Wednesday, June 3, 2015

கௌளம்



இனிய ஜெயம்,

தனிமை ஆயிரம் பல்லாயிரம் சுவர்களை எழுப்பிக்கொண்டு தலைவாயிலைத் திறந்திட்டு காத்திருக்கிறது.

நினைக்க நினைக்க இதழ் இதழாக சிந்தனைகள் விரியும் துவக்கம். அங்கு துவங்கி ஏகத் தீவபத்தின்  அத்தனை  குனிகர்க்கரின் சொல்லில்  முடிவில்  முழு வடிவம் கொள்கிறது.

ஆம் வர்ணிக்கப் பட்டவை அனைத்தும் மதலை கண் வளரும் கருவறையின் சித்திரமே.

 “இவ்விடம் இத்தருணம். அன்னைக்கருபீடம் அளவுக்கே இது என்னுடையது. ''

குனிகர்க்கர்  சொல்லில்  உள்ளே எதோ புரண்டு அசைந்தது. அந்தராத்மாவால் ஒவ்வொரு மானுட உயிரும் விழைவது என்ன. இதுதான்.    அன்னைக் கருபீடம்  போல  அனைத்துமான ஓரிடம்.

அங்கு விளைந்த வைரம் கர்ணிகை.

பிரம்மத்தை முழு முதல் அன்னையாகக் காண்பது  அனேகமாக தேவி உபாசனையின்  உத்திர கெளல மார்க்கம் என யூகிக்கிறேன்.[புகை மூட்டம் போல இதில் சில தகவல் மட்டுமே அறிவேன்] அதில்தான்  சக்தி தானே தன்னை சுகித்துப் பரவிப் பெறுகியதே இந்த பிரபஞ்சமும் உயிர்களும்.

பூர்வ கௌல்லத்தில் சிவமும் சக்தியும் ஆடும் ஆடலின் விளைவே இந்த பிரபஞ்சமும் உயிர்களும்.

கொளல மார்க்கத்தின் இலக்கிய வடிவே, கர்ணிகை முதல் விருத்த கன்னிகை வரையிலான வளர்ச்சியில் காண்கிறேன்.
[என் ஊகம் பிழை எனில் அது இந்த நாவல் வாசிப்புக்கு தவறான துவக்கமாக அமையும். ஆகவே பிழை எனில் திருத்துங்கள்].

பின் வருவது கவித்துவ முடிவு.

அவள் உடலில் இருந்து கூந்தல் வெண்கொக்குகளாகச் சிறகடித்து எழுந்து பறந்தது. அவள் விழிகள் இரு சிறு கரிக்குருவிகளாக எழுந்து மறைந்தன. இதழ்கள் பட்டாம்பூச்சியாக காற்றில் மிதந்தன. முலைகள் இரு கனிகளாக மெல்ல உதிர்ந்தன. கருப்பை ஒரு முயலாக மாறி அக்காட்டில் துள்ளி ஓடியது. அவள் தசைகள் உருகி வழிந்தன

இயற்க்கை எய்துதல் எனும் சொல்லின் அழகியல் வடிவம்.

மீண்டும் வாசிகக் வேண்டும். 

கடலூர் சீனு