Friday, January 3, 2020

வெண்முரசின் காவிய முறைமை-ஸ்ரீனிவாஸ்

 

வெண்முரசு நாவல்தொடரை நான் தொடர்ச்சியாகவும், அவ்வப்போது இடைவெளிவிட்டும் வாசித்து வருகிறேன். போர் முடிந்ததுமே ஒரு வைண்டிங் அப் மனநிலை வந்துவிட்டது. ஆகவே கொஞ்சம் சுணக்கம். மீண்டும் ஆரம்பிக்கவேண்டும். களிற்றியானைநிரை பாதியில் நிற்கிறது. வெவ்வேறு காலகட்டங்களில் இந்நாவல்தொடரைப் பற்றிய குறிப்புகளை எழுதிக்கொண்டிருந்தேன். இந்நாவல்களைப் பற்றிய என் எண்ணங்களை ஒருவாறாக தொகுத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்

பொதுவாக இலக்கியத்திலே எப்போதும் ஒருவகையான வடிவம் நிலைபெறும்போது அதை உடைக்கும் வடிவங்கள் வரும். அவ்வாறு சிலவடிவங்கள் வருவதற்குப் பலகாரணங்கள் உண்டு. அதிலொன்று, பழகிப்போயிருப்பது. உதாரணமாக பதினெட்டாம்நூற்றாண்டின் பெரிய கிளாஸிக் நாவல்களின் வடிவம் அப்படியே அமெரிக்க திரில்லர் வடிவங்களில் கையாளப்பட்டது. லியான் உரிஸ் எழுதும் நாவல்களெல்லாமே வார் ஆன் பீஸ் போன்ற வடிவம் கொண்டவைதான்

அதேபோல காம்யூ, ஹெமிங்வே முதலியவர்கள் எழுதிய அதே வடிவம் அப்படியே திரில்லர் நாவல்களுக்குப் போய்விட்டது. சொல்லப்போனால் மாடர்னிசத்தின் நடையின் உச்சத்தையே நாம் அந்த திரில்லர்நாவல்களிலேதான் காண்கிறோம். கூர்மையான கதைப்போக்கும் கச்சிதமான மிகையில்லாத அப்ஜெக்டிவான நடையும் அவற்றில்தான் உள்ளன. டெஸ்மண்ட் பேக்லி, லென் டைட்டன் போல எனக்கு பிடித்த சிலர் உண்டு.

ஆகவேதான் இலக்கியம் தடம் மாறியது. அது புதிர்வழிப்பாதை என்ற வடிவத்தை எடுத்துக்கொண்டது. எழுபதுகளுக்குப்பின்னால் வந்த மேலைநாட்டு நாவல்கள் எல்லாமே சிக்கலான புதிர்போடும் வடிவம்கொண்டவையாக இருந்தன. ஆனால் அந்தவடிவமும் உடனே கமர்ஷியல் ஃபிக்‌ஷனுக்கு போய்விட்டது. மிகச்சிறந்த உதாரணம் டாவின்சி கோட் நாவல். உம்பர்த்தோ ஈக்கோவின் நேம் ஆஃப்த ரோஸ் நாவலின் இன்னொருவடிவம்தான் அது.

புதிர்போடும் நாவல்களை இப்போதுதான் இங்கே படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் அந்த வடிவமும் பழகிவிட்டதனால் அடுத்தகட்ட நியோரியலிச நாவல்கள்தான் இன்றைக்கு வந்துகொண்டிருக்கின்றன. இன்றைக்கு உலக இலக்கியத்தில் புதியவிஷயங்கள் வருவது மூன்று தளங்களிலேதான். ஒன்று, அறிவியல்புனைகதைகள். அவற்றை சூடோ சயன்ஸ் – சூடோ லிட்டரேச்சர் என்று சொல்லிய காலம் இருந்தது. இன்றைக்கு அந்தக் காலகட்டம் கிடையாது. இன்றைக்கு அறிவியல்புனைகதைகளில் பலவகையான உச்சங்கள் நிகழ்ந்துவிட்டன.

