொன்னிற இழைகள் மூலம்  தோற்றம் கொண்டிருக்கின்றன.   பொன்னிற இழைகள்  எந்த இடத்தில். எப்போது வெளிப்படவேண்டும் என்பதை  அவை ஊடாடிச்செல்லும் பட்டு நூல்கள் வழி  நிலைப்படுத்தப்பட்டுள்ளது.  அதாவது பட்டாடையின் சித்திரத்திற்கு  அதில் வெளிப்படும் பொன்னிழைகள் மற்றும் காரணமல்ல. நாம் காணாது அதன் பின்னணியில் இருக்கும் பட்டு நூல்களும் காரணம். இவை எல்லாவாற்றுக்கும் மேலாக அந்த ஆடை நெய்யப்பட்டப்போது எங்கு, எப்போது அந்த  பொன்னிழைகள் வெளிப்படவேண்டும் என்று முடிவு செய்த நாமறியாத நெசவாளியே காரணம்.  இப்படியே ஒரு செயல் என்பது காலத்தின் மேல் வெளிப்படும் ஒரு சித்திரம். அந்தச் செயலும்,  செயலைச் செய்தவனாகக் கூறப்படுபவனும்  பொன்னிழையைப்போன்று  வெளியே தெரிபவை.   ஆனால் அந்தச் செயலுக்கு அவனோ பிறரோ அறியாத பல காரணிகள் இருக்கின்றன.     இப்படி  காலவெளியில் நெய்யப்படும் இந்த ஆடையயே நாம் ஊழ் என்று சொல்கிறோம்.     நூல்களால் நெய்யப்பட்டாலும் நூல் அந்த ஆடையின் சித்திரங்களை தீர்மாணிப்பதில்லை.  இன்னும் நெய்யப்படாத ஆடையை எப்படி நாம் காணமுடியாதோ அப்படியே  ஊழும் அறிவதற்கு அப்பாற்பட்டதாக  இருக்கிறது.  பாதி நெய்யப்பட்ட சித்திரத்திலிருந்து மீதிச்  சித்திரத்தை யூகிக்க ஒரு சிலர் முனைகிறார்கள். அவர்களை நாம் நிமித்தர்கள் என்று  கூறுகிறோம். ஆனால அவர்கள் ஊழை அறிந்துவிட்டனர் என்று கூற முடியாது.  ஊழைப்பற்றி ஏற்கெனவே வெண்முரசில் பின்வரும்  பொன்னான வரிகள் இடம்பெற்றிருக்கின்றன.
 
 "துணி தைப்பவனைப் பார்க்காமல், அத்துணியையும், அவன் கையிலிருந்து ஓடும் ஊசியை மட்டும் பார்த்தால் அதன் ஓயாச்செயல்பாடு திகைப்பூட்டும் பொருளின்மை அல்லவா? இங்கு நாம் ஆற்றுவது நாமறியாப் பெருஞ்செயலை என்று அறிந்தவனே அத்திகைப்பிலிருந்து விடுபடமுடியும். துணியை நாம் காண இயலாது. அதை ஊழ் என்கின்றார்கள். தைப்பவனை நாம் அறியமுடியாது. அதை அது என்று மட்டுமே சொல்லிக்கொள்ளமுடியும். ஆனால் ஊசியைக்கொண்டு துணியையும் தைப்பவனையும் உய்த்துணர்பவன் விடுபடுகிறான். "
   
   சுபத்திரை தன் அபிமன்யூவின் ஊழை மாற்றலாம்  என  நினைக்கிறாள்.  அதற்காக இறந்த தன் மகனைத் தொடர்புகொண்டு அவன் பிறவிச்சுழலில் இருந்து விடுபடுவதற்கானவழியைக் காண்பிக்கலாம்  என விரும்புகிறாள்.  ஆனால் பிறவிச்சுழல் வினைப்பயன்களால் விளைவது.

