Monday, March 2, 2015

மலைநிலம்



ஜெ

வெண்முரசு நாவலில் வெண்முகில்நகரத்தில் வரும் பூரிசிரவஸின் கதை ஒரு தனித்த அத்தியாயம். காதல்கதை என்றால் காதல்கதைதான். ஆனால் அது காதல் இல்லை. வெறும் பாலியல் கவற்சியா என்றால் அதுவும் இல்லை.அதற்குமேல் ஏதோ ஒன்று.  அவன் அலைபாய்வதும் ஒன்றிலிருந்து ஒன்றுக்குத்தாவுவதும் அழகாகச் சொல்லப்பட்டிருந்தது

அவனுக்கு ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொன்றாக அர்த்தமாகிறார்கள் என்று புரிந்துகொள்கிறேன். ஆனால் அவனுக்கு அந்த மலைமகளாகிய பிரேமைதான அழகாக ‘செட்’ ஆகிறாள் என்றும் தோன்றியது

நிலக்காட்சிகள் அற்புதம். நீங்கள் லடாக் சென்று வந்ததன் விளைவு என்று எண்ணுகிறேன். இமையச்சரிவின் வரண்ட குளிர்ந்த நிலக்காட்சியை இப்படி காட்சியாக எங்கும் வாசித்ததில்லை

எப்ப்டியோ எல்லா நிலத்திலும் கதையை நடக்கவைத்து ஒரு பான் இண்டியன் தன்மையைக் கொண்டுவந்துவிடுகிறீர்கள்

சிவக்குமார்

ஐந்து இணைவுகள்



இப்புவியின் உயிர்க்குலம் முழுமையும் நாம் பேருயிர் எனக் கொள்ளலாம். அதன் ஒரே நோக்கம் தான் அழியாமல் வாழ்வது. அதற்கான எல்லா வழிகளையும் அது மேற்கொண்டு இருக்கும்.  உயிர்களை பிறப்பித்துக்கொண்டே இருப்பதன் மூலமும் பிறந்த உயிர்களை மேற்கொண்டு வாழவைப்பற்கான ஏற்பாடுகளை செய்து கொடுப்பதன் மூலமும் அது தன்னை வாழவைத்துக்கொள்கிறது.   அந்த பேருயிர் எல்லா உயிர்களையும் இனப்பெருக்க விழைவை உள்வைத்தே பிறப்பிக்கிறது. தன் உயிரை பேணிக்கொள்ளுதல் முதற் கடமையாகவும்  அடுத்த கடமையாக இனப்பெருக்கம் செய்யவேண்டியதும்  ஒவ்வொரு உயிருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.   உயிர்கள் இக்கடமையை தாங்கள் அறிந்தும் அறியாமலும் செய்து வருகின்றன.

         அந்த பேருயிர் ஆண் என்ற அகப்பையினால் விந்தணுவை எடுத்து பெண் என்ற பாத்திரத்தில் உள்ள கரு முட்டையில் சேர்த்து ஒரு உயிரை உருவாக்குகிறது. ஆனால் அகப்பைகளும் பாத்திரங்களும் தானியங்கி பொறிகள்.  தானியங்கி பொறிகள் செயல்படுவதை பார்க்கும்போது தாமே செயல்படுவதைப்போல் தான் இருக்கும். ஆனால் அவற்றின் செயல்பாட்டிற்கான கட்டளைகள் அவற்றினுள்ளே முன்னரே பொதிக்கப்பட்டிருக்கும். மனித உயிர்த்தொகுதியை தவிர மற்றவை அனைத்தும் அவற்றின் செயல்பாட்டுக் கட்டளையை மீறாமல் நடந்துகொள்கின்றன.

         மனித உயிர் தொகுதி மட்டும்  சிந்தனை என்ற ஒன்றினால் இந்த செயற்பாட்டுக்கட்டளைகளை மீறி நடந்துகொள்வதாக தன்னை நினைத்துக்கொள்கிறது. தன்னை மற்ற உயிர்களிடம் வேறுபடுத்திக்கொள்ள தன் மேல்  எண்ணங்கள் என்ற பல்வேறுவிதமான ஆடை அணிகளை அணிந்துகொள்கிறது.  உண்ணும்போதும் உறங்கும்போதும் உறவுகொள்ளும்போதும் அது தன் ஆடை அணிகளை களைந்துகொள்ளும்.
தம் அக ஆடைகளை அகற்றிக்கொண்டு வெற்று உயிர்களாக ஆகாமல் ஆணும் பெண்ணும் உறவு கொள்ள முடியாது.