இரண்டாவது டயஸ்போரா எழுத்து. ஐரோப்பாவுக்கு புலம்பெயர்ந்து வந்தவர்களின் எழுத்து. இதை வெறுமே சர்வைவலுக்கான போராட்டமாக காணும் பார்வை இன்று கிடையாது. இது இரண்டு பண்பாடுகளை ஒப்பிடுவதன் வழியாக இரண்டு பண்பாடுகளையும் புரிந்துகொண்டு மதிப்பிடுவதாக ஆகிறது. அதுதான் முக்கியமானவையாக ஆக்குகிறது

மூன்றாவது, மூன்றாமுலக நாடுகளின் எழுத்து. அறியப்படாத எழுத்துக்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அதில் இந்தியா இல்லை. இந்தியாவிலிருந்து தரமான எழுத்து மொழியாக்கம் செய்யப்படவில்லை. தரமான மொழியாக்கமும் கிடையாது. தரமான மொழியாக்கம் வரும் நாடுகளில் ஒரு பொதுத்தன்மை உண்டு. துருக்கி ஈரான் போன்ற நாடுகளிலிருந்து அரசாங்க உதவியுடன் பெரும்பணம் செலவழித்து நல்ல மொழிபெயர்ப்பாளர்களுடன் மொழியாக்கங்கள் கொண்டுவரப்படுகின்றன. இந்தியாவிலிருந்து அமெச்சூர் மொழியாக்கங்களும் கமர்ஷியல் ஃபிக்‌ஷன் மொழியாக்கங்களும்தான் வந்துகொண்டிருக்கின்றன

இந்தச்சூழலில் வெண்முரசு உலக இலக்கியத்திலேயே இல்லாத ஒரு விஷயமாக நடைபெற்றுள்ளது. பொதுவாக இங்கே தமிழில் ஏதாவது புதிசாக நடைபெற்றால் அதன் முன்வடிவம் ஐரோப்பாவில் இருக்கும். ஜே.ஜே.சிலகுறிப்புகள் முப்பதாண்டுகள் பழைய ஜான் அப்டைக்கின் வடிவத்தைத்தான் இங்கே புதிசாகக் கொண்டுவந்தது. அப்படி மேலைநாட்டிலிருந்து கொண்டுவந்தால் அது இங்கே மிகப்புதியதாக கருதப்படும். இங்கேயே அசலாக ஒரு புதியபாய்ச்சல் நடந்தால் நமக்கு அதைப்புரிந்துகொள்ள கருவிகள் கிடையாது.

வெண்முரசு ஒரு புதிய காவியத்தை தமிழில் கொண்டுவந்திருக்கிறது. விஷ்ணுபுரம் கொற்றவை எல்லாமே காவியமுயற்சிகள்தான். பின்நவீனத்துவம் சொல்லும் மெட்டா எபிக்குகள் இவை என்று சொல்லலாம். இங்கே உள்ள நவீன இலக்கியவாதிகளுக்குப் பெரிய வாசிப்பு கிடையாது. ஆகவே இவர்கள் மெட்டா எபிக்குக்கும் எப்பிக்குக்கும் உள்ள வேறுபாடு தெரியாதவர்கள். சிலப்பதிகாரம் வேறு கொற்றவை வேறு. சிலப்பதிகாரத்தை திரும்ப எழுதுவது கொற்றவை. திரும்ப எழுதுவது என்பது ஒரு பின்நவீனத்துவ இலக்கியமுறை. வரலாற்றையும் பண்பாட்டையும் திரும்பி எழுதுவது அது. ஏற்கனவே இருக்கும் வரலாறும் இலக்கியமுமே எழுதப்பட்ட பிரதிகள்தான் என்ற எண்ணத்திலிருந்தே இந்த திரும்பி எழுதும் முறை உருவாகிறது

வெண்முரசு ஒட்டுமொத்த பௌராணிகமரபையே திரும்ப எழுதும் ஒரு மிகப்பெரிய மெட்டா எபிக் முயற்சி.அப்படி ஒன்று ஐரோப்பாவில் செய்யப்பட்டதில்லை. ஓரளவுக்கு மார்கரட் அட்வுட் போன்றவர்களின் முயற்சி உண்டு, ஆனால் அதெல்லாமே எல்லைக்குட்பட்டவை. இன்று அங்கே இருக்கும் கடுமையான பிரசுரப்போட்டியில் எவரும் பிரம்மாண்டமான கனவுகளைக் காணமுடியாது. அப்படி கனவுகாணவும் எழுதவும் ஒரு சின்ன உலகம் தேவை. எவர் வாசிப்பார்கள் என்று கவலைப்படாமல் எழுதவேண்டும்

