Thursday, September 3, 2015

தீராநட்பு

திரு. ஜெ,

"திருஷ்டத்யும்னன் தன் பிடியை இறுக்கிவிட்டு கையை இழுக்க முயல சாத்யகி மீண்டும் ஒருமுறை பற்றி இறுக்கினான்."

அந்த நண்பர்கள் இருவரும் கொண்ட நட்பின் ஆழத்தையும், அந்நட்பினை பிரிய விழையாத தன்மையையும், அந்தப் பிரிவு அளிக்கும் பெருந்துயரையும், அந்தத் துயர் பெருக்கும் உள்மனப் போராட்டத்தையும், அப்போராட்டத்தைச் சமன் செய்ய முயற்சித்து, விழிபெருக்கத் துடிக்கும் நீரையும், நீர் வழியாமல் அடக்கி நிற்கும் உறுதியையும் நமக்கு ஒருசேர காண்பிக்கிறது சாத்யகியின் மீண்டும் பற்றி இறுக்கிய அந்த அன்பின் இறுக்கம்.

துவாரகையை விட்டு நீங்கும் மனவேதனை திருஷ்டத்யும்னன் மட்டும் அனுபவிப்பதாகத் தோன்றவில்லை.  நாம் அனைவரும் அவ்வேதனையை உள்ளத்தில் உணர்வதாகவே உள்ளது.

"ஒருகணம் உளஅதிர்வொன்றை அவன் உணர்ந்தான். அவன் அதைவிட்டு விலகுவதாகத் தோன்றவில்லை, அணுகிக்கொண்டிருப்பதாகவே தோன்றியது. விழிகளை மூடி மூடித்திறந்து அந்த உளமயக்கை வெல்ல முயன்றான். அவ்வெண்ணம் கற்பாறையில் செதுக்கப்பட்டதுபோல நின்றது. அவன் அதைநோக்கித்தான் சென்றுகொண்டிருந்தான்."

"இளையோனே, ஒவ்வொன்றின் ஊற்றுமுகமும் அதன் மையமே தான்" என்று இளைய யாதவர் சொல்வது போல், திருஷ்டத்தும்னன் இங்கு இப்போது பயணத்தை ஆரம்பிக்கிறான். ஒரு சுற்று முடித்து இங்குதானே வந்தாக வேண்டும்.  அப்படி துவாரகையும், இளையயாதவரும் அவனின் மையமாய் இருக்கையில் அவன் நெருங்குகிறானன்றி, பிறிகிறான் என்பது ஏது.  

கணபதி கண்ணன்