  ஆண் பெண் உறவில் சுவாரஸ்யமான பகுதி ஆணும் பெண்ணும் தம் தம் துணையை கவரும் விதம்  அகஆடைகளை அணிந்துகொள்வதும் பின்னர் அவற்றை  அகற்றிக்கொள்வதும். அதன் பின் உடல்கள் கூடுவது சலிப்பூட்டும் ஒரு நிகழ்வாகும். எதிர் பாலினத்தவரின் அக ஆடைகளை ஒவ்வொன்றாய் கழற்றி அகற்றிய பின்னரே ஒருவரை புணரவேண்டியுள்ளது. அவ்வாறில்லாதபோது அது வல்லுறவாக தாழ்ச்சியடைகிறது.

       ஜெயமோகன் ஐந்து புணர்வுகளுக்கான இந்த அக ஆடைகள் களையும் நாடகத்தை அருமையாக விவரித்துள்ளார்.  திரௌபதி ஐவரை சந்திக்கப்போகும்போதும் அவரவர்கேற்ற ஆடைகளை அணிந்துகொள்கிறாள். தருமன் அணிந்திருப்பது அறிஞன் என்ற ஆடையை, அவள் அவனிடம் அறிவென்ற துகிலுடுத்தி செல்கிறாள். பின்னர் பேசி பேசி தம்தம் துகில் களைந்து  அவர்கள் உறவு கொள்கின்றனர். பீமன் உடுத்தியிருப்பது வன மனிதன், உடல் ஆற்றல் கொண்டவன் என்ற ஆடையை. அவள் அதற்கேற்ப தன் பழைய ஆடையை களைந்து புது ஆடைகளை அணிந்துகொள்ளலே அவள் கங்கையில் நீந்தலும் தீவில் மீன்களை சுட்டு தின்பதும்.
  ஆனால் அர்ச்சுணன் அணிந்திருப்பது காமுகன் என்ற  ஆடையை. அவள் அதற்கேற்ப எந்த ஆடையை அணிந்துகொள்வது என அறியாமல் திகைக்கிறாள். ஒரு பெண்ணாக அவள் அதைப்போன்ற ஆடையை அணிய இயலாது.  அதற்காக அவள் அணிந்துகொள்ளும் ஆடைகளே சினமும் வெறுப்பும். இந்த ஆடைகளை அர்ச்சுணன் அவளை  சிறுமைப்படுத்துவதன்மூலம் களைகிறான்.

தண்டபாணி துரைவேல்

ஜெயமோகனின் ‘மகாபாரதம்’: ஏன் மற்ற பாரதங்களை விட மிகச் சிறந்தது?



 அரிசி வெந்துவிட்டதா என சரிபார்க்க ஒரேயொரு பருக்கையை எடுத்து வாயில் போட்டு பார்ப்பது மாதிரி இந்தப் பகுதியை வாசித்தேன்: ‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 2


பாஸ்டன் பாலாவின் குறிப்பு

புரியாத புதிரின் நறுமணம்(வெண்முகில் நகரம் அத்தியாயம் பதினாறு)





அன்பு ஜெயமோகன்,
         
வெண்முகில் நகரத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் மறைந்திருக்கும் அகக்காமத்தின் இருவிழிகளை நான் கண்டபடியே இருக்கிறேன். பதினாறாம் அத்தியாயத்திலும் அவ்விழிகளைக் கண்டேன். சூதர்களின் கதையில் தென்பட்ட அவ்விழிகளைத் தங்கள் வாழ்வோடு நகுலனும், திரெளபதியும் பொருத்திப் பார்க்க முயன்றபோது அது அவர்களின் பிடிக்குச் சிக்காமல் நழுவிக் கொண்டே போனதையும் வேடிக்கைபோல் ரசித்தேன்.
         
