Friday, October 2, 2015

பலிக்கொடை:


  ஏழு நாகர்கள் தன்னை சுயபலிகொடுத்துக்கொள்ளல் என்  நெஞ்சை அதிர வைத்தது. இந்த நாகர்கள் என்ன பலன் தம் சமுதாயத்திற்கு கிடைக்கும் என தன்னை பலியிட்டுக்கொண்டனர்? இதையெல்லாம் கதை என்ற அளவில் கூட மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. ஏன் ஏன் என்று மனம் அலறுகிறது. இதன் தேவை என்ன? ஏன் இப்படி நடக்க வேண்டும் என்ற சிந்தனையில் மனம் உழலுகிறது.   ஆனால் இத்தகைய சுயபலிகள் நம் வரலாற்றில் தொன்றுதொட்டு இருந்துவருகின்றன. அவை அழியாமல் கற்சிலைகளில், இலக்கியங்களிலென பதிக்கப்பட்டு உள்ளன. அந்த வரலாற்று காலத்தில் இருந்து வெகு தொலைவு நாம் வந்துவிட்டோம். ஆகவே இது ஒருவித ஒவ்வாமையை ஏற்படுத்துகிறதா? அல்லது நாம் போர்களற்ற சமூக சூழலுக்கு முழுமையாக பழகிவிட்டோம் என்பதால் இதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோமா?
    
  அந்தக் காலத்தில் இயற்கை புரிதலுக்கு அப்பாற்பட்டதாக மர்மங்கள் கொண்டதாக பெரிதும் இருந்தது. கொடும் நோய்கள், பெரும் வெள்ளங்கள், மரங்களை பிடுங்கியெறியும் சூறாவளிகள், பொங்கி ஊருக்குள் புகும் கடல் என எல்லாம் அவன் அறிவின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவை. சாதாரணமான இடி மின்னல்கூட அவன் அறியாதவை. அந்த இயற்கைக்கு அஞ்சி தன்னை அதற்கு அடிபணிந்தவனாக காட்டிக்கொள்ள,  அதனிடம் சகலமும் கொடுத்து சரணடைந்தவன் எனச் சொல்லிக்கொள்ள சுயபலிகளும் பலிக்கொடைகளும்   உண்டாகியிருக்கும் என நினைக்கிறேன். அறிவியலின் துணையினால் நாம் இயற்கையின் மர்மங்களை புரிந்துகொள்வதால், இப்போது இந்த பலிக்கொடைகள் பெரிதும் குறைந்துவிட்டன. அவை  வீரியம் இழந்து பூசனிக்காய் எலுமிச்சை என வெறும் அடையாளங்களாக ஆகிவிட்டன.


     ஆனால் சற்று சிந்தித்தால் இந்த சுயபலிகள் இன்னமும் நடந்துகொண்டிருக்கின்றன. இதை நாம் வெறும் செய்திகளாக புறந்தள்ளிவிடுகிறோம்.  சசி பெருமாள் தன்னை பலியிட்டுக்கொண்டபோது இவ்வாறு மனம் பதைத்தது. ஒரு பெரிய யானையை அங்குசத்தின் சிறிய முள் குத்தி அதன் போக்கை மாற்ற முயல்வதைப்போல இந்த சுயபலிகள் இருக்கின்றன. சமூகம்,  புலன்களின் திறன் குறைந்த ஒரு கிழட்டு மிருகம் போன்றது.  நல்லதோ கெட்டதோ அச்சமூகத்தின கவனிப்பை பெற இதைப்போன்ற  அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகள் நிகழ்த்தப்படுகிறது என நினைக்கிறேன்.  தன்னை வருத்திக்கொள்வதன் மூலம் தம்மை கட்டுப்படுத்தி இயக்கும் ஒரு பெரும் சக்தியை தன் மேல் அல்லது தன் சமூகத்தின் மேல்  கவனத்தை திருப்ப இவை ஒருவேளை  தேவைப்படுகின்றன போலும். உண்மையில் இந்தச் சுயபலிகள் வீரியம் குறைந்த நிலையில் இப்போதும் இருக்கின்றன. ஒரு சமூக போராளி, போராட்டத்தில் ஈடுபட்டு, காவலரின் தடியடிக்கும், சிறைபிடித்தலுக்கும் என  தன்னை துன்பத்திற்கு உட்படுத்திக்கொள்ளுதல் ஒருவகையில் பார்த்தால் சுயபலி என்றே நான் கருதுகிறேன்.  ஒருவர் தன் நேரத்தை, சுகத்தை,  செல்வத்தை,  சமூகத்துக்கென  செலவிடுதல் எல்லாம் இந்தக் கணக்கில் வரும் என்றே நினைக்கிறேன். இத்தகைய தியாகங்கள் தான் இந்த சமூகத்தை முன்னகர்த்தி செல்கின்றன.