இளைய யாதவர் “விரும்பியும் விரும்பாமலும் இங்கு அனைவரும் ஊழில்தான் அமர்ந்திருக்கிறார்கள். ஊழென்பது முன்னைவினை நிகழ்வினை பின்னைவினை என்று மும்முகம் கொண்டு நம்மை வந்து அடைகிறது. ஆனால் ஊழ் என்பது முன்னரே வகுத்துவைக்கப்பட்ட பாதை அல்ல. நிகழ்வன எழுதப்பட்ட நூலுமல்ல. அது ஒரு பயிற்சி. அதில் வென்று கடந்த உயிர்கள் முன் செல்கின்றன” என்றார்.

ஒருவரின் ஊழ்வினையை மாற்ற வேறொருவர்  எவ்விதத்திலும் உதவ முடியாது. ஒரு சிறு சலனத்தைக்கூட ஏற்படுத்தமுடியாது.  ஒருவரின்  வாழ்வு என்பது அவர் எழுதும் ஒரு பள்ளித் தேர்வு போன்றது. அதில் கிடைக்கும் மதிப்பெண்கள்தான் வினைப்பயன்.  அந்த மதிப்பெண்களை  வேறொருவர் உட்புகுந்து மாற்றமுடியாது.
இளைய யாதவர் “விரும்பியும் விரும்பாமலும் இங்கு அனைவரும் ஊழில்தான் அமர்ந்திருக்கிறார்கள். ஊழென்பது முன்னைவினை நிகழ்வினை பின்னைவினை என்று மும்முகம் கொண்டு நம்மை வந்து அடைகிறது. ஆனால் ஊழ் என்பது முன்னரே வகுத்துவைக்கப்பட்ட பாதை அல்ல. நிகழ்வன எழுதப்பட்ட நூலுமல்ல. அது ஒரு பயிற்சி. அதில் வென்று கடந்த உயிர்கள் முன் செல்கின்றன” என்றார்.
தன் அறியாமையால்  ஒருவன்  நான் ஊழை அறிவேன்,  அதை மாற்றுவேன் என்று கூறுகிறான்.  அப்படி அவன் முயன்று  அவன் செய்யும் செயல்களும் அதன் விளைவுகளும் ஊழ்தான். ஏனென்றால் ஊழின் எளிய வரையறை முன்னர் சொன்னதுபோல் 'எது நடக்கிறதோ அதுவே ஊழ்'.   நம் செயல்களை வைத்தே நம்மை ஆட்டுவிக்கிறது ஊழ்.   நாம் எப்போதும் செய்யவேண்டியது நமக்கான கடமைகளை.  விளைவுளை  ஊழ் தீர்மாணிக்கிறது.   அதனால்தான்  கீதை பலன்களின் மேல் பற்று  கொள்ளாதே என்கிறது செடிக்கு நீரை ஊற்றுவது நம் செயல் ஆனால் அதில் கனியை கொணர்வது ஊழ்.  அதை உணராமல் நான்தான் அந்தக் கனியை உருவாக்கினேன் என்று ஒருவன் தருக்குவது மடமை. அதைப்போன்று ஊழை தனக்கு சாதகமான முறையில் மாற்ற முயல்வேன் என்பதும் மடமைதான்.

    நாம் ஊழை தெரிந்துகொள்ள முயல்கிறோம். ஊழை நம் விழைவுக்கேற்ப வளைத்துக்கொள்ள விரும்புகிறோம்.  ஆனால் அது காலத்தில் ஒழுகிச் செல்லும் உலகை திசை திருப்புவதற்கு சமம். 
         
 ஊழை அறிந்துகொள்ள முயல்வது என்பது அதை எதிர்த்து நிற்பதற்கு நிகர்தான். அந்த அத்துமீறலை ஊழ் சமைத்த ஆற்றல்கள் விரும்புவதில்லை. எதிர்த்து நிற்பவர்களுக்கு ஊழ் மேலும் ஆற்றல் கொண்டதாகிறது” என்றார். 

