Tuesday, October 30, 2018

துரியோதனனின் இரட்டை ஆளுமை




அன்புள்ள ஜெ

வெண்முரசின் உச்சங்களில் ஒன்று துரியோதனன் சொல்வது. அவன் சகோதரப்போரைப்பற்றிச் சொல்லும்போது அறிவது எளிது. அதிலேயே உணராதவர்களுக்கு தெய்வங்கள் உணர்த்தும் என்கிறான். தெய்வங்கள் உணர்த்திவிட்டன என்பதே அதன்பொருள். மிகத்தளர்ந்து அழிந்துகொண்டிருக்கும் துரியோதனனின் சித்திரத்தை இங்கே பார்க்கிறோம். துரியோதனனின் ஆளுமை இரண்டு அம்சங்கள் கொண்டதாக இந்நாவல் முழுக்க உள்ளது. ஆணவமும் ஆசையும் கொண்ட ஒருவன். ஒரு அற்புதமான மனிதன். இரண்டு ஆளுமைகளில் எது எப்போது மேலே வரும் என்ற மர்மம் தான் அவனுடைய குணாதிசயம். 

பெரும்பாலான முரடர்களில் இந்த அம்சம் இருப்பதை நான் கவனித்திருக்கிறேன். என் மறைந்த அப்பா இப்படிப்பட்டவர், அவருக்குள் ஒரு நல்ல கனிந்த மனிதர் உண்டு. அவர் நமக்கு ஒரு கிரைஸீஸ் என்றால்தான் வெளிப்படுவார். மற்றபடி அவர் மிகமோசமான முரடராகவே என் ஞாபகத்திலே பதிந்திருக்கிறார். துரியோதனன் ஒரு பெரிய மிதிக்கல் கதாபாத்திரமாக இருக்கும்போதே நம் ஞாபகத்தில் நிஜமாய் கண்ட மனிதர்களை ஞாபகப்படுத்துபவராகவும் இருப்பதுதான் ஆச்சரியமானது

ஆர். செந்தில்ராஜ்