   இப்போதைய சமூகத்தில் பலிக்கொடைகள் இருக்கின்றனவா? ஒரு வேலையைச் செய்கிறோம் அந்த வேலையின் காரணமாக ஒருவன் இழப்பை அடைகிறான், இருந்தபோதிலும் நாம் அந்த வேலையை தொடர்கிறோம் என்றால் அவனின் இழப்பு என்பது அந்த வேலைக்கான பலிதானே? எடுத்துக்காட்டிற்கு பறக்கும் ரயில் சென்னையில் பரவசமூட்டும் வண்ணம் செயல்படுகிறது. ஆனால் அதை அமைக்கும் பணியில் சில தொழிலாளிகள் தம் உயிரை இழந்தனர். அதற்காக அந்தப் பணிகள் நிறுத்தப்பட்டதா?  அல்லது இத்தகைய மரணங்கள் நிகழாது என்ற உறுதியுடன் தான் அந்த பணியை தொடங்கினார்களா? நிகழலாம் என தெரிந்தும் அத்தகைய பணிகளை செய்யும்போது நிகழும் விபத்தின் இறப்புகளை அந்தப் பணிக்கான பலிகள் என்றே கூறுவேன்.  நாம் போர் வீரர்களை எல்லைக்கு அனுப்புகிறோம். இறப்பு நேரிடலாம் என்று தெரிந்தே அனுப்புகிறோம். அதனால் போர் முனையில், எல்லையில், தீவிரவாதிகளின் தாக்குதலில், நடக்கும் ஒவ்வொரு போர் வீரனின் இறப்பும் இந்த நாடு என்ற தெய்வத்திற்கு நாம் கொடுக்கின்ற பலிகள் என்றுதான் சொல்லவேண்டும்.

தண்டபாணி துரைவேல்

காதலர்களுக்கு மட்டும்



பெண்ணின் மகத்துவம் தாய்மையாகும் பண்புதான். தாய்மை அடைவதற்கும் முன்பே அந்த தாய்மையின் கணத்தில் பெண் தன்னை மலரவைத்துக்கொள்கிறாள். தாய்மையாகுவது என்பது பொற்கணம் ஒன்றில் தெய்வமே வந்து நின்று சிலையாகிச்செல்லும் தருணம். அது நிகழ்வதற்கு,  நிகழ்த்துவதற்கு, நிகழ்த்திக்காட்டுவதற்குத்தான் அணைத்து ஜீவனும் முயல்கின்றன அதொரு தவம் என்பதை அறியாமலே அந்த தவம் நடந்தேறுகின்றது.  இறைவன்கூட அதற்கு விதிவிலக்கல்ல. ஈசன் இடப்பாகாம் உறையும் உமையும் அன்னையென உணரும் தருணத்தில் இறைவி என்பதை மறக்கிறாள்.

