Wednesday, June 29, 2016

பெண்ணில் நல்லாளோடு இருந்த பெருந்தகை:



பன்னிருபடைக்களம் – 86 ல் படைக்களம் வரையப்பட்ட அவையில் இருந்த ஒவ்வொரு ஆணின் இடப்பாகத்திலும் அவர் தம் பெண் முன் தருக்கி எழும் கீழ்மையின் பருவடிவம் என பேருரு கொண்டு எழுந்து நின்ற மகிடன் இறுதியாக விகர்ணனிடம் வருகிறான். அவனிடம் தன்னை விட்டு விலகிச் செல்லுமாறு கெஞ்சும் விகர்ணன், இறுதியாக உன்னை எவ்வாறு வெல்லுவது என்று கேட்கிறான். அதற்கு மகிடன், “என்னைக் கடப்பதற்கு வழி ஒன்றே. என்னிடம் போரிடாதே. துளிக்குருதி சொட்டினாலும் ஒன்று நூறெனப் பெருகும் ஆற்றல் கொண்டவன் நான். என்னை வென்றவன் பெண்ணில் நல்லாளுடன் இருந்த பெருந்தகை ஒருவனே. தன்னைப் பகுத்து பெண்ணென்றான தாயுமானவன் அவன். உன்னை இரண்டெனப் பகுத்து என்னை எதிர்கொள்!பெண்ணென்றா?” என்று அவன் கேட்டான். ஆம். உன் முலைகள் ஊறவேண்டும். கருப்பை கனியவேண்டும். அன்னையென கன்னியென மகளென என்னை நீ தொடவேண்டும். என்னை வென்று கடக்க வழி என்பது ஒன்றே. ஆணென நின்று நீ கைக்கொள்ளும் அத்தனை படைக்கலத்திலும் எழுவது உனது கீழ்மை. கீழ்மைக்கு முன் ஆடிப்பாவையென பெருகி நிற்பது எனது வலிமை.

பெண்ணை வென்று கீழடக்க எண்ணும் கீழ்மை மாற பெண்ணை பெண் என்றே ஆகி எதிர்கொள்ளச் சொல்லும் வெண்முரசு தருவது ஒரு வாழ்க்கைத் தரிசனம். இதற்கும் பெண்ணை தாயாக, சகோதரியாகப் பார்க்கச் சொல்லும் அறவுரைகளுக்கும் என்ன வித்தியாசம்? “அன்னையென கன்னியென மகளென என்னை நீ தொடவேண்டும்.” – என்றே சொல்கிறது வெண்முரசு. அது பெண்ணின் எந்நிலையையும் விலக்கவில்லை. கன்னியாகவும் பெண்ணைத் தொடு, ஆனால் நீயும் ஒரு கன்னி என்று ஆகித் தொடு என்கிறது. அதுவும் முழுப் பெண்ணாக அல்ல, பாதி பெண்ணாக மாறு என்கிறது. எப்பேர்பட்ட அறைகூவல்!!! இன்றைய தேதிக்கு நம் மைந்தர்களிடம் நாம் சொல்ல வேண்டியது இதைத் தான். அர்த்தநாரீஸ்வரன் என்பதை ஒரு மிகப் பெரிய ஆழ்படிமமாக நம்மை உணர வைக்கிறார் ஜெ.

இப்படி ஒரு ஆணால் பெண்ணைக் கொஞ்சமேனும் உணர இயலுமென்றால் அவன் வாழ்வு எப்படி இருக்கும்? அனைவராலும் பெண்ணன் என்று எள்ளி நகையாடும் படியா? இல்லை, அதற்குப் பதிலை திருஞான சம்பந்தர் தருகிறார்.

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை,
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப் 
பெண்ணில்நல் லாளொடும் பெருந்தகை இருந்ததே.

“எண்ணிப்பார்க்கையில் அப்படிப்பட்டவனின் நல்ல கதிக்கு எந்த குறையும் இல்லை. அவன், காணும் இடங்களில் எல்லாம் நல்லவை தோன்றும் வளம் நிறைந்த சீர்காழி நகரில் வாழ்வாங்கு வாழும், ஒரு பெண்ணில் இருக்கச்  சாத்தியமான நல்லாளை அடைந்த பெருந்தகை (தாயுமான மாதொரு பாகன்) போன்று இம்மண்ணில் எந்நாளும் நல்ல வண்ணம் வாழலாம்.” – இப்பாடலின் முக்கியமான வரியே ‘பெண்ணில் நல்லாள்’ என்பது தான். பெண்களில் நல்லாள் – பெண்களில் சிறந்த பெண் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் பெண்ணில் நல்லாள் என்கிறார் சம்பந்தர். அப்படி ஒரு நல்லாளை ஒரு பெண்ணில் கண்டடைந்ததால் தான் அவன் பெருந்தகை!! எப்பெண்ணிலும் நல்லாளை அடைய வழி சொன்ன ஞான சம்பந்தரை மேலும் நெருங்கி துலக்கிய வகையில் பன்னிருபடைக்களத்தின் உச்சம் தூய இருளில் துலங்கும் தீபமாகிறது.

மகிடன் வாயிலாகச் சொன்னது ஒரு தரிசனம் என்றால், அதை ஏற்றுக்கொள்ள, கைக்கொள்ள இயலாத விகர்ணனின் நிலை நிதர்சனம்!!! கொஞ்சமேனும் மாதொருபாகனாக ஆக இயன்றால் சுவாதிகளும், வினுப்ரியாக்களும், வினோதினிகளும் உயிரோடு இருந்திருப்பார்கள்.

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்