நடக்க இருப்பதை நாம் மாற்றலாம் என எண்ணுவது தவறானது அதற்குபொருள் ஒருவன் செயலற்று இருந்துவிடு  என்பதல்ல.  அவன் தன் கடமைகளை ஊக்கத்துடன் செய்யவேண்டும். ஆனால் விளைவுகளை ஊழ் தீர்மாணிக்கிறது.  அடுத்து நாம் என்ன செய்வோம் என்பதை நாமே உறுதியாகக் கூற முடியாது. ஏனென்றால் நாம் கொண்டிருக்கும் கருத்துக்கள் மாறுகின்றன. அதற்கு காரணம்காரணம் கணத்திற்கு கணம் மாறும் சூழல். அம்மாற்றங்களை நெய்துகொண்டு போகிறது ஊழ். இப்படி தன்னையே கணிக்க முடியாத ஒருவர் எப்படி ஊழின் வசத்திலிருந்து மற்றொருவரை, விடுவிக்க முடியும்? 

நீ உன் உள்ளத்தில் செறிந்திருக்கும் ஆணவத்தால் ஊழை எதிர்க்கலாம் என்னும் எண்ணத்தை அடைகிறாய். உன்னால் எதுவும் முடியுமென்று எண்ணுகிறாய். நீ உன்னையே கூட இன்னும் அறியவில்லை. உன்னைச் சூழ்ந்தவற்றை கூட இன்னும் கடக்கவில்லை. ஒவ்வொருவரும் தங்கள் சூழ்கைகளுக்குள் சென்றுகொண்டிருக்கையில் பிறருக்கு வழிகாட்டுபவர் என எவருமில்லை.
 
நாம் மற்றவருக்காக ஆற்றும் உதவிகள் செய்யும் கடமைகள் எல்லாம் அவர்களின்  ஊழை மாற்றுகிறோம் என்பதில்லை. உண்மையில் அப்போது நாம் நம்முடைய ஊழின் வழிப்படி நடக்கிறோம்.  உண்மையில் நம் கடமைகளை  நாம் ஒழுங்காகச் செய்வது பிறர் பொருட்டு அல்ல.  நாம் அகப்பட்டிருக்கும் பிறவிச் சுழலிருந்து விடுவித்துக்கொள்வதற்காகவே.  
 
மைந்தருக்கும், சுற்றத்திற்கும், எளியவருக்கும், கற்றோருக்கும், சான்றோருக்கும், அந்தணருக்கும், முனிவருக்கும், தெய்வங்களுக்கும் நாம் அளிக்கும் அனைத்து கடமைகளும் நாம் வெளியேறும் பொருட்டு நாம் செய்வது மட்டுமே” என்றார் இளைய யாதவர்.
    
       வெண்முரசில்  கண்ணைனின் குழலோசை நெடுநாட்களுக்குப்பிறகு இப்போதுதான் ஒலிக்கக் கேட்கிறோம். குருஷேத்திரப் போரில் வெறும் சாட்சி மாத்திரமாக இருந்தான்.  எப்போதாவது ஓரிரு சொற்களில் தம் எண்னத்தை வெளிபடுத்துவதுமட்டும்தான் இருந்தது. இப்போது தன் சொற்கள் வழி வெளிப்படும் கண்ணனை காண்பதில் பெரு மகிழ்ச்சி ஏற்படுகிறது.

