Thursday, November 7, 2019

நீர்ச்சுடர் - தாயின் வஞ்சினம்

 
       

திரௌபதியின் வஞ்சினத்தால் இந்தப் போரும் அதனால்  பேரழிவும் ஏற்பட்டிருக்கிறது என்று அர்ச்சுனன் கூறுகிறான். இதே கருத்தையே அனைவரும் கொண்டிருக்கின்றனர். காந்தாரி அதனால்தான் திரௌபதியை சந்திக்காமல் திரும்பிவிடுகிறாள் என நினைக்கிறேன்.  அவர்கள் அனைவரும் அவ்வா று நினைப்பது சரியென்றே தோன்றுகிறது. இப்போருக்கு வெளியில் சொல்லப்படும் காரணமாக பாண்டவர்கள் நாட்டை திரும்ப அடைதல் என்று கூறப்பட்டாலும் தவிர்க்கமுடியாத  காரணமாக அமைவது திரௌபதி எடுத்த வஞ்சினம்தான்.  பாண்டவர்கள் பல தருணங்களில்  நாட்டின் உரிமையை விட்டுகொடுத்து இந்தப் போரிலிருந்து பின்வாங்கிவிடலாம என்று நினைத்தபோதெல்லாம்  போரைத்  தவிர்க்கமுடியாத காரணம் என்று எப்போதும் இருந்தது திரௌபதியின் வஞ்சினம்தான்.  அவள் துச்சாதனன், துரியோதனன் குருதி பூசி குழல் முடிப்பேன் என்று எடுத்த சூளுறையே பாண்டவப்படையின்  போர் எழுச்சிக்கு உந்துகோலாக இருந்து வந்திருக்கிறது. துரியோதனனை  துச்சாதனனைக் கொல்வது என்பது போரின் முடிவில் மட்டுமே நிகழக்கூடியது.   ஏனென்றால் துரியோதனன் பக்கம் நிற்பவர் அனைவரையும் வீழ்த்தியபிறகே அவர்களை போரில் கொல்லமுடியும்.  அதுவரை நடக்கும் போரில் பாண்டவர் தரப்பிலும் பலர் கொல்லப்படுவார்கள்.  இப்படியில்லாமல் இப்போர் வேறுவகையில் நடந்திருக்கமுடியாது என்ற நிலையை உருவாக்கியது திரௌபதியின் வஞ்சினம் மட்டுமே என்பது உண்மையென்றே தோன்றுகிறது.  ஆகவே அர்ச்சுனனின் கூற்றாக வெளிப்படும் இவ்வார்த்தைகள்  “அவளுடைய வஞ்சத்தால் அழிந்தது குருகுலம். பாரதவர்ஷமே குருதியால் மூடியது"  மிகச்சரியானது என்றே தோன்றுகிறது.

    ஆனால் தனிப்பட்ட ஒரு பெண்ணின் வஞ்சினத்திற்காக ஏன்  இவ்வளவு பெரிய போர் என்று ஒருவர் வினவத் தோன்றும். ஆனால் ஒரு அறம் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள இப்படி யாராவது ஒருவர் வஞ்சினத்தையே தன் ஆயுதமாகக் கொள்ளும். அவளுக்கு இழைக்கப்பட்ட அவமானம் அவள் பெண்மைக்கு இழைக்கப்பட்டது.  அவளை ஒரு நபர் என்று செய்த அவமதிப்பல்ல. அதாவது அவளை குற்றமிழைத்தவள் என்று கூறி   தண்டிக்க வேண்டுமென்று கருதினால் அவளை சிறையிலிட வேண்டும்  அல்லது  இன்னும் அதிக தண்டனையென்றால்  கொலைத்தண்டனை விதித்திருக்க வேண்டும். மாறாக தண்டனையென  அவமதிப்புதான் செய்ய வேன்டுமென்றால்  அவளை பணிப்பென் என்று சொல்லி அடிமையாக்கியிருக்க வேண்டும்.  ஆனால் துரியோதனன் அவையில் நடந்தது பெண்மையை அவமதிப்பது.  பெண்மைக்கு எதிராக ஆன்மை நிகழ்த்திய குற்றம்.    பாரத நாட்டின் ஒட்டுமொத்த பெண்கள் இதுவரையிலும் இனிமேலும் இவ்வாறு தாம் பெண்  என்ற காரணத்திற்காக மட்டுமே அடையும் அவமதிப்புக்கு ஒரு அடையாளமாக  இது இருந்தது. இதற்காக  சொல்லப்பட்ட  வஞ்சினத்தை  வெண்முரசு திரௌபதியின் சொற்களாக  வெளிப்படுவதாக கூறவில்லை. அவள் தோழி  மாயையின் வார்த்தைகளாக உரைக்கப்படுகிறது,  அதற்கு காரணம்  இது தனிப்பட்ட  பெண்ணான  திரௌபதியின் வஞ்சினம் அல்ல என்பதுதான்.  இது திரௌபதியின் உள்ளுறையும் பெண்மை என்ற தெய்வத்தின் வஞ்சினம். எவ்வகையிலும் தான் ஆண் என்ற காரணத்தினால் ஒரு பெண்ணை அவள் பெண்மையை அவமதிப்பதன் மூலம் தண்டிபேன் என்பவரைக் கொல்வேன் என்று அத்தெய்வத்தின் கையில்   ஏந்தியிருக்கும்  கொடுவாலென   அமைவது இந்த வஞ்சினம்.  மனித குலத்தை இப்புவியில் நிலை நிறுத்தி பெருகி வாழவைக்கும் பேரறத்தின் வஞ்சினம் இது.  
 
