Wednesday, July 9, 2014

ரத்தமும் சதையும்

அன்புள்ள ஜெ.,

மகாபாரதம் ஒரு துப்பறியும் நாவல் போன்றது என நீங்கள் கூறியபோது எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை... ஏற்கனவே தெரிந்த கதை, இதில் விறுவிறுப்பு எப்படி இருக்கும் என நினைத்தேன்... மானுட அக உணர்ச்சிகளும், தத்துவங்களும், இந்திய வரலற்றின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றமும் மட்டுமே என்னை முதலில் ஈர்த்தன... ஆனால் மிக விரைவிலேயே இதன் விறுவிறுப்பு என்னைத் தொற்றிக்கொண்டது... வெண்முரசு படிக்காமல் உறங்கிய நாட்கள் மிகக்குறைவு...
நம் இதிகாசங்களை ஒரு கறாரான வடிவத்திலேயே வாசித்தும் பார்த்தும் பழகியிருக்கிறோம்... தொலைக்காட்சி மகாபாரதம் போன்ற ஒரு கொடுமை வேறில்லை... 'இனி நான் உறங்கட்டும்' நாவல் கூட என்னைப் பெரிதாக ஈர்க்கவில்லை; இரண்டாம் அத்தியாயத்திலேயே முட்டிக்கொண்டு நிற்கிறேன்...
ஒரு இதிகாசத்தை ரத்தமும் சதையுமாக முதல் முதலில் வாசிக்கிறேன்... ஆயிரம் அவதார் படங்களுக்கு இணையான அனுபவம்.. நன்றிகள் ஆயிரம்...

நன்றி
ரத்தன்

அன்புள்ள ரத்தன்,நன்றி மழைப்பாடல் ஒரு யதார்த்தவாத நாவல். அக்கட்டமைப்புக்குள் புறவயமாக விளக்கத்தக்க ஃபேண்டசிக்களுடன் அது அமைந்தது. அடுத்த நாவல் எப்படி என்று தெரியவில்லை. பார்ப்போம் - ஜெ.