Friday, March 1, 2019

கண்ணன் தரிசனம்




ஜெ

வெண்முரசில் எல்லாரும் சாவின் கணத்தில் இருப்பதனால் அவ்வப்போது சில தரிசனங்களை அடைகிறார்கள். குறிப்பாக கிருஷ்ணனைப்பற்றிய தரிசனத்தை பலர் அங்கே அடைகிறார்கள். அதில் துருமன் அடையும் தரிசனமும் முக்கியமானது என நினைக்கிறேன். அவன் தன் இடத்திலிருந்து தேரோட்டுவதும் கிருஷ்ணன் தான் என்பதைக் காண்கிறான். துருமனின் கதாபாத்திரம் சாதாரணமாக ஓர் அத்தியாயத்தில் வந்துசெல்வது. அவனும் கண்ணனே என்பது ஒரு மையமான பார்வையாக வென்முரசிலே உள்ளது

எம்.ராஜேந்திரன்

சாயல்




அன்புள்ள ஜெ

வெண்முரசில் பூரிசிரவசின் சாவு என்னை கலங்கச்செய்தது. நீண்டநாட்களுக்கு முன் வாழ்விலே ஒருமுறை என்ற சிறிய நூலில் நீங்கள் ஒரு நிகழ்ச்சியை எழுதியிருந்தீர்கள். அதில் உங்கள் உயிர்நண்பன் ராதாகிருஷ்ணன் தற்கொலைசெய்துகொண்டதும் அவன் ஆசிட் குடித்து வலிப்பு வந்து இறந்ததனால் அவன் உடலில் ஆண்குறி எழுந்து நின்றது என்றும் போஸ்ட்மார்ட்டம் டேபிளில் அது கூடாரம்போல தெரிந்தது என்றும் எழுதியிருந்தீர்கள். அதை வாசித்து கலங்கினேன். அதே சித்திரம்தான் இங்கேயும் என்ற எண்ணம் ஏற்பட்டது. மனம் கலங்கிவிட்டது. நீங்கள் பூரிசிரவஸின் கதாபாத்திரத்தில் விளையாட்டுத்தோழனாகிய ராதாகிருஷ்ணனை எழுதியிருப்பிர்கள் என நினைத்துக்கொண்டேன்

செல்வன் மகாலிங்கம்

நாக்கு



அன்புள்ள ஜெயமோகன் சார்.

கார்கடலின் 66ம் அத்தியாயம் "நாக்கிலே சனி" என்பதற்கு சிறந்த உதாரணம். மாபுருஷர்கள் அனைவரும் அவ்வளவுதானா ? என எண்ண வைத்தது. "தமிழ்நாட்டுக்கே நாக்கில் தான் சனி " எனும்போது இவர்களின் வெறுப்பை புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் ஒன்றுதிரட்ட வெறுப்பை கக்கி வெறி ஏற்றி எவ்வளவு நேரம் போரிட முடியும்? உணமையிலே இவர்களுக்கு செயல் சலிப்பூட்டுகிறது என நினைக்கிறேன். சலிப்பே இல்லாத இளைய யாதவர் இருக்கும் படை சுற்றி சுழல்கிறது.நஞ்சு குடித்தவன் பாண்டவபடையில் குலாந்தகனாக போரிட்டுகொண்டிருக்கிறான். நஞ்சு என்னும் சொற்களை வைத்துகொண்டு  கவுரவபடையினர்  தங்களுக்குள் பூசலிடுகின்றனர். ஆவநாழியில் தூங்குவது அம்பில் மட்டும் அல்லாமல் வார்த்தைகளிலும் வெளிபட்டு சென்று தைக்கிறது. அந்தணராகிய கிருபரை கூட கர்ணன் ரத்தகொதிப்புக்கு தள்ளுகிறான். அந்தண, ஷத்ரிய, சூத  குலங்களின் தன்மைகள் எல்லாம் காற்றில் பறக்கிறது.வெறும் வஞ்சதிற்க்காய் களத்தில் நிற்கிறார்கள். கர்ணனின் வீழ்ச்சி திடுக்கிடவைக்கிறது. மாமலையாய் மனதுக்குள் இருந்தவன் மண்ணாய் பறக்கிறான். 