ஒரு மெட்டா எபிக் ஆக வெண்முரசை வாசிப்பவர்களால்தான் அதில் உள்ள விளையாட்டை புரிந்துகொள்ளமுடியும். அது பழைய மரபில் உள்ள ‘உண்மை’ இதுதான் என்று சொல்லவில்லை. அப்படி ஒரு உண்மை இல்லை, அது ஒரு புனைவு என்கிறது. அதை இன்னொருவகையிலே புனைகிறது. அது உண்மை இது இன்னொரு உண்மை என்று சொல்லவில்லை. மெட்டா எபிக் ஏன் முக்கியமென்றால் புனைவின் சாத்தியங்களைப் புரிந்துகொள்வதற்காகத்தான்.

ஆகவே வெண்முரசு ஒருநாளும் ஒரு மதநூல் இல்லை. மதத்திலுள்ள உண்மைகள் என்னென்ன என்று அறிவதற்காக அதைப் படிக்கக்கூடாது. அதற்கு மகபாரதத்தையே படிக்கவேண்டும். மதநூல்கள் சொல்லும் உண்மைகள் எப்படி உருவாகியிருக்கலாம் என்றும் அவை எப்படியெல்லாம் பொருள்கொள்ளப்படலாம் என்றும் சொல்வதுதான் வெண்முரசு. இந்த நாவலில் பொருள்கொள்ள பழகியவர்கள் மகாபாரதத்தையும் பொருள்கொள்ள ஆரம்பிப்பார்கள். மகாபாரதத்தை தெரிந்துகொள்ள மகாபாரதத்தையே படிக்கவேண்டும், மகாபாரதம் உட்பட நம்முடைய பழைய மர்பின் டைனமிக்ஸை தெரிந்துகொள்ளத்தான் வெண்முரசு தேவையாகிறது

அந்த பழைய மகாபாரதத்தின் மனநிலைகளை இந்நாவல் எப்படி மாற்றியிருக்கிறது என்பதைக்கொண்டே இதை அறியமுடியும். மூலமகாபாரதத்தில் எல்லா கதாபாத்திரங்களுக்கும் ஒரு எளிமையான பழங்குடித்தன்மையான மனநிலை உள்ளது. உதாரணமாக பீமனையும் திரௌபதியையும் எடுத்துக்கொள்ளலாம். பீமன் ஒரு மூர்க்கமான ஆளாகவே மகாபாரதத்தில் வருகிறான். எல்லா இடங்களிலும் முரட்டடிநியாயமே பேசுகிறான். திரௌபதி தான் அவமதிக்கப்பட்டதையும் காட்டில் அலைவதையும் சொல்லிச் சொல்லி அழுபவளாகவும் வருகிறாள்.

ஆனால் வெண்முரசிலே பீமன் அங்கதமும் பகடியும் கசப்புமாக உரையாடும் ஒருவனாக வருகிறான். ஒரு அவுட்சைடர். ஒரு காட்டுமனிதன். அவனுடைய விமர்சனங்கள் அரசு மீதும் நாகரீகம் மீதும் எப்போதும் எழுகின்றன. பீமன் அந்தக்கசப்பை கங்கையில் மூழ்கி நாகர்களிடமிருந்து பெற்றுக்கொள்கிறான். அதேபோல திரௌபதியின் கனவு அவள் சின்னக்குழந்தையாக இருக்கும்போதே வருகிறது. அவள் அந்தக்கனவிலிருந்து விடுபடுவதே இல்லை.அவள் எதற்கும் நிலைகுலையாத அரசியாக கொற்றவைபோல வருகிறாள். இதெல்லாம் மூலத்திலிருந்து நுட்பமாக மாற்றி எழுதப்படுகின்றன

இந்த மாற்றம் ஏன் நிகழ்கிறது? திரௌபதி அதற்குமேல் சரித்திரத்தில் நிகழ்ந்த பல்வேறு பேரரசிகளின் சாயல்கள் ஏற்றப்பட்டு இன்றைய ஆளுமையாக மாற்றப்பட்டிருக்கிறாள். பீமன் இன்றைய மனிதனின் குரலைத்தான் ஒலிக்கிறான். அவ்வாறு மொத்த மகாபாரதமும் இன்றைய கதையாக மாற்றப்பட்டிருக்கிறது. இப்படி மாற்றித்தான் இந்த மோதலும் பிரச்சினைகளும் எப்படி உருவாகின்றன என்பது விளக்கப்பட்டிருக்கிறது. இதுதான் மெட்டா எபிக்கின் இயல்பு என்று சொல்லலாம்.