தண்டபாணி துரைவேல்

Monday, November 11, 2019

நீர்ச்சுடர் - 43 இறப்பென்னும் அன்னைமடி




    திருதராஷ்டிரர் உலகின் பெருந்தந்தையருள் ஒருவர். இத்தனை பிள்ளைகளைக்கொண்ட வேறொரு மனிதர் உலகில் மிக அரிதாகவே இருந்திருப்பார்கள்.  அவர் பெற்றிருந்த இன்பம் பெரிது. ஒரு மனிதன் இப்புவியுலக வாழ்வில் பெரும் இன்பங்களில் பெரிதானதுதான் தந்தையென்றோ தாயென்றோ ஆகித் திளைக்கும் இன்பம். இது ஒன்றே ஒருவர்  தம் குருதியால் உணரும் இன்பம். மற்றபடி ஐம்புலன்களால் உணரும் இன்பமெல்லாம் மிகத் தற்காலிகமானவை. அகங்காரத்தினால் அகம்  அடையும்  செல்வம், புகழ், பதவி, போன்றவை அளிக்கும் இன்பங்கள்  பொருளற்றவைநிலையற்றவை ஐயத்திற்கு இடமானவை.  ஆனால் பிள்ளையின்பம் தான் உயிருடன்  இருக்கும் காலம்வரை மட்டுமல்லாது  தான் இறந்த பின்னும் நீடிக்கும் என்று உணரவைப்பது.  

பிள்ளைகள்  புகழிலும் திறனிலும்  உயர்ச்சிகொண்டவரானால் அந்த இன்பம் மேலும் கூடுமென்றாலும்,    பிள்ளைகளின் இருப்பொன்றே  போதுமான இன்பத்தை அளிக்கக் கூடியது.  ஒருவன் பிறந்து வாழும் உலகிற்கு அவன் ஆற்றவேண்டிய ஒரே உண்மையான கடன்  பிள்ளைகளைப்பெற்று வளர்த்து  வாரிசுத் தொடரை அறுபடாமல் இருக்கச் செய்வது.  இது ஒன்றே அவன் வாழ்வுக்கு பொருளளிப்பது. இப்படி பிள்ளைச்செல்வத்தை பெற இயலாமல் போனவர்கள்மக்களுக்கு இயற்கைக்கு தொண்டாற்றி தம் வாழ்வுக்கு பொருள் கண்டடைகிறார்கள். அல்லது உலகியல் இன்பங்களில் ஆழ்ந்து தன்னைத்தானே ஏமாற்றி  நிறைவின்றி வாழ்ந்து மறைகிறார்கள்.

           திருதராஷ்டிரர், அவன் மனைவியர்,   நூறு பிள்ளைகளால் அருளப்பெற்றவர்கள். நூறு மடங்கு இன்பத்தை அவர்கள் இது நாள் வரை அனுபவித்து வந்திருக்கின்றனர். அது இன்னும் ஆயிரம் மடங்கு பெயர் மைந்தர்களாகப் பெருகி இருந்தது.     இப்படி அவர்கள் அடைந்திருந்த பேரின்பம் குருஷேத்திரப் போரினால் அவர்களிடமிருந்து  மொத்தமாக பறிக்கப்பட்டிருக்கிறது.  அதனால் ஏற்பட்ட  கொடுந்துன்பத்தை அவர்கள் மனங்களில் மட்டுமல்ல  குருதியிலும்  உணர்கின்றனர்.   நூறு மடங்கு என பெருகி நிறைந்திருந்த வாழ்வு இப்போது வெற்று பாலைநிலமென  ஆகிவிட்டது.   தம் வாழ்வுக்கு நூறு பொருள் கொண்டு இருந்தவர், இப்போது வாழ்வதன்  பொருள் விளங்காமல் நிற்கிறார். 


