Saturday, November 9, 2019

நீர்ச்சுடர் - பாண்டவர்களை மீட்ட திருதராஷ்டிரர்



    பாண்டவர்கள் பெருமிதமில்லாத ஒரு வெற்றியை அடைந்திருக்கிறார்கள். அதன் காரண்மாக அவர்கள் அடைந்திருக்கும் துயரம் அவர்கள் தோல்வியடைந்திருந்தால்கூட பெற்றிருக்கமாட்டார்கள்.   அவர்கள் தம் பிள்ளைகள் அனைவரையும் இழந்துவிட்டிருக்கின்றனர்.  தம்முடன் போர் புரிந்த நட்பு மன்னர்கள் மற்றூம் பெரு வீரர்களில் அநேகமாக அனைவரையும் இழந்துவிட்டிருக்கிறார்கள்.  அடைந்த வெற்றியின் பலனை யாருக்கு தருவார்களோ அவர்களையும்,  எவருடன் பகிர்ந்துகொள்வார்களோ அவர்களையும் ஒருசேர  இழந்து விட்டிருக்கின்றனர்.    இதனால்  அவர்கள் பெருந்துயரம் அடைந்திருக்கிறார்கள்.   

    அத்துடன் இதுவரை அவர்கள் எப்போதும் போற்றிவந்த தமக்கான அறங்களை இப்போரில் இழந்துவிட்டனர்.  எந்த அறங்களின் காரணமாக அவர்கள் பெருமையும் புகழும் பெற்றிருந்தனரோ அவை அனைத்தும் இழந்து வெட்கி தலைகுனிந்து நிற்கின்றனர்.  அறமல்லாத ஆற்றல் என்பது அசுரர்களுக்குரியது.  மனிதத்திலிருந்து தாம் கீழிறங்கிவிட்டதாக அவர்கள் நினைக்கின்றனர். மற்றவர்களை நேர் கொண்டு காணஇயலாது அவர்கள் தலைகள் கவிழ்ந்து உள்ளன. அவர்கள் பெரும் அவமானத்தை அடைந்திருப்பதாக உணர்கிறார்கள்.     

    அவர்கள் இப்போரில்  கொன்றவர்கள்,  அவர்கள் குடும்பத்தின் மூத்த பிதாமகர்களை  அவர்களுக்கு   அண்ணன் தம்பி என அழைக்கும்  உறவு கொண்டவர்களை, பேணிப் பாதுகாத்து வளர்க்கக் கடமைப்பட்டிருக்கும் உறவினர் பிள்ளைகளை.   இறந்தவர்கள் தாம் இறந்தமையாலேயே அவர்களின் பிழைகளுக்கான கசடுகள் அழிந்து புகழடைந்துவிட்டனர். அவர்களுக்கு இனி  எப்பழிகளும் இல்லை.  ஆனால் உயிருடன் இருப்பவர்கள் மேல்வந்து சேர்ந்திருக்கும்  பழியின் எடை அவர்களி கூனிக் குறுக வைத்திருக்கிறது.   அப்படிக் கொல்லப்பட்டவர்களின் அன்னையர் , தந்தையர், மனைவிகள் முன்பு சென்று நிற்கவேண்டிய கணம் அவர்கள் வாழ்நாளிலேயே மிகக் கொடிதான ஒன்றென  அவர்கள் எதிர்நோக்குகிறார்கள்.    இத் தருணத்தை எதிர்கொள்வதை விட நாம் களத்தில் உயிர் துறந்திருக்கலாம என எண்ணி இருப்பார்கள் என்று தோன்றுகிறது.

   ஒருவர் துயரங்களிலிருந்து விடுபடுவது சற்று கால தாமதமானலும்அது தானாகவே   நடைபெற்றுவிடும். துயரம் காலத்தின் ஓட்டத்தில்  மெல்ல மெல்ல பனிக்கட்டி உருகுவதைபோல  உருகி கரைந்துவிடும்.  அதைபோலல்லாமல் பெற்ற அவமானங்கள் சீக்கிரம் மறந்துவிடாது. ஆனாலும் அவர்கள் அதற்கு ஈடுகட்டும் விதமாக  பல  சிறந்த செய்கைகளைச்  செய்வதன்மூலம் அந்த அவமானங்கள் மறந்துபோகப்படும்.  வரலாற்றில் ஒருவர் இறுதியாக அடைந்தது மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் என்பதால், ஒரு பெருஞ் செயலைச் செய்து அல்லது பெரிய தியாகத்தைச் செய்து தம் புகழை மீட்டுக்கொள்ளலாம். 

