Tuesday, July 21, 2020

இனிமை



அன்புள்ள ஜெயமோகன்,


வெண்முரசு நிறைவுற்றது குறித்து பெருமகிழ்ச்சியும் கூடவே ஒரு துக்கமும் கவிந்து ஒரு குழப்பமான உணர்வைத் தருகிறது.

2013 டிசம்பர் இறுதியில் வந்த உங்கள் அறிவிப்பின் இனிமையை இப்போது எண்ணிப் பார்க்கிறேன். அதைத் தொடர்ந்து வந்த வாழ்த்துகளையும் வசவுகளையும் சிறு புள்ளிகளாக ஆக்கிவிட்டு எழுந்து நிற்கும் இந்த இருபத்தியாறு நாவல்களின் தரமும் அவை அளிக்கும் ஞானமும் உணர்வெழுச்சியும் மொழியும் எல்லாம் நூற்றாண்டுகள் கடந்தும் நிற்கப்போவதில் யாதொரு ஐயமும் இல்லை.

இப்பெரும்பணியில் உடன்வந்த அனைவரும் உளமுவந்து மகிழும் ஒரு கணம்.

உங்கள் குன்றா  உழைப்பையும், எடுத்த பணியை சிறக்க முடிக்கும் பேராற்றலையும்  எனக்கான அகத்தூண்டுதலாகக் கொண்டு தங்களின் பாதம் பணிந்து விட்டுவைத்த நூல்களைப் படிக்கத் துவங்குகிறேன்.

வாழ்த்துகளும் வணக்கங்களும்  ஆசானே... அப்படியே ஒரு முத்தமும்...

என்றென்றும் அன்புடன்,
மூர்த்தி
டாலஸ்