இவ்வாறு இதை ஒரு மெட்டா எபிக் என்று சொல்லும்போது இன்னொரு கேள்வி எழுகிறது. இதை ஒரு கிராண்ட் நேரேஷன் என்று சொல்லலாமா? சொல்லலாம். ஆனால் முன்புள்ள கிரான்ட் நெரேஷன்களைப் போல இது எதையும் கட்டி நிறுத்தவில்லை. இதெல்லாம் எப்படி உருவாகிவந்திருக்கும் என்று ஆராய்ந்து சொல்கிறது. இப்படி நடந்திருக்குமோ என்று சொல்கிறது. இந்த வேறுபாடு முக்கியம். அத்துடன் இந்த நாவல்தொடர் ஒரு ஹிஸ்டாரிசிசத்தை உருவாக்குகிறது. அதை நியூஹிஸ்டாரிசிசம் என்று சொல்லலாம். அது போஸ்ட்மாடர்ன் பார்வையை கடந்து வந்த அடுத்தகட்ட பார்வை. வரலாறே ஒரு ஹிஸ்டாரிசிசம், அதற்கு எல்லா கதைகளும் ஒரு வகை ஹிஸ்டாரிசிசத்தையே உருவாக்குகின்றன. இந்தியமரபு என்ற பெரிய புனைவுக்குள் மகாபாரதம் என்ற புனைவு உள்ளது. அந்த புனைவுக்குள் இன்னொரு புனைவு இது. இது போஸ்ட்மாடன் எழுத்திலிருந்து இன்னொரு முன்னகர்வு

ஆனால் இங்கே இலக்கியச்சூழலில் வாசிப்பவர்களுக்கு இன்னமும் இத்தகைய ஒரு புதிய படைப்பைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லை. ஆகவே அவர்கள் இது ஒரு பழைய எழுத்து என நினைத்து வாசிக்காமலிருக்கிறார்கள். வாசித்தவர்களுக்கு இந்நாவலே அந்தப்புரிதலையெல்லாம் அளித்துவிடும். அவர்களுக்கு இதெல்லாம் தெரியும். மகாபாரதத்திற்கும் வெண்முரசுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன என்று கேட்டால் அவர்களால் சொல்லிவிட முடியும்.

வெண்முரசு மகாபாரதத்தை ஏன் திருப்பி எழுதவேண்டும். சுருக்கமாகச் சொன்னால் ஒரு உணவுப்பண்டத்தின் ரெசிப்பியைத் தெரிந்துகொள்வதுபோலத்தான். நமக்கு கிளாஸிக்குகளாக இலக்கியங்கள் கிடைக்கின்றன. அவற்றை அவை உருவாகிவந்த நீண்டபாதையாக பார்ப்பதுதான். அதற்கு ஆராய்ச்சியை விடச் சிறந்தவழி அவற்றை இன்று நடித்துப்பார்ப்பதுதான். ஆராய்ச்சியில் வரலாறும் தத்துவமும் தெரியலாம். உணர்ச்சிகளும் வாழ்க்கைநுட்பங்களும் தெரியாது. அதை இன்றைய வாழ்க்கையில் நடிக்கும்போது நாம் அவை உருவானவழியையே முழுதாக அமைத்துப்பார்க்கிறோம்.

