Monday, July 13, 2020

எல்லைகள்


அன்புள்ள ஜெ

வெண்முரசின் பிரம்மாண்டமான அமைப்பில் அடிக்கடி வரும் ஒரு விஷயம் திரும்பத்திரும்ப நிகழ்வது. கதையாக பார்த்தால்கூட வெண்முரசில் வரும் குருக்ஷேத்திர யுத்தம் மூன்றுமுறை சிறிய அளவில் நடைபெறுகிறது. தமயந்தியின் கதை ஒரு குருக்ஷேத்திரப்போர்தான். விராடபர்வத்திலும் எல்லாமே அதேபோல நிகழ்கின்றன. போர் உட்பட.

கனகர் ஒரு கோட்டை மேல் ஏறிநின்று அஸ்தினபுரியைப் பார்க்கிறார்.

மானுடரால் அவ்வண்ணம்தான் இயலும். ஒரே காலகட்டத்தில் அமைவன ஒன்றுபோலிருக்கின்றன. ஒரே இடத்திலமைபவை ஒன்றுபோலிருக்கின்றன. அகன்று நோக்கினால் அந்நகரமே ஒன்றுபோல் அமைந்தவற்றாலானது. மலைமேல் நின்று நோக்கினால் அனைத்து நகரங்களும் ஒன்றுபோலவே தோன்றக்கூடும். விண்ணில் நின்று நோக்கும் தெய்வங்களுக்கு அனைத்து மானுட அமைப்புக்களும் ஒன்றே என்று தோன்றக்கூடும். அனைத்து மானுட முகங்களும் ஒன்றென்றே தோன்றக்கூடுமா என்ன? அனைத்து மானுடரும் ஒற்றை உருவம் கொண்டவர்கள்தானா?

என்று அவர் உணர்கிறார். அந்த இடம் ஒரு baffling அனுபம். எப்படி இதைப் புரிந்துகொள்வது. டீடெயில்கள் என்பவை நாமே உருவாக்கிக்கொள்பவை. ஒட்டுமொத்தமாகப்பார்த்தால் எந்த வேறுபாடும் இல்லை என்பதுதான் உண்மையா? நான் நவீன புதுக்கவிதைகளின் ஒரு தொகுப்பை வாசித்தேன். தமிழினி. அந்த தொகுப்பு ஒருவரே எழுதியது போல இருந்தது. அப்போது இதை நானே ஒருவாறாக யோசித்திருந்தேன்

ராமச்சந்திரன்