Wednesday, April 29, 2015

தூய சிரிப்பு


திரு. ஜெ,

"யுதிஷ்டிரன் துடித்த உடலுடன் முன்னால் பாய்ந்து துரியோதனனை அள்ளி தன் நெஞ்சுடன் அணைத்துக்கொண்டான். “என்ன இது? எதையாவது நான் சொன்னேனா?” என்றான். துரியோதனன் விழிகளில் கண்ணீர் நிறைந்திருந்தது. “தந்தையின் கையால் அடிவாங்கியபின்னர்தான் நான் நிறைவுடன் துயிலத் தொடங்கினேன் மூத்தவரே. நான்…”

அது நிகழாது என்று அறிந்திருந்தும், இந்த அனைத்துச் சகோதரர்களும் இப்படியே அன்புடன் மட்டுமே இருந்து மகிழ மாட்டார்களா என்ற ஏக்கத்தை எம்முள் விதைத்துச் செல்லும் வித்தை ஜெயமோகன் கை எழுதுகோலுக்கு மட்டுமே ஏற்றதாகக் தோன்றுகிறது.

"அவர்கள் மிகையாகவே ஒலியெழுப்பி சிரித்தனர். சிரிப்பதற்கான சிரிப்பு. உவகை என்பதற்கு அப்பால் வேறு பொருளே இல்லாதது."

ஆழ்ந்த வரிகள்.  சிரிப்பு எவ்வாறு இருக்கவேண்டும் என்பதைக் காட்டுகின்ற சிரிப்பு. உவகையன்றி வேறு எந்த உள்நோக்கமும் இன்றி சிரிக்கும் சிரிப்பு எல்லோருக்கும் எப்பொழும் வாய்க்கிறதா என்பது பெரும் கேள்விக் குறியே !

கணபதி கண்ணன்