Saturday, August 29, 2015

கண்ணன் என்னும் கள்மரம்.



பிள்ளையார் என்று ஒரு கடவுளும், குமரன் என்று ஒரு கடவுளும் இருக்கிறார்கள். இருவருமே தூக்கி கொஞ்சும் குழந்தைகள்தான். பிள்ளையார் என்னும்போது அது நாம் பெற்ற பிள்ளை நம் மடியில் எந்த அலங்காரமும் இல்லாமல் வந்து உட்கார்ந்து இருக்கிறது என்பதுபோல் உள்ளது. நாம் எழுந்துக்கொள்ளும்போது அது நழுவி நம் காலைக்கட்டிக்கொள்ளும் என்ற உணர்வு தோன்றுகின்றது. குமரன் என்னும்போது அது நாம்பெற்ற பிள்ளைாயாக இருந்தாலும் நம் தலைக்குமேல் உட்கார்ந்துக்கொண்டு அண்ணாந்துப்பார், அதுவும் இந்த இடத்தில் நின்று, இப்படி அண்ணாந்துப்பார் அப்பத்தான் நான் தெரிவேன், நான் உனக்காக மட்டும் அங்கு உட்கார்ந்து இருக்கவில்லை, ஊருபூராவும் பார்க்க உட்கார்ந்து இருக்கிறேன் என்பதுபோல் உள்ளது. அதன் புன்னைகையில் நம்பிள்ளை என்று அள்ளநினைக்கும்போது ஊருக்கே பிள்ளை என்ற பயம் அதன் விழி அசைவில் வந்துவிடுகின்றது. அந்த மரியாதை இல்லாமல் அதை அணுகமுடியில்லை.

கண்ணனும், பிள்ளையாராக குமரனாக வந்து நிற்கின்றான். பிருந்தாவனத்தில் இவன்தான் பிள்ளையாராக இருந்தான் என்று நினைக்கும்போதே துவாரகையில் நான் குமரன் என்றே காட்டிச்செல்கின்றான். என் பிள்ளை வீட்டுக்கு வராத ஊரார் பிள்ளை என்றாகிவிட்ட தவிப்பை ஏற்படுத்துகின்றான். என்பிள்ளை என்ற ஆவலோடு நெருங்கும்போதே, ஊரார் பிள்ளை என்று தள்ளி நிற்கும் தவிப்பை ஏற்படுத்திக்கொண்டே இருக்னிறான். தேவகி, ரோகினி, யாசோதைக்கு இந்த பிள்ளையார், குமரன் என்ற நினைப்பு எழுந்து நெஞ்சடைத்தாலும் சாத்யகிக்கு அது பெரியவிஷயம் இல்லை ஆனால் சாத்யகி அடைவது முற்றும் புதுப்புது சங்கடம். 

சாத்தியகி போன்ற நண்பனுக்கு கண்ணன் அரசன் என்ற இடத்தில் நிற்கும்போது தொழும்பன் என்ற மரியாதை வந்துவிடுகின்றது. எவ்வளவு அணுக்கமாக சென்றாலும் கண்ணன் சற்றுத்தூரமாகவே சென்றுக்கொண்டு இருக்கிறான். ஒவ்வொருப்புறப்பொருளும் கண்ணனுக்கும், தனக்கு இடைவெளி என்றே ஆக்கிச்செல்கிறது. சியமந்தகமணி அதன் உச்சம். அது கண்ணனுக்கும் தனக்கும் இடையே உள்ள தூரத்தை வெகுவாக அதிகரிக்கிறது. சியமந்தகமணியின் சக்தியே அதுதான். தன் ஆணவத்தால் அதை கவர்வதன் மூலம், கண்ணனுக்கும் தனக்கு உள்ள இடைவெளி குறையும் என்று அறியமையால் அதை கவரும் சாத்யகி, சியமந்தகமணி கண்ணனிடம்  இருந்து துரத்தியே விடுகின்றது என்பதை அறிகின்றான். ஆணவத்தின் பயன் நிலை குலைய வைக்கிறது. 

