Monday, April 30, 2018

யுதிஷ்டிரர்


அன்புள்ள ஜெயமோகன்,
        

 எழுத உங்களுக்கு மட்டும் இமைக்கணம் அதிக நேரம் 
எடுத்துக் கொள்ளவில்லை;வாசிக்க எங்களுக்கும்தான்.
தெரியாமல் ஒரு முடிவெடுத்து விட்டேன் வெண்முரசு 
பயிலும் போது மிகவும் முக்கியமான வாக்கியங்களை 
ஒரு குறிப்பேட்டில் எழுதிக் கொள்வதென்று.இளைய யாதவரின் 
சொற்களில் ஒவ்வொன்றுமே அற்புதமாக உள்ளபோது எதை 
விடுவது?எப்படியும் பாதிக்கு மேல் எழுத வேண்டியுள்ளது.
        

 வெண்முரசில் எனக்கு மிகவும் பிடித்தது இமைக்கணம்தான்.
அடுத்து சொல் வளர் காடு. மகாபாரதத்தில் மரியாதைக்குரிய 
கேரக்டர் தர்மர்.ஆனால் அவரை பீமன் மூலம் நீங்கள் மிகவும் 
கேலி செய்வது போல் தோன்றும்.இப்போது அவருக்கு மிக 
அணுக்கமான சகதேவனும்.அவருடைய சோர்வும்,அறம் பிழைத்து 
விட்டதோ என்ற கையறு நிலையும் என்னை மிகவும் பாதித்தது.
ஆனால்,ஒரு அறத்தான் ஏன் பிறரால் விரும்பப் படுவதில்லை 
என்பது மிக தெளிவாக விளக்கப் பட்டுள்ளது. 
ஒவ்வொரு முக்கிய பாத்திரத்தையும் இளைய யாதவர் மூலம் 
புதிய கோணங்களில் அலசியிருக்கிறீர்கள்.
           

கடந்த ஒரு மாத காலத்தில் புல்  வெளி தேசம்,முன் சுவடுகள்,
இன்று பெற்றவை,தெய்வங்கள்,பேய்கள்,தேவர்கள் நான்கும் 
படித்தேன்.படிக்கும் ஒவ்வொன்றைப் பற்றியும் கடிதம் எழுதாததால் 
படிக்கவில்லை என்றோ,எழுத எதுவுமில்லை என்றோ அர்த்தமில்லை 
என்று நீங்கள் அறிவீர்கள்.தஞ்சைக்காரர்கள் அதிகம் கடிதம் 
எழுதுவதில்லை என்பது உண்மைதான்.
          

பல்வேறு அழுத்தங்களால் சமகால செய்திகளை ஓராண்டு 
துறத்தல் என்பது நல்ல முடிவே.ஓராண்டுக்குப் பிறகு பெரிதாக 
ஒன்றும் மாறியிருக்காது என்றே நினைக்கிறேன்.நன்றி.


சாந்தமூர்த்தி,


மன்னார்குடி. 

Friday, April 27, 2018

அறம்




ஜெ,

வெண்முரசில் epistemology ontology வரிசையில் அடுத்துவரவிருப்பது ethics தான் என்பதை ஊகித்திருந்தேன். அப்படியென்றால் குந்தி பாஞ்சாலி தருமர் மூவரில் ஒருவரே வருவார் என நினைத்தேன். தருமர் வந்ததில் நிறைவு. அவர் சந்திக்கும் அந்த தார்மீகப்பிரச்சினையும் நுட்பமானது. தார்மீகன் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினை அவனுக்குள் இருந்தே வரும் என்று சிவானந்தர் ஓர் உரையிலே சொல்கிறார். அவனுடைய அவநம்பிக்கையோ இந்திரிய ஈர்ப்புகளோ அதற்கு தடையாக ஆகும். ஆகவேதான் தார்மிகர்கள் இறுக்கமான மனிதர்களாக ஆகிவிடுகிறார்கள். தார்மீகம் ஒருவகையான ஆயுதம்போல மனிதர்களை மாற்றிவிடுகிறது. தார்மீகன் கூடவே பக்தியைக் கைக்கொண்டு பூரணார்பணம் செய்யவில்லை என்றால் எதையுமே அடையமுடியாது. வெறும் அகங்காரியாக ஆகிவிடுவான்

கிருஷ்ணமூர்த்தி

இமைக்கணம்



அன்பு ஜெ , 

வெண்முரசை தொடர்ந்து கோர்வையாக படிக்கமுடியாவிட்டாலும்முடிந்த அளவு படித்து வருகிறேன் .இமைக்கணம் , குறிப்பாகசமீபத்திய அத்தியாயங்கள் ஆழமான  தத்துவங்களைஅற்புதமானகற்பனையுடன் எப்போதும் உச்சத்திலேயே நிற்கும் ஒரு discourse ஆகமுன்வைக்கிறது .

