Thursday, July 31, 2014

மழைப்பாடல் - மையம்

ஜெ

மழைப்பாடலை வாசித்துக்கொண்டிருக்கிறேன். நூற்றுக்கணக்கான பெட்டிகளுடன் ஒரு பெரிய ரயில் நகர்ந்து போவது மாதிரி இருக்கிறது. சிலசமயம் ஒரு பெரிய நகரத்தை பார்ப்பதுமாதிரி உள்ளது. பீஷமரில் தொடங்கி விதுரன் வரை ஒரு கதை. அப்புறம் பெண்களின் கதை. இதை எப்படி தொகுத்துக்கொள்வது என்று ஒரு பெரிய பிர்மிப்பை வாசித்தபிற்பாடு அடைதேன். எந்த மையம் இதிலே அனைத்தையும் இணைத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது என்று ஆச்சரியமாக இருந்தது

சாமி

அன்புள்ள சாமி

மழைப்பாடலுக்கான பின்னட்டை வாசகம் இது:

*
மகாபாரதத்தின் துன்பியல் உச்சத்துக்கு காரணமாக அமைந்த அடிப்படை மனநிலைகள் எப்படி உருவாகி வந்தன என்பதை ஆராயும் நாவல் இது. புயல்களால் அலைக்கழிக்கப்படும் பாலைவனமான காந்தாரம். மழைபெய்தபடி இருக்கும் புல்வெளியான யாதவர்நாடு. காந்தாரியும் குந்தியும் இருமுனைகளாக நின்று மகாபாரதத்தின் பிரம்மாண்டமான சதுரங்கக் களத்தை அமைப்பதை விரிவாகச் சித்தரிக்கிறது. அவர்களுக்குப்பின்னால் அம்பிகையும் அம்பாலிகையும் சத்யவதியும் நின்றுகொண்டிருக்கிறார்கள்

அன்னையர் உணர்ச்சிக்களத்தில் நிகழ்த்தி முடித்த போரைத்தான் பின்னர் மைந்தர் சமர்களத்தில் நிகழ்த்தினர் என்று சொல்லலாம். ஒவ்வொரு சிற்றோடையும் ஒன்றுடன் ஒன்று கலந்து நதிகாக மாறி பெருகிச்செல்லும் மாபெரும் சித்திரத்தை உணர்ச்சிகரமான தருணங்கள் மூலமும், அழகிய கவித்துவம் வழியாகவும் காட்டுகிறது மழைப்பாடல். பாரதத்தின் நிலம்,  சமூகங்கள், வாழ்க்கைமுறை, சிந்தனைமுறைகள் அனைத்தையும் உள்ளடக்கி விரியும் பெருநாவல் இது

*
இதுதான் மையத்தைச் சுருக்கிச் சொல்வது. ஆனால் இது ஒரு தொடக்கம். இந்த மையச்சரடைக்கொண்டு நாவலை தொகுத்தபிறகு ஒவ்வொரு கதாபாத்திரம், நிகழ்ச்சிகள் வழியாக கலைப்பதும் விரிப்பதும் தான் சிறந்த வாசிப்பாக இருக்கமுடியும்


ஜெ

Tuesday, July 29, 2014

கர்ணனும் வியாசனும்

ஜெ,

கர்ணனை வியாசனின் மானசபுத்திரன் என்று சொல்லியிருந்தீர்கள். வியாசர் கர்ணனை சிறப்பாக காட்டவில்லை , அவனை கெட்டவன் என்றுதான் சொல்கிறான் என்றும் கர்ணனை சிவாஜி நடித்த சினிமாவிலேதான் ஹீரோ அளவுக்கு தூக்கி விட்டார்கள் என்றும் ஒருவர் சொன்னார். என்னுடைய சந்தேகத்துக்காக் இதை கேட்கிறேன். இது எந்த அளவுக்குச் சரி?

சிவராமன்

சிவராமன்

அதேகாலத்தில்
மனிதர்கள்வழிவிட்டு விலக்
பகைவர் நகரங்களை வெல்பவன்ம்
உடன் பிறந்த கவசம் அணிந்தவன்
குண்டலங்கள் ஒளிரும் முகம் கொண்டவன்
குந்திக்கு இளமையில் பிறந்தவன்
சுடரும் கிரணங்களின் மைந்தன்
அகன்றவிழிகள் கொண்டவன்
பகைவர் படையை அழிப்பவன்
உவகையுடன் படைக்கலம் ஏந்தி
மாமலை காலால் நடப்பதுபோல
அரங்கி நுழைந்தான்!
ஆற்றலில் யானையும்
அஞ்சாமையில் காளையும்
வெற்றியில் சிம்மமும்
ஆனவன்.
ஒளியில் சூரியன்
அருளில் சந்திரன்
வெம்மையில் நெருப்பு
கொடியேந்திய பனைமரமென உயர்ந்தவன்
சிம்மத்தின் வயிறுடையவன்
இளையவன்
எண்ணிமுடியா நற்குணங்கள்கொண்டவன்
அழகில் ஈடற்றவன்
வல்லமை மிக்க தோள்கள் கொண்டவன்
சூரியனின் மைந்தன்
அவைபுகுந்தான்