சுகன்யையைக் குறித்த சூதர்களின் கதை எனக்கு பெண்ணின் ஏழு பருவங்களை ஞாபகமூட்டியது. ’பேதை முதிர்ந்து பெதும்பையென்றாகிய’ என நீங்கள் பெண்ணின் முதல் இருபருவங்களைக் குறிப்பிட்டிருப்பீர்கள். பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை மற்றும் பேரிளம்பெண் என்பவையே பெண்களுக்கான ஏழு பருவங்களாகும். ஒவ்வொரு பருவமும் குறிப்பிட்ட வயதுக்கானவை. ஒன்று முதல் எட்டு வயது வரை பேதை, ஒன்பது முதல் பத்து வரை பெதும்பை,  பதினொன்று முதல் பதினான்கு வரை மங்கை, பதினைந்து முதல் பதினெட்டு வரை மடந்தை, பத்தொன்பது வயது முதல் இருபத்துநான்கு வரை அரிவை, இருபத்தைந்து வயது இருபத்தொன்பது வரை தெரிவை, முப்பது மற்றும் முப்பதுக்கு மேல் பேரிளம்பெண் எனும் பருவக்கணக்கை பெரும்பாலும் நம்மில் பலர் அறிந்திருக்கும் வாய்ப்பு குறைவு. ஆணுக்கும் பெண்களைப்போன்று ஏழு பருவங்கள் இருக்கின்றன. பாலன், மீளி, மறவோன், திறவோன், விடலை, காளை மற்றும் முதுமகன் என்பவையே அவை. வயதுக்கணக்கு பெண்களுக்குரிய பருவங்களைப் போன்றல்லாமல் கொஞ்சம் வித்தியாசப்பட்டிருக்கும். ஒன்று முதல் எட்டு வயது வரை பாலன், எட்டு முதல் பத்து வயது வரை மீளி, பதினொன்று முதல் பதினான்கு வரை மறவோன், பதினைந்து வயது என்பது திறவோன், பதினாறு வயது என்பது விடலை, பதினேழு முதல் முப்பது வயது வரை காளை, முப்பது மற்றும் முப்பதுக்கும் மேல் என்றால் முதுமகன்.

உலா என்றொரு சிற்றிலக்கிய வகை இருக்கிறது. அதன் அடிப்படையை இரண்டாகப் பிரித்திருக்கின்றனர். முன்னெழு நிலை மற்றும் பின்னெழு நிலை. பின்னெழு நிலையில் பாட்டுடைத்தலைவன் உலா வரும்போது ஏழுவகையில் இருக்கும் பருவப்பெண்களும் அவன் மீது காதல் கொள்வது பாடப்பட்டிருக்கும். ஆச்சரியமாக, தமிழின் முதல் உலா இலக்கிய நூல் இறைவனைப் பற்றியதாக இருக்கிறது. சேரமான் பெருமாள் நாயனார் இயற்றிய திருக்கைலாய ஞான உலாவே அது.
         
”கன்னி குலமகளாகும் விந்தைக்கு நிகரானது மலர் கனியாவது மட்டுமே” என்றி நீங்கள் எப்படி எழுதினீர்களோ தெரியாது. கன்னியாக இருக்கும்வரை பெண்கள் மலர்கள்தான். மலர்கள் என்றதுமே நமக்கு நினைவுக்கு வருவது நறுமணமே. நறுமணம் இல்லாத மலர்களை நாம் மலர்களாக ஒப்புக்கொள்வதும் இல்லை. அதுபோன்றே கன்னிகளிடம் ஒருவித நறுமணம் கமழ்ந்தபடியே இருக்கிறது. அந்நறுமணத்திலேயே ஆண்மனம் பித்தாகி அலைகிறது. கன்னியே குலமகளான பின்பு கொஞ்சம் கொஞ்சமாகக் கனியாகிப் போகிறாள். மலராக இருக்கும்போதிருந்த நறுமணம் இப்போது அவளை விட்டு நீங்கத் துவங்குகிறது. பேரிளம்பெண் பருவத்தைத் தொட்டுவிட்ட பெண் கிட்டத்தட்ட கனியாகும் தறுவாயில் இருக்கிறாள். அதனால் ஆண்மனமும் சமநிலைக்குத்திரும்பி விடுகிறது. பேரிளம்பெண்களை விரும்பும் ஆண்மனம் அதற்கு முந்தைய பருவப் பெண்களால் உதாசீனப்படுத்தப்பட்டதாகவே இருக்கும்.
         
சுகன்யை இன்னும் அரிவை உள்ளிட்ட பருவங்களையே கடக்காதவள். மேலும், சூழல் காரணமாக முதிய முனிவரைத் திருமணம் செய்து கொண்டமையால் அவளிடம் கமழும் நறுமணம் எவ்வித மாற்றமும் இல்லாமல் அப்படியே இருந்தது. அந்நறுமணத்தாலேயே அஸ்வினிதேவர்களும் அலைக்கழிக்கப்பட்டனர். அதன்பொருட்டே அவளை அடையவும் முயற்சிக்கின்றனர். தன் கணவனான முனிவரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அஸ்வினி தேவர்களின் வேண்டுகோளை ஏற்கிறாள். ஆற்றுநீரிலிருந்து வெளிப்படும் மூவரில் சியவனனை எப்படி சரியாகக் கண்டுகொண்டாள் என்பது புரியாத புதிராக்வே இருக்கிறது. பெண்களின் அகம் என்பது எப்போதும் புரியாத புதிர்தானோ?
         