“நீயே நான், நானே நீ” என்னும் அத்வைதியாக ஆகும்வரை அவனுக்கு அந்த இடைவெளி இருந்துக்கொண்டுதான் இருக்கும். ஆணவம், மாயை, கன்மம் என்னும் மும்மலம் நீங்கும் வரை இந்த “நீயே நான், நானே நீ” என்னும் தரிசனும் கிடைப்பது இல்லை. இந்த வேற்றுமை இருக்கும்வரை பரபிரம்ம தரிசனம் கிடைப்பது இல்லை. ஞானமார்க்கம் அங்கு வழிக்கிவிடுகின்றது. சமவயது உடைய சாத்யகியால் கண்ணணை குழந்தையாகவோ, அல்லது கண்ணனை தந்தையாகவோ கொண்டு சற்புத்திர மார்க்மும் அமைக்கமுடியாது.  

சாத்யகி தொழும்பன் குறி ஏற்றுக்கொண்டு, தன்னை கண்ணனின் தொண்டன் என்று எண்ணிக்கொண்டு தாசமார்க்கத்தில்தான் நின்றான். தாசமார்க்கத்தின் முதல் எதிரியாகிய ஆணவம்த்தூண் வளர்ந்து அதன்மீது ஏறும் பாதள நாகம் விடம் கக்கி அவனை சாய்க்கிறது.

இறுதியாக அவனுக்கு கிடைத்தது சகமார்க்கம். எளியமார்க்கம், கீழ்மேல் பார்க்காத மனம், நன்று தீ என்று கொள்ளாத குணம், குறிப்பாக மூம்மலங்களோடு ஏற்றுக்கொள்ளும் இடம். தன்னை மறக்கும்போதே இந்த நிலை வருகின்றது. என்றும் இன்பம் உற்சாகம் களி என்ற நிலைவரும்போதே இது ஏற்படுகின்றது. பலம் பலகீனம் எதையும் மறைக்காத நலைவரும்போது இது தழைக்கிறது. இதற்கு ஒருபோதைவேண்டும், செயற்கையாக தன் அகங்காரத்தை மழுங்கடிக்கும், சுய அறிவை மறைக்கும் ஒரு போதை வேண்டும், அது நட்பென்னும் போதை. அது விண்ணை தலையில் சூடி, பாதளத்தை உருஞ்சும் நட்பென்னும் பனைமரத்தில் விளையும் போதை, சாத்யகி கள்ளுண்டு அந்த இன்ப மயக்கத்தில்  தன்னை மறந்து கண்ணனின் சகன் என்று கண்டுக்கொள்வது அற்புதம்.

நீ அங்க நான் இங்க இருந்தால் என்ன? உனக்கும் எனக்கும் இடையே தடையாக இருப்பது இந்த புறக்காட்சிகள் தான், அதை நான் காட்சியாகவே வைத்து விட்டு, உள்ளத்தால் எனது உணர்வால் மட்டுமே இணைகின்றேன் என்று செய்கிறது அந்த போதை. இதோ இதுதான் நான், எனது வாசமும், நாற்றமும் உடன் வந்துள்ளேன் என்கிறது. எனது புளிப்பும் இனிப்பும் உடன் வந்துஉள்ளேன் என்கிறது. 

சாத்யகி மயக்கும் கள்ளருந்தவில்லை, நட்பென்னும் இன்கள் அருந்துகின்றான். அவன் நட்பென்னும் இன்கள் நுரைக்க நுரைக்க அந்த நுரைக்குமிழில் வந்து தானாவே விழுகின்றது வான் நீலம்.முதல் கள் முற்றிலும் நுரைத்திருக்கட்டும். அதன் குமிழிகள் அனைத்திலும் வானம் நீலத்துளிகளாக தெரிய வேண்டும். (வாழ்க்கையில் எத்தனையோ முறை சோப்புநுரையில் வானத்தைப்பார்த்து இருந்தாலும், இந்த இடத்தில் ஜெவின் வரி அதிரவைத்துவிட்டது, அதுவும் அந்த வான்நீலம் கண்ணன் என்றுப்பார்க்கும்போது இரத்த நாளங்களில் நீலனின் புரவிகள் ஓடுகிறது)

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் “ஒரு குவளை கள்ளில் உனக்கு போதை வரும் என்றால், குடத்தில் எவ்வளவு கள்ளிருக்கு என்ற கணக்கு உனக்கு எதற்கு?” என்பர்.

