Wednesday, September 26, 2018

அசங்கனின் காதல்



அன்புள்ள ஜெ

வெண்முரசின் காதல்களில் அசங்கந்சௌம்யை காதல் மிகவும் தனித்தன்மையானது. அவள் அவனை விட மனதால் மூத்தவள். அவன் சின்னப்பையன். அவன் சாவான் என அவர்கள் அனைவருக்கும் தெரியும். குலவாரிசு பிறப்பதற்காகவே அவள் அவனுக்கு மணம் செய்யப்பட்டிருக்கிறாள். அதற்காகவே அவள் அவனுடன் அனுப்பப்பட்டிருக்கிறாள். அந்த உறவு மிகமிகச் சங்கடமானது. கள்ள உறவு போல மிக ரகசியமாகவே அது நடக்கிறது.  ஆனால் அதற்குள் முடிந்தவரை மிக இனிமையான தருணங்களை அவர்கள் உருவாக்கிக்கொள்கிறார்கள். அவள் அவனை தன் கையிலெடுத்துக்கொண்டு அதை நடத்துகிறாள்.

ஆனால் என்னதான் பாவனை செய்தாலும் அவர்களுக்குத் தெரிகிறது, அதற்குள் என்னதான் உள்ளது என்று. அதை அவர்கள் மறைக்கவும் முடியவில்லை. அவ்வப்போது எழுந்து வருகிறது. அந்த தத்தளிப்பும் அதிலுள்ள இனிமையும்தான் அபூர்வமான காதலுறவாக அதை மாற்றிவிடுகிறது

ஜெயராமன்