பிள்ளைகளால் பெருகி இருந்த மகிழ்வுபோர் எழுவது உறுதியான பிறகு அச்சமென மாறியது. இப்போது அவர்கள அனைவரையும் மொத்தமாக இழந்தபிற்கு பெரும் துயரமென ஆகி நிற்கிறது.   துக்கத்தை வஞ்சமென மாற்றி மனதைக் காத்துக்கொள்ள அவர் பேருள்ளம் இடம் தரவில்லை.  இறைவனிடம் கதறி நியாயம் கேட்டு முறையிட அவர் அறத்தின் பக்கம் நின்றிருக்கவில்லை.  அவர் சினம் கொள்ள  வேண்டிய  பாண்டவர்களும் போரில் இழப்பினைச் சந்தித்து இருக்கிறார்கள்.   யாராவது ஒருவர் இவ்வளவுக்கும் நீ காரணமில்லையா என எப்போது வேண்டுமானாலும் கேட்டுவிடலாம் என்னும் நிலை.   அவர்களின் இறப்பை தவிர்ப்பதற்கான சந்தர்ப்பங்களை நாம் தவறவிட்டுவிட்டோமோ என்ற குற்றவுணர்வு அவரை மேலும் கடுந்துயருக்கு உள்ளாக்கி இருக்கும்.  இதைபோன்ற துயரிலிருந்து  ஒருவர் விடுபட   தம்மை வேறு உலகியல் கடமைகளில் மூழ்கடித்துக்கொள்ள வேண்டும்.  வாழ்வதற்கான ஏதாவது நோக்கத்தை கண்டுகொள்ளவேண்டும்.  அல்லது இருத்தல் என்பதையே வாழ்வின்  பொருள் எனக்கொண்டு  யோகியென இருக்கவெண்டும்.   இத்துயரிலிருந்து  தான் விடுபடுவதற்கான இதைப்போன்ற வாய்ப்பு தனக்கு ஏதாவது இருக்கிறதா என திருதராஷ்டிரர் விதுரரிடம் கேட்கிறார் 

இல்லை! ஓய்வு? ஓய்வென ஒன்று எனக்குண்டா? இனி என் உள்ளம் அமையும் தருணம் அமையுமா?” என்றார் திருதராஷ்டிரர். விதுரர் ஒன்றும் கூறவில்லை. இளையோனே, சொல்! என் நெஞ்சு ஆறுமா? துயர் மீண்டு ஒருநாளேனும் இனி நான் உயிருடன் இருப்பேனா?” என்றார்.   “சொல்! ஒருகணமேனும் இனி எனக்கு இயல்பு வாழ்க்கை உண்டா? இருத்தலில் இன்பத்தை இனி எப்போதேனும் நான் அறிவேனா?” என்றார்.    விதுரர் மெய் சொல்வதென்றால், இல்லைஎன்றார்.
 திருதராஷ்டிரருக்கு இருக்கும் ஒரே வழி தம் வாழ்வுக்கு புதிய பொருளைத் தேடிக்கொள்வது.  ஆனால் அவர் வாழ்வில் இப்போது ஒரே பொருளென இருப்பது அவர்களின்  பெருந்துயர் மட்டுமே.

 ஏனென்றால் துயரிலேயே உங்கள் இருத்தல் பொருள்கொள்கிறது. துயரின்மையில் நீங்கள் நின்றிருக்க நிலமே இல்லைஎன விதுரர் தொடர்ந்தார். இந்த ஊசலில் இருந்து இனி ஒருகணமும் வெளியேற இயலாது.பெருமூச்சுடன் ஆம்!என்று திருதராஷ்டிரர் கூறினார்.

 ஆனால் உலகில் எதுவும் நிரந்தரமானவை அல்ல. அனைத்தையும் காலம்  கரைத்து அழித்துவிடும்.  அவ்வாறே  துயரும் காலத்தினால் ஆற்றுப்படுத்தப்படும் அல்லவா என்று அவர் வினவுகிறார்.

திருதராஷ்டிரர் இளையோனே, மானுடர் அனைவரும் காலத்தில் ஒழுகிக்கொண்டிருப்பதாக சொல்கிறார்களே? ஆகவே இங்குள்ள எதையும் நம்மால் உறுதியாக பற்றிக்கொள்ள முடியாதென்றும் இங்குள்ள எதுவும் நிலையாக நம்முடன் இருக்கப்போவதில்லை என்றும் சொல்லப்பட்டுள்ளதேஎன்றார். ஒவ்வொன்றும் அகன்று செல்லும் இந்த வெளியில் நான் மட்டும் இங்கே இவ்வுணர்வு வெளியில் அசையாமல் நின்றிருப்பேனா என்ன?” விதுரர் ஆம், மூழ்கியவை இடம்பெயர்வதில்லைஎன்றார் விதுரர்.