சாத்யகி கள்ளைத்துளித்துளியாக உறிஞ்சிக்கொண்டு இருந்தான் என்றவரிதான் எத்தனை உணர்வுகளை தூண்டுகின்றது. குசலன்போல கண்ணனை அப்படியே குடித்துவிடுபவன் கீதை சொல்லலாம். திருஷ்டத்யுமன் போல இருமிடறுகளாக குடிப்பன் கண்ணனின் இருமையை அறியலாம், பலபெண்களின் கணவன், ஆனால் யோகிஸ்வரன், குழல் ஊதுபவன் ஆனால் கழுத்தறுப்பவன், வள்ளல் ஆனால் லாபம்மீட்டும் வணிகன். கன்றுமேய்ப்பவன் ஆனால் உலகின் பேரரசன். 

திருஷ்டத்யும்னன் இருமிடறுகளாக அம்மூங்கில் கோப்பையிலிருந்ததை குடித்து முடித்தான். சாத்யகி துளித்துளியாக அதை உறிஞ்சிக் கொண்டிருந்தான். குசலன் ஒரு முறை கள்ளை கூர்ந்து நோக்கி “ஓம்” என்ற பின் “ஆகுதி ஆகுக!” என்றபடி ஒரே மிடறில் குடித்து குவளையை தரையில் வைத்தான். “இன்கடுங்கள்! விண்ணை தலையில் சூடி மண்ணை உறிஞ்சி நிற்கும் கரும்பனையின் கனிந்த நஞ்சு” என்றான்-இந்திரநீலம்-88

சாத்யகிப்போன்று கண்ணனை துளித்துளியாக குடிப்பன்தான் நண்பனை உணர்கிறான். மயக்கும் கண்ணன் முன்னால் பிறந்தானா? மயக்கும் கள் கொடுக்கும் பனை முன்னால் பிறந்ததா? இரண்டும் கறுப்பாக இருப்பதுதான் கடவுளின் திருவிளையாடல். பிறந்ததில் இருந்துப்பார்த்த பனைமரம் ஏன் கறுப்பாக இருக்கிறது என்று ஒருநாள்கூட நினைத்தது இல்லை இன்று இந்த சாத்யகியும், கண்ணனும் நினைக்கவைத்துவிட்டார்கள் ஜெ.

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.

ஐந்தாவது அதிசயம்.



கன்றுக்கு கனிந்து பால்கொடுக்கும் தாய் பசு. குருளையை கடித்து எடுத்துச் சென்று கருணையோடு காக்கும் புலி. தன்னைப்பற்றி தன்னோடு வரவேண்டும் என்று தருக்கிப்பாயும் குரங்கு. சினத்தால் உண்டு செறித்துவிடும் பன்றி என்று பக்தியின் நான்கு வகையை தொல்நூல்கள் சுட்டுகின்றன.

இந்த நான்கில் ஒன்றைப்பற்றிக்கொண்டு மானிட ஜென்மம் கடைதேறிவிடுகின்றதா? இல்லை, இந்த நான்கு வழியும் பற்றவில்லை. முன்செய் புண்ணிம் இருந்தும், முன்செய் புண்ணியம் இல்லாமல் இருந்தும்,  வினைவழி செல்லும் வாழ்க்கையின் ஏதோ ஒரு புள்ளியில்  மானிடன் சிக்குண்டு உழன்றுக்கொண்டே இருக்கிறான். இப்படி பிறவிப்பெருங்கடலில் உழலும் மனிதனுக்கு கருணைக்கொண்ட அருணகிரிநாத சுவாமிகள் அத்தன்,சித்தன், அப்பன்,குமரபெருமானிடம் இப்படி முறையிடுகின்றார்.

பொற்பதத்தினைத் துதித்து நற்பதத்தில் உற்ற பத்தர்
     பொற்புரைத்து நெக்குருக்க அறியாதே
புத்தகப் பிதற்றை விட்டு வித்தகத்து உனைத் துதிக்க
     புத்தியிற் கலக்க மற்ற நினையாதே 

முற்படத் தலத்து உதித்து பிற்படைத்து அகிர்த்ய முற்றி
     முற்கடைத் தவித்து நிதம் உழல்வேனை
முட்ட இக்கடைப்பிறப்பினுள் கிடப்பதைத் தவிர்த்து
     முக்தி சற்றெனக்கு அளிப்பது ஒருநாளே