இது கர்ணனைப்பற்றிய வியாசனின் வர்ணனை. பெரும்பாலும் கர்ணன் இப்படி தாத்தனின் கையால் தலைவருடப்பட்டே காவியத்தில் முன்வைக்கப்படுகிறான்

கதையை வைத்து நோக்கினாலே தாத்தனுக்கும் பேரனுக்குமான ஒற்றுமை தெரியும், தனிக்கரிசனமும் புரியும்.

ஜெ

கர்ணனும் பீமனும்

அன்புள்ள ஜெயமோகன்,
      பீமன் கர்ணனை அவமதிக்கும் செயல் என் மனதை மிகவும் பாதித்ததுஒன்று கர்ணனின் பால் எனக்கு இருந்த அனுதாபம் என்ற போதிலும்  குழந்தை போல் எளிய மனதுடைய பீமனா இதை செய்தான் என்பது என்னை மிகவும் சஞ்சலப்படுத்தியது. 

 பீமன் தன் குருவாக ஒரு சூதரை சொன்னவன்மற்றவருக்கு மகிழ்ச்சிமட்டுமே அளிக்கக்கூடிய தொழில் சமையல் என அறிந்து அதை தன் தொழிலாக கொள்ள விருப்பம் கொண்டவன்காட்டு விலங்குகளையும் நண்பனாக கொள்பவன்சூதன் என்பதற்காக ஒருவனை இகழ்ச்சியாக நினைக்கக்கூடாது என்று விஜயனுக்கு அறிவுறுத்தியவன்.  அவன் சூதன் என்பதற்காக ஒரு மனிதனை  இகழ்வானா?

பீமன் கர்ணனை சூதன் என்பதற்காக இகழ்கிறானாஅல்லது இகழ்வதற்காக சூதன் என்கிறானாஇதுவே நாம் சிந்திக்கவேண்டிய கேள்விஇரண்டுக்கும் மிகுந்த வேறுபாடு உள்ளதுஒருவனை பிறப்பின் காரணமாக இகழலாம் என்று உயர்ந்த குலத்தில் பிறக்காத குந்தியின் மைந்தர்கள் கருதுவார்களா? 
என்னை பொறுத்தவரையில் பீமன் கடும் வெறுப்பு மற்றும் சினத்தின் காரணமாக கர்ணனை கிட்டதட்ட கொல்ல முயல்கிறான்அதற்கு சரியான் காரணம் அவனால் காட்ட முடியாததால்  அவனை அவமதித்து சொல்லால் கொல்கிறான்.   கர்ணன்மேல் ஏன் பீமனுக்கு அவ்வளவு சினம்?  தருமனுக்கு குரு  நெறிநூல்கள்,  விஜயனுக்கு வழிகாட்டி கண்ணன் என்றால் பீமன் பாடம் கற்றுக்கொள்வது காட்டிடம்.   காட்டு விலங்குகளுக்கு இருக்கக்கூடிய உள்ளுணர்வு அவனை வழிநடத்தியிருக்கிறது.  பீமனின் உள்ளுணர்வு பாண்டவர்களுக்கான எதிரியை கர்ணனிடம் கண்டுகொள்ளுகிறதுஒரு பாம்பு தன் எதிரியாக கீரியை காணுவதைப்போல மிக இயல்பாக அதை அறிகிறான்தன்னை கொல்ல நடந்த முயற்சியில் பாண்டவர்களுக்கு எதிரிகள் உருவாகிக்கொண்டிருப்பதை அவன் அறிந்திருக்கிறான்  தானும் விஜயனும் மட்டும்தான்  பாண்டவர்களின் அரண் என அவனுக்கு தெரியும்.  வில் வித்தையில் விஜயனை விஞ்ச ஆள் ஏதுமில்லாத நிலையை கர்ணனின் வரவு கலைத்துவிடுகிறது.  இதை   கர்ணனின் வரவு ஊர் முழுக்க ஏற்படுத்தியிருக்கும் பரபரப்பின் மூலம் அவன் அறிந்திருப்பான்துரோணர் விஜயனிடம் அஸ்வத்தாமனை  கொலைசெய்யக்கூடிய  ஆயுதத்தை காண்பதைப்போல்பீமன் விஜயனை கொலை  செய்யக்கூடிய ஆயுதமாக கர்ணனை அறிகிறான்துரோணர் விஜயனை  வாக்களிக்க வைத்து தன் பிரச்சினையை தீர்த்துக்கொள்கிறார்பீமன் கர்ணனை அவமதித்து அப்புறப்படுத்துவதன் மூலம் விஜயனின் வருங்கால ஆபத்தை தவிர்க்க எண்ணுகிறான்.

