Monday, February 18, 2019

களம்



அன்புள்ள ஆசிரியருக்கு,

ஒரு மனிதனின் மரணத் தருவாயில் அவன் வாழ்க்கை மொத்தமும் அவன் கண் முன் ஓடும் என்பார்கள். 

இந்தப் போர்க்களத்தில் நாம் ஓரளவு அறிந்தவர்களின் மரணங்கள், நாம் அறிந்த அளவுக்கு அவர்களது வாழ்வை நினைவூட்டுகிறது. அப்படிப் பார்க்கையில் நாமும் ஒவ்வொரு முறையும் இறந்து இறந்து பிறக்கிறோம். அத்தனை இறப்பிலும் நாமும் பங்கு பெறுகிறோம். உத்தரனில் துவங்கியது அது.

அந்த குரூரமான வலியைத் தாள இயலாமல் தான் ஜெமோ பயணங்கள் சென்று தன்னை நிலைப்படுத்திக் கொண்டு வந்தார்.

இன்றைய சலனின் மரணத்தில், அவன் பூரிசிரவஸிடம் பால்ஹிக நாடு வளர வேண்டிய அவசியத்தையும் அதற்காக வகுக்கும் திருமண வியூகங்களும் நினைவுக்கு வந்தன. ஆனால் இன்று ஏன் இவர்களது போரில் மலைமக்களான தாம் பங்கேற்க வேண்டும் என்ற மனநிலைக்கு வந்து விட்டான். 

இரு காரணங்கள். ஒன்று, அவன் அன்றிருந்த இளையவன் இல்லை. முதியவன் ஆகி விட்டான். எனவே இயல்பாக 'இதெல்லாம் போதும்' என்ற மனநிலை. வயதானபிறகு இங்கு எதிலும் ஈடுபாடு இல்லாத போது மனம் மரணத்தைப் பற்றி சிந்திக்கத் துவங்குகிறது. மூத்தோர், முன்னோர் என்று கவலைகள் வருகின்றன. திருதராஷ்டிரரும் ஒருமுறை அதையே சொல்கிறார்.

இரண்டாவது, போர் செல்லும் பாதை. அவர்கள் எதிர்பார்த்தது போல் எளிதாக முடியவில்லை. வெற்றியும் தோல்வியும் மாறி மாறி ஆனால் இழப்புகளுடன் வருகின்றன. எளிய வெற்றி தான் என்று எண்ணியவர்கள் என்பதால் ஏற்படுகின்ற இழப்புகள், பேரிடிகளாக இவர்களுக்குத் தெரிகின்றன. எனவே முன்பு சத்ரியர்கள் நினைத்தது போல் 'போதும். வெளியேறி விடலாம்' என்று எண்ணுகிறான்.

மேலும் இழுத்துக் கொண்டே போகும் போரின் சலிப்பு. அந்த சலிப்பே இல்லாமல் இருப்பவன் அந்தப் போர்க்களத்திலேயே ஒருவன் தான். அவனோ போரில் பங்கேற்காத ஒருவன். 

வெற்றி தோல்வி என விளைவுகளின் கரணமாக செயல்கள் மாறுகின்றன. அவற்றைப் பற்றிக் கவலைப்படாவிட்டால் செயல் சிறப்பாக நடக்கிறது என்பதை பூரிசிரவஸ் காட்டுகிறான் இன்று. ஆம், கீதையின் சாரமே தான்.

கீதையைப் புரிந்து கொள்ள ரத்தம் வழிந்துப் பெருகியோடும் பெரும்போர் நடக்க வேண்டியிருக்கிறது. 

களத்திலோ, உளத்திலோ.

நன்றிகள்,

வசந்தகுமார்