Friday, July 31, 2020

வண்ணக்கடல் என்னும் பாரதம்


அன்புள்ள ஜெ

நலம்தானே?

வெண்முரசை மீண்டும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். இனி தொடர்ச்சியாக வாசிப்பேன் என நினைக்கிறேன். இப்போது இளநாகனின் பயணத்தை வாசிக்கிறேன். அப்போதே ஒர் உரையாடலில் சொன்னீர்கள், மகாபாரதப்போர் முடிந்தபின் விரிவான திக்விஜயங்களைப்பற்றி எழுத முடியாது. ஆனால் நாவலில் பாரதநிலம் வரவேண்டும், ஆகவேதான் முன்னாடியே எழுதுகிறேன் என்று.

இந்நாவல்தொடர் முடிந்தபின்பு இளநாகனின் பயணங்களை வாசிக்கும்போது மகாபாரதக்கதை அங்கெல்லாம் எப்படியெல்லாம் வந்திருக்கும் என்பதைக் கற்பனைசெய்தபடியே வாசிக்கமுடிகிறது. தான்யகடகம், விஜயபுரி போன்ற ஊர்களைப்பற்றி ஒரு பெரிய கனவை வண்ணக்கடல் அளிக்கிறது. 

வெண்முரசு நாவல்களில் மகாபாரதம் என்னும் காட்சி இருப்பது வண்ணக்கடலில்தான். அதை அன்றைக்கு வாசிக்கும்போது பாண்டவர்களின் வளர்ச்சி முதலிய கதைகளைச் சொல்வதற்கு நடுவே தேவையில்லாமல் இளநாகன் வருவதாக நினைத்தேன். இன்றைக்கு அந்தப்பகுதிகளெல்லாம் அப்படி ஓர் அழகுடன் இருப்பதாகத் தோன்றுகிறது

சரவணன் எஸ்