வாசகர் மனதில் ‘அப்படியென்றால்’ என்று தோன்றும் கேள்வியைஅடுத்த சிலவரிகளிலேயே கேட்டு பதிலும் அளித்துவிடுகிறீர்கள்.வெண்முரசுக்கான நியாயமும் அதனுள்ளேயே , இந்தவிவாதங்களுடனேயே பிணைந்துகொள்கிறது .

இந்த விவாதங்களை பற்றியே இன்னும்
மனதில் அசை போட்டுக்கொண்டிருக்கிறேன் . எந்த ஒழுங்கும்இல்லாமல் மீண்டும் இமையத் தனிமை கட்டுரைகள் , சுவாமிவியாசப் பிரசாத் வேதாந்த உரைகள் , குரு நித்யா  கட்டுரைகள்என்று படித்துக்கொண்டிருந்தேன்.

என்னதான் சொற்பெருக்கினாலும் அவற்றினிடையே ஒருஅமைதியும் குடி கொண்டுள்ளது .ஏதோ ஒன்றை நோக்கிஇன்னுமொரு எட்டு வைத்தது போல உணர்கிறேன்.

இன்று உங்கள் பிறந்தநாளும் கூட , வாழ்த்துகளும்,வணக்கங்களும் ,அன்பும் .

கார்த்திக் 
சிட்னி 

துளி வைரம் .



இனிய ஜெயம் 

ஒரு முறை விஷ்ணுபுரத்தின் தருணம் ஒன்றின் மீது உங்களிடம் மனம் பொங்க ஏதோ கூறிக்கொண்டிருந்தேன் . நீங்கள் மெல்லிய புன்னகையுடன் ''அது நான் கண்டு முடித்த அதிகாலை கனவுகளில் ஒன்று அவ்வளவுதான் '' எளிதாக சொல்லிவிட்டு அடுத்த உரையாடலுக்குள் நுழைந்து விட்டீர்கள் .பின் வந்த நாட்களில் ,அந்த வரி எதை எதையோ என்னுள் தொடுத்து இணைத்தது ..  

இதோ அடுத்த கனவு .வெண்முரசு எனும் தலைப்பிட்டு காணத்துவங்கி விட்டீர்கள் .   கஜுராகோ கோவில் வளாகம் காணும்போது  ,கண் முன் ஒன்று ஸ்தூலமாக அறியக் கிடைத்தது .  அது ஒரு கோவில் அல்ல ,கோவில்களின்  வரிசை .காந்தார மகாதேவர் கோவில்தான் அந்த வரிசையின்  உன்னத  முனை .ஆம் அந்த வளாகம் முழுதும் கோவில்கள் .எது மகாதேவர் ஆலயமோ ,அதை ஒவ்வொரு கோவிலாக கட்டிப்பார்த்து அங்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள் .   
அப்படி வெண்முரசு எனும் கனவை வாழ்ந்து பார்க்க ஒரு முன்னோட்டமாக விஷ்ணுபுரம் எனும் கனவில் வாழ்த்து பார்த்திருக்கிறீர்கள் .  வடிவரீதியாக  விஷ்ணுபுரம்  ஷங்கர்ஷணன் எழுதிய காவியமா , அல்லது யாரோ ஒருவர் கண்டுகொண்டிருக்கும் கனவா என்றொரு மயக்கம் முதல் அடுக்கு .காவியமாக அது சங்கர்ஷணன் எழுதியதா அல்லது மூவர் வெவ்வேறு காலக்கட்டத்தில் எழுதி ஒன்று சேர்க்கப்பட்டதா என்பது இரண்டாவது  அடுக்கு . பாணர்கள் பாடுவது போல தொகுக்கப்பட்ட காவியமா அல்லது வசந்தன் எனும் பாணன் பாடும் பாடலில் வரும் காவியமா எனும் மயக்கு மூன்றாவது அடுக்கு .   வெண்முரசு இந்த விஷ்ணுபுர விளையாட்டை அதன் சிகரத்துக்கு எடுத்து செல்கிறது .   ஒரு அடுக்கில்  நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டு இருக்கும்போதே அது வியாசரால் எழுதப்படுகிறது .மற்றொரு அடுக்கில்  ஆஸ்திகன் வருகைக்கு முன்பு ஒரே வீச்சிலாக எழுதப்படுகிறது . இவற்றைக் கடந்த மூன்றாவது அடுக்கு  இந்த மொத்த  வெண்முரசு நாவலே  தவத்திலிருக்கும் வியாசரின், யுகங்களை ,முக்காலங்களை கலைத்து அடுக்கும் , அவரது  ஆழ்மனக் கனவின் சித்தரிப்பு என்பது . ஆம் வியாசன் எனும் காவிய கர்த்தனின் ஆழ்மனக் கனவின் பயணத்தை ,அதன் கூடவே நின்று மொழியில் நிகழ்த்துவதே வெண்முரசு .இந்தப் புனைவின் தர்க்கக் கட்டுமானம் என்பது இதுவே .  வியாசரின் கனவு . 

