Thursday, June 2, 2016

அரசுசூழ்தலும் விடுதலையும்:


விதுரரின் கனவுகளில் சத்யவதி, அம்பிகை, அம்பாலிகை, மூவரும் வந்துகொண்டே இருக்கிறார்கள். இவரைப் போலவே அரசுசூழ்தலில் ஒவ்வொரு நொடியும் ஈடுபட்டவர்கள். அதற்கென்றே தன் வாழ்க்கையைச் செலவிட்டவர்கள். ஆனால் அனைத்தையும் ஒருகணத்தில் அறுத்துக்கொண்டு சென்றவர்கள். இன்று அந்தப்பட்டியலில் சுருதையும் சேர்ந்திருக்கிறாள். ஒருவகையில் அவர்களைப்போலவே அறுத்துக்கொண்டு செல்லும் விதுரரின் ஆழ்மன ஆசையே அவர் கனவுகளாக வெளிப்படுகிறது போலும். ஆனால் அவ்வாறு விதுரரால் வெளியேற முடியாது என்பதை சுருதை அறிந்திருக்கிறாள். அதனாலேயே "எதுவும் நம்மிடமில்லை" என்றும் "எதிலும் முட்டிக்கொள்ளாதீர்கள்" என்றும் சொல்கிறாள்.

அரசுசூழ்தலில் ஈடுபடும் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒருகணத்தில் அடையும் சலிப்பை வெண்முரசு விவரித்துக்கொண்டே வருகிறது. விதுரருக்கு அவ்வளவு விரைவில் மீட்பு நிகழப்போவதில்லை. ஆம் "இன்னும் நெடுநாட்கள் இருக்கிறது". இன்றைய அத்தியாயத்தில் மனைவியின் இறப்புச்சடங்கு நிகழும் நேரத்தில் கூட அரசர் நிலையழிந்தது குறித்தும் பிதாமகருக்குச் செய்யவேண்டிய முறைமைகளைப் பற்றியுமே சிந்திக்கமுடிகிறது அவரால். விதுரர் பாவம்தான்

திருமூலநாதன்