Wednesday, October 31, 2018

காட்சியும் சொல்லும்


அன்புள்ள ஜெ
 சுசித்ராவின் காவியம்என்னும் கட்டுரை மிக முக்கியமானது.வெண்முரசை பல கோணங்களில் ஆராய்வதற்கான ஒரு வழிமுறையாக இது அமைகிறது. இத்தகைய கட்டுரைகள் வழியாக நாம் புதிய கோணங்களைத் தெரிந்துகொள்கிறோம். நாம் அறிந்த பழைய செய்திகளை சரிபார்த்துக்கொள்கிறோம்.

வெண்முரசு ‘காட்சித்தன்மை’ கொண்டிருப்பதைப்பற்றி அவர் எழுதியிருந்தார். இன்றைய மேலைநாட்டு தீவிர நாவல்களுக்கு எப்படியோ ஜேம்ஸ் ஜாய்ஸின் உலிஸஸ் ஒரு மோல்ட் ஆக உள்ளது. அதைப்போல எழுத எண்ணுகிறார்கள். ஆனால் உண்மையான மந்திரத்தன்மை இல்லாமல் எழுதும்போது அது வெறும் வார்த்தைவிளையாட்டாக ஆகிவிடுகிறது. உண்மையான மந்திரத்தன்மை என்பது உணர்ச்சிச்செறிவிலோ போதைமயக்கத்திலோ ஆவது. அது இவர்களின் பின்நவீனத்துவ விலகல் மனநிலையிலே கிடையாது. ஆகவேதான் வெறும் மூளைக்கட்டிகளை இலக்கியமாக எழுதுகிறார்கள். அவை அக்கடமிக் சர்க்கிளுக்குள்ளாகவே முடிந்துவிடுகின்றன.

வெண்முரசு விரிந்த பரப்புடைய நாவல்தொடர். ஆகவே எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ள இதற்குள் இடமிருக்கிறது. நீலம் முழுக்கமுழுக்க உச்சாடனத்தன்மை கொண்ட நாவல். மந்திரம்போல வார்த்தையாகவே ஒலிக்கும் பல பகுதிகள் இந்நாவல்களில் உள்ளன. காட்சிவடிவில் துல்லியமாகக் காட்டும் பகுதிகள் உள்ளன. ஸீரோ நெரேஷனாக சும்மா சொல்லிப்போகும் பகுதிகள் உள்ளன. கதைகளை பல்வேறுவடிவில் சொல்கிறது இந்நாவல். எல்லா சொல்முறைக்கும் இதற்குள் இடமிருக்கிறது. காமிக்ஸின் தன்மைகொண்ட பகுதிகளும் பல உள்ளன. எதிர்காலத்தில் பல பகுதிகளை கிராஃபிக் நாவலாகக்கூட ஆக்கலாமென நினைக்கிறேன்
 சந்திரசேகர் 



சூழ்கைகள்



உக்ரதர்சனர் மெல்லிய கசப்புடன் புன்னகைத்து “இந்தப் போரில் நான் கற்றது ஒன்றே, எந்தச் சூழ்கைக்கும் இணையான சூழ்கை உண்டு. ஆகவே எச்சூழ்கைக்கும் எப்பொருளும் இல்லை” என்றார் என்றவரியை நானும் நினைத்தேன். பலவகையான வியூகங்கள் போரில் போடப்படுகின்றன. ஆனால் எதிர்த்திசையிலும் அதேபோல போர்வியூகங்களை அமைக்கிறார்கள். அதேபோல கடுமையாகப் போரிடுகிறார்கள். அதோடு அர்ஜுனன் பீஷ்மர் போன்றவர்களை எந்த வியூகமும் கட்டுப்படுத்துவதுமில்லை. அப்ப்டியென்றால் வியூகங்களுக்கு என்ன அர்த்தம்? எந்த அர்த்தமும் கிடையாது. அவை ஒரு முன் திட்டங்கள் மட்டும்தான். எல்லா திட்டமும் போர் ஆரம்பித்ததுமே அப்படியே கலைந்துபோய்விடுகிறது. போர் பெரிய ஒரு கலைவுச்செயல்பாடாகவே நிகழ்கிறது

பாஸ்கர்

மண்ணும் விண்ணும்



ஜெ

பாண்டவர் சபையில் நடக்கும் போர் ஆலோசனையில் ஒரு விஷயத்தைக் கவனித்தேன். நான் இதைச் சரியாகக் கவனித்தேனா இல்லை என் கற்பனையா என்று தெரியவில்லை. ஷத்ரியர்கள் மாண்ட செய்தி வந்தபோது அவர்கள் விண்புகுந்தார்கள் என்று வாழ்த்துக்குரல் எழுகிறது. அசுரர்களும் பிறரும் மாண்ட செய்தி வரும்போது அசுரர்கள் அவர்கள் மண்ணுக்குள் வாழ்வார்கள் என்ற வாழ்த்துக்குரலை எழுப்புகிறார்கள். இந்த வேறுபாடு அவர்கள் நடுவே இருந்துகொண்டே இருக்கிறது. இது ஒரு முக்கியமான விஷயம் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. ஏற்கனவே மகாபலி பற்றியெல்லாம் வெண்முரசில் வரும்போது அவர்கள் வேர்கள் போலவும் புதைந்து முளைக்கும் மரங்களைப்போலவும் மண்ணுக்குள் வாழ்கிறார்கள் என்ற பெரிய சித்திரம் அளிக்கப்பட்டது


டி.கார்த்திகேயன்

விழிநீர்



நான் விழிநீர்களுக்கு முன் அறிவிலாதோன்” என்றார் இளைய யாதவர். 