துயரிலிருந்து வெளிவர ஏதாவது ஒரு பற்றினைப் பிடித்து மேலே வரவேண்டும் அப்படி பற்றிக்கொள்வதற்கு ஏதுமற்ற மனநிலையில்  திருதராஷ்டிரர் இருக்கிறார் என விதுரர் கூறுகிறார்.  ஆகவே காலம் அவர் துயரினை ஆற்றாது.  அவர் இறப்பு ஒன்றே அவரை விடுவிக்க முடியும் என்று விதுரர் மறைமுகமாக கூறுகிறார்.

இனி உங்களுக்கு காலம் என்பதும் இல்லை. இங்கு இவ்வண்ணமே இனி எப்போதும் இருப்பீர்கள்.திருதராஷ்டிரர் எப்போதும் என்றால்?” என்று கேட்டார். நெடுநாட்களா? இன்னும் எத்தனை நாட்கள்?”  விதுரர் அதை நான் எவ்வண்ணம் சொல்லமுடியும்?” என்றார்.

  ஆக அவர் எதிர்கொள்ளவிருக்கும் நாட்கள் எல்லாம் இனி பொருளற்றவையாகமன அமைதி இழந்தவையாகதுயர் நிறைந்தவையாக இருக்கப்போகின்றன.  தன்னை சிறைபைடித்து வைத்திருக்கும் இந்தப் பெருந்துயரிலிருந்து மீளும் நாள்தாம் இந்த உலகைத் துறக்கும் நாள் மட்டுமே என அவர் உறுதிகொள்கிறார். அந்நாளை கணிக்கும்படி சகதேவனைப் பணிக்கிறார்.  சகதேவன் இன்னும் ஒராண்டு கழித்து என்கிறான்.  தான் மீட்சியடைய இன்னும் ஒராண்டுதான் என்பது அவருக்கு மன ஆறுதலைத் தருகிறது.   சிறைபட்டு துயருற்று இருக்கும் ஒருவனுக்குக விரைவில்  விடுதலை என்ற செய்தி எப்படி இனிக்குமோ அப்படி திருதராஷ்டிரரை அது உவகைகொள்ள  வைக்கிறது. அம்மகிழ்வில் அவர் துணைவியரும் கலந்துகொள்கின்றனர்.

சகதேவன் காந்தாரியின் முகம் மலர்வதை பார்த்தான். அவளுக்குப் பின்னால் நின்றிருந்த இளைய அரசியர் அனைவரின் முகங்களும் மலர்ந்தன. அவர்கள் அடையும் உணர்வென்ன என்று அவனால் உணரமுடியவில்லை. அனைத்திலிருந்தும் விடுதலை பெற்றவர்கள்போல், இழந்த அனைத்தையும் மீளப் பெற்றவர்கள் போல் அவர்கள் உவகை கொண்டனர். ஒருவரை ஒருவர் கைகளை பற்றிக்கொண்டனர்.

   அன்னை மடி விட்டு எழுந்து பிள்ளைகள் விளையாட  ஓடுகின்றன.  கூடியும் களித்தும் போட்டியிட்டும் விளையாடுகின்றன.  பின்னர்  அவர்கள் களைத்துப் போகையில், ஏதோ ஒரு போட்டியில் தோற்று மனம் கலங்குகையில், அல்லது விழுந்து அடிபட்டு  வலிகொண்டதில்,   அழுது  ஓடி  அன்னையைத் தேடி வருகிறார்கள்.  அன்னை அவர்களை வாரி அணைத்து தம் மடியில் மீண்டும் இருத்திக்கொள்கிறாள்.   அச்சிறு பிள்ளைகள் வேறெங்கு ஆறுதல் அடைவார்கள்?

தண்டபாணி துரைவேல்