Monday, June 29, 2015

நாசிம்ம கீதை


ஒரு நாள் ஒரு அத்தியாயம் என்ற கணக்கு நமக்கு ஒத்துவராது என்பதை நீலம், பிரயாகை போதே அறிந்தேன். திருப்பதி பெருமாள் கோவிலுக்குள் கொடுக்கப்படும்  குட்டி லட்டு போல, உடனே முடிந்து விடும்அதனால் அடுத்த முறை குறைந்தது 10 அத்தியாயமாவது வந்த பின்பே படிக்க தொடங்க வேண்டும் என்று முடிவு செய்தேன். (அப்படியே ஜெ சார் எண்ணியதை போல ஆனால் வேறு திசையிலிருந்து :) ) நீலம் என்ற மந்திர சொல் அவரை எப்படி ஆட்டுவிக்கிறது என்பதை அறிய முடிகிறது. வரிகளின் இடையில் நிறைந்திருக்கும் பொருளை கண்டு சுவைப்பது ஒரு வழியென்றால், வரிகளாய் படர்ந்திருக்கும் விவரணைகள் சுவைப்பது ஒரு வழி. கூர்மையான அவதானிப்பு ஒரு புறம், அன்றாடம் நாம் காண்பதை வானத்தில் தீட்டி ஓவியமாய் காண்பிப்பது மறுபுறம். இப்பொது தான் திரு சீனு அவர்கள் "அறிதல்" "புரிதல்" என்ற பதங்களை விளக்கி எழுதியதை வாசித்தேன். விஞ்ஞானம் புரிந்து கொள்ளும்மெய்ஞானம் அறிந்து கொள்ளும். கீழ்கண்ட வரியை படித்து படித்து நெகிழ்ந்து போனேன்
"குறுநுரைகள் எழுந்த நெற்றியில் விழுந்த மழை குறுமயிர்ப் பிசிறல்களை வெண்பளிங்கில் கீறல்கள் போல் படிய வைத்தது."
இந்த காட்சியை எண்ணிலடங்கா முறை நாம் பார்த்திருப்போம் ஆனால் நான் இதை அறிந்தது இப்போது தான்.  அதே போல் 

"மண் கரைந்து செங்குழம்பாகி, நாகமென வளைந்து, சுருண்டு மடிந்து ஓடிவந்து, அவர்கள் காலடிகளை அடைந்து மண்கரைத்துத் தழுவி இணைந்து ஓடையாகி சரிவுகளில் குதித்திறங்கி பட்டுமுந்தானையென பொழிந்து யமுனையின் கருநீர்ப்பெருக்கில் விழுந்து செம்முகில் குவைகளாக எழுந்து பின் கிளைகளாக பிரிந்து ஒழுக்கில் ஓடியது மழைப்பெருக்கு."

மழையின் பயணக்கட்டுரை சுருக்கமாய் செறிவாய் சொல்லப்பட்ட வரிகள்

வெண்முரசில் நான் வியப்பது எல்லாம் எப்படி இவரால் கடுகின் முதுகின் நுனியை கூட ஞாபகம் வைத்து அதை இலக்கிய பூதக்கண்ணாடி  வழியாக காட்ட முடிகிறது என்பதை தான். எந்த ஒரு விஷயத்தையும் கவனிக்காது செய்வது ஒரு ரகம், உற்றுநோக்கி ( )கவனித்து செய்கிறேன் என்ற பேரில் அதன் பின்னால் உள்ள சுவையை தவற விடுவது மத்திமம், உற்றுநோக்கி ஆனால் அதன் சுவையை உணர்வது பூரணம் - அதுவாகவே ஆகி விடுதல். வெண்முரசில் வரும் கிருஷ்ணன் அப்படி தான் இருக்கிறான்

படைப்பை உருவாக்கும் போது எப்படி உணர்ந்தீர்கள் () உணருவீர்கள் என்பதை போல் அபத்தமான கேள்வி இருக்க முடியாது. ஆனால் அதை கேட்காமல் இருக்க முடியாது, அதற்கு பதில் ஒன்று சொன்னாலும் அது முழுமையாய் இராது. நம் தலைவர் மொழியில் சொன்னால், சொற்களாய் ஆன பின்பும் எஞ்சியிருக்கும் சொல்லின்மை

அதே போல், சியமந்தக மணியை கொண்டு வந்து சேர்க்கும் கிருஷ்ணன் சொல்லபவை தற்கால அரசியலும் கொள்ளத்தக்கது 

"ஒவ்வொரு குடியும் தனிப்பெருமை பேசுவதை துவாரகையின் யாதவர் பெருமன்றம் ஒரு போதும் ஒப்பலாகாது. பன்னிரு குலமும் எண்ணிலா குடியும் கொண்ட யாதவப் பெருந்திரள் ஆழி, வெண்சங்கு இரண்டையும் ஏற்று ஆவளர்குன்று ஒன்றே இறையெனத் தொழுது ஒன்றானால் அன்றி இங்கு வென்று நகர் கொண்டு வாழ முடியாதென்றறிக! "

ஆண்ட பரம்பரை என்று அரற்றி கொண்டும், மொழியின் பெருமையில் மனிதத்தை மறந்தும் நடக்கும் நிகழ்கால இந்திய சமூகத்தின் நிலை கண் முன் வந்து செல்கிறது

இறுதியாய், பிரசேனர் மரணம் ந்ருசிம்ம கீதாஉபதேசம். "விழைவு ஓடும் குருதியில் ஆணவம் கொழுநெய்... முன்பொருமுறை இத்தகைய நறுங்குருதியை உண்டேன்" என்று போகும் தொடர் இந்த சொல்லில் முடிகிறது "அனைத்தறங்களையும் கைவிடுக! என்னையே அடைக்கலம் கொள்க!

ஸர்வதர்மாந்பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ
அஹம் த்வாம் ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸுச:  


இன்று வரை வந்ததை படித்து முடித்து சில நேரம் கைத்தட்டி கொண்டே இருந்தேன். பாமாவின் மனதை அந்த கிருஷ்ணன் அறிந்தை போல்,இதுவும்  நம் ஆசான் செவிகளை சேரும் என்று நினைப்போமாக