இறைவி என்பது எளிதா? எத்தனை எத்தனை பிறவிக்கும் தவத்திற்கும் தியாகத்திற்கும் அப்பால் இருக்கும் பொற்பீடத்தில் எழுதல் அது. அன்னை என்பது இந்த மண்ணில் அதற்கும் அடியில் அதலபாதலத்தில் வந்து விழுதல். மண்ணில், குப்பையில், சேற்றில் குட்டிகளை ஈன்று அன்னையாகி கனிந்து நின்று கம்பீரம் காட்டும் பெண். ஆனால் அந்த தாய்மையின் பீடம் இறைவி இருக்கும் பொற்பீடத்தையும் துளியென ஆக்கிச்செல்கிறது. உலூபி இன்று அர்ஜுனனை மைந்தன் என்று உணரும் தருணத்தில் இறைவி எழுந்தருளும் பொற்பீடத்தை துளியென ஆக்கி செல்கிறாள்.

தாய் என்ற சொல் எளிதானதா? அந்த நிலையை அடைவதற்கு தவமாய் தவம் இருக்கும் பெண்கள் எத்தனை எத்தனை. மண்சோறும், இரத்தச்சோறும் சாப்பிடும் இதயங்களின் வலியை உணரும்போது பெண் என்பவள் வெறும் எலும்பும் சதையும் குருதியும் கொண்ட உடல்மட்டும்தானா? பெண்ணின் உடல் எழும் காமத்தின் வழியாக தான் சென்று அடையும் இலக்கை உச்சமாக வைத்து உள்ளாள். அறிந்தும் உணர்ந்தும் பெண் செல்வது எல்லாம் அந்த இலக்கை நோக்கிதான். அந்த இலக்கு பெண் சுட்டும்வரை ஆணுக்கு அது அறிவிக்கப்படாமலே இருப்பது விதியின் விந்தையா? காமத்தைத்தாண்டி பெண்ணைப்பார்க்கமுடியாமல் ஆண்போவது இங்குதான். காமத்தைத்தாண்டி பெண்ணால் பார்க்கமுடிகின்றது என்பதும் அந்த இலக்குதான். முதல்நாளில் முதல்போகத்தில் கணவனை மைந்தன் என்று பெண்ணால் உணரமுடிகின்றது. //அவள் கை அவன் குழலுக்குள் நுழைந்து அளைந்தது. “துயில்க என் மைந்தா!” என்றாள்.-காண்டீபம்-17// இந்த நிலையை அடைய ஆணுக்கு எத்தனை ஆண்டுகள் வேண்டி உள்ளது அல்லது உடம்பின் மொத்தக்காமமும் வற்றவேண்டி உள்ளது. அப்போது கூட ஆண் தன்னை மகவெனவே உணர்கின்றான்.  மனைவிக்கு அன்னை என்றோ தந்தை என்றோ கணவனால் எளிதில் ஆகிவிடமுடிவதில்லை. மனைவியிடம் மகவென தன்னை ஒப்படைக்க கணவானால் எளிதில் முடிகின்றது. ஆணின் ஆங்காரம் அழிவதால் இது ஏற்படுகிறது. ஆங்காரம் அழிந்தாலும் தாயென ஆகும் ஒரு தருணம் வேறு எங்கோ உள்ளது. 

கடமையில் நிறைந்தவர், பக்தியில் நிறைந்தவர், ஞானத்தில் நிறைந்தவர் அனைவரும் சென்று சேரும் அந்த இடம் தாய்மையில் நிறையத்தான். தாய்மையில் நிறையமுடியாமல்  கடமையில், பக்தியில், ஞானத்தில் செல்பவர் எத்தனை உயரத்தை தொட்டாலும் தொட்டது எதுவும் இல்லை.

கடமை, பக்தி, ஞானம் எதுவும் இல்லாமல் தாய்மையில் நிறையும் வழியொன்று உண்டு என்றால் அது காமம். உலகம் முழுவதும் உள்ள அனைத்து உயிர்களின் பொது வழியது. அதை வாரி வழங்குதல் என்பதற்காகவே பயன்படுத்தும் சீவன் கொடுத்தல்மூலம் நிறைகின்றது. ஆனால் காமத்தை எடுத்தல் என்பதற்காக பயன்படுத்தும் பலரால் அல்லாவா சமூகம் வன்புணர்வை சந்தித்து புண்ணடைந்து சீழ்வடிக்கிறது. பெண்மை மாசடைகிறது. தன்னின் பாதியான ஒரு சமுகத்தை ஆண் எவ்வளவு எளிதில் குப்பையாக்கி புற்றுநோய் ஆக்கிவிடுகின்றான். 