இதையெல்லாம் பீமன் உள்ளுணர்வில் அறிந்தது என்பதால் இதை அவனால் பிறருக்கு விளக்கமுடியாது. 

என்னைப்பொறுத்தவரை இதுவே பீமனின் கர்ணனை அவமதிக்கும்  செயலுக்கு காரணமாக தெரிகிறது.
அன்புடன்
.துரைவேல்

அன்புள்ள துரைவேல்

மகாபாரதம் போன்ற ஒரு செவ்வியல் நூலை நாவலாக்கும்போது வரும் பெரிய அறைகூவல் ஒன்றுண்டு. செவ்வியல் ஆக்கங்கள் மிகப்பெரிய வாசக இடைவெளிகளை உருவாக்குகின்றன. காலம் தோறும் அந்த வாசக இடைவெளி விவாதிக்கப்பட்டபடியே உள்ளது. விடைகள் முழுமையாகச் சொல்லப்படுவதில்லை

நவீன வடிவில் எழுதுபவர்களில் பலர் அந்த இடைவெளிகளை ‘விளக்கி’ தங்கள் நூல்களை எழுதியிருக்கிறார்கள். அவை இடைவெளிகளை நிரப்புகின்றன, புதிய இடைவெளிகளை உருவாக்குவதும் இல்லை. ஆகவே அவை மகாபாரத விளக்கங்களாகவே நின்றுவிடுகின்றன. ஒரு உண்மையான செவ்வியல் படைப்பு வாசக இடைவெளிகளால் ஆனதாகவே இருக்கும். வாசகன் தன் வாசிப்பனுபவத்தால், வாழ்க்கை அவதானிப்பால் நிறைத்துக்கொள்ளவேண்டிய இடைவெளி அது.

அத்தகைய இடைவெளிகளில் ஒன்று இது. மகாபாரதத்திலேயே பீமனின் இந்நடத்தை மர்மமானதாகவே உள்ளது.அதை ஒரு வாசகர் வெறும் சாதிக்காழ்ப்பு என புரிந்துகொள்ளக்கூடாதென்பதற்காகவே சமையற்கார முதுசூதரை அவன் ஏற்கும் காட்சி உள்ளது. அப்படியென்றால் இது என்ன?அந்த வினாவை வாசகன் ஆழமாக தன்னை நோக்கியே எழுப்ப வேண்டுமென நாவல் கோருகிறது.


எளிமையாக மகாபாரதத்தை விவாதிப்பது பயன் தராது. இந்நாவல் அளிக்கும் குறிப்புகளைக்கொண்டு வாசகன் தன் வாழ்க்கை அனுபவத்தை அதில் போட்டுப்பார்க்கவேண்டும். நம் வாழ்க்கையில் மிகப்பெரும்பாலும் அதி தீவிர நடத்தைகள் நம் தர்க்கம் சார்ந்தவை அல்ல. நம் ஆழ்மனம் சார்ந்தவை. நம்மை மீறியவை. நடந்தபின்னர் ஏன் நடந்தது என நாமே யோசிப்பவை. நம் கட்டுக்கடங்காத சினம் வெறுப்பு வஞ்சம் எல்லாமே அப்படித்தான்

நாவலில் அந்தக்குறிப்புகள் கொஞ்சம் பூடகமாக உள்ளன. கர்ணனை பீமன் முதலில் அணுக்கமாகக் காணும் இடம் எது? அப்போது அவன் குந்தியைப் பார்த்துக்கொண்டிருக்கிறான், பரவசத்துடன். அப்போது இளையவர்கள் ஓடிவந்து அவனை மூத்தவரே என அழைக்கிறார்கள். அங்கு தொடங்குகிறது

