அன்புள்ள ஜெயமோகன்,
இன்றைய வெண்முரசு அத்தியாயத்தை படித்த போது சட்டென இன்னொரு கேள்விக்கு விடை கிடைத்தது. 'பன்னிரு கால்களுடன் விரையும்புரவியில் அமர்ந்திருக்கும் நாங்கள் காலமின்மையை உணர்வதெப்படி?' என்ற வரி படித்தவுடன் சட்டென ஒரு மின்னதிர்வு.
ஈராறு கால்கொண்டெழும் படித்த போது உங்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன் . அதில் ஒரு விஷயம் விட்டுப் போனது. உங்களுடையஎல்லா படைப்புகளையும் படித்தவுடன் முதலில் நான் செய்வது அப்படைப்பை அதன் தலைப்புடன் ஒப்பிட்டுக் கொள்வதுதான் . படைப்பின்மையம் எப்பொதும் அதன் தலைப்பை ஒட்டியே இருக்கும் . அதன் சாரத்தை தலைப்புடன் தொடர்பு படுத்தி ஒரிரு வரிகளாக சுருக்கி நினைவில்வைத்துக்கொள்வேன் . ஆனால் இக்குறுநாவலை அவ்வாறு செய்ய முடியவில்லை. காரணம் அதன் தலைப்பு சுட்டும் பொருள் விளங்கவில்லை . அதையும் அக்கடிதத்தில் சுட்ட நினைத்தேன். மறந்துவிட்டது . இன்று அதற்கான விடை கிடைத்து விட்டது. :) காலத்தையேஅந்த பன்னிரு கால்கொண்ட புரவி சுட்டுகிறது இல்லையா ? அப்பன்னிரு கால்கள் பன்னிருஆரங்களாக சுழலும் காலச்சக்கரத்தின் ஒப்பீடல்லவா.
அப்படிப் பார்த்தால் விரையும் காலத்தில் தனக்கான அறிதலின் காலமின்மை சாஸ்தாகுட்டிப் பிள்ளைக்கு கிடைக்கவேயில்லை. இவ்வளவுவருட வாழ்க்கையில் தனக்கான அந்த ஒருக் கணம் நிகழவேயில்லை. தன் வாழ்நாள் எல்லாம் அலைந்தது ஞானமுத்துனுக்கு வாய்த்ததுபோன்ற அந்த ஒரு கணத்திற்குத்தான். தன் அகம் அழியும் அந்த ஒரு நொடி. பல்வேறு திசைகளில் அலைந்து தன் தடத்தை கண்டுகொள்ளும்முன் தனக்கான காலம் விரைந்தழிந்து விட்டது. இப்போது தோன்றுகிறது நவீனத்துவ நோக்கில் காலத்தின் இரக்கமின்மையை சுட்டும்படைப்பாகவும் இக்குறுநாவலை வாசிக்கலாமென்று.
அன்புடன்,
பாலாஜி பிருத்விராஜ்