ஆண் பெண்ணை அறியவும், பெண் ஆணை அறியவும் காமத்தை ஒரு வாசல் எனவைக்கிறான் இறைவன். அந்த வாசல் வழி நுழைந்து அறிந்தது என்ன? என்ற வினா எழுந்தால். அறியாமையைத்தான் அறிந்துக்கொண்டு உள்ளோம் என்பது தெரிகிறது. உண்மையில் அறியவும், உணரவும் அங்கு ஏதேனும் உண்டா? அறிவும் உணர்வும் அற்று நிற்கும் கணம் ஒன்றில் நம்மை நிறுத்திச்செல்கிறது காமம்.

ஆண் ஆண் என்று தசை இறுக்கி, நரம்பு முறுக்கி உடல்பெருக்கிக்காட்டுவதெல்லாம் பெண்ணை வெல்வதற்குத்தான். ஆனால் பெண்முன் குழையாமல், நெளியாமல் உருகாமல் புழுவென்று ஆகாமல் அஞ்சாமல், எங்கே எங்கே அவள் என்றுத்தேடாமல் பெண்ணை வெல்லமுடியுமா? வெகு ஆழத்தில் மறைந்திருக்கும் பெண்ணை, பெண்ணே வந்து கைநீட்டி அழைக்காமல் வெல்லமுடியுமா? இதுவரை கட்டிவைத்த ஆணை கட்டுடைக்காமல், பெண்ணாகாமல் பெண்ணை வெல்லமுடிவதில்லை. பெண்ணின் துணை இன்றி பெண்ணை அவளின் ஆழத்தில் இருந்து அறியமுடியவில்லை. அவளே கைநீட்டி அழைத்து செல்லிடம் கொண்டு சேர்க்கிறாள்.  உலூபி..உலூபி என்று அழைக்கும் பயந்து அழைக்கும் அர்ஜுனனும், அவனை பாரிகாசம் செய்யும் புற்றும் ஆணிடம் சொல்வது ஆணென்று சென்று பெண்ணை வென்றவன் இல்லை. குழந்தையென்று ஆகி அன்னையைக்கண்டவன் பெண்ணை வெல்கிறான். 

காமம் காமம் என்று அறியப்புகுந்து அறியாமல் நொந்து வெந்து அழிந்து செத்தவர்கள் அதிகம் இந்த மண்ணில். பயந்து செத்தவர்களும் பலர். அது ஒரு கணம், ஆண் பெண்ணென ஆகி பெற்று நிறைவடையும் கணம். பெண் ஆணென ஆகி வழங்கி நிறைவடையும் கணம். பொற்கணம். ஆணும் பெண்ணும் அங்கு ஒரு நிறையும் கலம்மட்டுமே. தன்னைத்தானே சுவைத்து, தன்னில் தான் உறையும் எதிர்பால் அறிந்து நிறையும் கணம், மாதொரு பாகன் ஆகும் கணம். வெண்முரசு தொடும் உச்சம் இது.

இங்கு பாஞ்சாலியிடம் வண்புணர்வையும், உலூபியிடம் மென்புணர்வையும் காட்டும் அர்ஜுனன் வெல்வது இங்குதான். அங்கு வென்றாதாய் பொய்யுலகில் நிற்கிறான். மெய் உலகு என்பது தன்னில் பெண்ணை உணர்வது. 

