Wednesday, November 6, 2019

நீர்ச்சுடர் - தப்பிப்பிழைத்தவர்களின் தடுமாற்றம்



          ஆங்கிலத்தில் survivors guilt என்று சொல்வார்கள்.  ஒரு விபத்து ஒன்றில்  உடன் இருந்தவர்கள் இறந்துவிட  தாம் மட்டும் பிழைத்தவர்கள் அடையும குற்ற மனப்பான்மை என்று பொருள் கூறலாம்.  தாம்  உயிர் பிழைத்திருப்பதாலேயே தம்மை  குற்றம்புரிந்தவர்களாக  மற்றவர் இறப்புக்கு நாம் பதில் சொல்ல வேண்டியவர்களாக எண்ணி வருந்தும் ஒரு உளச்சிக்கல்.   சிலர் வருந்தி துயரத்தில் மூழ்கி இருப்பார்கள் ஒரு சிலருக்கு  இது தற்கொலை எண்ணத்தை உருவாக்கும். இத்தகைய மன நிலையிலிருந்து வெளிவர சிலருக்கு மனசிகிட்சை தேவைப்படலாம்.
   
           குருஷேத்திரப் போர் என்பது துவங்கிய சில காலத்தில் அது போரின் இலக்கணங்களை மீறி  ஒரு பெரு விபத்து என  ஆகிவிட்டது. ஒரு பெருங் கப்பல் நீர்ல் மூழ்கி அதில் பயணித்தவர்கள் மூழ்கி இறப்பதைப்போல. பெரு மாளிகையில்  தீப்பற்றி அதில் இருப்பர் எரிந்தழிவதைப்போல குருஷேத்திரப்போர்க் களத்தில் சென்றவர்கள் அனைவரும் இறந்தழிகிறார்கள்.  அதிலிருந்து தப்பி வருவதற்கே வழியில்லாத பெரும் விபத்து என ஆகிறது.  தனி மனிதர்களின் ஆற்றல் இயல்பை விட அதிகரித்துவிட்டால் அது அழிவுக்கே அடிகோலும்.  பீஷ்மர், அர்ச்சுனன், கர்ணன், துரோணர், அஸ்வத்தாமன்,  போன்றோரின் அதீத ஆற்றலே இந்தப் பேரழிவை உண்டாக்குகிறது. அவர்களும் மற்றவர்களைப்போல இயல்பான ஆற்றலைப்பெற்றிருந்தால் இப்போரில் இவ்வளவு அழிவு ஏற்பட்டிருக்காது.    பிழைத்தவர்கள் வெற்றி பெற்ற அணியில் மட்டுமல்லாமல்  தோல்வியடைந்த அணியிலும்  மிகுந்திருப்பர்.   மனிதனின் அதிக வல்லமை அதிக அழிவைத் தருகிறது.  பெரு வீரர்கள் மட்டுமே இதை போர் என்று சில நாட்களெ உணர்ந்திருக்கமுடியும். மற்ற வீரர்கள் எல்லாருக்கும் ஒரு பெரும் விபத்து ஒன்றில் சிக்கிக்கொண்டிருக்கிறோம் என்றே உணர்ந்திருபார்கள்.  அவர்கள் அடைதிருக்கும் போர்த்திறனுக்கெல்லாம் இப்போரில் ஒரு பொருளும் இல்லாமல் போய்விட்டது.
    
           பாரத நாட்டின் அனைத்து வீரர்களும் ஆயிரம் ஆயிரமாக  பெரும் எண்ணிக்கையில் பங்குகொண்ட இப்போரில் பிழைத்தவர்களை ஒருவர் தம் இரு கை விரல்களால் எண்ணிவிடலாம்.   பாண்டவர்களை நாம் ஒரு பெரும்போரில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதை விட ஒரு  பெரும் விபத்தில் தப்பிப்பிழைத்திருக்கிறார்கள்  என்றுதான் சொல்லமுடியும். ஏனென்றால் வெற்றி என்பது பெருமிதத்தை இன்பத்தை  நிறைவைத் தருவது. இவற்றில் எதை ஒன்றையும் அவர்கள் பெற்றிருக்கவில்லை.    தம் உற்றார் உறவினர்  அனைத்துக்கும் மேலாக தம் அனைத்து பிள்ளைகளையும் இழந்து விட்டிருக்கும் இந்நிலையை வெற்றி என்று யார் ஒருவர் கூற முடியும்.      பாண்டவர்கள் இப்போது கொண்டிருக்கும் உளநிலை தப்பிப்பிழைத்தவர்களின் உளநிலை.  அதன் சிக்கல்கள் அவர்களின் உரையாடல்களில்,   தயக்கங்களில்,  நிலை தடுமாறல்களில், துயரத்தால் பீடிக்கப்பட்டிருப்பதில்  தெரிகிறது. அதிலிருந்து அவர்கள் மீள கண்ணனின் குழலோசை எப்போது ஒலிக்கும் என்று தெரியவில்லை.

தண்டபாணி துரைவேல்