Tuesday, May 2, 2017

தொடராக






ஜெ

மாமலரில் யயாதியின் கதை மட்டுமே ஒரு தனி நாவல் அளவுக்கு விரிந்துவிட்டது என நினைக்கிறேன். தேவயானியின் மூதாதையரின் சரடு ஒன்று. யயாதியின் மூதாதையரின் சரடு ஒன்று. இரண்டும் வந்து சந்தித்து க்கொள்ளும் இடம் நாவலின் முடிவு. நாவலுக்குள் ஒரு நாவல். நாவலே முடிந்துவிட்டது என்னும் எண்ணம் வந்தது. மேலும் நீளுமா என்று தெரியவில்லை.

தொடராக வாசிக்கையில் உள்ள சிக்கல் என்னவென்றால் நாவல் முடியும்போது அதுவரைக்கும் வந்தவற்றைத் தொகுத்துக்கொள்ளமுடியவில்லை என்பதுதான். தேவயானியின் கதையை இந்திராணியில் இருந்து ஆரம்பிக்கவேண்டும். அதேபோல யயாதியின் கதையை சந்திரனில் இருந்து ஆரம்பிக்கவேண்டும். அந்த பின்னல் மிகவும் பெரியது. அதன் இடைவெளிகளை நிரப்பிக்கொண்டு ஒற்றைக்கதையாக ஆக்குவது வாசகனின் கடமை. அதைச்செய்வது எளிய வேலை அல்ல என நினைக்கிறேன்

இந்திராணி – ஜெயந்தி – தேவயானி
சந்திரன் – புதன் – புரூரவஸ்- ஆயுஸ்- நகுஷன் –யயாதி-பூரு
தாரை- இளை - ஊர்வசி- அசோகசுந்தரி- தேவயானி

இத்தனை தலைமுறைகளில் குணாதிசயங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்துள்ளன. சந்திரனில் இருந்தே பாலியல் மீறலும் அதன்பிரச்சினைகளும் தொடர்ந்துவருகின்றன. ஒரே குணாதிசயம் தொடர்ச்சியாக பரிணாமம் அடைகிறதா என்ற எண்ணம் ஏற்பட்டது.  ஒவ்வொருவரும் காமத்தை எப்படிப்பார்க்கிறார்கள் என்றுபார்த்து அதனடிப்படையில் ஒரு பொதுவான சித்திரத்தை உருவாக்கவேண்டும். அது மிகப்பெரிய வாசகப்பணி. பெரிய சர்ச்சை வழியாகத்தான் அதைச்செய்யமுடியுமென நினைக்கிறேன்


மகாதேவன்