Saturday, July 25, 2015

இரு கேள்விகள்


நான் பொதுவாக கவனித்ததில் நாம் சில சமயம் கதாப்பாத்திரங்களின் சிக்கலை உள்வாக்கி கொள்ளாமல் ஒருவாறு ஒற்றைபடையாக்கிவிடுகிறோமோ என்று தோன்றியது. எல்லோரும் நல்லவர்கள், நல்லதுக்காகவே செய்கிறார்கள் என்று சிந்திக்க ஆரம்பிக்கிறோம்.

இப்படிப்பட்ட பார்வை பொதுவாக அம்பை, சகுனி, திருதராஷ்டிரன், துரியோதனன் போன்ற கதாப்பாத்திரங்கள் மேல் வைக்கப்படுகிறது.  இதற்கு ஏதோ ஒரு வகையில் வெண்முரசு கதை அமைப்பும் காரணமாகிவிடுகிறது. ஏனெனில் வெண்முரசின் எதிர்மறை கதாப்பாத்திரங்கள் யாரும் பிறவியிலேயே எதிர்மறை தன்மையுடன் இருப்பதில்லை - பிரயாகை வரை நான் படித்ததில். அந்த கதைமாந்தர்களுக்கு வாழ்வின் ஏதோ ஒரு தருணத்தில் நடக்கும் ஒரு அவலம் அவர்களை உருமாற்றுகிறது.

இன்னொன்று, ஏதோ ஒருவகையில் பாத்திரங்கள் நம்மை தொடக்கத்தில் கவர்ந்துவிடுகிறது. அந்த பாத்திரங்கள் ஒரு எதிர்மறை தன்மையை பெற்று கொள்ளும் போது அதை அப்படி பார்க்க நம்மால் முடிவதில்லை. ஆனால் இந்த கதாப்பாத்திரங்களின் மாற்றத்திற்கான ஆதார காரணங்களை கண்டறிய வேண்டும். அப்படி ஆராய்வதின் மூலம் மானுடத்தின் உன்மைகளை, தன்மைகளை நம்மால் இந்த படைப்பிலிருந்து எடுக்கமுடியும்.
----

பீஷ்மரின் நிராகரிப்பு அம்பையிடம் அம்பை என்ற வகையில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தால் விளைவு இப்படியிருந்திருக்காது. ஆனால் அந்த நிராகரிப்பு அம்பை என்றவளையும் தாண்டி அவளிள் ஆழத்தில் உறையும் அந்த பெண் எனும் உயிர் சக்தியை சென்று தாக்குகிறது. அதை விளைவாக இந்த வஞ்சம் விளைகிறது.

சுநீதிக்குள் இருந்து அந்த தாய்மை விஸ்வரூபம் எடுப்பது போல், இங்கு அம்பைக்குள்ளிருந்த அந்த பெண் என்ற பெரும் சக்தி விஸ்வரூபம் எடுக்கிறது. அவளது அந்த பெரும் கோபம் பாலையின் பெருந்தகிப்பு. ஆணின் அகந்தையை விட பெண்னின் அகந்தை அதிகமோ என்று நினைக்கவைப்பது அது. ஏனெனில் அந்த அகங்காரம் ஒன்று நான்காகி நான்கு ஒரு பெரும் பெருக்காகும் அகங்காரம். அந்த அகங்காரத்தை நசுக்கும் போது அதிலிருந்து முளைக்க இருந்த விதைகள் அனைத்தும் பெருவடிவம் எடுக்கும் பேயாகிறது.

ஹரீஷ்