Tuesday, April 4, 2017

வெறுமை




அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

ஒவ்வொன்றிற்கும் ஓராயிரம் அர்த்தங்கள் தந்து - அந்த ஓராயிரம் அர்த்தங்கள் வாயிலாகவே ஒவ்வொன்றின் அர்த்தமின்மையை தந்து செல்வது போல் ஒரு எண்ணத்தைத் ஏற்படுத்துகிறது.  பிரகஸ்பதியின் திட்டம் அர்த்தம் இழந்தது.  தேவயானியின் காதல் அர்த்தம் இழந்தது.  கசனின் கல்வி அர்த்தம் இழந்தது.  ஒவ்வொரு முறையும் மீண்டெழுந்து ஓநாய்-வேங்கை-சுக்கிரர் என வயிற்றின் தன்மையால் கொள்ளும் வாசம் -இறந்தவர் மீள்வதன் அர்த்தமின்மை.  எழுப்புவதை சுக்கிரர் நிறுத்திக்கொண்டார் - ஏசுவும் கூட நிறுத்தியிருப்பார்.  தேவயானியின் கோபம் நியாயமானது ஆனால் கசன் மீது காட்டுவதில் நியாயம் இருக்காது.  தென்முனைக் கன்னி நின்று நிலைகொண்டது போல் தேவயானியும் நிலைகொள்வாள் போலும் - என்னிடம் தொற்றிய துயர்.  யாரோ சைக்கிளில் தெருவில் போகும் ஒருவர் நள்ளிரவில் செல்போனில் பாட்டை ஓட விட்டுச் செல்கிறார் -

துள்ளித் துள்ளி நீ பாடம்மா சீதையம்மா

கட்டிய தாலி உண்மையென்று
நீ அன்று ராமனை நம்பி வந்தாய்

மன்னவன் உன்னை மறந்ததென்ன
உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன

தாயே தீயில் மூழ்கி..........

நீ அன்று சிந்திய கண்ணீரில்
இந்த பூமியும் வானமும் நனைந்ததம்மா
(இந்த இடத்தில் எஸ்பிபி அழவைக்கிறாரா இளையராஜா அழவைக்கிறாரா - சீதை அன்னை அழவைக்கிறாளா தெரியவில்லை)

எப்படியோ தென்முனைக் கன்னி மட்டுமல்ல நானும் தான் என்று சீதை சொன்னது போல்.  ஆனால் தேவயானி அசைந்து விட்டாள் -கிருதர் போல் எனக்கும் கொஞ்சம் ஏமாற்றம் தான்.  சரி நல்ல விஷயம் தானே.



அன்புடன்,
விக்ரம்
கோவை