Wednesday, June 29, 2016

பெண்நிலை



அன்பின் ஜெ,
         வெண்முரசின் ஒரு முக்கிய தருணம்.
   "பெண்ணை உரிமைகொள்ள ஆணுக்கென்ன தகுதி? அறிவிலியே, அவள் கருவில் உறைகின்றது எதிர்காலம். எவரைப் பணயம் வைத்தான் இவன்? அவள் கருவில் பிருதுவும் பரதனும் யயாதியும் ராகவராமனும் மீண்டும் எழவிருக்கிறார்கள் என்றால் அவர்களும் கருவிலேயே அடிமைகள்தானா? அவர்களை இந்தப் பகடைக்களத்தில் வைத்தாட இவனுக்கு உரிமையளித்தது எந்த தெய்வம்? பிரம்மனிடம் படைப்பாடும் பெருந்தெய்வமா இவன்? பேதை! பெரும்பேதை!”
      எத்தனை நுட்பமான கூற்று.ஆம் இது பாஞ்சாலியின் கதை மட்டுமன்று.காலங்காலமாய் நிகழும் காட்சி.மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன்.தருமனும் சகுனியும் ஆடும் பகடைகளும் பாஞ்சாலியை அவைக்குள் இழுத்து வருவதும் பல வடிவங்களில் பார்த்த வாசித்த காட்சிகள்.நீங்கள் எப்படி கொண்டு வருவீர்களென்று நான் எண்ணியிருந்தேனோ ஏறத்தாழ அப்படியே வந்திருந்தது.மாயையும் கிருஷ்ணையும் அசலையும் எல்லாம் அவளே.ஒட்டுமொத்தமாக எல்லாப் பெண்ணும் ஏதேனும் ஒரு தருணத்தில் உணர்வதே.உலகின் எவ்விடத்திலும் பெண் உணர்வதே.இதனை மிகையாக உருவகிக்காமல் இயல்பாகவே கூற எண்ணுகிறேன் .பிலாக்கனங்கள் அல்ல.என்றென்றுமான மானுடத் துயரத்தின் ஒரு காட்சி.ஏன் இது என்ற வினாவிற்கு எவர் விடை கூற இயலும்.மிக வலுவான அத்தியாயங்கள்.என்னை இழுத்துக்கொண்ட வாசிப்பு.
நன்றி
மோனிகா மாறன்.