  உள் நிகழ்வுகளாக , விஷ்ணுபுரத்தில் தலைமுறைகள் தோறும் ஞானாதிபதிகள் கையில் மாறும் அந்த நீலக் கல் மோதிரம் ,அதுவே பேருருக்கொண்டு வெண்முரசில் எழுந்து ,சாத்யகி முதல் விதுரர் வரை ஆட்டிவைக்கிறது .  விஷ்ணுபுர பவதத்தர் கொள்ளும் மைந்தத் துயர்த்தீயின்  வடவைத்தோற்றமே ,வெண் முரசில்  திருதா முதல் வியாசன் வரை எழுகிறது .

பொதுவாக உரையாடலில் ஒன்று நிகழும் .  இமைக்கணத்தில் ஒவ்வொருவரும் தனக்கு விருப்பமான ஒன்றில் சென்று உழலும் கனவு  கசான்ஸ்கி எழுதிய கிறிஸ்துவின் கடைசி சபலத்தை ஒத்திருக்கிறது எனும் பார்வை . இந்த பார்வை நமது புராண மரபில் நாம் எந்த அளவு அறிமுகம் அற்று இருக்கிறோம் என்பதையே காட்டுகிறது . நாமெல்லாம் சிறு வயதில் கேட்டிருப்போம் ,விஷ்ணுவின் தாகத்துக்கு தண்ணீர் கொண்டு வர சென்ற நாரதர் ,சம்சார சாகரத்தில் சிக்கி உழலும் புராண கதை .  இந்த புராணம் நினைவில் எழாமல் கசான்ஸ்கி மட்டும் நினைவில் எழுவது  நாம் எந்த அளவு நமதே ஆன மரபொன்றிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளோம் என்பதன் சான்று .

அவ்வாறானதே  இன்று வியாசர் நீலனை சந்திக்கும் தருணம் மீதான உரையாடல்களும் .  லூயி பிராண்டல்லோ  வழியாக இங்கே ''இறக்குமதி '' ஆன அழகியல் என்பதே முதல் பார்வை . இங்கும் நிகழ்வது நமது மரபின் மீதான அறிமுகம் இன்மையே .அசிந்தா  ஓவியங்கள் எல்லாம் தியான சாதகர்களால் வரையப்பட்டது .  மீட்சி அளிக்கும்  ஆழ் மனக்  கனவை துளித் துளியாக தூரிகை கொண்டு தீட்டி எடுத்து ,அதை தியானித்து மெய்மை நோக்கி நகர்வது ,மெய்ம்மைப் பாதைகளில் ஒன்று . விஷ்ணுபுரம் நாவலில் ஸ்ரீநாமர் அப்படி ஒரு ஓவியத்தை வரைந்து அதை தியானிக்கும் சித்திரம் உண்டு .அதன் நீட்சியே இங்கு வெண்முரசில் நிகழும்  வியாசன் நீலன் சந்திப்பு .

வியாசன்  காமம் சார்ந்து தன்னை அலைக்கழிக்கும் முதல் வினாவை அவரது மகன் வசம் கேட்கிறார் . சுகர் அந்த வினாவுக்கான பதிலை ,அல்லது அந்த வினா அழியும் நிலையை வியாசர்  எங்கே அடைவாரோ அங்கே ஆற்றுப் படுத்துகிறார் .அங்கே துவங்கிய வினாக்கள் வழியே  வியாசர் கடந்து ,கடந்து  நீலன் முன் எளிய நேரடியான வினாவுடன் வந்து நிற்கிறார் .

இந்த நேரடியான வினா  சுகர் எந்த உலகத்தை வியாசனுக்கு அளித்தாரோ ,அந்த உலகக்த்தில் இருந்து வெளியே வந்து விழுந்து வியாசன் எழுப்பிக்கொள்ளும் வினா .கரையில் விழுந்த மீன் .நீர் என்றால் என்ன என வினவுவது போல . நீலன் இது வினாவும் அல்ல ,இது வினா என்றால் இதற்க்கு விடை என ஏதும் இல்லை என உணர்த்தி அந்த மீனை மீண்டும் கடலில் விடுகிறார் .

நீலம் நாவலில் ராதை ,நான் நான் நான் என உருகி நிற்கிறாள் .அந்த நானை உதாசீனம் செய்யும் நீலன் மீது கோபம் கொள்கிறாள் .  நீலன் அவளை தொட்டு எழுப்பி அவளருகே செல்லும் நதியை காட்டுகிறான் . நதியின் ஒவ்வொரு துளியும் கண்ணன்கள் . அவள் காண பெறுகிச் செல்கிறது கண்ணன் எனும் பெருவெள்ளம் .  உடைந்து கரைந்து நான் என்பது அழிந்து ,மெய்யான சரணடைதல் அதில் நிலைக்கிறாள் ராதை .