       ஆகவே அந்த வஞ்சினத்தை தவறென்று யார் ஒருவராலும் கூறமுடியாது. ஆனால் இப்போது மீண்டும் அஸ்வத்தாமனை வீழ்த்தி அவன் நுதல் மணியை கொணரவேண்டும் என அவள் உரைக்கும் வஞ்சினம் அர்ச்சுனனுக்கு சலிப்பையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது.  மீண்டும் மீண்டும் வஞ்சினம் என்ற தீயில் தாமும் கருகி மற்றவரையும் கருக வைப்பது எவ்வகையில் சரியானது என்று அவன் கேட்கிறான்.  "இன்னும் வஞ்சம் கொண்டிருக்கிறாளா? இனி விண்ணுலகை அழிக்கவேண்டுமா அவளுக்கு? மூன்று தேவர்களும் போரிட்டு மறையவேண்டுமா?”    தம் பிள்ளைகளை பலிகொடுக்காத  பெண்  என்பவளே  இல்லை. காந்தாரி மற்றும் அவள் சகோதரிகளின் நூறு பிள்ளைகளை, அவர்களின் மருமகள்களின் ஆயிரத்துக்கு  மேலான பிள்ளைகளை பாண்டவர்கள் கொன்றிருக்கிறார்கள்.  மேலும் முகமறியாத பல்லாயிரம் தாய்மார்களின் மகன்கள் இப்போர்க்களத்தில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால் திரௌபதி  தம் பிள்ளைகளைக் கொன்றவனான அஸ்வத்தாமன் மேல் மட்டும் இப்போது வஞ்சினம் உரைப்பது அதீதம் இல்லையா?  போர்க்களம் செல்ல அனுமதிக்கும் ஒரு தாய் அவன் போர்க்களத்தில் கொல்லப்பட நேரிடுமென  என்று அறிந்துதானே அனுப்புகிறாள். தன் மகன் கொல்லப்பட்டல் அவள் துயரம் அடைவது இயல்பு. ஆனால்  அவள் அதற்காக அம்மகனைப் போர்க்களத்தில் கொன்றவன்மேல்  சீற்றம் கொண்டு வஞ்சினம் உரைப்பது எப்படி முறையாகும்? 

