Sunday, July 26, 2015

குறுக்கல்

அன்புள்ள அருணாச்சலம்,

அம்பை சார்ந்த கருத்து அவரவர் கற்பனையை பொறுத்தது. அதை பகிர்ந்து கொள்வது மட்டுமே முடியும். அதை இருவரும் செய்துவிட்டோம்.

கதாப்பாத்திரங்களை உன்னதமாக்குகிறோம் என்று சொல்லவில்லை எளிமைபடுத்துகிறோம் என்று தான் சொன்னேன். உன்னதமாக்குதல் என்பது ஒரு குறிப்பிட்ட உணர்ச்சியை அல்லது கருத்தை அதன் உச்சத்துக்கு கொண்டு வைப்பது. உன்மையில் வெண்முரசு சில கதாப்பாத்திரங்களை உன்னதமாக்குகிறது, ராதை, அம்பை, துருபதனின் வஞ்சம் போன்றவைகளை அதன் உச்சநிலைக்கு எடுத்து செல்கிறது. ஆனால் கதாப்பாத்திரங்களை ஒற்றைப்படையாக பார்த்தால் நாம் அதை குறுக்கிகொள்கிறோம்.

மேலும் வெண்முரசு அனைவரையும் நல்லவராகவோ, கெட்டவராகவோ காட்டுகிறது என்று நான் சொல்லவில்லை. முக்கிய கதாப்பாத்திரங்கள் பிறப்பிலேயே கெட்டவர்களாக சித்தரிக்கப்படுவதில்லை. அவர்கள் வாழ்வில் ஒரு நிலையில் உருமாற்றம் அடைகிறார்கள். அதற்கான காரணம் அங்கு தெளிவாக கூறப்படுகிறது என்று தான் சொன்னேன். கதாப்பாத்திரங்களை எளிமையாக காட்டுவதில்லை சிக்கல் நிறைந்தவர்களாகவே காட்டுகிறது. கர்ணனை நிராகரிக்கும் குந்தியும், அவனை அடித்து உதைக்கும் பீமனும் ஏன் அப்படி செய்தார்கள் என்ற கேள்வி பெரிதாய் நம் முன் இருக்கிறது. பீமனின், குந்தியின் இயல்புக்கு எதிராகவே இந்த செயல்பாடு இருக்கிறது.

//வெண்முரசு உணர்த்த முயல்வது ஒன்றே ஒன்று தான். மானுடம் இனிமையானது. //
இப்படி குறுக்கிகொள்வது பற்றி தான் ஜெ அன்மைய பல உரைகளில் பேசியிருக்கிறார் இது வெண்முரசின் திரண்ட கருத்தாக எடுத்து வைக்கிறீர்கள். இதற்கும் நீலத்தின் ராதைக்கும் என்ன சம்பந்தம்? தருமனின் குழப்பங்கலுக்கும், அர்ஜுனனின் தேடலுக்கும், சகுனியின் வஞ்சத்துக்கும், கர்ணனின் அவலங்களுக்கும் என்ன சம்பந்தம்? இது நீங்கள் நாவலில் கண்டடைந்த முழுமை பார்வையாக இருக்கலாம். அது அகவயமானது. அதை புறவயமாக வெண்முரசுடன் தொர்ப்பு படுத்தமுடியாது.

ஹரீஷ்