வெற்பளித்த தற்பரைக்கு இடப்புறத்தை உற்றளித்த
வித்தக அத்தர் பெற்ற கொற்ற மயில்வீரா
வித்ததை தத்வம் முத்தமிழ்ச்சொல் அத்தம் சத்தம் வித்தரிக்கும்
மெய்த்திருத்தணிப் பொருப்பில் உறைவோனே


கற்பகப் புனக்குறத்தி கச்சடர்த்த சித்ர முற்ற
கற்புரத் திருத்தனத்தில் அணைவோனே
கைத்தரக்கர் கொத்து உகச் சினத்து வஜ்ரனுக்கு அமைத்த
கைத்தொழுத் தறித்துவிட்ட பெருமாளே! -திருத்தணி திருப்புகழ்

நன்றி கௌமாரம்.காம் http://www.kaumaram.com/thiru/nnt0288_u.html

முன்னமே பிறந்தவன் நான், பின்னும், பின்னும், தீவினை செய்து வயதால் சிறியன் என்று வாசல்தோறும் தவித்து உழல்கின்றேன்.

பிறவிப்பெருங்கடலில் இருந்து கடைதேற நான்கு வழி இருக்கிறது இந்த நான்கு வழியில் ஒன்றையும் நான் கடைப்பிடிப்பது இல்லை.

திருஞானசம்பந்தர், திருமாணிக்கவாசகர் போன்றவரை நாடி பசுவென இறைவன் வருகின்றான். லட்சுமணன், காரைக்காள் அம்மை, ஆண்டாள், மீரா போன்றவர்கள் குட்டிக்குரங்கு தாய் குரங்கைப் பற்றிக்கொள்வதுபோல பற்றிக்கொள்கிறார்கள். அன்னை சீதை, பரதன், சுந்தரமூர்த்தி சுவாமிகள் போன்றவரை புலிக்குருளை என அவன் விருப்பப்படி வைக்கிறான். ராவணன், ஹிரண்யன், கம்சன் என்னும் அரக்கர்கள்கூட, இறைவனை பெரும்சினம் கொள்ளவைத்து, பன்றி குட்டியை திண்பதுபோல தங்களை திங்க வைத்து முக்தி அடைந்துவிடுகின்றார்கள்.  

சாத்தியகி போன்ற எளியவர்கள்தான் உலகில் அதிகம்,  இறைவன்கூட இருப்பதுபோலவே இருந்து, இறைவன் தொண்டன் என்று நினைத்தும் தீவினையில் விழுந்து இந்த கடைப்பிறப்பில், அந்த வாசால் படியில் அல்லது வேறுஒரு வாசல் படியில் என்று தவித்து தவித்து கிடந்து கடைதேற வழியின்று நொந்து சாகின்றார்கள். அவர்கள் கடைதேறுவது எப்படி?

இறைவன் கருணைமிகுந்தவன் அவன் மந்தையைவிட்டு பிரிந்த ஆட்டை கைவிடுவதில்லை, அந்த ஒற்றை ஆட்டுக்காக மந்தையையே சற்றுநேரம் விட்டுவிடுகின்றான், மந்தையை விட்டுபிரிந்த அந்த ஒற்றை ஆட்டைத்தேடி தேவக்குமாரன் அலைகிறான்.  கண்டு எடுக்கிறான். அள்ளி தன் நெஞ்சத்தில் அனைத்து முத்தமிடுகின்றான்.

தேவக்குமாரனாக சென்றும் தேடிக்கண்டுக்கொள்ளமுடியாத புதர்மறையும் ஆடாக இருந்தால் விட்டுவிடுவானா? அங்கு ஓநாய் என்றே ஆகின்றான். அவன் அள்ளி எடுத்தும் அனைப்பான், வேட்டையாடி தின்றும் களிப்பான்.  எந்த ஒரு ஆடும்  தனித்து தவித்து அநாதை என்று சாவ அவன் ஒருபோதும் விடுவதில்லை.