அதே மாற்றத்தைத்தான் இங்கே நீலன் வியாசருக்கு அளிக்கிறான் . ஐயோ என் மகன் எனும் ஒரே உணர்வே வியாசரின் உலகமாக இருக்க , அதை ப்ரபஞ்சமளவு விரிக்கிறான் நீலன் ,  விண்ணும் மண்ணும்  நிலவும் எண்ணிறந்த விண்மீனும் எல்லாமும் எல்லாமும் வியாசனும் ,சுகனும் அகி நிற்கிறது .  இப்படி எங்கேனும் சுகனை கண்டு வியாசன் கதறியது போல ,இப்படி எங்கேனும் வியாசனை கண்டு அவரது தந்தை கதறி இருப்பார் ,அந்த தந்தையை இப்படி கண்டு அவரது தந்தை ,தந்தையர் நிறை .

யதார்த்தத்தில் ஒளி வீச்சு அளிப்பது வேறு .காவிய கர்தன் கையில் உள்ள மொழி எனும் வைரத்தை அது தீண்டும் போது நிகழ்வது வேறு . 

அரிசியை உண்டுதான் உயிர் வாழ முடியும் .வைரம் உண்டு வாழ முடியாது . வியாஸா  இந்த உலகம் அன்றும் இன்றும் என்றும் உற்பத்தி செய்து பெருக்கித் தள்ளும் மொத்த  அரிசியை நிறை வைத்தாலும்  முள்  சமன் கொள்ளாது ,உன் சொல் எனும் வைரம் ஏந்தி தாழ்ந்தே நிற்கும் நிற்கும் அதை கொண்ட   துலா தட்டு . என உணர்த்துகிறான் நீலன் .

வைரத்தை எத்தனை துண்டுகளாக உடைத்தாலும் எஞ்சிய ஒவ்வொரு துண்டும் வைரம் என்றே அமையும் .எஞ்சிய ஒரு சொல் இன்னும் வியாசசனிடம் . 

துளி வைரம் .
கடலூர் சீனு

Thursday, April 26, 2018

காவியம்




ஜெ

சில வரிகல் ஒட்டுமொத்தமாக பழைய நாவலைச் சென்றடைவது ஆச்சரியமானது. கொடும்பழியிலிருந்து, ஆறா வஞ்சத்திலிருந்து, ஆற்றொணாத் துயரிலிருந்தே பெருங்காவியங்கள் எழுகின்றன என்கிறார். பராசரர். வியாசர் துயரத்துடன் கண்ணீருடன் கன்யாகுமரிக்குச் சென்றது நாடெங்கும் அலைந்தது ஏன் என்பதை இப்போது பார்க்கமுடிகிறது. ஒரு சொல் மிச்சமிருக்கவேண்டும் என்கிறார். அந்தச்சொல் ஓம். அதை அந்த யானை வந்து அவருக்கு அளிக்கிறது. மழை அனைத்துக் குருதியையும் சாம்பலையும் கழுவிச்செல்கிறது. அனைத்து மாசுகளையும் மண்ணுக்கு உரமாக்குகிறது என்ற வரி காவியத்தையே குறிப்பிடுகிறது. வியாசபாரதம் மகாபாரதப்போரின் குருதி அனைத்தையும் மண்ணுக்கு உரமாக்கிய மழை தானே?

மகாதேவன்

முடிவின்மை




ஜெ

முடிவின்மை என்று சாதாரணமாக பயன்படுத்துகிறோம். குறிப்பாக சயன்ஸ் வந்தபின்னாடி முடிவின்மை என்பது ஒரு சொல் போலவே ஆகிவிட்டது. ஆனால் முடிவின்மை கற்பனைசெய்வதற்கு அவ்வளவு பயங்கரமானது என்று காட்டியது இந்த அத்தியாயம். முடிவின்மையில் எல்லாமே முடிவின்மைதான். இந்த எண்ணம் எனக்கு எழுந்ததே இல்லை. நான் கணக்கு பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றவன். முடிவின்மையில் பிரம்மம் மட்டுமல்ல காலம் வெளி எல்லாமே முடிவில்லாதது. ஆகவே சுகனும் வியாசனும் எல்லாமே முடிவில்லாததுதான். வியாசன் காணும் விஸ்வரூபக்காட்சி இது

ஈஸ்வரமூர்த்தி

கவியோகி




வியாசனிடம் அவருடைய வழி தியான யோகம் அல்ல அவர் கவியோகிதான் என்று சொல்லும் கிருஷ்ணன் சொல்லும் உவமை அழகானது.  விண்ணுக்கெழும் ஆணையை அனலுக்கு அளித்ததே மண்ணில்வீழும் ஆணையை மழைக்கு அளித்ததுநெருப்பு எல்லாவற்றையும் எரித்து தானும் அணைந்து விண்ணுக்குப்போகிறது. அதுவே தியானயோகம். மழை எல்லாவற்றையும் முளைக்கவைத்து இங்கேயே வளம் சேர்க்கிறது. அதுதான் கவியோகம். அந்த வேறுபாட்டையே கண்ணன் சொல்கிறார். தன் சொல்லில் எழுந்த மெய்யை கவிஞன் தன் கனவால் ஒப்புகையில் அதுவே முதற்சான்றாகும். ஆம் ஆம் ஆம் என மும்முறை ஒப்பி பிரம்மம் மறுசான்றுரைக்கும் என்று கண்ணன் வியாசருக்கு அளிக்கும் உறுதி ஒவ்வொரு கவிஞனுக்கும்தான்


