Wednesday, October 22, 2014

பீமனின் கசப்பு




ஜெ,

வண்ணக்கடல் வாசித்தேன். கர்ணனை பீமன் அவமானப்படுத்தும் இடத்தை வாசித்தபோது அதிர்வு இருந்துகொண்டே இருந்தது. என்ன ஆயிற்று இவனுக்கு என்று நினைத்துக்கொண்டே வாசித்தேன்

அதற்கு காரணங்கள் தெளிவாக நாவலில் உள்ளன. கர்ணனின் தோற்றமும் அவனுக்கும் குந்திக்குமான நடத்தைகளும் அந்த உறவு பற்றி அவனுக்குச் சொல்லியிருக்கலாம். அதோடு அந்தக்காலத்தில் அரண்மனை ரகசியங்கள் ஊழியர்கள் பேசிக்கொள்வதும் சாதாரணம்

ஆனால் அவன் கடுமையாக நடந்துகொள்ள அதுமட்டும் காரணமல்ல என்ற எண்ணமும் வந்தது. அதாவது அவனுடைய குரூரம் ஒரு மனக்கசப்பு. அவனுடைய எல்லா பேச்சிலும் நடத்தையிலும் ஒரு கசப்பு நக்கல் நையாண்டி இருந்துகொண்டே இருக்கிறது

அவன் பொதுவாக அரசியல் அரண்மனை வாழ்க்கை எல்லாவற்றிலும் இருந்து ஒதுங்கியே இருக்கிறான். வரும்போது நக்கலாக பேசுகிறான். அந்த மனக்கசப்பின் காரணம் என்ன?

அது அவனுடைய குணமே இல்லை. அவன் மிக எளிய நல்ல  சிருவனாகவே இருக்கிறான். அவன் மாரியது எங்கே? அவன் அந்த கங்கைக்குள் விழுந்து மூழ்கிப்போய் விஷத்தைக்குடிப்பதுதான் மாற்றத்துக்கான காரணம் என்று நினைக்கிரேன்

அந்தமாதிரி ஒரு அனுபவம் ஒருவனை மாற்றிவிடும். மிக பெரிய நம்பிக்கைத் துரோகம். எவ்வளவு திறந்த மனதுடன் அவன் துரியோதனாதிகளுடன் சாப்பிட போய் உட்கார்கிறான். துரியோதனனை அவன் அவ்வளவு நேசிக்கிறான். அவனுடன் சேர்துவிடவேண்டுமென விரும்புகிறான். ஆவான் துரோகம்

அவன் சாப்பிடும் அந்த விஷம் குறியீடு. அவன் போன அந்த ஆழம் சைக்காலஜிக்கலான ஆழம். அங்கே போய் அதைக்குடிக்கிறது மீண்டு வரும்போது அவனைக் கசப்பாக ஆக்கிவிடுகிறது

அதாவது அவனுக்குள் எப்போதும் அந்த விஷம் இருந்துகொண்டே இருக்கிறது.இதை நான் பலரிடம் பார்த்திருக்கிறேன், அவர்களின்  வாழ்க்கையில் நடந்த ஏதோ ஒன்று ஒரு கசப்பாக படிந்துவிடுகிறது. ஆழத்துக்குப்போய் விஷத்தைக் குடித்துவிடுகிறார்கல். அதன்பிறகு அவர்கலுடைய மனதில் அந்த விஷக்கசப்பு இருந்தபடியே இருக்கும்

அந்த விஷயம் ஒரு அவமானமோ துரோகமோ இழப்போ ஆக இருக்கும். தொழிலில் பெரிய நஷ்டம் வந்தவர்கள், பங்காளிகளால் துரோகம் செய்யப்பட்டவர்கள், குடும்பத்தில் துரோகத்தைபபர்த்தவர்கள் எல்லாரும் இந்த விஷத்தைச் சாப்பிட்டவர்கள்தான்

பீமனை இப்படி புரிந்துகொள்ளும்போது படிப்படியாக அவனுடைய கசப்பு வளர்ந்தபடியே போவதைக் காணமுடிகிறது

ஜெயராமன்