Sunday, February 17, 2019

கருபுகுதல் 2



அன்புள்ள ஜெ

கருபுகுதல் என ஒரு வாசகர் எழுதிய கடிதத்தை வாசித்தேன். நானும் அந்தப்புரிதலை அடைந்திருந்தேன். ஆனால் அது சரிதானா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. வாசியை பாம்பாகச் சொல்லும் வழக்கம் உண்டு. மூலாராதத்தில் குண்டலினியையும் பாம்பாகச் சொல்வார்கள்.

துளியெனச் சிறுத்து மேலும் மேலும் சுருங்கி அணுவென்றாகி ஆழத்தில் பெருகிக்கிடந்த இருளில் கரிய உருவங்களாக நிறைந்திருந்த மாநாகங்களில் ஒன்றின் செதில்மலையின் ஒரு சிறு இமைப்பொளியாக பதிந்தான். அங்கே அவன் தன்னை என்றுமிருப்பவனாக உணர்ந்தான்

என்ற வரி அதைத்தான் காட்டுகிறது என நினைத்தேன் அவன் அஞ்சிச் சுருங்கி கருவறைக்குள் செல்வதாகத் தோன்றியது. ஆனால் அதைவிடப்பொருத்தமானது அவன் தன் செயலின்மையை உணர்ந்து தன்னை திரும்பவும் கருவறைக்குள் இழுத்துக்கொள்கிறான் என்பது

அதை கனவாகவும் எடுத்துக்கொள்ளலாம். ஏனென்றால் கனவுக்குள் செல்வதை கருவுக்குள் செல்வது என நம் மரபு சொல்கிறது. சுஷுப்தி என்ற வார்த்தை இரண்டுக்கும் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது


மகேஷ்