செல்வராஜ்

வால்கவ்வரவு



அன்புநிறை ஜெ,

//நான் புரிந்துகொள்ளவே இருநூறாண்டுகால வாழ்க்கை தேவையாகியிருக்கிறது…. // 

முதற்கனலில் தொடங்கிய தொடர் வலைப்பின்னலின் முன் நிரையில் வரும் கண்ணி இன்றைய இமைக்கணத்தில் வியாசர் எழுதும் காவியத்தில் வந்து நிற்கிறது.  ஒவ்வொரு அரவும் வாயால் வாலைக் கவ்வுகிறது.

மிக்க அன்புடன்,
சுபா

இமைக்கணம் – Open your Eye



நான் மார்வெல் திரைப்படங்களின் ரசிகன் (கவனிக்கவும், காமிக்சுகளுக்கு அல்ல, திரைப்படங்களுக்கு மட்டுமே... காமிக்ஸ்களைப் படித்ததில்லை. படிக்க வேண்டும்!!!). அவற்றிலிருந்து வழமையான அதிமானுட சாகசங்களை மீறிய சிலவற்றை அனுபவிப்பவன். உதாரணமாக xmen படங்களின் Dr. Charles Xavier கூறும் வசனங்களில் இருந்து காந்தியத்துக்கு தொடர்புபடுத்தியிருக்கிறேன். சமயங்களில் இதெல்லாம் அவை கூறுபவற்றுக்கு மேல் நானாக எனது அறிதல்களைச் சுமத்துகிறேன் என என்னை நானே கடிந்து கொண்டதும் உண்டு. அபத்தமாக உணர்ந்ததும் உண்டு. ஆயினும் அத்தகைய மேலதிக அனுபவங்கள் அத்திரைப்படங்களை மனதுக்கு மிக நெருக்கமாக்கியிருக்கின்றன. இத்தகைய மேலதிக கருத்துக் குவிதலை அவர்கள் தெரிந்து வைக்கிறார்களா அல்லது யதார்த்தமாக அமைந்து விடுகிறதா என்ற குழப்பம் வெகு நாட்களாக உண்டு. அதற்கு விடையளிப்பது போல் வந்த ஒரு படம் Dr. Strange. என்னடா இமைக்கணத்தைப் பற்றி தலைப்பிட்டு விட்டு மார்வெல் படங்களைப் பற்றி பேசுகிறேனே என எண்ண வேண்டாம். வியாசர் ‘சூக்ஷ்மம்’ எனும் சுனைக்குள் இறங்கி சுகனைக் கண்ட அனுபவங்களைப் படித்த போது, குறிப்பாக “எண்ணிறந்தமை என்றால் என்னவென்று ஒரு நோக்கில் கண்டான். எண்ணிப்பகுப்பதே காலம். காலமின்மையில் கோடிகோடி வியாசர்கள் கோடிகோடி சுகன்களை பெற்றனர். கோடிகோடி வியாசர்கள் கோடிகோடி சுகன்களை இழந்தனர். கோடிகோடி வியாசர்களை கோடி கோடி சுகன்கள் பெற்று இழந்தனர். சுகன்களை கொன்றனர் வியாசர்கள். வியாசர்களை கொன்றனர் சுகன்கள். வியாசர்களிலிருந்து சுகன்கள் முளைத்தெழுந்தனர். சுகன்களிலிருந்து வியாசர்கள் எழுந்தனர்.
ஒன்றுபிறிதே என்றானவர்கள். ஒன்று பிறிதிலாதவர்கள். கணம்கோடிப் பெருகி கணம்கோடி அழிந்து அழிவின்மையாகி நின்றவர்கள். நெஞ்சிலறைந்து அழுதனர் முடிவிலாக் கோடியர். உவகைகொண்டு நகைத்தனர் எண்ணிலாக் கோடியர். முடிவிலாது பெருகுகையில் அழிவும் ஆக்கமும் துயரும் உவகையும் ஒன்றே. அனைத்தும் இன்மையே. இன்மையும் இருப்பும் ஒன்றே.
பெருகிப்பெருகி விரிந்து விரிந்து சென்றான் வியாசன். அவன் கைகள் திசைகளின் முடிவிலி நோக்கி நீண்டன. கால்கள் ஆழத்தின் அடியிலி நோக்கி சென்றன. தலை விண்ணின் அலகிலி நோக்கி எழுந்தது. கணம்கோடி என பெருகும் தன் உடலின் ஒவ்வொரு அணுவும் ஒரு சுகன் என்று உணர்ந்தான். ஒவ்வொரு சுகனும் ஒரு முடிவிலாப் பேருருவன் என்று கண்டான். அவ்வுடலில் ஒவ்வொரு அணுவும் தானே என்று அறிந்தான்.” என்பதை வாசித்த போது கீழ்க்காணும் காட்சிகள் நினைவுக்கு வந்தன.