உடல் அமைப்பில் பெறுவதற்கு என்று அமைக்கப்பட்ட யோனிக்கொண்ட பெண் உடலும், உடல் அமைப்பில் கொடுப்பதற்கு என்று படைக்கப்பட்ட லிங்கம் கொண்ட ஆண் உடலும், பெறுவதற்கும் கொடுப்பதற்கும் தான் இந்த காமத்தில் மூழ்குகின்றன. மூழ்கி முடித்துவெளிவரும்போது நடந்ததே வேறு. கொடுக்கச்சென்றது பெற்று வருகிறது. பெறவந்தது கொடுத்து நிற்கின்றது. இந்த இடத்தில் நின்று நோக்கும்போதுதான் தெரிகிறது, காமம் மையத்தில் நின்று காதல்புணர்வில் விழுபவனை அமுதக்குளத்திலும்,   வன்புணர்வில் விழுபவனை அமிலக்குளத்திலும் தள்ளுகிறது என்பது. அமுதக்குளத்தில் விழுபவன் மைந்தனென்று ஆகிறான், அமிலக்குளத்தில் விழுபவன் சவமாகிவிடுகிறான்.

அர்ஜுனனோடு ஒப்பிடும்போது பெரும்காதல் கொண்டவள் உலூபி, நீரின் அலையென, நெருப்பின் தழலென உடல் கொண்டவள். அர்ஜுனன் பார்க்கும்போது உலூபியின் கன்னமும், காதும் பொன்னென மின்ன காமத்தி்ல் நிறைந்து இருக்கிறாள். தனக்குள் பெருகும் காம விடத்தை, அர்ஜுனனை கடிப்பதன்மூலம் அவனையும் நாகமென விடம் கொள்ளவைக்கிறாள். ஆனால், அவளால்தான் இன்னும் பிறக்காத குழந்தைக்கு இடமும் உணவும் தேடவேண்டிய நிலையைப்பற்றி பேசமுடிகிறது. பெண் உடலுக்குள் இருந்தும் இதயத்திற்குள் வாழும் தருணம் இது. ஆண் இதத்தில் இருந்து எழுந்து உடலாகிவாழும் தருணம் இது. பெண்ணைப்படைக்கும்போது இறைவன் எத்தனை பாடுப்படவேண்டி இருந்திருக்கும். 

உலூபியும், அர்ஜுனனும் புது இல்லாம் நுழைவது இன்பம் துய்க என்றாலும், அந்த இல்லாம் நமக்கானது மட்டும் இல்லை நமது குழந்தைகளுக்கும் ஆனது என்ற நினைவை உலூபி ஏற்படுத்தும் இடத்தில் வந்து காமம் அதன் இலக்கை காட்டி அதற்கான வழிஎன்று நிற்கிறது. காமம் மாதொரு பாகன் ஆகும் வித்தையை பயலவைக்கிறது. ஆனால் தரிசனம் காட்டும்போது அது சோமாஸ்கந்தர் என்று முன்வந்து அருள் புரிகிறது. அர்ஜுனன் உலூபிக்கு இடையில் வந்து நிறையும் அரவான்.  

குறுந்தொகைப்பாடல் உரையில் ஜெ, தேன்நிலவுக்’கு வந்து மலர்காடுகளை விலக்கிச்செல்லும் இணைகளை மனதிற்குள் வாழ்த்தும்போது “உங்களுக்கு நடுவே மாபெரும் மலர்க்கூட்டங்களே மலர்வதாக” என்று வாழ்த்துவார். ஓவ்வொரு ஆணும் பெண்ணும் அந்த மாபெரும் மலர்க்கூட்டங்களை தங்களுக்கு இடையில் மலரவைக்கத்தான், மலர் இதழ்கூட இடையில் இல்லாத அரவங்களாக ஆகின்றார்கள். ஜெ சொல்லுவதுபோல, அரவங்கள்தான் உடலால் இரண்டு என்று இல்லாதவையாக ஆகமுடியும். அர்ஜுனனும் உலூபியும் அதை வாழ்ந்துக்காட்டுகிறார்க்ள.  ஆணும் பெண்ணும் கால்கைக்கொண்ட பேசத்தெரிந்த நாகங்கள். அவைகளால்தான் காமத்தை கவிதையாக்க முடிகிறது. 

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 
பண்பும் பயனும் அது. 
என்பான் வள்ளுவன் . அந்த வாழ்க்கைக்கு பயணிக்கும் பாதையோ காமத்தால் போடப்பட்டு உள்ளது. அந்த பாதையின் ராஜவீதியை இன்று ஜெ திறந்து வைத்து உள்ளார். காதலர்கள் மட்டும் அதில் பயணிக்கவும். 

