Monday, December 7, 2020

களிற்றியானை நிரை - கண்ணி நுண் சிறு தாம்பு




களிற்றியானை நிரையின் போக்கு மெல்ல மெல்லத் தெளிவாகி வருகிறது. ஒரு புது மக்கள் தொகை ஒரு நாடாக தன்னை உணர்ந்து உருவாவதன் சித்திரம். யானைகள் நிரை நிரையாக வருவது போல புது மக்கள் வரிசை வரிசையாக களிற்றுநகரிக்கு (ஹஸ்தினபுரி) வருகிறார்கள். இனி அவர்களை மேய்க்கும் பாகர்கள் அந்த களிறுகளை அறிந்து அவற்றை மேய்க்கும் திறனை எய்தவேண்டும். 19 ஆம் பகுதியில் யானையைப் பழக்குவதைப் பற்றிய சாரிகரின் 'யானைகளைப் பழக்குவது என்பது யானைக்கும் அதை பழக்குபவர்களுக்கும் இடையே ஒரு பொதுவான மொழியை உருவாக்குவது மட்டும் தான்.'  என்ற கூற்று முக்கியமான ஒன்று. யுயுத்ஸுவை அவர் அந்த மக்கள்திரளின் மொழியைக் கற்றுக் கொள்ளச் சொல்கிறார். அவர்களுடன் இணைந்து அம்மொழியை அறிந்து, அவனுக்கும் அவர்களுக்குமிடையே ஒரு உரையாடலை ஏற்படுத்தச் சொல்கிறார். அவர் அம்மக்கள் திரளை ஒரு பெருங்களிறாக உருவகிக்கிறார். அதை பழக்கி எடுத்து ஆளச் சொல்கிறார். பழக்கி எடுத்த யானையைத் தளைக்க கட்டப்பட்ட காலை அழுத்தக்கூடிய கண்ணிகள் நிரம்பிய ஒரு சிறு தாம்புக் கயிறு போதும். அரசனுக்கும், மக்கள் நிரைக்கும் இடையேயான ஒரு பொதுவான மொழியில் உருவாகும் நெறிகள், முறைமைகள் மற்றும் சட்டங்கள் தான் அப்பெரும் களிற்று நிரையையே கட்டி செலுத்தப் போகும் கண்ணிநுண் சிறு தாம்பு, இல்லையா!!!

 

ஆனால் அத்தாம்புக் கயிரைக் காட்டியது யார் என்பது தான் முக்கியம். அறியாதவர் காட்டினால் மதமிளகும். ஏறி மிதித்துச் சென்று விடும் அக்களிறு. அதே கயிறை அன்னை கட்டினால் அந்த முதல் பெரும் பரம்பொருளும் கூட கட்டுண்டு விடும் அல்லவா. யசோதையின் கட்டில் உரலுடன் கட்டுண்ட வெண்ணைக் கண்ணனைச் சுட்டிய மதுர கவியாழ்வாரின் பிரபந்தத்தின் முதல் அடிக்கு இப்படி ஒரு விரிவான சித்திரம் எழுந்து வரக்கூடும் என நினைக்கவில்லை ஜெ.  நிச்சயம் வெண்முரசின் காவியச் சுவை ததும்பும் பகுதிகளில் ஒன்று என இப்பகுதியைத் தயங்காமல் சொல்லலாம்.

 

அன்புடன்,

அருணாச்சலம் மகராஜன்