Tuesday, March 3, 2015

பெண் என்பது...



பெண்ணையை வாழ்க்கை சார்ந்தும், உலகம் சார்ந்தும் ஆண்களின் முதுகில் சவாரி செய்யும் சுயநலவாதிகள் என்றும், அந்த  சுயநலத்திற்காக அவர்கள் பால் உணர்வு ஊக்கிகளாக இருக்கிறார்கள் அல்லது ஆசைவயப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்று பொதுபார்வைக்கு தெரிந்தாலும் அவர்கள் வேறு ஒரு உயர்ந்த தளத்தில் இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கு இல்லை. 

உயிருக்கு உயிராக காதலர்களாக இருந்தாலும் பெற்றவர்கள் ஆனபின்பு குழந்தை பிறந்தபின்பு  ஒரு குழந்தையை உடலாலும் உள்ளத்தாலும் ஆணால் ஒரு குழந்தையை நீண்ட நேரம் சுமக்கமுடியவில்லை. ஆண் மிக அதிக பாசம் உடையவனாக இருந்தாலும் ஆணக்கு சுமையாகத்தான் சுகம் இருக்கிறது. பெண்ணுக்கு சுமை சுகமாக இருக்கிறது அல்லது அவர்கள் அது முடிகின்றது. இதுதான் பெண்களின் தாய்மையின் உச்சம் என்று நினைக்கின்றேன். இந்த தியாக தளத்தை நம்முன்னோர்கள் உணர்ந்ததால்தான் பெண்ணை உடல் என்ற நிலையில் வைக்காமல் பெண்கள் அனைவரும் அன்னை என்ற இடத்தில் கொண்டு வைத்திருக்கிறார்கள். 

ஆண் என்னதான் தவமாய் தவம் செய்து சாதுவானாலும் கொல்லாமை நோன்பு கொண்டாலும் ஆணுக்குள் தாய்மையின் சாயல் வந்துப்போகலாம் ஆனால் அவனால் அன்னை என்னும் அனுபூதிக்குள் இருக்கமுடியவில்லை. ஏன் ஆணுக்கும் பெண்ணுக்கும் இந்த முரண்பாடு என்று நினைக்கும்போது இப்படி தோன்றுகின்றது. 

பெண்ணால்தான் மண் நிறைகின்றது. பெண்ணால்தான் உயிர்குலம் முழுவதும் தோன்றிக்கொண்டே இருக்கிறது. பிறப்பித்தல் மூலமாகமே பெண் வாழ்க்கையை வெல்கின்றாள். 
ஆண் இந்த செயலுக்கு எதிர் திசையில் இருக்கின்றான். மண்ணிலிருந்து வெளியேறவே அவன் நினைக்கின்றான். அந்த வாழ்க்கையை அவன் துறவு என்கின்றான். துறவின் மூலமே அவன் பூமியை வெல்கின்றான். துறவு பெண்ணுக்கு எதிராக இருக்கும் ஒன்று. பெண் துறவை எதிர்கின்றாள். தனது கணவனோ மகனோ தன்னைவிட்டு போய்விட்டால் தனக்கு சோறு கிடைக்காது என்று அவள் ஆண்களை மயக்கி மண்ணில் வைக்கவில்லை மாறாக பெண்ணில் மனம் சூனியத்தை விரும்பவில்லை. சூனியத்தை உருவாக்கும் துறவை எதிர்க்கிறாள். துறவை நாடும் தன் கணவனை மகனை தனது ஈர்ப்பின் மூலம் தன்னோடு இணைப்பில் வைத்து உள்ளால் இதை வயிற்றுக்காக என்றும் உடலுக்காக என்றும் எண்ணிவிடக்கூடாது என்பது என் எண்ணம். பெண்ணின் படைப்பின் மூலமே அப்படி உள்ளது. அந்த மூலம்தான் பெண்ணை மகளாக, மனைவியாக, அன்னையாக ஆக்குகின்றது அந்த மூலத்தின் ஆதியாகிய பிரபஞ்ச அன்னையின் இடத்தை பூமியை நிறைப்பதன் மூலமே பெண்பெறுகின்றாள். காதலியாக கள்ளக்காதலியாக. அன்னையாக அல்லது சேவகியாக அவளே போடும் வேடம் எல்லாம் அந்த இடத்திற்காகத்தான் வெறும் உடலுக்கும் வயிற்றுக்காகவும் இல்லை. அறிவியல் அந்த ஈர்ப்பை பெண்ணின் சுயதேவைகளின் ஈர்ப்பாக பாலின கவற்சியாக காட்டி செல்கின்றது அறிவியலால் அதற்குமேல் ஏறமுடியவில்லை என்பதுதான் உண்மை. மெய்யியல் அதை அடைய காண முயற்சி செய்கிறது.

பாசமாம் பற்று அறுத்து பாரிக்கும் ஆரியனே என்று சிவபுரணத்தில் சொல்லும் மாணிக்கவாசகர் தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே என்று முன்னால் சொல்கின்றார். பாசத்தை அறுக்கும் ஆண் கடவுளாகிய சிவபெருமானும் தயவைக்காட்ட தாயாகித்தான் வரவேண்டி இருக்கிறது. திருவிளையாடல் புராணத்தில் பன்றிக்குட்டியின் தாய்பாசத்திற்கு கட்டுப்பட்டு சிவபெருமான் தாய்பன்றியாகி பால்கொடுத்து அந்த நிலையில் தாய்பன்றியாகவே கிடக்கிறார். இந்த இடத்தில் நாம் ஒன்றை நினைக்கலாம். பன்றிக்குட்டிகளுக்கு அம்மா தேவையா? பால் தேவையா? வயிற்றுப்பசி நீங்கியபின்பும் அவைகளுக்கு அம்மா தேவையாக இருக்கமுடியுமா? பால் கொடுத்த பின்பும் சிவனை பன்றியாகவே இருக்க வைத்தது தாய்மை அன்றி வேறு எதுவாக இருக்கமுடியும். இந்த ஒன்றுக்காகத்தான் இந்த தாய்மையைக்காட்டிதான் பெண் ஆணை கட்டிப்போடுகின்றாள் என்று சொல்கின்றோம். அதுகூட அவளுக்காக இல்லை. அவளின் சுயநலத்தில் ஏதோ ஒரு பொது நலம் இருக்கத்தான் செய்கிறது. பெரியமகளின் உழைப்பை பிடுங்கி மற்ற சிறுமகள்களின் நலம் செய்யும் பொது நலம் என்றும் சொல்லலாம்.   

ராமராஜன் மாணிக்கவேல்