ஐந்தாவது வகை ஆசிரியர் ஒருவர் உண்டென்று இப்போதறிந்தேன்என்றான். “எந்தப்புதருக்குள் எவ்வகை வளைக்குள் சென்றொளிந்தாலும் காலடி மணம் முகர்ந்து தேடி வரும் ஓநாய். காத்திருந்து கைபற்றும் வேட்டைக்காரர். அவரிடமிருந்து நான் விழைந்தாலும் விலக முடியாது.-இந்திரநீலம்-87


பகவான் ஸ்ரீராமகிருஷ்ணபரமஹம்சர் நற்குருவை தேடி அடையவேண்டும் என்று சொல்வார். பேருக்கு குரு என்று இருப்பர் இடம் மாட்டி அல்லல்படக்கூடாது என்று சொல்ல வந்தவர் “நல்லக்குரு, ஒரே கடியில் இரையை கொன்று விழுங்கிவிடும் விடம்கொண்டநாகம், அல்லாதவர் என்றால் இரைக்கும் துன்பம், பாம்புக்கும் துன்பம்” என்பார்.


சாத்யகி நீலனை ஐந்தாவதாக அறிவதுதான் அற்புதம். அதுதான் அவனின் புதிய வழி, அவனுக்கு என்று அவன் கண்ட வழி, அந்த வழியில்தான் அவன் நீலனை அடையமுடியும். எத்தனை வழிகள் உலகில் இருந்தாலும், அவரவருக்கு என்று உரிய வழியை அவரவர் அறிவால்தான் அறியவேண்டும், இறைவனும் அவர் அவர் அறிவு அளவுக்கு அறிய கிடைக்கிறான். சாத்தியகிக்கு எங்கு சென்றாலும் மோப்பம் பிடித்து வரும் ஓநாய்போன்று என்று அறிய கிடைத்து உள்ளான். இதைத்தான் அபிராமிப்பட்டர் அன்னை அபிராமி இடம் இப்படி சொல்கிறார்.

கிளியே, கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே, ஒளிரும் ஒளிக்கு இடமே, எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே, வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே.-
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே-அபிராமி அந்தாதி

இறைவன் நம் அறிவு அளவுக்கு அளவாவது அதிசயம்தான். சாத்தியகிக்கு அந்த அதிசயத்தை நீலன் ஒநாய் என்ற சொல்லாகி வந்து கட்டுகின்றான்.  அந்த அதிசயம்தான் உலக அதிசயம், யாராலும் உருவாக்க முடியாத, யாராலும் அழிக்க முடியாத அவரவர் ஐந்தாவது அதிசயம்.  இந்து மதத்தில் ஏன் இத்தனை தெய்வம் இருக்கு? அத்தனை மனிதன் இருக்கிறான். அவன் அவன் அறிவு அளவுக்கு அவன் அதிசய அளவாகிறான். 

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.

Friday, August 28, 2015

மதுசக்கரம்

ஜெ,

இரண்டாம் முறை படிக்கும் பொழுதுதான் சக்கரங்களை கவனித்தேன். 
மித்திர விந்தைக்கு நேர்ந்ததைப் போன்ற கண நேர தடுமாற்றம் தான் சாத்யகிக்கும் நேர்வது, உலகியலுக்கும் ஆன்ம விடுதலைக்கும் நடுவேயான சக்கரம் அனாகதம் என நினைக்கிறன். அந்த தடுமாற்றம் தாண்டியவனுக்கு விசுக்தி. 

மேலும் இப்பொழுது கள்ளே வேறு பொருள் கொள்கிறது.  இன்னும் எத்தனை முறை படித்தால் விளங்கிக்  கொள்ள முடியும் என்று தெரியவில்லை.
 
ஏ வி மணிகண்டன்

எறும்புலகம்

.
முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
    மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்
    பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
    அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்
தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
    தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே-என்கிறார் திருநாவுக்கரசு சுவாமிகள்.
இந்த நிலைக்கு மித்திரவிந்தைப்போன்றவர்கள் எளிதில் வரமுடியுமா?  பெரியாழ்வார் என்னும் விஷ்ணுசித்தருக்கு மகளாக பிறக்கும்  புண்ணியம் இல்லாவிட்டாலும்,  மகளாக வளரும் பாக்கியமாவது கிடைத்தாள், தானகவே முன்னம் அவன் நாமம் கேட்கும் பேறு கிடைத்துவிடும். அந்த நாமத்தின் மகிமையால் அவன் யார்? எங்கு இருக்கான் என்று சொன்னவரிடமே கேட்டுத்தெரிந்துக்கொள்ளமுடியும். அப்புறம் பிச்சியாகிவிடலாம்.

பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் “தெருவில் நடந்துப்போவோர்கள் பார்வை எல்லாம் கீழ்நோக்கியே இருக்கிறது. யாரும் உயரப்பார்ப்பதே இல்லை, காஞ்சினிக் காமினியத்திலேயே உழல்கிறார்கள்” என்பார். உயரப்பார்த்தால் என்ன தெரியும், நீலம் தெரியும், நீலம் தெரிந்தால் அப்புறம் என்ன மண்ணுல வாழ்க்கை?!.

உலகில் நாம் எல்லோரும் மித்திரவிந்தைகள்தானே! மேலே பார்ப்பது இல்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும், நீலமே தெரியாமல் வாழும்படியே பழக்கப்படுகின்றோம். மயில் என்ற ஒரு பறவை இருப்பதுகூட தெரியாது. குழல் இசையை கேட்டதுகூட இல்லை,  இப்படி இருந்தால் என்னாவது?. குருதியை உணவாக்கி குஞ்சுகளை வளர்க்கும் எறும்பாவோம், எறும்பானால் என்ன ஆகும், ஒரு சின்ன உலகம் கிடைக்கும், உலகம் தான் சின்னது ஆனால் அதற்குள் நடக்கும் வாழ்க்கை எந்த காலத்திலும் முடியாத  பெருங்கடல் கலக வாழ்க்கைதான். உண்ணலாம், உழைக்கலாம், ஆளலாம், ஆளப்படலாம், வெல்லலாம், தோற்கலாம், அந்த உலகத்தை விட்டு மீண்டாலும் மீளலாம், மீண்டும் மீண்டும் அதில் பிறந்தே மாளலாம். அந்த உலகத்திலும் ஒளியும் உண்டு, இருளும் உண்டு. அங்கு கூடும் பெரும்திரள்கூட்டம் வென்றவன் தோற்றவன் என்ற இரண்டே எல்லையில் நின்று களிக்கின்றன. அங்கும் நீலன் வருவான். யாரோ ஒருவர் அவனை விண்ணளந்தவன் என்றும், என்றும் தோற்காதவன் என்றும் சொல்வார்கள். அவனையும் அவர்கள் வெற்றித்தோல்வி என்னும் வட்டத்திலேயே சுற்றிவர வைத்து பார்த்து ரசி்ப்பார்கள். அந்த உலகத்திற்குள் மித்திரை பயந்தப்படியேதான் நுழைகின்றாள்.  மூச்சடக்கி அவளும் உள்ளுழைந்து காணும் உலகம், இருளும்,  ஒளியும்  நிறைந்தது. அதில் நுழைய பயம். நுழையும்வரைதான் பயம், நுழைந்தபின்பு அந்த உலகத்தின் துன்பமும் இன்பமென்று காணக்கிடைக்கிறது.  அந்த களிப்பிலும் மித்திரை அங்கு காணும் ஒவ்வொன்றையும் வேடிக்கையெனப்பார்த்துக்கொண்டு விளகி நிற்பது நல்தவம். அந்த விலகி நிற்கும் நல்தவத்தால் கணிகிறது நீலன் தரிசனம் அவளுக்கு,  “யுகங்கள்தோறும் நான் நிகழ்கிறேன்” என்று கீதைக்கிடைக்கிறது. கீதைக்கிடைக்கையில் மித்திரவித்தை விழித்துக்கொள்வது அற்புதம். விழித்துக்கொள்ளதவர்கள் அனைவரும் எங்கோ ஒரு நீள்வட்டக் கூடமொன்றில் கூடி வாழ்க்கையை சமரில்லாத தருணமொன்றில்லை என்று விழியாகனவில் ஆழ்ந்துக்கிடக்கிறார்கள் எறும்பென. எறும்புகள்தான் சிறியவை, எறும்புலகம்  சிறிதா?. அட்சரம் லட்சம்பெறும் கனவு ஜெ.

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.

Thursday, August 27, 2015

நண்பன்

,

ஆழியின் விழி அத்தியாயத்தை இப்பொழுதுதான் படித்து முடித்தேன். ஈரோட்டில் இருக்கும் பொழுது 
கிருஷ்ணன் சொன்னார், சாத்யகியும் சியமந்தகதை எடுத்துக் கொண்டு போவானெனில் 
என்ன பொருள் இருக்கிறது எல்லாவற்றிலும் என்று. இப்பொழுது தோன்றுகிறது அந்த மணி 
பொருள் கொள்வது நம்முடைய அகங்காரத்தில் என்று, அதை அழிப்பதின் வழியாக சாத்யகியை 
சேவகனிலிருந்து தோழனாக உய்விக்கிறான். 

