Saturday, June 15, 2019

குந்தி வருகை




அன்பார்ந்த ஜெயமோகனுக்கு வணக்கம் .


நலம்தானே? இன்றைக்கு முடிந்த இருட்கனியின் இறுதி அத்தியாயம் மனத்தை மிகவும் கனக்கச் செய்து  விட்டது.வந்த அழுகையை அடக்கிக் கொள்ள மிகவும் சிரமப்பட்டேன். வாழ்வின் இறுத்கிவரை அவன்குலத்தால் கீழ்மைசெய்யப்பட்டு அவன் மனைவிக்கும் நேர்ந்த அதே அவலம் என்றும் மனித குலம் மாறாத சில மோசமான நெறிகளைக் கொண்டுள்ளது என்பதைத் தெளிவாக்குகிறது.

ஓர் ஐயம். மூலபாரதத்தில் களத்திற்கு வந்து குந்தி மகனே என்று ஓலமிட்டு அழுவதும், அப்போதுதான் தங்கள் மூத்தவன் கர்ணன் என அறிந்த பாண்டவர் அதை மறைத்ததற்காகக் கண்ணனை வசைபாடுவதும்  உண்டு. அவற்றைத் தவிர்த்தமைக்கு ஏதும் காரணங்கள் உள்ளனவா?.


இங்குக் கடலூர் துறைமுகம் மாலுமியார் பேட்டை திரௌபதி அம்மன் கோயிலில் 12-06-190 முதல் 21-06-19 முடிய மகாபாரதத் தொடர் சொர்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருக்கிறேன்

நன்றி

வளவதுரையன்

அன்புள்ள வளவதுரையன்

பல மூலவடிவங்கள். குந்தி நீர்க்கடனின்போது யுதிஷ்டிரனிடம் வந்து  “மகனே உன் மூத்தவனுக்கும் அன்னம் அளிப்பாயாக” என்று சொன்னதாக வரும் மூலமே பொருத்தமானது. ஏனென்றால் களத்தில் வெளிப்பட்டிருந்தால் பதினெட்டாம்நாள் போர் புரிந்திருப்பார்களா என்ன?

ஜெ