ஜெ

Monday, July 28, 2014

சிவக்குமார் கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

தங்கள் வெண்முரசை தினம் தோறும் மிகுந்த ஆவலுடன் படித்து வருகிறேன். இப்போதெல்லாம் ஒரு நாள் விடிந்தால் ஆஹா இன்று வெண்முரசு படிக்க போகிறேன் என்பதே மிகுந்த ம்கிழ்ச்சி தருவதாய் இருக்கிறது. பிறகு முடிந்த வரை தனிமையிலேயே தான் இதனை பருகுகிறேன். கடந்த வருடம் இதே போன்றதொரு ஜுலை மாதத்தில் தான் கிஸாரி மோகன் கங்குலியின் ஆங்கில மகாபாரத மொழி பெயர்ப்பை வாசித்து முடித்தேன். இதே சமயத்தில் தான் ஃபேஸ் புக் மூலமாக தங்கள் விஷ்ணுபுர வலைதளத்தை அறிந்து தங்கள் வலைதளத்தை அறிந்து உங்கள் விஷ்ணு புரம் வாசித்து உங்கள் எழுத்துக்களுக்கு வந்து சேர்ந்தேன். அதன் பின் கொற்றவை. 

உண்மையில் விஷ்ணுபுரம் என்னை அதிகமாக கவரவில்லை. ஒரு வேளை அது என் அதீத எதிர்பார்ப்பின் காரணமாக இருக்கலாம். ஆனால் என் ஒப்பீடு தங்கள் கொற்றவையுடனும் தற்போது எழுதி வரும் வெண்முரசோடும் தான். தங்களின் எழுத்துக்களில் கொற்றவையே சிறந்த புதினமாக எனக்கு தெரிகிறது. பிறகு அதனை விஞ்சக்கூடிய அளவில் தற்போது வெண்முரசு ஒரு மாபெரும் விஸ்வரூபம் போல் பிரம்மாண்டமாய் என் முன் நிற்கிறது. விஷ்ணுபுரத்தை நான் குறை கூறுவதாய் நீங்கள் நினைக்க கூடாது. முதிரா இளமையின் நினைவுகள் எப்போதும் அழகு தான். ஆனால் அதில் some maturity is missing. அவ்வளவுதான். இன்னும் மகாபாரதம் பற்றியும் கூட பல கேள்விகள் எனக்கு உண்டு. உங்கள் பொன்னான நேரத்தை இப்போதைக்கு வீணடிக்க விரும்பாததால் ஒரே ஒரு கேள்வி. அது ஏன் கம்ப ராமாயணம் அளவு வில்லிபுத்தூராரின் மகாபாரதம் தமிழில் பிரபலமும் முக்கியத்துவமும் அடையவில்லை? கம்ப ராமாயணம் போல் முழுமை தன்மை அதற்கு இல்லை என்பதாலா? 

பி.கு. கல்லூரி முதலாமண்டு தான் நான் கடைசியாக தமிழில் எழுதியது. அதன் பின் தமிழில் எழுதும் வாய்ப்பே இல்லை. நீங்கள் தான் 1999-க்கு பின் தற்போது 2014-ல் என்னை தமிழில் எழுத வைத்திருக்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் தாமதமாகி இருந்தால் கால் எழுத்து எங்கு வரும் ரெண்டு சுழி ந மூணு சுழி ந-ல-ள-இடுதல் இவையெல்லாம் மறந்து போயிருக்கும். இப்போதும் கூட தமிழில் டைப் செய்வது மிக மிக கடினமாகவே உள்ளது. ஜெயமோகன் எனும் மனிதராகிய நீங்கள் மற்றும் உங்கள் எழுத்தின் மீதான அன்பும் ஆர்வமுமே என்னை தமிழில் எழுத தூண்டுகின்றன. மிக்க நன்றி ஸார்.

சிவக்குமார்

சென்னை 



அன்புள்ள சிவக்குமார்


கம்பராமாயணத்தில் உள்ள காவியச்சுவை வில்லிப்புத்தூரார் காவியத்தில் இல்லை. கணிசமான பகுதி செய்யுளில் சம்பிரதாயமான அணிகளுடன் சும்மா சொல்லிச்சென்றதுபோல் இருக்கும். கம்பராமாயணத்தில் அத்தனை செய்யுட்களும் மணிகள்

விஷ்ணுபுரம் பற்றி. இருக்கலாம், ஆனால் இலக்கியத்தில் முதிர்ச்சியான நிலைக்குச் சமானமாகவே முதிராத இளமையின் வேகத்துக்கும் மதிப்புண்டு. அங்கே அடையப்பெற்ற சில கனவுகள் இங்கே சாத்தியமில்லை. இங்கே அடைந்த சில விவேகங்கள் அங்கே இல்லை என்பதைப்போல

ஜெ