Monday, April 6, 2015

இரண்டு இளைஞர்கள்




ஜெ

கலைடாஸ்கோப் உருமாறுவதுபோல வெண்முரசு திரும்பிக்கொண்டு இன்னொரு வகை நாவலாக மாறுவதை ஒவ்வொருமுறையும் திகைப்புடன் மட்டுமே வாசிக்கிறேன். அந்த அனுபவம் முதலில் வந்தது வெண்முரசின் வண்ணக்கடலில்தான் பிறகு வந்துகொண்டே இருக்கிறது. இந்த நாவலில் பூரிசிரவஸ் வந்தபோது நாவல் ஒரு இளமைச்சாகசக்கதையாக மாறியது

அவன் ஏன் வருகிறான் என்பதை இப்போது புரிந்துகொள்ளமுடிகிறது. பாண்டவர்கள் கௌரவர்கள் ரெண்டு தரப்புக்குமே வயதாகிவிட்டது. அவர்களால் இனிமேல் இளமைத்துள்ளலுடன் இருக்கமுடியாது. இருதரப்புமே வஞ்சமும் கோபமும் கொண்டுவிட்டார்கள். இனிமேல் அவர்கள் தத்தளிப்பதும் கனவுகாண்பதும் முடியாது

அந்த இளமைப்பருவத்தைத்தான் பூரிசிரவஸ் சாத்யகி இருவரும்  ரொப்புகிறார்கள் என்ற எண்ணம் வந்தது. பூரிசிரவஸ் அர்ஜுனன் மாதிரியும் சாத்யகி கர்ணன் மாதிரியும் இருக்கிறார்கள். இருவருடைய குணச்சித்திரமும் இரண்டுவகை. ஆனால் இளமையின் கனவுகளோடு இருக்கிறார்கள்

பூரிசிரவஸின் கனவுகள் ஒவ்வொன்றாக கலைவது வருத்தமாக இருக்கிறது. ஆனால் அது விதி மட்டும் அல்ல. அவனுக்கே எங்கும் நிலையில் நிற்கமுடியாமல்தான் இருக்கிறது. புத்திசாலி. ஆனால் உணர்வுரீதியாக நிலையற்றவன் ஆனால் சாத்யகி நிலையானவன் உறுதியானவன்

ஆனால் என்னமோ பூரிசிரவஸைத்தான் ரொம்பப்பிடித்திருக்கிறது. ஏன் என்று சொல்லத்தெரியவில்லை

ராம்சுந்தர்