          ஆனால் கொலைப்பழியை சுமந்து கொலையுண்டவர் குடும்பத்தின் முன் நிற்கும்  அவர்கள் இந்த  குற்றஉணர்விலிருந்து விடுபடுதல் மிகக் கடினமானது.   ஒரு பெரு வீரனின் வாளை எதிர்கொள்வதை விட ஒரு அபலையின் கண்ணீரை எதிர்கொள்வது மிகக் கடினமானது.  வாள் உடலை வெட்டி காயப்படுத்தலாம். ஆனால் தாம் தவறிழைத்தாக கருதி பாதிக்கப்பட்ட ஒருவர் வடிக்கும் கண்ணீர் அவர்  உள்ளத்தை கிழிப்பது.  அதை மனிதத் தன்மையுடைய எவர் ஒருவரும் அனுபவிப்பார்கள்.  தன்னை அசுரன் என ஆக்கிக்கொள்ளாமல், ஒருவனால் இக்கண்ணீரை அலட்சியப்படுத்தி கடந்து சென்று விட முடியாது.  இப்படி பாதிக்கப்பட்டவர்கள் தம் உறவாக, தம்முடன் உடன் வாழ்பவராக அமைந்து விடும்போது இது  அளிக்கும் மனத்துயர் மிகப் பெரிது.   பாண்டவர்களின் உள்ளத்தை அவர்கள் பிள்ளைத்துயரைவிட, அவர்கள் அடைந்த அவமானங்களைவிட அதிகம் பாதிப்பது இந்தக் குற்ற உணர்வே.  அவர்கள் தம்மீது இப்போர் திணிக்கப்பட்டது. போரில் கொல்வது தவிர்க்கமுடியாதது. அவர்களைக்  கொல்லவில்லையென்றால் நாங்கள் கொல்லப்பட்டிருப்போம். இப்போரில் அறம் எங்கள் பக்கம் இருக்கிறது போன்ற எவ்வித  தர்கங்களும் இங்கு உதவாது. ஏனென்றால் எதிர் நிற்பவர்கள் அவர்களுடன் தகிக்கவில்லை. அவர்களுடைய ஒரே தர்க்கம் அவர்கள் கண்ணீர்.   அதற்கு எப்படி ஒருவரால் பதில் சொல்ல முடியும்?

     பாண்டவர்கள் இவ்வாறு எதிர்கொள்பவரின் பிரதிநிதியாக திருதராஷ்டிரரும், காந்தாரியும் இருக்கின்றனர்.  அவர்களின் நூறு பிள்ளைகளை, ஆயிரம் பெயர் மைந்தர்களை பாண்டவர்கள் கொன்றிருக்கிறார்கள்.   ஆகவே அவர்களை பெருந்தயக்கத்துடன் பாண்டவர்கள் சந்திக்கச் செல்கிறார்கள்.  ஆனால் திருதராஷ்டிரரும் காந்தாரியும் தம் பேருள்ளதின் காரணமாக  அவர்களை  பொறுத்துக்கொள்கிறார்கள்.  தன்னை மீறி திருதராஷ்டிரர் முதலில் பீமனை கொல்ல முயல்கிறார். பின்னர் அதற்காக பெரிதாக வருந்துகிறார்.  பீமனை கொல்ல முயன்றதை தண்டனையாகவும் அதற்காக  அவர்  அடையும் வருத்தத்தை  மன்னிப்பெனவும் பாண்டவர்கள் உணர்கிறார்கள்.     பாண்டவர்கள் பெரிதும் எதிர்பார்த்த பாவ மன்னிப்பு அவர்களுக்கு அப்போது  கிடைத்துவிடுகிறது.  அதன் மூலம் இது நாள்  வரை குற்ற உணர்வின் காரணமாக உழன்றுகொண்டிருந்த  பெரும் உளச்சிக்கலில் இருந்து பாண்டவர்கள்  மீண்டுவிடுகின்றனர்.  அவர்கள் உள்ளம் இயல்பு நிலைக்கு திரும்பிவிடுகிறது.  ஒருவர் முகம்பார்த்து ஒருவர் இயல்பாக பேச முடிகிறது. புன்னகைக்க முடிகிறது. உண்ணும் அதிமதுரத்தின்  இனிப்பை உணர முடிகிறது.  திருதராஷ்டிரர்  இதுவரை பாண்டவர்களுக்காக செய்த எதைவிடவும் சிறந்த உதவியை  செய்திருக்கிறார். என்று நான் கருதுகிறேன்

தண்டபாணி துரைவேல்