துரியோதனனும்  எப்போதும் ஊழுக்கே அறைகூவிகொண்டிருக்கிறான். துரியோதனன்  "“எந்தப் போரும் ஊழுக்கு எதிரானதே. ஊழே வெல்லும் என்றால் நிமித்திகர்களே எவர் நாடாள்வது என்று முடிவெடுத்தால் போதும்” என கூறும்போது அவன் மீது பரிதாபமே எழுந்தது. வேறு என்னதான் செய்ய? கவுரவபடையினர் இனி பாண்டவபடையில் எதாவது பெரும் ஓட்டையை ஏற்படுத்தவிடால் இப்படி வெந்தே இறந்து விடுவார்கள். வெண்முரசில் அவ்வப்போது மனிதர்களின் குணங்களை குறித்து அழுத்தமாய் சொற்கள் தெறிக்கும் ,கிருபர் கூறும்" அந்தணர் சொல்லால் வீரர், வணிகர் சூழ்ச்சியால் வீரர், சூதர் கனவுகளில் வீரர் என்று கூற்று உண்டு. நீ உன் ஆணவப்பேச்சை நிறுத்தி ஊன்விழிகளால் களத்தை பார். அதன்பின் உன் ஆற்றலை உணர்ந்து எதிரியை கணக்கிட்டு களம் நின்று போரிடு”  என கூறியதை குறித்து வைத்திருக்கிறேன். மனிதர்களை தனித்தனியாய் அளக்க முடியாது என்றாலும் பொதுவாய் அளந்து  முன் செல்ல. வாழ்க்கைக்கு எனக்கு வழிகாட்டும். கவுரவபடையினர் ஊன் விழிகளை தொலைத்து விட்டார்கள் என நினைக்கிறேன். அனைவரும் மனதில் உள்ள வேறு எதோ நம்பிக்கைக்கு போரிடுகிறார்கள்.ஆனால் மாபெரும் குருஷேத்திரத்தில் இரவில் ஊன்விழி வழிகாட்டுமா?  அல்லது மனதின் வேறு விழிகள் அவர்களுக்கு தேவைபடுகிறதா? 

ஜெயமோகன் சார், சொற்களில் நச்சு சேர்ப்பவனின் மனம் நன்றாய் எனக்கு தெரியும். ஏன் என்றால் அவர்களில் நானும் ஒருவன். செயல் இருக்கும், இலக்கு இருக்கும் ஆனால் அடிமனதில் ஆழ்ந்த கசப்பு ,எதன் மீதே என்று தெரியாத கசப்பு " இருந்துகொண்டே இருக்கும். அனைத்தையும் அது அழிக்கும்.அச்சமும் தயக்கமும் தாழ்வுணர்ச்சியும் கொண்டது.தன்னை உயர்த்தி அடத்தவனை கீழாய் பார்க்கும் அகம்பாவத்தில் தொடங்குவது அது. அஸ்வத்தாமன் உத்தரபாஞ்சாலனை "பேடி " என கூற சஞ்சயன் கூறுகிறான்  "ஒரு சொல்விடாமல் அனைத்தும் எவ்வகையிலோ உள்ளே சென்று சேர்ந்துள்ளன. அந்த ஆவநாழியை அவன் அறிந்ததே இல்லை. ஆனால் நா அறிந்திருந்தது. தேவையென்றபோது இயல்பாகச் சென்று உரியதைத் தொட்டு எடுத்தது. கொலைநச்சு கொண்டது. எரிந்து எரிந்து எழுவது" என. எவ்வளவு உண்மை. சும்மா அன்பு காட்டுகிறவன் மீது எல்லாம் அவன் மீது வெறுப்பை கக்க சொற்களை பொறுக்கி ஆவநாளியில் சேர்க்கும் குணத்திற்கு என்ன பொருள்?. ஆனாலும் நேருக்கு நேர் பொருதும்போது  அவன் நானே என கண்டுகொள்கிறேன். நச்சு சொற்களின் பயன்கள் அடுத்தவனை அறிவது என்றால் அது அறமா? அல்லது  இளைய யாதவன் எதையாவது வைத்திருப்பானா? இங்கிருந்து தான் அனைவரும் "நான்" என்று உணரும் தன்மை தொடங்குகிறதா? .ஐந்து மலங்களும் வெளியேறிய பின்தான் விடுதலை என்றால்? அதற்குதான் கிருஷ்ணன் " பயனை எதிர்பாராமல் செயல்புரி " என்கிறானா? 