என்ற வரி இறுதிமுடிப்பாக வந்தது ஓர் உலுக்கு உலுக்கிவிட்டது. நான் கோயில்களுக்குப்போகும்போதெல்லாம் பார்த்திருக்கிறேன். அத்தனைவகையான பாபங்களிலும் கிடந்து உழலும் கூட்டம் வந்து கைகூப்பி கண்ணீருடன் நின்றிருப்பார்கள். தெய்வங்களுக்குத்தெரியாதா? இது என்ன வேஷம் என்று நினைப்பேன். ஆனால் தெய்வங்கள் கண்ணீருக்குமுன்னால் அறிவில்லாத குழந்தைகள் என்ற புரிதல் ஒரு கணத்தில் இந்த வரியால் உருவானது. நாம் அறிந்த பெரியவர்களேகூட அப்படித்தான் இருக்கிறார்கள். நம் தாயும் தந்தையும் அப்படித்தானிருக்கிறார்கள். தெய்வமும் அப்படித்தானே இருக்கமுடியும்? கண்ணன் சொல்லும் அந்த வரி கீதைவரிபோல தோன்றியது.

சகோதரக் கொலைகள்




இனிய ஜெயம் 

இன்று அனிலை முன் பீஷ்மரின் வில் தாழும் போது மொத்த திசை தேர் வெள்ளத்தின் உணர்வு நிலையும் ஒரு வரிசையில் வந்து நின்று விட்டதுபுனைவில் பல பலிகள் ,பலவித உணர்வு நிலைகள் சுழித்தாலும், புனைவின் உணர்வு தளம் கொஞ்சம் கூடுதலாக குவிவது சகோதர பலிகள் மீதேஅன்று நகுல சகாதேவனை காக்க அர்ஜுனன் சல்யர் வசம் பேசும் கணத்தில் துவங்குகிறது அது .   

நேற்று துரியன் கூறிய பார்வையால் துளைக்கும் வண்ணம் சகுனியை பார்த்துக்கொண்டே கடந்து செல்கிறான் . அந்த பார்வைக்கு ஒரே பொருள்தான் .நூறு தம்பியர் புடை சூழ பிறந்தவனாக நீ இருந்திருந்தால் ,இன்று இங்கே வந்து நிற்கும் விழைவை,உன்னில் கண்ட அந்த விழைவை,என்னில் ஏற்றி இருப்பாயாபெருங்கருணை கொண்ட பெரு வேழம் அவன் .ஆகவேதான் ,சகுனி தனக்கு அளித்ததை அவன் ருக்மிக்கு அளிக்காமல் ருக்மியை திருப்பி அனுப்புகிறான் .

பாவம் பீஷ்மருக்கு அந்த வாய்ப்பே இல்லை . பீஷ்மர் வில் மீண்டும் மீண்டும் தழைகிறது யார் முன்னால்சாத்யகி பீஷ்மர் முன் நிற்கையில் வெளிப்படையாகவே அது சித்தரிக்கப்படுகிறது .பீஷ்மர் வில் தாழ்த்துவது தனது சகோதர பலியை தனது கையால் நிகழ்த்த இயலாது என்பதால்தான் . பால்கிகர் ,பீமன் முன் வில் தாழும் காரணம் அவர்கள் தனது ஆடிப்பிம்பம் என்பதால்தான் . அவரால் சகோதர படுகொலை நிகழ்த்த இயலாது ,தானே போன்றஒருவனையும் கொல்ல,இயலாது ,முற்றிலும் பீஷ்மனே என முன்னால் நிற்கும் ஒருவரையும் அவரால் கொல்ல முடியாது .

பீமனுக்கும் பீஷ்மருக்கும் என்ன ஒரு ஒற்றுமை .இருவருமே தன் பொருட்டு என ஒன்றை செய்யாதவர்கள் , இருவருமே அன்னையர் கொண்ட நஞ்சின் செயல் வடிவம் , இருவரும் இன்று களத்தில் நின்று கொன்று குவிப்பது ஒரே ஒரு பெண் மீது கொண்ட காதலால் . திரௌபதி மீதான வென்ற  காதல் பீமனை இங்கே வந்து நிறுத்தி இருக்கிறது .அம்பை மீதான வெல்லாத காதல் பீஷ்மரை இங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது .

இதோ இன்று குருதியாடும் சிம்மமென நிற்கும் பீஷ்மர் முன் , குருதி சுவைத்து நிற்கும் அணிலை அம்பை மட்டும் தானாஅங்கே நிற்கும் பீஷ்மரின் தலைகீழ் வடிவம் கூடத்தானேபுறத்தில் யார் பீஷ்மரோ ,அவருக்கு இணையாக அகத்தில் வாழும் பீஷ்மர் எழுந்து நிற்கிறார்

தனக்குள் வாழும் பெண் வடிவான திரௌபதியை வெல்ல இயலாமல் வீழ்ந்த வகையில் தானே துரியன் இங்கு வந்து நிற்கிறான்பீஷ்மர் கை தளாராமல் வேறு என்னதான் நடக்கும்

கடலூர் சீனு