Thursday, April 11, 2019

கொடை ஒரு தவம்



"கொடை ஒரு தவம்." - உயிரை கொடையென கொடுத்த கர்ணனின் கதையை சொல்லப்போகும் இருட்கனி. 

அர்ஜுனனுக்கு கிராதம் வந்த போதே, கர்ணனுக்கு இன்னொரு கதை வேண்டுமே என்று நினைத்தேன், இதோ!

சுப்ரியை நாகர்களோடு சென்ற போது, ஏன் என்று நிறைய நாட்கள் யோசித்து கொண்டிருந்தேன். பிறகு தோன்றியது: பப்ருவாகணன் - விருஷகேது போருக்கு நாக விமோசனம் தேவை, அங்கு வந்து அவள் கதை சேருமோ என்று.

முன்பொரு வாசகர் தங்களிடம் பிற பாண்டவர்களுக்கு பயண கதைகள் கிடையாதா என்று கேட்ட போது, துரியோதனன் உட்பட யாருக்கு வேண்டுமானாலும் ஒரு கதை வரலாம் என்று கூறியுள்ளீர்கள். நகுலன், சகாதேவன், துரியோதனன், திரௌபதி (மறுபடியும்) கதைகள் வரும் என்று காத்திருக்கிறேன்.

இருட்கனியின் முதல் அத்தியாயம் படித்த மகிழ்ச்சியோடும், மீண்டும் சில மாதங்களுக்கு தினமொரு அத்தியாயம் படிக்க இருக்கும் என்ற நிறைவோடும்,

மதுமிதா.