Friday, November 7, 2014

தருமம் வாழும் தருணங்கள்



அன்பு ஆசிரியருக்கு,
 
நேற்றைய பிரயாகை-16, ஒரு அற்புதம். தருமன் என் பிரியம் என்று முன்பு ஒருமுறை கடிதத்தில் தருமன் அறிமுகத்தின் பொழுது(பாண்டு இறக்கும் தருணம்) குறிப்பிடிருந்தேன். சமீப பிரயாகை பகுதிகளில் அர்ஜுனனும், பீமனும், தருமனை அவமதிக்கும் பகுதிகளில் அவர்கள் மீது வெறுப்பை உணர்ந்தேன்.

இன்று பீமனின் சொற்களும்,

"இன்று என் தமையன் இச்சபையில் எழுந்து என்னையும் தானென்றே உணர்ந்து சற்றும் ஐயமின்றி சொன்ன அச்சொல் எனக்கு இம்மண்ணில் தெய்வங்கள் அளித்த வரம். அவரது எண்ணமும் சொல்லும் இப்பிறவி முழுக்க என்னை கட்டுப்படுத்தும். அவரது விருப்பமேதும் எனக்கு ஆணையே. அதை மீற என் அன்னையோ நான் வழிபடும் தெய்வமோ எனக்கு ஆணையிடுவாரென்றால் அவர் முன் என் கழுத்தை அறுத்துவிழுவேன். அறிக என்னை ஆளும் கொடுங்காற்றுகள்”
அர்ஜுனின் சொற்களும்,

“அறமெனப்படுவதும் நெறியெனப்படுவதும் இறையெனப்படுவதும் என் தமையனே. பிறந்து நெறிநின்று மறையும் இச்சிறு வாழ்வில் எங்கும் எவரிடமும் கடன் என பிறிதேதும் எனக்கில்லை. அறிக என் வில்!”
கண்களில் நீர்மல்க வாசித்திருந்தேன். 
எல்லாவற்றையும் விட, ஏற்கனவே சிறுமை என்னாத திருதராஸ்டிரர் மேல் கொண்டிருந்த மதிப்பு ஆயிரம் ஆயிரம் மடங்கு கூடியது.

"என் பொருட்டு ஒருகணமேனும் என் இளையோன் துயர்கொள்வான் என்றால் இங்கே மானுடனாக நான் வாழ்ந்துதான் என்ன பயன்? இந்தப் பேருடலும் தலையும் மண்ணிலிருப்பதுபோல இழிவென்ன?”

"இம்மண்ணின் அனைத்து உரிமையும் அவனுக்கே என்று சொல்லி மண்ணுள்ளவரை அவன் குலம்வாழ்கவென்று வாழ்த்தி அளித்த என் அன்புக்கொடை இம்மணிமுடி. என் சிறுவனுக்களித்த கொடையில் ஒரு முன்விதியைச் சேர்க்கும் அற்பனா நான்?"
கண்களில் வழியும் நீரை கட்டுபடுத்த முடியாதவனாக வாசித்திருந்தேன். என்ன ஒரு பகுதியை எழுதி விட்டீர்கள் நீங்கள்!!!!! ஒவ்வொரு வார்த்தைகளும், ஒவ்வொருவரின் சொற்களும்.. மனம் கனத்து, நான் வாழ்வது எத்துனை சிறுமையில் என்று எண்ணி கைகூப்பி அமர்ந்து இருந்தேன்.
வெண்முரசு குறித்து கருத்து தெரிவித்து புகழ்ந்து இருப்பவர்கள் எல்லோரும் வெண்முரசின் ஒரு சிறு துளியை கூட படித்து உணராதவர்கள் என்றே சொல்லுவேன். பேசியவர்கள் அனைவரும் தேன் கடலின் ஒரு துளி ரசித்து உணராதவர்கள். வெறும் வார்த்தை புகழ்ச்சிகள்! இந்த எளிய வாசகர்களை கேளுங்கள்! கண்ணீர்மல்க கைகூப்பி அனுதினமும் வென்முரசை எங்கள் வாழ்வோடு இணைத்து உணரும் எங்களை கேளுங்கள்! 
தமிழ் உள்ளவரை உங்கள் புகழ் வாழும்!
தாழ்மையுடன்,
சரவணகுமார் 
துபாய்.