Tuesday, June 30, 2015

காதலில் பெருகும் பெண்ணின் அகங்காரம்


பாமா கண்ணனிடம் காட்டும் ஊடல் மற்றும் அலட்சியம் தேவைதானா? ஏன் அவனின் அதி மேலான தன்மைகளை அறிந்தும், அவன் அவளுக்காக மிக அரிய பணியை செய்த போதிலும் அவள் இவ்வாறு நடந்துகொள்கிறாள்?  இதற்கு காரணமாக நான் கருதும் ஒரே விஷயம்  அவள் ஒரு பெண் என்பதே.
ஒரு பெண்ணை மணந்துகொள்ள ஆணுக்குதான் போட்டிகள் வைக்கப்படுகின்றன. ஆண்தான் தேடி தேடி தன் துணையை அடையவேண்டியுள்ளது. பெண்ணின் கைபிடிக்க போர்கள் நடைபெற்றுள்ளன. தன்னை மணம் முடிக்க ஒருவன் தன் உயிரை பணயம் வைக்கவேண்டும் என்பதை ஒரு பெண் இயல்பாக ஏற்றுக்கொள்கிறாள். புலியுடன் போரிட்டு அதன் நகங்களை பதக்கமாக கொணரச்செய்கிறாள். முரட்டுக்காளையின் கூரிய கோம்புகளை பிடித்து அடக்கச்சொல்கிறாள். யாராலும் தூக்கமுடியாத அம்பிலே நாணேற்றச் சொல்கிறாள்.   தன் காலடியில் சேவகனாய் இருக்கவைத்து மகிழ்கிறாள். இந்த நவீன காலத்திலேயே நாம் காண்பது என்ன. பெண்ணை வெளியில் அழைத்துச்செல்லும் ஒருவன் அதை தன்னுடைய பெருமையாக கருதவேண்டும் என அவள் நினைக்கிறாள். அவன் கார் கதவை திறந்துவிடுவது, இருக்கையை அவளுக்கு ஒழுங்குபடுத்துவது, மேலங்கியை வாங்கி வைப்பது, அவளின் எண்ணமறிந்து அதற்கேற்ப பேசுவது, சொல்வதை சரியாக புரிந்துகொள்வது, சொல்லாததையும் யூகித்து சரியாக புரிந்துகொள்வது என அவன் ஒரு ஏவலாளியாக நடந்துகொள்ளவேண்டும் என எதிர்பார்க்கிறாள்.  இது ஏன் இப்படி? இந்த அகங்காரம் ஒரு பெண்ணிற்கு இயல்பாகவே அமைவது எப்படி?  இது வெறும் காதல் நாடகம் அல்ல. இது மனம் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயமல்ல என நான் கருதுகிறேன்.

  இதைப்புரிந்துகொள்ள இந்தக் காட்சியை நான் கற்பனை செய்து பார்க்கிறேன். ஒரு மென் சதுப்பு இருள் பெருவெளியில் லட்சக்கணக்கான வீரர்கள் வந்திறங்குகின்றனர். அச் சதுப்பு வெளியில் தவழ்ந்து தவழ்ந்து  தன் தேடலை ஆரம்பிக்கின்றனர். அதில் ஆயிரக்கணக்கானோர் மட்டுமே நிகழ்தகவின்படி சரியான திசையில் செல்லமுடிகிறது.  அதிலும் நூற்றுக்கணக்கானோர் மட்டுமே அடையவேண்டிய இடத்தை அடைகின்றனர். அந்த இடத்தில் ஒரு நிலவு தேய்ந்தும் வளர்ந்தும் காணும் ஒரு முழு சுழலில் சில தினங்கள் மட்டுமே ஒரு இளவரசி வந்து வீற்றிருப்பாள். ஒருவேளை இவர்கள் வரும் நாட்களில் இளவரசி இருப்பாளானால் ஒரே ஒரு வீரனை தன்னோடு இணைத்துக்கொள்ளும் வாய்ப்பிருக்கிறது.  மற்ற அனைத்து வீரர்களும் மாய்ந்து போவார்கள். இந்த ஒற்றை இளவரசியை அடைவதற்கான இந்த மிகச்சிறிய வாய்ப்பிற்கு  பல லட்சக்கணக்கான வீரர்கள் தன் உயிரைக்கொடுக்க விழைகின்றனர் என்றால்  அந்த இளவரசிக்கு எத்தகைய ஆளுமை இருக்கும், அதனால் அவளுக்கு எவ்வளவு அகங்காரம் கூடியிருக்கும் என நினைத்துப்பாருங்கள்.  ஒரு பெண், பெண்ணாய் இருப்பது இந்த இளவரசிகளின்  சுயவர நிகழ்வுகளுக்காகத்தான். ஆகவே அந்த இளவரசிகளின் அகங்காரம், ஒரு பெண்ணின் மனப்போக்கில், அவளுடைய ஆணுடனான உறவில் பிரதிபலிக்கச் செய்கிறது. அதனால் ஒரு பெண் காதலில் கொள்ளும் அகங்காரம் சரியெனவே தோன்றுகிறது. அந்த இளவரசிகளுக்காக தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் பல லட்சக்கணக்க வீரர்களை தோற்றுவிக்கும் ஆண் அந்தப்பெண்ணிற்கு ஏவலாளிபோல் அவள் காலடியில் இருப்பது ஒன்றும் பொருத்தமற்றதாகவும்  தோன்றவில்லை.
   

தண்டபாணி துரைவேல்