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்

Thursday, October 1, 2015

அடைதலும் இழத்தலும்:

அடைதலும் இழத்தலும்:

மனிதன் சிந்திக்கத் துவங்கிய நாள் முதல் செய்து வரும் ஒரு செயல் உன்னதமாக்கல். அவ்வாறு காமத்தின் உன்னதமாக்கப் பட்ட வடிவம் தான் காதல் என்று சொல்வர். ஆனால் அது காதல் என்ற உணர்வை குறுக்கும் ஒரு விளக்கமே. நம் முன்னோர் காதல் என்று வகுத்த உணர்வின் மிகுதியால் துய்க்கப்படும் காமம் தரும் நிறைவை ஒரு துறவி பல்லாண்டுகாலம் பெருந்தவம் செய்து ஈட்ட வேண்டும். இதன் காரணம் மிகத் தெளிவு. காமத்தைத் துறத்தல் என்பது இந்த புடவி படைத்தவனுக்கு ஒரு மானுடன் விடும் சவால். அவன் இயற்கைக்கு எதிரான ஒன்றைச் செய்கிறான். அவனைப் பல சோதனைகளுக்குப் பிறகே இயற்கை அவன் விரும்பியதை அளிக்கிறது. ஆனால் இல்லறத்தில் இருப்பவன் அவன் விரும்பிய நிறைவை எளிதாக அடைந்து விடுகிறானா? இல்லை... அங்கு தான் இயற்கை இரண்டின்மை அடையச் சொல்கிறது. மாதொரு பாகனாகச் சொல்கிறது.

அர்ஜுனன் முதன்முதலாக முழுக்காதல் கொள்கிறான். அவள் மட்டுமே என்று தான் விலகிப் போனவன் திரும்பி வருகிறான். அகம் முழுவதும் நிறைந்த காதல் அவனை நெகிழ்த்துகிறது. உடலின் இறுக்கங்கள் மதுவால் நெகிழ்ந்ததென்றால் மனதின் இறுக்கங்கள் காதலால் நெகிழ்ந்தது. மனதும் உடலும் உருகியதால் தான் அவனால் நாகனாக முடிந்தது. நெகிழ்ந்த மனத்தால் துய்த்த காமம் அவனையும் தாண்டி இப்புடவி சமைத்த பெரும் ஆடலைக் காட்டிச் செல்கிறது. இப்புடவி சமைத்த சக்தியையும், சிவத்தையும் ஒன்றாக உணர்ந்து அதன் ஒரு துளி தான் அவன் என்பதையும் உணர்ந்து நிறைகிறான். என்ன இருந்தாலும் ஆணவம் கொண்டு பெறுபவன் அல்லவா அவன், இவ்வளவு விளக்கங்கள், சொற்கள் தேவை தான். 'துயில்க என் மைந்தா' என ஒற்றை வரியில் அவனைத் தாண்டிச் செல்கிறாள் சக்தி!!! 

ஆனால் இறுதியில் தலையறுத்து சுயபலியாகும் தன் மகன் அரவானைக் காணும் இடத்தில் அவன் ஆழம் அவனையும் ஓர் அன்னையாக அறிகிறது. மேல் மனம் உணரா ஒரு சொல்லை ஆழ்மனம் உணர்ந்ததன் விதிர்விதிர்ப்பு தான் அவன் கொள்ளும் பதற்றம். அடைவதனைத்தும் இழப்பதற்குத் தானா? எங்கோ காலமடிப்பில் தனக்காகக் காத்திருக்கும் தன் மகனின் பிரிவை முழுதுணரும் போது அவன் அடையப்போவது என்ன? கர்மங்களின் களியாடலில் யோகத்தில் அமர்ந்தவன் பாதத்தில் சரணடைவது தானா!!! அவன் கொள்ளப்போகும் மகத்தான மனத்தடுமாற்றத்தின் விதை ஆணிலியாய் அவன் முழுதுணர்ந்த நிறைவின் இழப்பு தானா? இரண்டின்மை வேண்டியவனும், அதை அடைந்த பின்னும் நிறைவுறா அகம் கொள்ளும் அத்தருணம் தான் கனி உதிர காலம் தேர்ந்தெடுத்த தருணமா!!! 