கர்ணன் நேற்று தர்மனை நச்சால் கொன்றான் இன்று சகதேவனை.எவ்வளவு நாட்களாய் இந்த நச்சு சொற்களை சேகரித்து "நாகமணி" ஆக்கிவைத்திருப்பான். இப்படி அனைவரையும் நச்சு சொற்களால் கொல்வதுதான் கர்ணனின் விடுதலையா? .நாக அஸ்திரத்தின் இருள்.

ஸ்டீபன் ராஜ்

Thursday, February 28, 2019

ஒரு தளம்



நண்பர்களுக்கு,

வெண்முரசை தொகுக்க இதுவரை எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து எனக்கு அறிமுகம் கிடையாது.

இந்த நிகழ்காவியத்தை தொகுப்பது ஒருவர் இருவரால் தனது வாழ்நாளில் இயலும் காரியம் அல்ல. ஒரு கூட்டு முயற்சியாக மட்டுமே இதை மேற்கொள்ள இயலும். 

ஏழு புத்தகங்கள் மட்டுமே உள்ள Harry Potter புத்தக வரிசையின் ஒரு விக்கி தளம் இதோ: https://harrypotter.fandom.com/wiki/Main_Page

16,000க்கும் மேலான பக்கங்கள் உள்ளன. அத்தனையும் வாசகர்களால் எழுதப்பட்டவை. ஹாரிபாட்டரின் ஒவ்வொரு கதாபாத்திரம், ஒவ்வொரு மந்திரச்சொல், ஒவ்வொரு இடம் என அனைத்தை பற்றியும் தகவல்கள் இங்கு தொகுக்கப்பட்டுளது. 

இதுப்போல் ஒரு விக்கிதளம் வெண்முரசுக்கும் அவசியம். ஹாரிபாட்டரை விட பன்மடங்கு பெரியது, மேலும் செறிவானது வெண்முரசு. இந்த ஒப்பிடல் கூட தவறுதான். ஆனால், விக்கியின் அவசியத்தை விளக்க மட்டுமே ஹாரிபாட்டருடன் ஒப்பீடு. 

 வெண்முரசில் உள்ள ஒவ்வொரு கதைமாந்தர், ஒவ்வொரு நிகழ்வு, ஒவ்வொரு இடம், குறிப்பிட்டுள்ள கலைகள் குறித்தும் ஒரு பக்கம் அவசியம். 

முதலில், ஒவ்வொரு நாவலுக்கும் ஒரு பக்கம் அமைக்க வேண்டும். 

முதல் பிடி மணலாக, https://venmurasu.fandom.com/ta/ என ஒரு விக்கி பக்கத்தை தமிழ் விக்கிபீடியா பக்கத்தின் உள்ளடக்கத்தை கொண்டு தொடங்கியுள்ளேன். 

Fandom / wikia தளத்தில் நண்பர்கள் அனைவருமே கணக்கு தொடங்கி இந்த விக்கியை edit செய்ய, பக்கங்களை சேர்க்க இயலும். 

நான் மிக மிக மெதுவாக எனக்கு தெரிந்த தகவல்களுடன் இந்த முயற்சியை முன்னெடுத்துக் கொண்டு தா இருப்பேன். 

அனைவரும் ஒரு பிடி மண் இட்டால் மிக விரைவில் ஹாரிபாட்டரின் 16,000 பக்கங்களை தாண்டி செல்ல இயலும். கதை மாந்தர், அரசுகள் குறித்த சிறு குறிப்பே சில ஆயிரங்களை தொடுமென எண்ணுகிறேன்.

Requesting all of you to kindly take it forward. 

நன்றி,


லாஓசி. 

வெற்றி



ஜெ

தனியாக நின்றிருக்கும் ஒரு வரி இது. அந்த சந்தர்ப்பத்தை கடந்து இந்த வரியை வாசித்துக்கொண்டேன்

அவர்கள் வஞ்சத்தால் வெல்லப்பட்டார்கள். பின்னர் ஒருங்கிணைவால் வெல்லப்பட்டார்கள். இறுதியாக மெய்யறிவால் வெல்லப்பட்டார்கள். வரலாற்றில் எப்போதுமே வெற்றி அம்மூன்று நிலைகளில் அவ்வரிசையில்தான் நிகழ்கிறது.

