Sunday, October 18, 2015

பிறவிப்பெருங்கடல்



பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்-திருக்குறள்.

பிறவியை பெருங்கடல் என்று வள்ளுவன் சொல்வது அதன் நீள அக ஆழத்திற்காக மட்டும்தானா? பூமி பெரியது பூமியைவிட கடல்பெரியது கடலைவிட வான் பெரியது. கடலைவிட பெரிய வானத்தோடு ஏன் பிறவியை வள்ளுவன் ஒப்பிட வில்லை?  கடலில் உள்ள அலைகள் வானில் இல்லை அதனால் பிறவியைக் கடல் என்றான் வள்ளுவன் மற்றும் வான் தனது இன்மையாலேயே இருப்பதுபொலவும் தோன்றக்கூடியது. அலைகள் கடலில் உள்ள முத்துக்களை அள்ளிவந்து கரைசேர்க்கும். கரையில் உள்ள முத்துக்களை இழுத்துச்சென்று கடலில் வைக்கும். இந்த ஓயாத விளையாட்டு கடலின் பிறவிக்குணம். இந்த அலைகடலின் குணம் பிறவிக்கும் இருப்பதால் பிறவியும் கடலும் ஒன்று. முத்துக்கள் என்றால் முத்தியர்கள், முத்தியர்களையும் பிறவிப்பெருங்கடல் விடுவதில்லை. 

பூமிப்பெரியது, பூமியைவிட அலைகடல்பெரியது, அலைகடலிலும் வான்பெரியது. பூமியை கடலை வானை அளந்த நாராயணன் பாதம்பெரியது. நாராயணன் பாதத்தை  தாங்கும் பக்தன் இதயம் பெரிதினும் பெரியது. இது கதை, இதை நம் அன்னை ஔவை பெரியது கேட்கும் முருகனிடம் கதையாக சொல்லாமல் பாட்டாகவே பாடிவிடுகிறாள். 

வானளந்த நாராயணன் பாதம் பெரியதாகவே இருக்கட்டும் அல்லது ஆலிலையில் துயிலும் அவன் அவன் சின்னஞ்சிறு உடம்பின் சிறுபாதம் சின்னதாகவோ இருக்கட்டும், எதுவும் ஆச்சரியப்பட வைக்கவில்லை, ஆனால் பிறவிப்பெருங்கடலின் அலை மடிப்புகள்  ஆச்சரியப்படவைக்கின்றன. அச்சப்பட வைக்கின்றன. 

ஒரு துளியவு விழைவு பெரும் அலைகளாகி, சுனாமிபோல் சுருட்டி உயிர்களை கரையில் அல்ல இந்த உலகத்திற்கு அப்பால் உள்ள உலகத்திற்கு வீசுவதை நினைத்து திகைக்கிறேன். துளியளவு பொன்னில் ஏற்பட்ட விழைவால் தோழிகளுடன் வர்கை காமினி காஞ்சனம் என்னும் அலைகளால் தூக்கி குபேரபுரியில் கரை ஒதுக்கப்படுகிறார்கள். உண்பதும்பொன், உடுத்துவதும்பொன், சுவாசிப்பதும்பொன், முகர்வதும்பொன், கேட்பதும்பொன் என்று பொன்னாகிய உலகத்தில் ஏற்படும் சலிப்பால், நிழல் இல்லா  உலகில் நிழலை உண்டாக்கி தனது நிழலில் தானே அமர்ந்து  வாழ்கிறார்கள். தேவர் உலகில் எது விழைவாக இருந்ததோ அதுவே குபேரபுரியில் சலிப்பாகமாற அந்த சலிப்பே ஒரு அலையாகி அவர்களை அங்கிருந்து சுருட்டி எடுத்து புவியில் மானிடராய் விழச்செய்கிறது. மண்ணில் கன்னியாய், மனைவியாய், அன்னையாய் வாழவேண்டியவர்கள். மலரோடு ஆடியும். பாடியும், விளையாண்டும் துயின்றும் வாழவேண்டியவர்கள் அப்படி வாழாமல் ஐயத்தின் அலைகரங்களில் சிக்கி, வினாக்களாய் உருண்டு சுருண்டு,   இன்மையின் விளிம்பில் ஐயத்திற்கு அப்பால்  நிற்கும் பூரணரை இன்மையில்   இருந்து இழுத்து வந்து இருப்பில் வைத்து ஐயத்தில் நிலைக்க வைத்த பாவ அலை அவர்களை அடித்துச்சென்று  எப்போது விண்ஏறுவோம் என்று அறியா பெரும் ஐயத்தில் கண்ணீர் அலையில் முதலையின் பிறவிக்கடலில் அவர்களை தள்ளிவிட்டு செல்கிறது. இதுவரை இருந்த பிறவிகள் எல்லாம் அவர்களை ஒரு உலக வாழ்க்கையை உடையதாக இருந்தது. இந்த வாழ்க்கை மண், நீர் என்று ஈருலக வாழ்க்கையாக இமைந்த கொடுமைதான் பிறிவிப்பெரும் அலையின் சுழற்சியின் அதிசயம். ஓயாத கண்ணீர் வாழ்க்கை. 

வர்கை மற்றும் அவளின் தோழிகள் வாழ்க்கை பிறவிப்பெருங்கடலாகி அலைக்கழிப்பதைப்பார்க்கும்போது உள்ளம் பதறுவது ஒரு எல்லைக்குள் என்றாலும், ஐயத்திற்கும் அப்பால் இன்மையின் வெளியில் கரும்புள்ளியே இல்லாத ஒளிவெளியில் நின்ற பூரணர் தனது சடைகளை தன்கையாலேயே பிய்த்துக்கொண்டு அலைந்து திரிந்து இறந்து மீண்டும் மறு பிறவியில் விழுகிறார் என்றால் பிறவிப்பெருங்கடலில் அலைவேகத்தை உலகளந்தான் பாதம் அன்றி மானிடப்பாதம் தடுக்கவல்லதோ!

தவம் முதிரும்தோறும் முனிவரை வெல்வது எளிதென்று உணர்க!”  என்ற நாரதரின் வார்த்தையில் முனிவனும் விழைவின் பிடியில் அன்றி தனித்திருக்க முடியாதவன் ஆகின்றான் என்பதை உணர்கின்றேன். காமம் என்றாலும் தவம் என்றாலும் அது விழைவின் பேரலையே! அந்த பேரலை சுழற்றி யாரை எங்கு எறியும் என்பதை அந்த பிறவிப்பெருங்கடல் நீந்தவைக்கும் ஓடக்காரன் அன்றி வேரு யார் அறியமுடியும். 

அன்புள்ள ஜெ, வர்கையின் கதை வழியாக எத்தனை பெரிய பிறவியின் கடலை காட்டி அதன் சுனாமைி அலையை அள்ளிவந்து கொட்டி மூழ்கடிக்கின்றீர்கள். மூழ்கடிக்கின்றீர்கள் என்பதை விட அலையாகி சுருட்டி இழுத்து மூச்சுமுட்ட வைக்கின்றீர்கள். ஐந்து முதலையின் கதை என்ற புரணத்திற்குள் மறைந்து இருக்கும் வாழக்கையின் அலைகளை காட்டும்போது பிறவின் சுமையை உணரமுடிகின்றது. மீண்டும் தொடங்கிய திருக்குறளிலேயே வந்து நிற்கின்றேன்.   

பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார் 
இறைவன் அடி சேராதார்.

ராமராஜன் மாணிக்கவேல்.