காண்டீபத்தின் ஒவ்வொரு பகுதியும் முந்தையதை விஞ்சுவதையே வழக்கமாக்கிக் கொண்டுள்ளது. மீண்டும் மீண்டும் பிரமிக்க வைக்கிறீர்கள் ஜெ.

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்

அர்ஜுனனின் பயணம்

அன்புளயி ஜெயமோகன் அவர்களுக்கு,


வெண்முரசின் ஒவ்வொரு நாவலும் புதிதாக தொடங்கும் போதும், உள்ளே நுழைய கொஞ்சம் சிரமமாக இருக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் அமைந்திருக்கின்றது. இந்த முறை, முதல் சில அத்தியாயங்களுக்குள் நுழையவே முடியவில்லை. வழி தவறியது போல. அர்ச்சுனன் வந்த பின்னரே மறுபடியும் பழகிய வழிக்கு வந்தது போன்ற திருப்தி.

ஒரு புதிய உலகையே கண்முன் காட்டிவிட்டீர்கள். வெண்முரசின் ஆரம்பத்திலும் நாகர்கள் வருகின்றார்கள். இங்கும் வருகின்றார்கள். காண்டீபத்தில் வருகின்ற நாகர்களின் உலகம் முழுக்க முழுக்க கற்பனையாக இருக்காது, அதற்கு ஒரு மூலம் இருக்கும் என்று நினைக்கின்றேன்.  இவர்களும், இன்று நாகாக்கள் என்று சொல்லப்படுவர்களும் ஒன்றா? 

மீண்டும் பீமனை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றேன்.


நன்றி

ரெங்கசுப்ரமணி
அன்புள்ள ரெங்கசுப்ரமணி
இதில் பீமன் இல்லை.
அர்ஜுனனின் பயணங்கள் மட்டுமே 

யுலிஸஸின் வீரப்பயணத்தை பின்னாளில் ஐரோப்பிய காவியகர்த்தர்க்ள் அகப்பயணமாக விளக்கினர். அதைப்பொல என்று சொல்லலாம்
ஜெ

உலகு சமைத்தல்


   இயற்கையோடு இணைந்து வாழ்தல் ஒரு வாழ்வு முறை.  விலங்குகள் தன் இயல்பை மாற்றிக்கொள்ள முடியாதவை. ஆனால் மனிதர்களுக்கு தன் புத்தியினால் மற்றும் அவன் கைகள், கை விரல்கள் அடைந்திருக்கும் நுட்பமான வளர்ச்சியினால் தன்னை தகவமைத்துக்கொள்ள முடியும். ஆனால் அவன் அப்போது இரண்டு விதங்களில் செயல்படுகிறான். ஒன்று இயற்கையின் வழி அதன் சூழலோடு இணைந்து வாழ்தல். மற்றொன்று இயற்கைச்சூழலை தன் வசதிக்கேற்ப வளைத்து மாற்றியமைத்து வாழ்தல். அப்போது அங்கிருக்கும் மற்ற விலங்ககினங்கள் அவனுக்கு அடிமைகளாகின்றன அல்லது அவற்றை எதிரிகளாக கருதி அழித்து ஒழிக்கின்றான். 

   நகர மற்றும் கிராம மக்கள் எல்லாம் இந்த இரண்டாவது வகையிலேயே தன் சமூகத்தை வடிவமைத்திருக்கிறார்கள்.  நகர மக்கள் சுத்தமாக மற்ற விலங்கினங்களை அழித்துவிடுகின்றனர். கிராம மக்கள் ஒரு சில விலங்குகளை மட்டும் தன் அடிமைகளாக வைத்துக்கொண்டு  மற்றவற்றை அழித்துவிடுகின்றனர். ஆனால் காட்டில் வசிக்கும் மனிதர்கள் இயற்கையோடு இசைந்து வாழ்கிறார்கள். விலங்குகளோடு ஒத்துவாழ்வது அங்கு நடக்கிறது.
    