சுகன்யை சியவனனை எப்படி கண்டுகொண்டாள் என நகுலன் கேட்க, திரெளபதி நழுவியபடியே இருக்கிறாள். நகுலன் விடாமல் கேட்டுக்கொண்டே இருக்கிறான். திரெளபதியும் நழுவிக்கொண்டே இருக்கிறாள். நாங்கள் புரவித்தோற்றம் பெற்று அங்கிருந்து நகர்வதே நல்லது என முடிவுசெய்தோம். புரியாத புதிரின் நறுமணத்தை ஞாபகமூட்டியபடியே நிறைவடைந்திருந்த அவ்வத்தியாயத்திலிருந்து வெளியே வந்தோம்.

முருகவேலன்,
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,
கோபிசெட்டிபாளையம்.

பால்ஹிகர்கள்



Dear Jeyamohan

The story is touching grandiose heights, with the description of Palhika's clans. I am awestruck to think  how much efforts you are putting into weaving this grand tapestry with words aka gems.
Your imagination combined with history and the amazing Interpretation of the nuances of each character make this as a sequel to Vyasa's great epic.

Thru Purisiravas you aptly describe Draupati's prowess, inner strength and her desire to be like Kali Ma and how she express it that makes her beautiful.

In chapter 22 you start with Palhikar' travels. But, in chapter 23 princess Devikai helps with the journey. Am I missing something? 

Is Saibyapuri today's Afghanistan or Iran? If they are traveling towards Multan that is towards East, they must have started somewhere west of Multan but I could not figure out the precise region. 

Thank you. Safe travels.

Warm regards,
Sobana

Sunday, March 1, 2015

இரு தம்பியர்






அன்புள்ள ஜெ,

எனக்கு த்ரௌபதி - நகுலன் ; திரௌபதி - சகாதேவன் இவர்களின் இணை (ஜோடி பொருத்தம்) மிகுந்த சுவாரஸ்யமாக படுகிறது.. அர்ஜுனனன் - மிகச்சிறந்த வில்லாளன் / பீமன் - பெருந்தோள் கொண்ட பெரும் வலிமை கொண்ட வீரன், தருமன் - பட்டத்து இளவரசன் என்ற பெரும் தகுதியை கொண்டவன்; அவர்களே த்ரௌபதி என்ற பெரும் ஆளுமை முன்னாள் சிறு குழந்தை என ஆகிறார்கள். அவர்கள் முன்னே எந்த தகுதியும் இல்லாத நகுலனும் சகாதேவனும் எங்கே

இது முற்றிலும் பொருந்தாத இணை / ஜோடிகள்! அவளின் அகத்தில் நகுலனுக்கும் / சகாதேவனுக்கும் எந்த இடம் இருந்திருக்கும்

இப்போதும் நாம் நாட்டில் பார்க்க கூடிய விஷயமாகவே இது இருக்கிறது.. பொருந்தா மனம் .. நான் சொல்வது வயதிலோ / அந்தஸ்திலோ அல்ல .. மனைவியின் ஆளுமை - கணவனின் ஆளுமை என்பதில். சில நேரங்களில் தி.ஜா. இந்த இடத்தினை தொட்டு இருப்பார்.

நீங்கள் மகாபாரதத்தில் வீரர்களை மட்டுமே சொல்லப்போவதில்லை , ஜனநாயக யுகமாகையால் அனைவைரையும் சொல்ல போகிறீர்கள்.

நீங்கள் நகுலன் / சகாதேவன் பார்வையிலும் அதிகம் கூறவேண்டும். தாயும் இல்லாமல் தந்தையும் இல்லாமல் அனாதைகளாக , பெரும் ஆளுமை கொண்ட அண்ணன்களின் மத்தியில் , புகழும் இல்லாது வலிமையையும் இல்லாது , தங்களின் ஆளுமைக்கு / திறமைக்கும் ஒவ்வாத மனைவியோடும் (வேறு திருமணங்கள் நடந்ததாக சொல்லபட்டாலும்)அவர்கள் வாழ்ந்து இருக்கின்றார்கள். என்னை பொறுத்தவரை அவர்களின் பார்வை சுவாரஸ்யமான கோணம் ..

கோகுல் சீனிவாசன்