இருவரும்  மாடு மேய்த்து திரிந்த காலங்களுக்குப் பிறகு சாத்யகி வரும்பொழுது கண்ணனை 
அரசனாக உணரக் காரணம் சாத்யகியின் தன்னகங்காரமும் வளர்ந்து இருந்திருக்கும். அதுவே அரசனென்றும் 
சேவகனேன்றும் பிரித்து உணர்ந்திருக்கும். இப்பொழுது அதை சிதற்றுவதன் வழியாக அவனை விடுதலை செய்து விடுகின்றான். இனி அவனும் கிருஷ்ணனும் வேறு வேறல்ல, எப்பொழுதும் குசலன் சொல்லும் சிரிப்புதான். அன்று சாத்யகியை பார்த்து நகைத்த மாளிகைகளுக்கு இன்று அவன் வணக்கம் சொல்லுமிடம் இன்றைய உச்சங்களில் ஓன்று.

கண்ணன் எனதகத்தே கால்வைத்த நாள்முதலாய்
எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்ச்
செல்வம்,இளமாண்பு,சீர்,சிறப்பு,நற்கீர்த்தி,
கல்வி,அறிவு,கவிதை,சிவயோகம்,

தெளிவே வடிவாம் சிவஞானம்,என்றும்
ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கிவரு கின்றனகாண்!
கண்ணனைநான் ஆட்கொண்டேன்! கண்கொண்டேன்! கண்கொண்டேன்!

கண்ணன் என் அகத்தே கால் வைத்த கணத்தில் கண்ணனை நான் ஆட்கொண்டேன், 
கண் கொண்டேன். 

மணி கவர்ந்து வர அனுப்பிய அன்று கண்ணன் இவர்கள் இருவரின் அகத்தே தன கால்களை வைத்து விட்டான். 
இன்று சாத்யகியும் திருஷ்டத்யும்ணனும் கண்ணனை ஆட்கொண்டார்கள். 

ஆர்வியின் கேள்விக்கும் இங்கேதான் பதில் இருக்கிறது என நினைக்கிறேன்.

வேறு எந்த அத்தியாயத்தையும் விட  இது ஏன் இத்தனை நெருக்கமாக இருக்கிறது என்று யோசித்தால் இதில்தான் கண்ணன் நாம் எப்பொழுதும் அந்தரங்கமாக உணரும் தோழனாக வருகிறான். கள்ளின், பொருளற்ற சொற்களின் வழியாக கவிதையின், இசையின் வழியாக தன்னிலை அழிந்து அடையக்  கூடிய ஒரே கடவுள் அவன்தான்.

திருவிழாக்களில் தந்தையரின்  தோள்களில் மைந்தர்கள் அமர்ந்து கொண்டு, அவர் தலையைப்  பிடித்துக் கொண்டு  தெருவில் வரும் தெய்வத்தை பார்ப்பது போல வெண்முரசு எனில் இன்றைய அத்தியாயம் அந்த தெய்வம் நம் அருகே கடந்து போகும் தருணம்.  

ஏ வி மணிகண்டன்

சட்டம் தன்கடமையை செய்யும்



சட்டம் ஒழுங்கு  நாட்டை நலமாக வைக்க உதவுகின்றது. ஆனால், சட்டம் ஒழுங்கு உயிர்ப்போடும், உணர்வோடும் இருக்கின்றதா என்றுப்பார்த்தால் எங்கேயோ இடிக்கின்றது. சட்டம் ஒழுங்கு ஒரு சடம்போல் இருப்பதுதான் நல்ல சட்டம் ஒழுங்கு என்ற நிலைதான் எங்கும் உள்ளது. சட்டம் ஒழுங்கில் உயிர்ப்போ, உணர்வோ ஏறும்போது சட்டம் ஒழுங்கை  பாதுகாக்கவேண்டியர்கள் அனைவருமே பயப்படுகின்றார்கள். ஏன் இந்த உள மயக்கு?.  