 
விலங்கினங்களுக்கு சம உரிமை கொடுத்து நடத்தும் மனிதர்கள் அதற்கான தகவமைப்பை  எற்றுக்கொள்கிறனர். அதற்காக அவ்விலங்குகள் மனிதர்களைப்போன்று அறிவைப் பெறவேண்டும் என்பதில்லை. உதாரணத்திற்கு life of pi என்ற படத்தில் ஒரு புலி தன் இயல்புடனே இருக்கையிலும் ஒரு சிறுவன் அதனுடன் ஒரு சிறிய படகில் இணைந்து வாழ்வான்.    பாம்புகள் பெருகிப் பரவி இருக்கும் ஒரு சூழலில் ஒரு மனித சமுதாயம் இணைந்து வாழுமென்றால் அது எப்படி இருக்கும். அந்த உலகை தத்ரூபமாக சித்தரிக்கிறார் ஜெயமோகன். அவர் அக்கால நகரங்கள் பலவற்றை மறு நிர்மானம் செய்திருக்கிறார். இப்போது ஒரு உலகையே புதிதாக சமைக்கிறார். 
 
 
இப்படித்தான் பனிமனிதர்கள் நாவலில் ஒரு உன்னத உலகத்தை உருவாக்கியிருப்பார்.  ஏற்கெனவே வெண்முரசில்  இடும்பர்களின் மரக்குடில் உலகம். இப்போது நாகங்களோடு இணைந்து வாழும்  நாகர்களின் உலகத்தை சமைத்திருக்கிறார். அந்த உலக குடில்கள், நாகங்களைப்போல் அவர்கள் பேச்சு பார்வை இருப்பது, நாகங்களும் அவர்களும் ஒருவரை ஒருவர் சார்ந்து, ஒருவரை ஒருவர் பகைத்துக்கொள்ளாமல் இருப்பது. அவர்கள் குடில்கள்,  வழிபாடு எல்லாம் நாகங்களை சார்திருக்கின்றன. ஒரு வேற்று மனிதரை ஏற்றுக்கொள்ள அவர்கள் மேற்கொள்ளும் சடங்கு,  நாகங்கள் அந்த நபரை ஏற்றுக்கொள்கிறதா என சோதிப்பதாக இருப்பது, மிகப் பொருத்தம். முட்டையிலிருந்து வெளிவரும் சிறு பாம்புகள் பார்த்தனை இயல்பாக ஏற்றுக் கொள்வதன் மூலம் அவன் அவர்களில் ஒருவனென கருதப்படுவது தர்க்கரீதியிலும் மிகப் பொருத்தமானது அல்லவா?

     மிக அருமை.  எண்ண எண்ண அவ்வுலகம் கண் முன்னே விரிந்தபடி இருக்கிறது. நானறியாத ஓர் உலகம் இப்போது ஓர் உண்மையாக என் கண் முன்னே எழுகிறது.  கால்களின் நடுவே நாகங்கள் நெளிந்து ஒடும் உணர்வை நான் அடைகிறேன். ஆனால் அதனால் அச்சமில்லை, அவற்றின் மேல் அசூயை இல்லை.  அவற்றின் குழவிகளை கையிலெடுத்து கொஞ்சவேண்டும் என்பது போல மனம் நிறைந்திருக்கிறது.

புராணங்களின் ஈரேழு உலகங்கள்

ஜெயமோகன் அவர்களுக்கு

இதை உங்களிடம் பகிர எண்ணினேன்

நம் புராணங்களின் ஈரேழு (2x7) பதினாலு உலகங்கள் என்று சொல்வதை ஒரு வடிவம் தந்து இந்த கானொளியில் குடுத்திருக்கிறார்கள்.

கூட குறைய தவறுகள் இருக்குமோ என்னவோ ஆணால் பார்க்க நன்றாக இருக்கிறது.

நன்றி
ராகவ்