    ஆனால் உபபாண்டவர்கள் போர்க்களத்தில் கொல்லப்படவில்லை.  அவர்களை போருக்கு அழைப்பு விடுத்து போரிடவைத்து கொல்லப்படவில்லை.  போரில் காயம்பட்டு  போர் முடிந்ததென எண்ணி போர்க்களத்தை விட்டு அகன்று துயின்றுகொண்டிருக்கும் போது அவர்கள்  திடீரென்று தாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள்.  அவர்கள்  கொல்லப்படுவது போரின் முடிவை மாற்றப்போவதில்லை. அவர்கள் கொல்லப்படுவதும் அதற்கான முறையும்  எந்த அறத்தின்படியும் சரியென ஏற்றுக்கொள்ள முடியாதது. அவர்கள் மிகக் கீழ்மையான வகையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.  இதைவிட கீழான ஒரு செய்கையை ஒருவன் செய்ய முடியும் என்று தெரியவில்லை.  இதைச் செய்தவனான அஸ்வத்தாமன் ஒரு பெரு வீரன். அவன் அறம் பேணுவான் என்று என்று கருதியே, பெரும் வில்லாற்றலும், தெய்வீக அஸ்திரங்களும் வழங்கப்பட்டிருப்பவன்.  ஒரு கொள்ளையன் கூட செய்யத் தயங்கும் ஒரு கொடிய செயலை அவன் செய்திருக்கிறான்.  துரியோதனனின் ஆவி அவனைச் செய்யசொல்லியது என்பது போன்ற ஒரு கருத்து வெண்முரசில் வந்திருக்கிறது.   துரியோதனன் கொண்டிருந்த வஞ்சத்தை அஸ்வத்தாமன் தனதாக்கிக்கொள்கிறான் என்பதே அதன் பொருள்.  ஆனால் துரியோதனன் தம் பிள்ளைகளைப் போல்   உபபாண்டவர்களை வளர்த்திருக்கிறான். போரில் அவன் அடைந்த அத்தனை இழப்புகளுக்கிடையேயும் உப பாண்டவர்கள்  கொல்லப்படுவதை அவன் தவிர்த்தான்.  ஆகவே துரியோதனன் ஒருபோதும் ஒத்துக்கொள்ளாத ஒரு செயலை துரியோதனனுக்காக செய்வதாக நினைத்து செய்வது துரியோதனனையும் வருத்தத்துக்கு ஆட்படுத்துவதாகும்.  துரியோதனன் வானுலகில் அஸ்வத்தாமன் செயல் கண்டு கதறி அழுதிருப்பான். ஒருவேளை இப்போதுதான் தான் கொண்டிருந்த வஞ்சத்தின் பாதிப்பை முழுதுமாக உணர்ந்திருப்பான் என்று நினைக்கிறேன்.   அஸ்வத்தாமன் பாண்டவர்கள் என நினைத்து அறியாமல் உப பாண்டவர்களைக் கொன்று விட்டான் என்று ஒருவர் சொல்லலாம். இது அதைவிட மேலும் மோசமானது.  தான் யாரைக்கொல்கிறோம் என்பதைக்கூட  ஒருவன் சரிபார்க்காமல்  கொல்பவன்  எப்படி ஒரு வீரனென இருக்க தகுதிவாய்ந்தவன்?  வஞ்சத்தின் காரணமாக, அஸ்வத்தாமன் தான் பெரு வீரன் என்ற நிலையிலிருந்து  மட்டுமல்லாமல் ஒரு மனிதன் என்ற நிலையிலிருந்தும் கீழிறங்கிவிட்டான்.   உண்மையில்  அரசாளும் பொறுப்பை அடைந்திருக்கும் பாண்டவர்கள்,  அஸ்வத்தாமன் செய்த பெருங்குற்றத்திற்கு தேடிப்பிடித்து தண்டிக்கவேண்டிய கடமை உடையவர்கள்.
   
         அஸ்வத்தாமன் தண்டிக்கபட வேண்டியவ்னாக இருந்தாலும் அவனை தண்டிப்பதற்கான வஞ்சினத்தை ஏன் திரௌபதி உரைக்க வேண்டும்.  அனைவரும் பெருந்துயரத்தில் இருக்கையில் அதிலிருந்து இன்னும் மீளாத நிலையில் இந்த  வஞ்சினம் அவரவர் இழந்திருக்கும் மனநிம்மதியை மேலும் குலைக்காதா?  ஆனால் வஞ்சினம் என்பது சிந்தித்து எடுப்பது அல்ல.  தன்நிலை மறந்து எடுக்கும் சூளுறை.  ஆனால் உபபாண்டவர்களின் தந்தையரான பாண்டவர்கள் பெருவீரர்கள் கொள்ளாத சீற்றத்தை ஏன் திரௌபதிகொள்கிறாள்?
      
          ஒரு தாய் அவள்  மகன் வளர்ந்து பெரியவனான பிறகு அவனை தான் பேணிக்காக்கவேண்டிய குழந்தையென  கருத முடியாது.  அதே வளர்ந்த மகன் நோயுற்று பிறர் ஆதரவை எதிர்பார்த்து படுக்கையில் இருப்பவனை  மீண்டும்  தன்னை மட்டுமே நம்பி இருக்கும்  சிறு குழவி என அவன் தாய்க்கு தோன்றுவான்.    உபபாண்டவர்கள்  போர்ர்காயங்களால் நோயுற்று படுக்கையில் இருக்கிறார்கள். அவர்களைக் காண வரும் திரௌபதியிடம் தாய்மை பெருகி நிற்கும் தருணம். அப்போது அவர்கள் அஸ்வத்தாமனால் எவ்வித காரணமுமின்றி கொல்லப்படுகையில் அவள் உள்ளிருந்து எழும் தாய்மையின்சீற்றமே இந்த வஞ்சினம்.   அவன் தெய்வீக அஸ்திரங்களைப் பெற்றவன்,  வெல்ல இயலாதவன் என்ற தர்க்கம் எல்லாம் சீற்றம் கொண்டு எழுந்த அந்த தாய்மை உணர்வு அறிவதில்லை.   இந்த வஞ்சினத்தையும் திரௌபதி என்ற அரசி எடுக்கவில்லை அது அவளுள்ளிருந்து எழுந்த  தாய்மையின் தெய்வம் எடுத்தது.    

தண்டபாணி துரைவேல்