Wednesday, December 9, 2020

ஊழ்

 




அன்பு ஜெயமோகன்,


நலமா?

முதற் கனல் இரண்டாம் முறை படித்துக்கொண்டு இருக்கிறேன். அதில் பெண் கதாபாத்திரங்கள் மிகவும் வலுவானதாக இருந்தாலும், இந்த முறை (இரண்டாம் முறை) வசிக்கும் போது  தந்தை - பிள்ளைகளின் உறவு  சார்ந்த விஷயங்கள் என்னை முன்னும் பின்னுமாக சிந்திக்க வைக்கின்றன. ஒரு  தந்தையாக காசி மன்னன்  என்ன மாதிரி தவித்து இருப்பான்  - அம்பையை அவனால் ஏற்றுகொள்ள முடியாத அந்த தருணத்தில்... அதே மாதிரி சந்தனு பீஷ்மர் சபதம் எடுக்கும் போது  எவ்வளவு துயருற்று இருப்பான்... அப்பாக்கள் தான் எவ்வளவு துயரம் தங்க வேண்டி இருக்கிறது . இது கூடவே நான் சு. ரா. நினைவின் நதியில் படித்து கொண்டு இருக்கிறேன். இந்த இரண்டு புத்தகங்களும் எனக்கு  ஏனோ என் அப்பாவை நிறைய நினைவு படுத்தி கொண்டே இருந்தது. உங்கள் அறம் தொகுப்பை படிக்கும் போதும் எனக்கு என் அப்பாவின் நினைவு வந்து கொண்டே இருந்தது.  

நான் அறம் சிறுகதை தொகுப்பின் கடைசி பக்கங்களை பெங்களூர் ரயில் பயணத்தில் முடித்தேன். அருகில் இருந்தவர் கேட்டார், சார், படிச்சிடீங்களா; ஆமா, ரெண்டு மூணு முறை படிசிருப்பேன்; எனக்கு கொடுக்கீறீங்களா நான் படிக்கிறேன்; oh , no  problem. அவர் காட்பாடியில் இறங்கும் போது கேட்டார் இத எங்க வாங்கினீங்க சார், நானும் வாங்கணும்; நீங்களே வச்சிக்கிங்க; எவ்வளவு சார் தரணும் உங்களுக்கு; ஒன்னும் வேணா , நீங்க படிச்சிட்டு  யாருக்காவது படிக்கச் கொடுங்க. என் அப்பா இருந்தால் சொல்லி இருப்பார் - இதைத்தான் சொன்னேன், மனசு ஒரு மாதிரி நெகிழ்ந்து இருக்கும் இந்த மாதிரி புத்தகம் படிச்சா - 

இதையெல்லாம் யோசிக்கும் பொது, என் அப்பா இறக்கும் தருவாயில் (புற்று நோய் ), அவர் என்னிடம் கேட்டது ஒரு அறம்  பற்றிய கேள்வி - நான் எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவன், கடன் இல்ல, பிள்ளைகள் தொல்லை இல்ல (நான் ஒரே  பிள்ளை), என்னோட விவசாய தொழிலாளிங்கள நல்லா நடத்தினேன் யாருக்கும் வம்பு பண்ணினது இல்ல, ஆனா எனக்கு ஏன் இந்த நோய் ? நல்லா நியாயமா வாழ்வதினால் என்ன பயன்... நான் யார் யாரிடம் எல்லாம் இந்த கேள்வியை  கேட்டேன். ஒரு பதில் இல்ல... அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும், செவ்வியான் கேடும் நினைக்க படும்  - இன்னு மட்டும்தான் வள்ளுவர் சொல்றார். அவரும் ஒரு காரணம் சொல்லல. ..இத என்ன ஊழ்  அப்படின்னு புரிஞ்சிக்கறதா? அததான் நிறைய விதத்துல எனக்கு முதற் கனல் சொல்ற மாதிரி புரியுது ... அந்த புரிதல் சரியா சார்?

மிக்க அன்புடன்,

தேவா 

அன்புள்ள தேவா

ஒருவகையில் சரிதான்.

வாழ்க்கையில் நாம் நம்மைவைத்தே எல்லாவற்றையும் யோசிக்கிறோம். பிரபஞ்சம், ஊழ் எதைப்பற்றியும் நாம் யோசிப்பதில்லை. நாமும் பிரபஞ்சமும், நமது ஊழ் என்றே யோசிக்கிறோம். அது மானுட இயல்பு. ஆனால் அறிவு என்பதும் ஞானம் என்பதும் தன்னை விலக்கி, ஒட்டுமொத்த உண்மையை அறிவது. ஒட்டுமொத்தமாக இந்த பிரபஞ்சம் என்ன, இதன் செயல்பாடுகளிலுள்ள ஒழுங்கு என்ன, எதை நாம் அறியமுடியும் எதை நாம் அறியமுடியாது என உணர்வது. முதற்கனல் அதைநோக்கிய வாசல்

ஜெ