எப்போதும் அவ்வரிசையில்தான் நிகழ்கிறது என்ற இடம்தான் இவ்வரியின் உச்சம்

ராஜ்

கர்ணன்



அன்புள்ள ஜெயமோகன் சார்,

கார்கடல் 65ம் அத்தியாயத்தில் கர்ணனின் தவிப்பு என்னையும் ஆட்கொண்டது. இரு அன்னையருக்கு வாக்கு கொடுத்துவிட்டு தடுமாறி கொண்டிருக்கிறான். நாககுழந்தை ஆவநாளியில் அனல் என இருக்கிறது. ஆனால் எதிரில் நீலவண்ணனும் அர்ஜுனனும். எத்தனை தடவை வாழ்க்கையில் இருவரும் மோதி இருப்பார்கள். ஒரு தடவை கூட கர்ணன் வெற்றி பெற்றதே இல்லை. ஆனால் இது அவனது களம். ஊழ் குந்திவடிவில் வந்து தடுமாற வைத்துவிட்டது. பொங்கி பொங்கி சாகிறதுதான் சிலரின் ஊழ் போலும். இப்படி ஒரு கதாபாத்திரத்தை விவரிப்பதே எவ்வளவு பெரிய சவால்.அர்ஜுனனும் கர்ணனும் போரிடுவதை பார்க்கும்போது மனதுக்குள் நானும் காண்டீபத்தை எடுத்துகொண்டு இரண்டுபேரையும் எதிர்கொண்டு குருஷேத்திரத்தை விட்டு துரத்திவிட வேண்டும் என வெறி ஏறியது.  ஆனாலும் நுட்பமான வேறுபாடுகள் நிறைத்தது.இதற்குமுன் கர்ணன் நட்பாலோ இல்லை  அவமானதாலோ , இயலாமையிலோ தோல்வியை தழுவுவான். குருஷேத்திரத்தில் ரத்த உறவுக்கே மதிப்பு இல்லை என்னும்போது  குலமாவது கோத்திரமாவது. கடோத்கஜன் எல்லாம் வெற்றிவாகை சூடுகிறான்.ஆனால் கர்ணன் அனைத்து அஸ்திரங்களும் இருந்தும் எதையும் பயன்படுத்த முடியாமல் கை கட்டபட்டு நிற்கிறான். நாகபாசம் எல்லாம் கிருஷ்ணரின் ஒரு சிறிய விலகலில் விலகி செல்கிறது. அதற்கான காலகட்டம் முடிந்துவிட்டது. ஆனாலும் அது கர்ணனின் கையில் போய் சேர்க்கிறது. ஊழி ஊழியாய் இருக்கும். வெண்முரசு,செய்யபட்ட எந்த ஆயுதமும் அழிவதே இல்லை, அது தனக்கான ஆட்களை அடையும் என்றே கூறுகிறது. கர்ணனால் இப்போது செய்யமுடிந்தது யுதிஷ்டிரரிடம் “செல்க! இங்கு வீணாக தலைகொடுத்து அழியவேண்டாம். அந்தத் தலை குருதிபடிந்த இம்மண்ணில் உருளும் அளவுக்கு எடைகொண்டது அல்ல” என்று ஏளனம் உரைப்பது மட்டும்தான். "யுதிஷ்டிரர் கண்களில் சீற்றத்துடன் பற்களைக் கடித்து ஒரு கையில் வில்லும் இன்னொரு கையில் அம்பும் செயலற்றிருக்க நோக்கியபின் தலைகுனிந்து பாகனிடம் தன் தேரை திருப்பும்படி ஆணையிட்டார்" என வாசிக்கும் போது கொஞ்சம் சந்தோஷமாயிருந்தது. தர்மவானை திட்டும்போது ,மனகாயபடுத்தும் போது ஆனந்தம் அடையாதவன் யார்?


 வாசகர்களாகிய எங்களின் எரிச்சல்தான் துருமனின் எரிச்சல்.  திடீர் என கர்ணனின் உறவுகள் போர்க்களத்தில்,போர்முனையில் விவரிக்கபட்டது  பெரும் சர்பிரைஸ் ஆக இருந்தது. வெய்யோனில் கூட வரவில்லை.  அதிரதன் கூட மூத்து, மறுபிறவி எடுத்து கனிந்து விட்டார். 

ஸ்டீபன் ராஜ்