வெண்முரசு மகாபாரதத்திற்கு இந்தியா சென்ற வழியை மீண்டும் உருவாக்கிக் காட்டுகிறது என்று எனக்கு எப்போதுமே தோன்றுவதுண்டு. மொத்த மகாபாரதப்போரையே அது நான்கு கோணங்களில் பார்க்கிறது. பாலைநிலத்துக்கும் புல்வெளிக்குமான போர். ஷத்ரியர்களுக்கும் பிற சாதிக்குமானபோர், புதிய ராஜ்ஜியங்களுக்கும் பழைய ராஜ்ஜியங்களுக்குமான போர். பழையவேதங்களுக்கும் வேதாந்தத்துக்குமான போர். நான்கும் உண்மையாக இருக்கலாம். இந்த நான்கு வழிகளின் வழியாக குருசேத்திரப்போர் நோக்கி நாவல் செல்கிறது.  அது உருவாக்கியது குருசேத்திரப்போர் மட்டுமல்ல. அது இந்தியாவை இன்றைக்கும் ஆட்டிப்படைக்கும் முரண்பாடுகளை உருவாக்கியிருக்கிறது. இன்றைய இந்தியாவின் அடித்தளத்தை புரிந்துகொள்ள அது முக்கியமானது

ஒரு உவமையாக நான் நினைத்துப்பார்ப்பது உண்டு. மிகப்பழைய காலத்தில் நடந்த ஒரு போரை இப்போது புரிந்துகொள்ள அந்தப்போரை இப்போது செயற்கையாக திரும்ப நடித்துப்பார்த்தால் எப்படி இருக்கும்?அந்த உணர்ச்சிகள் வரும். ஆனால் நமக்கே தெரிந்திருக்கும், இது நாம் திரும்பசெய்வது என்று. மெட்டா எபிக் என்றால் அதுதான். நாம் கூர்ந்து பார்த்தபடி அதைச் செய்வதனால் நமக்கு கூடுதல் புரிதல்கள் உருவாகின்றன

ஏன் மகாபாரதத்தை எழுதவேண்டும்? அது இன்றைக்கும் ஒரு லிவிங் டெக்ஸ்ட் என்பதுதான் முக்கியமான காரணம். அது இங்கே இன்றைக்கும் அரசியலையும் வாழ்க்கையையும் தீர்மானிக்கும் நூலாக இருக்கிறது. அதில் எல்லா புராணங்களும் உள்ளன. வரலாறும் தத்துவமும் உள்ளது. அதில் ஆர்க்கிடைப்புகள் உள்ளன. ஆகவே அதைப் புரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது. திரும்பச்செய்தாலன்றி முழுசாகப்புரிந்துகொள்ளமுடியாது

இலக்கியம் என்பதே வாழ்க்கையை திரும்பச் செய்து பார்ப்பதுதான். எல்லா எழுத்தும் அதைத்தான் செய்கிறது. அப்படியிருக்க ஒரு மொத்த கடந்தகாலத்தையே திரும்பச் செய்துபார்ப்பதென்பது மிகப்பெரிய கனவு. அந்தக்கனவு வெண்முரசிலே சாத்தியமாகியிருக்கிறது. திரும்பச் செய்யும்போது என்ன ஆகிறதென்றால் நாம் நடந்ததை அறிவதோடு நடந்ததை மாற்றியும்விடுகிறோம்.ராஜராஜசோழன் பற்றிய ஒரு வலிமையான கதை ராஜராஜனின் வரலாற்றை மாற்றிவிடுகிறது. நம்மையறியாமலேயே வெண்முரசு மகாபாரதத்தை மாற்றியமைக்கிறது. மகாபாரதம் பேசும் நம் பண்பாட்டையே மாற்றியமைக்கிறது

இந்தப்பிரம்மாண்டமான படைப்பைப் பற்றிப் பேச இங்கே உள்ள இலக்கியவிமர்சகர்கள் எவரும் தகுதியானவர்களாக நான் நினைக்கவில்லை. அவர்களெல்லாம் ஏற்கனவே புழங்கிக்கொண்டிருக்கும் அளவுகோல்களை வைத்திருப்பவர்கள். தங்களுக்கு புரிந்ததையும் தங்களுக்குத் தெரிந்ததையும்தான் அவர்கள் சொல்லமுடியும். ஆகவே அவர்களில் பெரும்பாலானவர்கள் படிக்காமல் கருத்துச்சொல்லாமல் இருப்பது நல்லதுதான்.புதிய அளவுகோல்களை உருவாக்கும் சக்தி கொண்ட விமர்சகர்கள் வரவேண்டும். அவர்கள் வரும்வரை ஒரு தலைமுறைக்காலம் வெண்முரசு காத்திருக்கலாம்