இதில் வரும் வசனங்கள் முக்கியமானவை.

The Ancient One: You're a man looking at the world through a keyhole. You've spent your whole life trying to widen that keyhole. To see more. To know more. And now on hearing that it can be widened, in ways you can't imagine, you reject the possibility.
Dr. Strange: No, I reject it because I do not believe in fairy tales about chakras, or energy, or the power of belief. There is no such thing as spirit! We are made of matter and nothing more. We're just another tiny, momentary speck in an indifferent universe.
The Ancient One: You think too little of yourself.
Dr. Strange: Why are you doing this to me?
The Ancient One: To show you just how much you don't know. Open your eye! (கண்கள் எனச் சொல்லவில்லை. கண் என்று தான். இதன் பிறகு அவர் Dr. Strange –ன் நெற்றியில் கைவைப்பார்.)
The Ancient One: You think you know how the world works? You think that this material universe is all there is? What is "real"? What mysteries lie beyond the reach of your senses? At the root of existence, mind and matter meet. Thoughts form reality. This universe is only one of an infinite number. Worlds without end. Some benevolent and life-giving, others filled with malice and hunger. Dark places where powers older than time lie, ravenous and waiting. Who are you in this vast multiverse, Mr. Strange?

இதில் Dr. Strange உடலில் இருந்து வெளியேறி தன்னைத் தானே காணும் காட்சியில் வரும் உடல்களின் எண்ணிக்கை (ஐந்து) முதற்கொண்டு இந்திய மரபின் தாக்கம் இவற்றில் அதிகம்.

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்

Wednesday, April 25, 2018

இரண்டுவகை



ஏனென்றால் கதை மீண்டும் நிகழும் ன்று அந்தப்பெண்குழந்தை சொல்லுமிடத்தில் அதே உனர்ச்சியை நானும் அடைந்துகொண்டிருப்பதை உணர்ந்து ஆச்சரியமடைந்தேன். எல்லா கதையும் மீண்டும் நிகழ்கிறது. இந்த ரெக்கரிங் தான் மகாபாரதத்தின் தர்சனம் என நினைக்கிறேன். 

வியாசரின் கதை இரண்டுவகையிலே திரும்ப நிகழ்கிறது. ஒன்று  முற்பிறப்பு க்டன் தீர்வது. வியாசர் அவருடைய முற்பிறப்பில் கண்ணில்லாத ரிஷியாக இருந்தார். அதை அவர் ஈடுசெய்கிரார். இன்னொன்று தந்தை செய்வதன் தொடர்ச்சி. பராசரர் செய்வதன் ஈடுஆக இப்போது மக்கள் சாகக்கொடுக்கிறார். இரண்டு வகையான வினைகள் உள்ளன. ஒன்று முற்பிறப்பு அதாவது பிரார்த்தம்.. இன்னொன்று பிதுரார்ஜிதம்


ஸ்ரீனிவாசன்  

காலமின்மை




ஜெ

இமைக்கணம் என்பது காலமின்மை. எதிர்காலமும் அதற்குள் அடங்கும். நாவல் மிகச்சரியாக முதற்கனலில் வியாசர் வந்து பாரதக்கதை சொல்லி தட்சனை விடுவிக்கும் இடத்திற்கு டைவ் அடித்துவிட்டது. ஒருதுளி நஞ்சு மிஞ்சியிருக்கவேண்டும் என்பதுதான் வியாசர் அங்கே சொல்வது. அது அவருடைய தந்தை பராசரருக்கு அவருடைய தந்தை வசிட்டர் சொன்னது. அரக்கர் குலம் முழுமையாக அழியக்கூடாது என்று. இங்கே நாகர்குலம் அழியக்கூடாது என்கிறார். ஒரு துளி மிச்சமிருக்கவேண்டும், ஒரு சொல் எஞ்சியிருக்கவேண்டும் என்று அவர் சொல்வது இதைத்தான்

அருண்

இமைக்கணம்



அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
 

"ஒரு சிறு இடைவெளி" பதிவும், தள முடக்கமும், "இமையத்தனிமை" பதிவும் நடந்து பல வருடங்கள் ஆனது போல் உள்ளது !!.. இமைக்கணம் முழு வீச்சுடன், ஆழத்துடன் செல்கிறது..  

வெண்முரசு படித்துக்கொண்டிருக்கும் போது, பல முறை நாவலுக்கு வெளியே தமிழ் இலக்கிய, அரசியல், சமூக சூழலில் நிகழும் முக்கிய நிகழ்வுகள், சர்ச்சைகள் போன்றவை, அப்பொது வந்து கொண்டிருக்கும் வெண்முரசு தொடரிலும் ஏதோ ஒரு கோணத்தில் கதையின் ஒரு அங்கமாக வருவது போல் தோன்றும்.. தங்களுக்கு இதை பற்றி கேட்க நினைப்பதும் உண்டு.. ஏதோ ஒரு தளத்தில், வெளி உலக நிகழ்வுகள் உங்கள் மனதுள் சென்று புனைவாக கலந்து வெளி வருவது போல....