நாட்டைக்காப்பாற்றுகின்றேன் என்று சொல்பவர்கள் எல்லாம் சட்டத்தைக் காப்பாற்றுவதே நாட்டைக் காப்பாற்றிவி்ட்டதாக நினைப்பதால் இது எற்படுகின்றது. ஏன் அப்படி நினைக்கின்றார்கள்?    நாட்டு நலம் அல்லது தனது நலன் என்று வரும்போது தனது நலனே நலம் என்று நினைக்கும் சுயநலத்தால் வந்து சேர்வது இது. எனது கடமையை நான் செய்துவிட்டேன் என்று தப்பிக்கொள்ள நாடும் எளிய சுயநலவழியே அது. தியாகம் இல்லாமல் வெறும் கடமை என்று வரும்போதுதான் இந்த சடத்தனம் சட்டத்தில் வந்து ஏறி ஆட்சிச்செய்கின்றது. தியாகம் செய்பவன் முன் சட்டமே தனது சட்டையைப்போட்டுக்கொண்டு வந்து வழி மறைப்பதுதான் சட்டத்தின் சாமர்த்தியம்.

மகிஷ்மதிக்கு கண்ணன் வந்துவிடக்கூடாது என்றுதான் ஒவ்வொரு காவலனும் காவல் இருக்கின்றார்கள். அதை அவர்கள் சரியாக செய்வதுதான் சட்ட ஒழுங்கை காப்பாற்றும்விதம் ஆகும், கண்ணன் வராத வரையும் உணர்வுப்பூர்வமாக ஒழுங்காக இருக்கும் காவல், கண்ணன் வந்துவிட்டான் விரைவு என்னும்போதுதான் தனது உணர்வை இழந்துவிடுகிறது, சட்டம் உணர்வற்று வெறும் சடமாக முன்வந்து நிற்கின்றது.

உலகம் முழுவதும் நாட்டுக்காக, நாட்டு மக்களுக்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள் அனைத்தும், சட்டத்தை காப்பாற்றுவதாற்க மட்டுமே உள்ளன. மக்களையோ நாட்டையோ காப்பாற்றுவதாக இல்லை.  காரணம் அதில் உள்ள  உணர்வு உயிர்ப்பு பாடம் செய்யப்பட்ட பூக்களின் வண்ணமும் வடிவமும்போல் இருப்பதுபோல் தெரியும் ஆனால் பயன்படுவதில்லை.   

சட்டம் தேவையான இடத்தில் சடமாக இருக்கும் நிலையை காட்டும் ரிஷபனின் மனஉணர்வு அற்புதம். ரிஷபன் எரிச்சலுடன் தலை குனிந்து “நல்லது” என்ற இடத்தில் வந்து இயங்க முடியாமல் நிற்கின்றான் நாடே தான் என்று நினைக்கும் உலக தியாகிகள் எல்லாம். உலகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு அந்த நல்லவர்களை எரிச்சல் ஊட்டியபடியேதான் இருக்கிறது. அவர்களும் இயலாமையுடன் அதனிடம் “நல்லது” என்று புலம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள். சட்டத்தை உணர்வு அற்ற சடமாக செய்பவர்கள் எல்லாம் கடமைவீரர்கள் என்று சட்டத்தின் முன் சன்மானம் பெறுபவர்களாக இருக்கிறார்கள். சட்டம் தனது கடமையை செய்யும் என்பது இதுதானா?

ஐயம் கொண்டவனாக கண்களைச் சுருக்கி நோக்கிமுத்திரை?” என்றான் கோட்டைக்காவலன். ரிஷபன் தன் கணையாழியைக் காட்டியதும் அதை மூவர் மாறி மாறி நுண்ணோக்கினர். “விரைவுஎன்றான் ரிஷபன். “விரைவல்ல, இங்கு தேவையானது எச்சரிக்கைதான்…” என்றான் கோட்டைக்காவலன். “நாங்கள் முறைமைகளை விடமுடியாது.” பிறிதொருமுறை நோக்கிவிட்டு ஒருவரை ஒருவர் விழிகளால் தொட்டுக் கொண்டபின் தலைவன் தலையசைத்துசெல்க!” என்றான். எரிச்சலுடன் தலைகுனித்துநல்லதுஎன்றபின் அவன் திட்டிவாயிலினூடாக உள்ளே சென்றான்-இந்திரநீலம்-85.

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்