இப்போதும் இதுவரை வந்துள்ள இமைக்கணம் கதையும், உங்கள் இமையப்பயணம், அதை தொடர்ந்த இமையத்தனிமை பதிவுடன் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது போல் தான் உள்ளது.. குறிப்பாக வியாஸனின் கேள்வி பகுதி.. என் பிரமையா என்றும் தெரியவில்லை.. இவ்வளவு தூரம் தொடர்பு படுத்தக்கூடாது என்று...

இந்த வேளையில் வந்த இந்த உங்கள் பிறந்த நாள் சிறப்பாக அமையவும், தங்கள் பணி மேலும் உச்சத்தை அடையவும், மனம் நிறையவும், மீண்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

அன்புடன்
வெண்ணி

அன்புள்ள வெண்ணி

பொதுவாக வெண்முரசுக்கும் புற்ச்சூழலுக்கும் தொடர்பில்லை. நான் அதை மிகத்தெளிவாகவே இரண்டாகப் பகுத்திருக்கிறேன்

ஆனால் நான் செல்லும் பயணங்கள் பெரும்பாலும் வெண்முரசுடன் இணைந்துகொள்கின்றன. பயனத்தின் நோக்கமே அதுதான்

ஜெ

ஆஜகவம், குருதிச்சாரல்



மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
சில விஷயங்கள்.

1) (சொல்வளர்காடு – 50) மாந்தாதா ஏந்திய வில்லும், (குருதிச்சாரல் – 48) பிருது ஏந்திய வில்லும் ஒரே பெயர் - ஆஜகவம்.

2) கழுகு வடிவ யாகசாலை எவ்வாறு உள்ளது என்று இந்த பக்கத்தை பார்த்து தெரிந்து கொண்டேன்
 http://www.thehindu.com/lf/2004/06/17/stories/2004061701860200.htm

3 ) குருதிச்சாரல் – 48, துரியோதனன் பேசும் பேச்சும், மூதாதை குரு பேசிய  பேச்சும் (குருதிச்சாரல் – 2) ஒரே கருத்தை உடையதாக உள்ளது.

4)  "முதற்கனலில்" - பீஷ்மரின் பிறப்பு - தண்ணீரில் பெற்றெடுப்பாள்.
இப்போது இதே போல் பல இடங்களில் பின்பற்றுகிறார்கள்.

5) வெண்முரசில் இதுவரை அடுமனையாளர்கள், குதிரை சூதர்கள், பாணர்கள், குகர்கள், கட்டிடம் கட்டுபவர்கள், பந்தல் அமைப்பவர்கள், வியாபாரிகள், ஷத்ரியர்கள், விவசாயிகள் - இவர்களது தொழில் விவரணைகள் வந்திருக்கிறது.
இதுவரை வராதது:- இரும்பு கொல்லர்கள், படைக்கலம் செய்வோர், தங்க கொல்லர்கள், மரவுரி தயாரிப்போர் (இவர்களெல்லாம் தங்கள் தொழில் மூலம் மெய்மை அடைய வேண்டாமா?)


நன்றி.

இப்படிக்கு,
சா. ராஜாராம்,
கோவை.


மனோஹரம்



அன்புநிறை ஜெ,

வியாசன் பெருவெளியின் முடிவிலியிலிருந்து மீண்டு தன் குடிலுக்கு வந்து, யமன் தன் இறப்புத்தொழில் நிறுத்தியதும் நிகழும் பெருந்துயரை, பிரபாவன் தியானிகன் கதையை எழுதத் தொடங்குவது காலம் ஒரு சுழியென நின்றிருக்கும் நைமிஷாரண்யத்தின் அழகு. 

யமன் செய்தொழில் நிறுத்தக்காரணமாகும் அறம் குறித்து உருவான அமைதியின்மையைப் போக்க ஒவ்வொரு உருவாக எடுத்து இளைய யாதவரை அணுகுகிறார்.  வியாச உருக்கொண்டு யமன் பெறும் அறிதலை வியாசன் எழுதும் கதையில் வரும் யமன் கொள்ளும் வினாக்கள் மற்றுமொரு வியாசனை நிகழ்த்தக் கூடும். எண்ணற்ற வியாசர்கள், அவர்களிலெழும் எண்ணற்ற சுகர்கள்.

மனோஹரம் என்னும் வட்டவடிவமான குளிர்ச்சுனையின் உள்ளே வாசகனும் நுழைந்து விட்ட அனுபவம்.

மிக்க அன்புடன்,
சுபா

Tuesday, April 24, 2018

விதைமலர்காடு




அன்புநிறை ஜெ,

எல்லா நாளும் விடிவதும் முடிவதும் உங்கள் எழுத்துக்களோடுதான் எனினும் இன்றைய நாள் மிக இனிது. அவ்வண்ணமே உங்களுக்கும் இந்தப் பிறந்த தினம் இனிமையொடு கழிந்திருக்கும் என நம்புகிறேன். மேலும் பல்லாண்டுகள் மலர்காடென எங்களுக்குள் விதைத்து கனிந்தெழுந்து எங்களை வாழ்த்துங்கள்.

எழுதுவதனைத்தும் தன்னை அறிவதற்கே; எழுதி எழுதித் தன்னையும் தன் வழியையும் இலக்கையும் கண்டடையும் பொருட்டே என்று கூறியிருக்கிறீர்கள். 
நேற்றைய இமைக்கணம் (https://venmurasu.in/2018/04/21/நூல்-பதினேழு-இமைக்கணம்-28/) தங்களை முழுமையாகத் தொகுத்துக் கொள்ளும் வகையெனத் தோன்றியது. 

//ஊழ்கம் உனக்குரியதல்ல. சொல் சுருங்குவது ஊழ்கம். சொல் விரிவது காவியம். உன் மனம் நுரைத்தெழுகிறது. நீ கவிஞன்” என்றார்//

//உனக்குரிய எதையும் எவரிடமும் நீ கோரவேண்டியதில்லை. சொல்லிப் பெருக்கும் உனக்கு ஊழ்கம் ஒருபோதும் அமையாது. சொல்லை முழுதெழவைக்கும் உனக்கு ஊழ்கம் தேவையுமில்லை”//

குரு தந்தையென நின்று உங்களுக்கு உரைத்தது அல்லவா இது. 

மிக்க அன்புடன்,
சுபா

வேங்கை தரிசனம்!




அன்பு மிக்க ஆசிரியருக்கு,

வணக்கம்.


இன்றைய வெண்முரசு [21.4.2018]. என்பது எனக்கு ஒரு மிகப் பெரிய அனுபவம். தங்களின் உள்ளத்தின் நாவுகள் உள்ளிட்ட பதிவுகளைத் தொகுத்துக்கொண்டுதியானம் என்ற ஒரு அறிதல் முறை பற்றிய ருத்துகளைவறையறுத்துக்கொண்டுள்ளேன். . ஆனால் அத்தகைய அறிதல் முறையில் மிகவும்அந்தரங்கமான ஓர் அனுபவநிலையை, மிகவும் அகவயப்பட்ட ஓர் நிலையை புறநிலையில்எழுத்தாக்குவது எந்த அளவிற்கு சாத்தியம்? அவ்வாறு ஆக்கப்படும்போது அதில்புனைவின் நிழல் படிந்துவிடாதா? ஆகிய ஐயங்கள் எனக்குள் வெகுநாட்களாகஇருந்துவந்தன.


அனைத்திற்கும் விடை இன்றைய அத்யாயம். என்ன சொல்வது, ஏதும் செய்ய இயலாமல், காலை முதல் அமர்ந்திருக்கிறேன். இன்றைய அத்யாயத்தைப்பற்றி இவ்வாறு தொகுத்துக்கொள்கிறேன்.உண்மையும் அழகும் முயங்கிய தங்களின்ஆயிரக்கணக்கான பக்கங்களில் இன்றைய அத்யாயம் அந்த உண்மையான அழகான எழுத்துமிகவும் அகநிலையான ஓர் அனுபவ வெளியை எடுத்துரைக்கும் சவாலை எளிதில்கடந்துவிடுகிறது.பார்த்தனின் அம்பு என, அவன் பாகனின் சொல் என!ஊழ்கத்தில் தோன்றும் இருமை அனுபவங்களைத் தங்களின் உள்ளத்தின் நாவுகள்
துணைகொண்டு புரிந்துகொண்டேன். இன்று அதுவே மரமாகவும், புலியாகவும் இருநிலையில் வெளிப்படுகிறது. அதை ஆயிரம் முறை நாங்கள் கடந்தும் கவனிக்கத்தவறிய வேங்கை என்ற ஒற்றைசொல்லின் துணைகொண்டு நிருவியது மீண்டும்சொல்கிறேன், ஒரு சாதனை! இத்தகைய அக எழுச்சியை உள விரிவை தங்களின் அறம்தொகுப்பில் அமைந்துள்ள பெருவலி கதையில் அவர் தரிசிக்கும் இமய ஒளியில்நானும் அடைந்திருக்கிறேன். இத்தகைய இடங்கள் பெரும்பாலும் தர்க்கத்தில்துவங்கும் எழுத்து அதை உதிர்த்துவிட்டு மேற்கிளம்பும் நிலை, எவர் அறிவார்சிறகுகள் இல்லாமலும் பறவைகள் பறக்கக்கூடும்! இது நிகழும் நாளிலேயே படிக்கமுடிந்த எங்களைப் போன்ற பார்வையற்றவர்களுக்கு உதவும் வாசிப்புமென்பொருளைக் கண்டறிந்து உதவிய, அந்த உயர்ந்த இதயங்களுக்கு உளமாற நன்றி
செலுத்துகிறேன்.


எப்போதும் அன்புடன்,


கு. பத்மநாபன்,
குப்பம்.